அகப்பேய்ச் சித்தர்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
  • பக்கம் 212 - 223

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்[தொகு]

அகம் தன் நெஞ்சப் பேயைத் தானே விளித்துக் கூறும் அறிவுரையாகப் பிறருக்குக் கூறுவது

1[தொகு]

நஞ்சுண்ண வேண்டாவே – அகப்பேய் – நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே –அகப்பேய் – நீ ஒன்றும் சொல்லாதே

2[தொகு]

பராபர மானதடி – அகப்பேய் - பரவையாய் வந்ததடி
தராதலம் ஏழ்புவியும் - அகப்பேய் - தானே படைத்ததடி

3[தொகு]

நாத வேதமடி - அகப்பேய் – நன் நடம் கண்டாயோ
பாதஞ் சத்தியடி - அகப்பேய் – பரவிந்து நாதமடி

4[தொகு]

விந்து நாதமடி - அகப்பேய் – மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும் பூதம் - அகப்பேய் – அதனிடம் ஆனதடி

5[தொகு]

நாலு பாதமடி - அகப்பேய் – நன்னெறி கண்டாயே
மூல மான தல்லால் - அகப்பேய் – முத்தி அல்லவடி

6[தொகு]

வாக்காதி ஐந்தடியோ - அகப்பேய் – வந்த வகாகேளாய்
ஒக்கம் அதானடி - அகப்பேய் - உண்மையது அல்லவடி

7[தொகு]

சத்தா தி ஐந்தடியோ - அகப்பேய் – சாத்திரம் ஆனதடி
மித்தையும் ஆகுமடி - அகப்பேய் – மெய்யது சொன்னேனே

8[தொகு]

வானாதி ஐந்தடியோ - அகப்பேய் – வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி - அகப்பேய் – திடன் இது கண்டாயே

9[தொகு]

காரணம் ஆனதெல்லாம் - அகப்பேய் – கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே - அகப்பேய் – வந்த விதங்கள் எல்லாம்

10[தொகு]

ஆறு தத்துவமும் - அகப்பேய் – ஆமகஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும் - அகப்பேய் – வந்தது மூன்றடியே

11[தொகு]

பிருதிவி பொன்னிறமே - அகப்பேய் – பேதமை அல்லவடி
உருவது நீரடியோ - அகப்பேய் – உள்ளது வெள்ளையடி

12[தொகு]

தேயு செம்மையடி - அகப்பேய் – திடனது கண்டாயே
வாயு நீலமடி - அகப்பேய் – வான்பொருள் சொல்வேனே

13[தொகு]

வான மஞ்சடியோ - அகப்பேய் – வந்தது நீ கேளாய்
ஊனமது ஆகாதே - அகப்பேய் – உள்ளது சொன்னேனே

14[தொகு]

அகாரம் இத்தனையும் - அகப்பேய் – அங்கென்று எழுந்ததடி
உகாரங் கூடியடி - அகப்பேய் - உருவாகி வந்ததடி

15[தொகு]

மகார மாயையடி - அகப்பேய் – மலமது சொன்னேனே
சிகார மூலமடி - அகப்பேய் – சிந்தித்துக் கொள்வாயே

16[தொகு]

வன்னம் புவனமடி - அகப்பேய் – மந்திர தந்திரமும்
இன்னமும் சொல்வேனே - அகப்பேய் – இம்மென்று கேட்பாயே

17[தொகு]

அத்தி வரை வாடி - அகப்பேய் – ஐம்பத்தோர் அட்சரமும்
மித்தையாங் கண்டாயே - அகப்பேய் – மெய்யென்று நம்பாதே

18[தொகு]

தத்துவம் ஆனதடி - அகப்பேய் – சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே - அகப்பேய் – பூத வடிவலவோ

19[தொகு]

இந்த விதங்களெல்லாம் - அகப்பேய் – எம்இறை அல்லவடி
அந்த விதம் வேறே - அகப்பேய் – ஆராய்ந்து காணாயோ

20[தொகு]

பாவந் தீரவென்றால் - அகப்பேய் – பாவிக்க லாகாதே
சாவதும் இல்லையடி - அகப்பேய் – சற்குரு பாதமடி

21[தொகு]

எத்தனை சொன்னாலும் - அகப்பேய் – என் மனந் தேறாதே
சித்தும் மசித்தும் விட்டே - அகப்பேய் – சேர்த்து நீ காண் பாயே

22[தொகு]

சமய மாறுமடி - அகப்பேய் – தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம் - அகப்பேய் – ஆராய்ந்து சொல்வாயே

23[தொகு]

ஆறாரும் ஆகுமடி - அகப்பேய் – ஆகாது சொன்னேனே
வேறே உண்டானால் - அகப்பேய் – மெய்யது சொல்வாயே

24[தொகு]

உன்னை அறிந்தக்கால் - அகப்பேய் - ஒன்றையும் சேராயே
உன்னை அறியும் வகை - அகப்பேய் – உள்ளது சொல்வேனே.

25[தொகு]

சரியை ஆகாதே - அகப்பேய் – சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் - அகப்பேய் – கிட்டுவது ஒன்றுமில்லை

26[தொகு]

யோகம் ஆகாதே - அகப்பேய் – உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி - அகப்பேய் – தேடாது சொன்னேனே

27[தொகு]

ஐந்தலை நாகமடி – அகப்பேய் – ஆதாயங் கொஞ்சமடி
இந்த விடந்தீர்க்கும் – அகப்பேய் – எம் இறை கண்டாயே

28[தொகு]

இறைவன் என்ற தெல்லாம் – அகப்பேய் – எந்த விதமாகும்
அறைய நீ கேளாய் – அகப்பேய் – ஆனந்த மானதடி

29[தொகு]

கண்டு கொண்டேனே – அகப்பேய் – காதல் கொண்டேனே
உண்டு கொண்டேனே – அகப்பேய் – உள்ளது சொன்னாயே

30[தொகு]

உள்ளது சொன்னாலும் – அகப்பேய் – உன்னாலே காண்பாயே
கள்ளமுந் நீராதே – அகப்பேய் – கண்டார்க்குக் காமமடி

31[தொகு]

அறிந்து நின்றாலும் – அகப்பேய் – அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும் – அகப்பேய் – போகாதே உன்னை விட்டு

32[தொகு]

ஈசன் பாசமடி – அகப்பேய் – இவ்வண்ணங் கண்ட தெல்லாம்
பாசம் பயின்றதடி – அகப்பேய் – பரமது கண்டாயே

33[தொகு]

சாத்திர சூத்திரமும் – அகப்பேய் – சங்கற்பம் ஆனதெல்லாம்
பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் –பாழ் பலங்கண்டாயே

34[தொகு]

ஆறு கண்டாயோ – அகப்பேய் – அந்த வினை தீர
தேறித் தெளிவதற்கே – அகப்பேய் – தீர்த்தமும் ஆடாயே

35[தொகு]

எத்தனை காலமுந்தான் – அகப்பேய் – யோகம் இருந்தாலென்
முத்தனு மாவாயோ – அகப்பேய் – மோட்சமும் உண்டாமோ

36[தொகு]

நாச மாவதற்கே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் – அகப்பேய் – பசுக்களும் போகாவே

37[தொகு]

நாணம் ஏதுக்கடி – அகப்பேய் – நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால் – அகப்பேய் – காணக் கிடையாதே

38[தொகு]

சும்மா இருந்து விடாய் – அகப்பேய் – சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே

39[தொகு]

உன்றனைக் காணாதே – அகப்பேய் – ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே – அகப்பேய் – இடத்தில் வந்தாயே

40[தொகு]

வானம் ஓடிவரில் – அகப்பேய் – வந்தும் பிறப்பாயே
தேனை உண்ணாமல்– அகப்பேய் – தெருவோடு அலைந்தாயே

41[தொகு]

சைவ மானதடி – அகப்பேய் – தானாய் நின்றதடி
சைவம் இல்லையாகில் – அகப்பேய் – சலம் வரும் கண்டாயே

42[தொகு]

ஆசை அற்றவிடம் – அகப்பேய் – ஆசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி – அகப்பேய் – எங்ஙனஞ் சென்றாலும்

43[தொகு]

ஆணவ மூலமடி – அகப்பேய் – அகாரமாய் வந்ததடி
கோணும் உகாரமடி – அகப்பேய் – கூடப் பிறந்ததுவே

44[தொகு]

ஒன்றும் இல்லையடி – அகப்பேய் – உள்ளபடி யாச்சே
நன்றிலை தீதிலையே – அகப்பேய் – நாணமும் இல்லையடி

45[தொகு]

சும்மா இருந்தவிடம் – அகப்பேய் – சுட்டது சொன்னேனே
எம்மாயம் இதறியேன் – அகப்பேய் – என்னையும் காணேனே

46[தொகு]

கலைகள் ஏதுக்கடி – அகப்பேய் – கண்டார் நகையாரோ
நிலைகள் ஏதுக்கடி – அகப்பேய் – நீயார் சொல்வாயே

47[தொகு]

இந்து அமிர்தமடி – அகப்பேய் – இரவி விடமோடி
இந்து வெள்ளையடி – அகப்பேய் – இரவி சிவப்பாமே

48[தொகு]

ஆணல பெண்ணலவே – அகப்பேய் – அக்கினி கண்டாயே
தாணுவும் இப்படியே – அகப்பேய் – சற்குரு கண்டாயே

49[தொகு]

என்ன படித்தாலும் – அகப்பேய் – எம்முரை யாகாதே
சொன்னது கேட்டாயே – அகப்பேய் – சும்மா இருந்துவிடு

50[தொகு]

காடும் மலையுமடி – அகப்பேய் – கடுந்தவம் ஆனால் என்
வீடும் வெளியாமோ – அகப்பேய் –மெய்யாக வேண்டாவோ

51[தொகு]

பரத்தில் சென்றாலும் – அகப்பேய் – பாரிலே மீளுமடி
பரத்துக்கு அடுத்த இடம் – அகப்பேய் – பாழது கண்டாயே

52[தொகு]

பஞ்ச முகமேது – அகப்பேய் – பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி – அகப்பேய் – குருபாதங் கண்டாயே

53[தொகு]

பங்கம் இல்லையடி – அகப்பேய் – பாதம் இருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம் – அகப்பேய் – கண்டு தெளிவாயே

54[தொகு]

தானற நின்றவிடம் – அகப்பேய் – சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே – அகப்பேய் – ஊனமொன்று இல்லையடி

55[தொகு]

சைவம் ஆருக்கடி – அகப்பேய் – தன்னை அறிந்தவர்க்கே
சைவ மானவிடம் – அகப்பேய் – சற்குரு பாதமடி

56[தொகு]

பிறவி தீரவென்றால் – அகப்பேய் – பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள் – அகப்பேய் – சும்மா இருப்பார்கள்

57[தொகு]

ஆரலைந்தா லும் – அகப்பேய் – நீயலையா தேயடி
ஊரலைந்தா லும் – அகப்பேய் – ஒன்றையும் நாடாதே

58[தொகு]

தேனாறு பாயுமடி – அகப்பேய் – திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி – அகப்பேய் – ஒன்றையும் நாடாதே

59[தொகு]

வெள்ளை கறுப்பாமோ – அகப்பேய் – வெள்ளியுஞ் செம்பாமோ
உள்ளது உண்டோடி – அகப்பேய் – உன் ஆணை கண்டாயே

60[தொகு]

அறிவுள் மன்னுமடி – அகப்பேய் – ஆதாரம் இல்லையடி
அறிவு பாசமடி – அகப்பேய் – அருளது கண்டாயே

61[தொகு]

வாசியி லேறியபடி – அகப்பேய் – வான் பொருள் தேடாயோ
வாசியில் ஏறினாலும் – அகப்பேய் – வாராது சொன்னேனே

62[தொகு]

தூராதி தூரமடி – அகப்பேய் – தூரமும் இல்லையடிப்
பாராமற் பாரடியோ – அகப்பேய் – பாழ்வினைத் தீரவென்றால்

63[தொகு]

உண்டாக்கிக் கொண்டதல்ல – அகப்பேய் – உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ – அகப்பேய் – கற்பனை அற்றதடி

64[தொகு]

நாலு மறை காணா – அகப்பேய் – நாதனை யார் காண்பார்
நாலு மறை முடிவில் – அகப்பேய் – நற்குரு பாதமடி

65[தொகு]

மூலம் இல்லையடி – அகப்பேய் – முப்பொருள் இல்லையடி
மூலம் உண்டானால் – அகப்பேய் – முத்தியும் உண்டாமே

66[தொகு]

இந்திர சாலமடி – அகப்பேய் – எண்பத் தொருபதமும்
மந்திரம் இப்படியே – அகப்பேய் – வாயைத் திறவாதே

67[தொகு]

பாழக வேணுமென்றால் – அகப்பேய் – பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே – அகப்பேய் – கேள்வியும் இல்லையடி

68[தொகு]

சாதி பேதமில்லை – அகப்பேய் – தானாகி நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் – அகப்பேய் – ஒன்றுந்தான் இல்லையடி

69[தொகு]

சூழ வானமடி – அகப்பேய் – சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி – அகப்பேய் – மெய்யது கண்டாயே

70[தொகு]

நானும் இல்லையடி – அகப்பேய் – நாதனும் இல்லையடி
தானும் இல்லையடி – அகப்பேய் – சற்குரு இல்லையடி

71[தொகு]

மந்திரம் இல்லையடி – அகப்பேய் – வாதனை இல்லையடி
தந்திரம் இல்லையடி – அகப்பேய் – சமயம் அழிந்ததடி

72[தொகு]

பூசை பாசமடி – அகப்பேய் – போதமே கொட்டமடி
ஈசன் மாயையடி – அகப்பேய் – எல்லாமும் இப்படியே

73[தொகு]

சொல்ல லாகாதே – அகப்பேய் – சொன்னாலுந் தோடமடி
இல்லை இல்லையடி – அகப்பேய் – ஏகாந்தங் கண்டாய்

74[தொகு]

தத்துவத் தெய்வமடி – அகப்பேய் – சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம் – அகப்பேய் – மாயை வடிவாமே

75[தொகு]

வார்த்தை அல்லவடி – அகப்பேய் – வாச மகோசரத்தை
ஏற்ற தல்லவடி – அகப்பேய் – என்னுடன் வந்ததல்ல

76[தொகு]

சாத்திரம் இல்லையடி – அகப்பேய் – சலனங் கடந்ததடி
பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் – பாவனைக் கெட்டாதே

77[தொகு]

என்ன புடித்தால் என் – அகப்பேய் – ஏது தான் செய்தால் என்
சொன்ன விதங்களெலாம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே

78[தொகு]

தன்னை அறியவேணும் – அகப்பேய் – சாராமற் சாரவேணும்
பின்னை அறிவதெலாம் – அகப்பேய் – பேயறி வாகுமடி

79[தொகு]

பிச்சை எடுத்தாலும் – அகப்பேய் – பிறவி தொலையாதே
இச்சை அற்றவிடம் – அகப்பேய் – எம்இறை கண்டாயே

80[தொகு]

கோலம் ஆகாதே – அகப்பேய் – குதர்க்கம் ஆகாதே
சாலம் ஆகாதே – அகப்பேய் – சஞ்சலம் ஆகாதே

81[தொகு]

ஒப்பனை அல்லவடி – அகப்பேய் – உன் ஆணை சொன்னேனே
அப்புடன் உப்பெனவே – அகப்பேய் – ஆராய்ந்து இருப்பாயே

82[தொகு]

மோட்சம் வேண்டார்கள் – அகப்பேய் – முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் – அகப்பேய் – சின்மய மானவர்கள்

83[தொகு]

பாலன் பிசாசமடி – அகப்பேய் – பார்த்தக்கால் பித்தனடி
கால மூன்றுமல்ல – அகப்பேய் – காரியம் அல்லவடி

84[தொகு]

கண்டதும் இல்லையடி – அகப்பேய் – கண்டவர் உண்டானால்
உண்டது வேண்டடியோ – அகப்பேய் – உன் ஆணை சொன்னேனே

85[தொகு]

அஞ்சையும் உண்ணாதே – அகப்பேய் – ஆசையுடன் வேண்டாதே
நெஞ்சையும் விட்டு விடு – அகப்பேய் – நிட்டையில் சாராதே

86[தொகு]

நாதாந்த உண்மையிலே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே
மீதான சூதானம் – அகப்பேய் – மெய்யென்று நம்பாதே

87[தொகு]

ஒன்றோடு ஒன்று கூடில் – அகப்பேய் – ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும் – அகப்பேய் – நில்லாது கண்டாயே

88[தொகு]

தோன்றும் வினைகளெலாம் – அகப்பேய் – சூனியங் கண்டாயே
தோன்றாமல் தோன்றிவிடும் – அகப்பேய் – சுத்த வெளிதனிலே

89[தொகு]

பொய்யென்று சொல்லாதே – அகப்பேய் – போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னக்கால் – அகப்பேய் – வீடு பெறலாமே

90[தொகு]

வேதம் ஓதாதே – அகப்பேய் – மெய் கண்டோம் என்னாதே
பாதம் நம்பாதே – அகப்பேய் – பாவித்துப் பாராதே
"https://ta.wikisource.org/w/index.php?title=அகப்பேய்ச்_சித்தர்&oldid=1158429" இலிருந்து மீள்விக்கப்பட்டது