அகல் விளக்கு/அத்தியாயம் 6

விக்கிமூலம் இலிருந்து

பெருங்காஞ்சி என் உள்ளத்திற்குப் பிடித்த ஊராக இருந்தது. கண்ணிற்கு இனிய காட்சிகள் பல அங்கே இருந்தன. முதலாவது, வண்டிகளும் பஸ்களும் செல்லும் சாலையாக நீண்ட ஏரிக்கரை அகலமாக அமைந்திருந்த காட்சியும் கரை நெடுக மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்த காட்சியும் அழகாக இருந்தன. இடக்கைப் பக்கம் ஏரியும் வலக்கைப் பக்கம் வயல்களும் எதிரே கரிமலையும் சோழ சிங்கபுர மலையும் கண்டேன். அதுபோன்ற காட்சி எனக்கு - நகரத்தில் சில தெருக்களையே திரும்பத் திரும்பக் கண்டு வந்த எனக்கு - இன்பமாக இருந்தது. என் சொந்த அத்தையின் ஊராகிய வேலூர்க்குப்போய் அங்கே ஏரியையும் வயல்களையும் கண்டிருக்கிறேன். ஆனாலும் அந்த ஊர்க் காட்சி என் மனத்துக்கு அவ்வளவு இன்பமாக இருந்ததில்லை. பெருங்காஞ்சியில் சந்திரனும் கற்பகமும் வாழ்ந்ததே ஒரு வகையில் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

"இப்போது ஏரியில் தண்ணீர் வற்றிவிட்டது. மழை பெய்து வெள்ளம் வந்து நீர் நிறைந்திருக்கும்போது எங்கள் ஊர் ஏரியை வந்து பார்க்கணும். அப்போதுதான் இதன் உண்மையான அழகு தெரியும்" என்றான் சந்திரன்.

"எந்த மாதத்தில்?"

"அதாவது" என்று சந்திரன் தயங்கினான்.

"புரட்டாசி ஐப்பசியில்" என்றார் அத்தை.

"புரட்டாசி ஐப்பசி என்றால் என்ன மாதம்" என்று நான் கேட்டேன்.

"செப்டெம்பர் அக்டோபர்" என்று சந்திரன் சொன்னான்.

"அப்படியானால் ஒரு முறை அப்போதே வருவேன். கால் தேர்வு முடிந்து செப்டெம்பரில் பதினைந்து நாள் விடுமுறை விடுவார்களே, அப்போது வருவேன்" என்றேன்.

ஏரிக்கரையைக் கடந்து ஊர்க்குள் சென்றோம். ஊர் சின்ன ஊர்தான். சில ஓட்டு வீடுகளும் பல மஞ்சம்புல் வீடுகளும் காணப்பட்டன. அந்த ஊரிலேயே சந்திரனுடைய வீடுதான் எடுப்பாகவும் பெரியதாகவும் இருந்தது. வீட்டின் எதிரே தென்னங்கன்றுகள் ஆறு வரிசையாக வளர்ந்து வந்தன. எதிரே ஒரு மாந்தோப்பும் தென்னந்தோப்பும் காணப்பட்டன. என் பார்வையைக் கண்ட சந்திரன், "இரண்டும் எங்கள் தோப்புகள் தான்" என்றான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் சந்திரனுடைய தாய் எங்களை - சிறப்பாக என்னை - வரவேற்றார். கற்பகம் இல்லாதது கண்டு காரணம் தெரியாமல் நின்றேன். எங்கோ போயிருந்த அவள் சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து, எதிர்பாராமல் என்னைக் கண்டதும், பல்லெல்லாம் தெரிய முகம் மலர்ந்து நின்றாள். சந்திரனுடைய தாய், அவளைப் பார்த்து, "கற்பகம்! கைகால் அலம்பத் தண்ணீர் மொண்டு கொடு" என்று சொல்லிக்கொண்டே எனக்காக ஒரு பாய் எடுத்து விரித்தார்.

கற்பகத்தின் கையில் இருந்து செம்பை வாங்கி முகம் அலம்பினேன். சந்திரன் அலம்பிக் கொண்டதும் கூடத்துக் கட்டிலில் போய் உட்கார்ந்தோம். நான் பாயில் உட்காரச் சென்றேன். "வேலு! அது யாராவது பெரியவர்களுக்கு, நமக்கு இதோ கட்டில்" என்று அழைத்தான்.

சந்திரனுடைய தாய், பழங்காலத்து வெண்கலச்செம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்து என் கையில் கொடுத்து, "மோர் கொண்டு வரட்டுமா?" என்றார்.

"அம்மா அம்மா! வேண்டாம்’மா என்றான் சந்திரன். "மோரும் இதுவும் அதுவும் கொடுத்து இவனுடைய உடம்பைக் கெடுத்துவிடாதே. இந்த உடம்பு தொட்டாற் சுருங்கி போல. இவனுடைய அம்மா என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்லியனுப்பினார். அப்புறம் ஏதாவது வந்தால் நான்தான் பழிக்கு ஆளாவேன்" என்றான்.

எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பேசாமல் இருந்தேன்.

"தண்ணீரா? வெந்நீரா?" என்று சந்திரன் தன் தாயைக் கேட்டுவிட்டு, என் கையில் இருந்த செம்பை தொட்டுப் பார்த்தான். உடனே அதை வாங்கிக்கொண்டு, "இவனுக்கு இப்படித் தண்ணீர் கொடுக்கவே வேண்டா" என்று எழுந்து போனான். சிறிது நேரத்தில் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்து, "எங்கள் ஊரில் இருக்கிற வரைக்கும் உடம்புக்கு ஒன்றும் வராமல் காப்பாற்ற வேண்டுமே" என்றான்.

தெற்குப் பார்த்த வீடு அது. நான்கு பக்கமும் தாழ்வாரம் இறக்கி, வடக்குப் பக்கத்தில் பெரிய கூடம் அமைத்திருந்தார்கள். பெரிய பெரிய அறைகளும் அவற்றை அடுத்தாற்போல் களஞ்சியங்களும் இருந்தன. ஒரே வேளையில் நூறு பேர் உட்கார்ந்து உண்ணக்கூடிய அவ்வளவு இடப்பரப்பு இருந்தது. நான் இருந்த அந்தப் பக்கத்து அறையில் எட்டிப் பார்த்தேன். தேங்காய்கள் ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தன. இன்னொரு மூலையில் அரிசி கொட்டி வைத்திருந்தார்கள். பக்கத்தில் சில மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்கள். எண்ணெய் டின்கள் ஒரு பக்கம் வரிசையாக இருந்தன.

சந்திரனுடைய தந்தை வந்தவுடன் என்னைப் பார்த்து வியப்பு அடைந்தார். "நீயும் வந்தது மிகவும் நல்லது. நான் எதிர்பார்த்தேன். தேர்வு எல்லாம் எப்படி எழுதியிருக்கிறீர்கள்? சந்திரன் தேர்ச்சி பெற்று விடுவானா?" என்று கேட்டார். என்னுடைய விடைகள் அவருக்கு மகிழ்ச்சி அளித்தன.

கற்பகமும் அவளுடைய தாயும் சில தட்டுகளைக் கொண்டுவந்து எங்கள் முன் வைத்தார்கள். மிளகுப் பொங்கலும் முறுக்கும் இருந்தன. சந்திரனும் நானும் தின்றோம். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அவனுடைய தாய் வற்புறுத்தினார். "வற்புறுத்த வேண்டா அம்மா. உடம்பு கெட்டுவிடும். தேவையானால் என்னைப் போல் கேட்டுச் சாப்பிடட்டும்" என்றான் சந்திரன்.

"சந்திரா! இது என்ன இது? உடம்பு கெட்டுப்போகும், உடம்பு கெட்டுப்போகும் என்று பல்லவி பாடுகிறாய், போதும் போதும்" என்றேன்.

"உங்கள் அம்மா எவ்வளவு கவலைப்பட்டுச் சொல்லியிருக்கிறார்."

"உன்னால் உடம்பைப் பற்றிய கவலையே போய், ஒரு துணிச்சலே வந்து விடும்போல் இருக்கிறதே."

"வரட்டும்; மிக மிக நல்லது."

ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்தது. அதைக் கண்டதும் எனக்கு அச்சமாக இருந்தது. அது சந்திரனிடம் நெருங்கி வாலைக் குழைத்துக் குழைத்து அவனுடைய கையை நக்கியது. என்னை நெருங்கியது. நான் கால்களை மேலே எடுத்துச் சுவர் ஓரமாக நகர்ந்தேன். "பயப்படாதே; ஒன்றும் செய்யாது; பயந்தால் அதற்குச் சந்தேகம் ஏற்படும். நல்ல நாய். காவலுக்காக வளர்க்கிறோம். சும்மா இரு. அசையாதே" என்றான் சந்திரன். நாய் என்னை உற்றுப் பார்த்தது. அதனுடைய பார்வை கடுமையாக இருந்தது. பிறகு, என் எதிரிலேயே படுத்தது. பார்வை மட்டும் என் மேலேயே இருந்தது. "நீ நெருங்கிவா. அது உன்னை முகர்ந்து பார்த்துப் பழகி விட்டால்தான் நல்லது. அதுவரையில் உன்னை அந்நியன் என்றே பார்த்துக் கொண்டிருக்கும்" என்றான் சந்திரன். என் கையைப் பிடித்து இழுத்து அதனிடம் கொண்டு சென்றான். அது வாலைக் குழைத்தபடியே என்னை முகர்ந்து பார்த்துவிட்டுத் தலைவைத்துப் படுத்தது.

தெருப்பக்கம் போய் ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தோம். இருபது வயது உள்ளவள் ஒருத்தி சந்திரனைப் பார்த்து, "எப்போ மாமா வந்தே? எங்கள் பெரியம்மாவும் வந்திருக்கிறாங்களா?" என்றாள். அவளுடைய ஆடையும் தோற்றமும் பார்த்தால் வேலைக்காரிபோல் தோன்றினாள். "இப்பத்தான் வந்தேன். அத்தையும் வந்திருக்கிறார்" என்றான் சந்திரன்.

"யார் சந்திரா? உங்கள் சின்ன அத்தை மகளா?" என்றேன்.

"சின்ன அத்தையா? அப்படி யாரும் இல்லையே! இந்த அம்மா அதோ அந்த வீட்டு மருமகள்" என்று நாலைந்து வீட்டுக்கு அப்பால் இருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டினான்.

"உனக்கு உறவா?"

"உறவும் இல்லை, ஒன்றும் இல்லை."

"மாமா என்று அழைத்தாளே!"

"எங்கள் ஊரில் அப்படி முறையிட்டு அழைக்கும் வழக்கம் உண்டு. எந்தச் சாதியாக இருந்தாலும் அப்படித்தான். மாமா, மச்சான், அத்தை, பெரியம்மா, அண்ணன், சிற்றப்பா என்று யாரும் ஒருவரை ஒருவர் முறையிட்டுத் தான் பேசுவார்கள், வேடிக்கையாகவும் பேசுவார்கள். இதில் சாதி வேறுபாடு ஒன்றுமே இல்லை."

எனக்கு இது வியப்பாக இருந்தது.

சிறிது நேரத்தில் ஒரு கிழவர் அந்தப் பக்கம் வந்தவர், சந்திரனைப் பார்த்து, "யார் என் மச்சான் பிள்ளையா?" எப்போ வந்தே? மொட்டையம்மாவும் வந்திருக்குதா?" என்றார்.

சந்திரன் ஆம் ஆம் என்று விடை சொன்ன பிறகு, அந்தக் கிழவர் என்னைப் பார்த்து, "யார் அப்பா" என்றார்.

"இவன் பேட்டையில் என்னோடு படிக்கிற பிள்ளை" என்றான் சந்திரன்.

கிழவர் நகர்ந்தபிறகு, சந்திரனைப் பார்த்து, "மொட்டையம்மா யார்? அத்தையா?" என்றேன்.

"ஆமாம். அத்தைதான். இந்த ஊரிலே மொட்டையம்மா என்று சொன்னால்தான் அத்தையைப் பற்றித் தெரியும். சின்ன வயதிலே ஒரு பெரிய காய்ச்சல் வந்து தலைமயிர் உதிர்ந்து போச்சாம். மறுபடியும் முடிவளர நெடுங்காலம் ஆச்சாம். அதனால் அப்படிப் பெயர் வந்துவிட்டது."

"இயற்கையான பெயர் என்ன?"

"சிவகாமி என்று பெயர். ஆனால் அந்தப் பெயரைச் சொன்னால் ஒருவருக்கும் தெரியாது. எனக்கும் போன வருசம் வரையில் தெரியாது. அப்பா ஒரு நாள் சொன்னார். அத்தை அப்பாவை என்ன என்று கூப்பிடுவார், தெரியுமா?"

"என்ன என்று கூப்பிடுவார்?"

"குழந்தை என்று கூப்பிடுவார். தம்பி என்று சொல்வது எப்போதோ ஒரு முறைதான் இருக்கும்."

"இந்த ஊரில் அத்தையையும் முறையிட்டுத்தான் அழைப்பார்களா?"

"ஆமாம். அண்ணி, அத்தை, அக்கா, பெரியம்மா, சின்னம்மா, பாட்டி என்று அவரவர்கள் அந்தந்தக் குடும்பத்து முறை சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.

"அதிலே ஒரு கணக்கு ஒழுங்கு உண்டா?"

"ஆமாம். பங்காளிகள் முறை உண்டு. சம்பந்தி முறையும் உண்டு. மற்றொன்றாக மாறாது."

எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தது.

அன்று இரவு ஏழு மணிக்கு நிலாப் புறப்பட்டது. கிழக்கே தென்னந்தோப்பினிடையே ஒரு புதிய ஒளியும் வண்ணமும் கண்டேன். தோப்பை யாரோ அலங்காரம் செய்வதுபோல் இருந்தது. சிறிது நேரத்தில் தோப்புக்கு மேலே வெண்கதிர்கள் மெல்லத் தோன்றின. எழுந்துவரும் நிலாவை வரவேற்பதற்காக வான வழியில் கூடிய கூட்டம் போல், மேகம் பல தலைகளாய்த் தோன்றிக் காட்சி அளித்தது. நிலாவும் மேலே வந்தது. மேகக் கூட்டம் மேலும் சிதைந்து செம்மறியாட்டுக் கூட்டம் போல் தோன்றியது. இன்னும் சிறிது நேரத்தில் அந்த மேகக் கூட்டத்தின் இடையே நிலாத் தோன்ற, கூட்டம் மேலும் கரைந்து, சிறு சிறு மணல் குவியலாக, ஆயிரக்கணக்கான குவியலாகத் தோற்றமளித்தது. அந்த மணல் குவியல்களுக்கிடையே மகிழ்ந்து முகம்காட்டும் பெண் போல் விளங்கியது நிலா. எனக்கு உடனே கற்பகத்தின் முகம் நினைவுக்கு வந்தது. அவளும் அப்போது அங்கே வந்து, "என்ன அண்ணா! அவர் நிலாவை அப்படிப் பார்க்கிறாரே" என்றாள்.

சந்திரனைப் பார்த்துச் சிரித்தேன். "சந்திரா! உண்மையாகவே இவ்வளவு அழகாக நிலா வருவதை நான் எங்கும் எப்போதும் பார்த்ததே இல்லை. சந்திரனுடைய அழகை இங்கே அடிக்கடி அப்பா பார்த்து மகிழ்ந்திருப்பார். அதனால்தான் உனக்குச் சந்திரன் என்று பெயர் வைத்திருப்பார்" என்றேன்.

"அப்படியானால் இவள் பெயர்?" என்று தன் தங்கையைக் காட்டினான் சந்திரன்.

"இந்தத் தோப்பு அவருக்கு அப்போது வானுலகத்துக் கற்பகச் சோலை போல் தோன்றியிருக்கும்" என்றேன்.

"நீ எதிர்காலத்தில் பெரிய புலவன் ஆகப் போகிறாய். இல்லாத புளுகு எல்லாம் புளுகப் போகிறாய்" என்றான் சந்திரன்.

கற்பகம் கைகொட்டிச் சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.

மறுநாள் காலையில் எழுந்து தோப்புப் பக்கம் சென்றோம். வழியில் நடுத்தர வயது உள்ள ஓர் அம்மா சந்திரனை வழிமறித்து, "என்ன மருமகனே! எப்போது வந்தே? பேசாமல் போறேயே. என் பெண்ணைக் கட்டிக் கொள்ளாவிட்டாலும் வாயைத் திறந்து பேசிவிட்டுப் போகக்கூடாதா?" என்றார். சந்திரன் வெட்கத்தோடு விடை சொன்னான். மறுபடியும் அந்த அம்மா, "பேட்டைக்குப் போனாயே! உன் பெண்டாட்டிக்கு என்ன கொண்டு வந்தே, மாமிக்கு என்ன கொண்டு வந்தே, ஒரு பட்டுச்சேலை வாங்கித் தரமாட்டாயா?" என்றார். சந்திரன் தலைகுனிந்தபடியே என்னுடன் வந்துவிட்டான்.

தோப்பை அணுகியவுடன், "இந்த ஊரார் இப்படித்தான். நாங்கள் இந்த ஊரில் பழைய குடி. செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பம். அதனால் ஆண் பெண் எல்லாரும் இப்படிப் பேசுவார்கள்" என்றான்.

நான் அவனைப் பார்த்துச் சிரித்து, "உன் பாடு யோகம் தான். இந்த ஊரில் உனக்கு எத்தனையோ மாமி வீடுகளும் எத்தனையோ மனைவிமாரும் இருப்பதாகத் தெரிகிறதே! உனக்கு எப்போது திருமணம் ஆச்சு? எத்தனை திருமணம் ஆச்சு?" என்றேன்.

"சரிதான் போ அய்யா! இந்த அம்மா என் மாமியாரா? அவளுடைய மகள் எனக்குப் பெரியவள். என் அக்கா போல வளர்ந்திருக்கிறாள். அவளுக்கு ஓர் எழுத்துக்கூடத் தெரியாது. மாடு போல் உழைக்கத் தெரியும். கூடை கூடையாய்ச் சுமக்கத் தெரியும். குடம் குடமாகத் தண்ணீர் எடுத்துவரத் தெரியும். இதெல்லாம் வெறும் பேச்சுக்கு" என்றான் சந்திரன்.

"எங்கள் வீட்டில் இப்படி யாராவது மருமகன் பெண்டாட்டி என்றெல்லாம் என்னிடம் பேசினால், அம்மாவுக்குப் பிடிக்காது. சின்ன வயசிலே இந்தப் பேச்செல்லாம் தப்பு அல்லவா?" என்றேன்.

"இங்கே இதெல்லாம் பழக்கம் ஆகிவிட்டது. தப்பாக எண்ணமாட்டார்கள்."

"நீயும் பெண்களோடு இப்படி வேடிக்கையாகப் பேசுவாயா?"

"என் வயதுப் பிள்ளைகள் பேசுகிறார்கள். எனக்கு மனம் வரவில்லை. சும்மா கேட்டுக் கொண்டு, சிரித்துக் கொண்டு இருப்பேன்."

"எனக்கு என்னவோ, இது பிடிக்கவில்லை"

"எனக்குப் பழகிப்போச்சு, பெரிய வீட்டுப் பையன் என்று எல்லோரும் அன்பாகப் பேசுகிறார்கள். என்ன செய்வது?" என்றான்.

சந்திரன் தோப்புக் காவலாளை அழைத்துப் பல் துலக்கக் குச்சி ஒடித்துத் தரச் சொன்னான். அவன் கருவேலங்குச்சி இரண்டு கொண்டு வந்து கொடுத்தான். கிணற்றங்கரையில் உட்கார்ந்து பல் துலக்கிக் கொண்டிருந்தோம். காவலாள் எங்கள் எதிரே வந்து, "எப்போ சாமி கலியாணம்? பெண்ணெல்லாம் பெரிசாகி விலையாகிப் போகுது. நீ மட்டும் சும்மா இருந்தால் எப்படி? ஏதாவது இரண்டு மூணு பார்த்துக் கட்டிக்கொள் சாமி" என்றான்.

சந்திரன் அவனுடைய வாயை அடக்கி, "இந்தப் பேச்செல்லாம் இவனுக்குப் பிடிக்காது. நீ போ" என்றான்.

பல் துலக்கியானதும், சந்திரன் எழுந்து, "நீ இங்கேயே இரு. நான் மட்டும் கிணற்றில் இறங்கி இரண்டு சுற்று நீந்திக் குளித்து விட்டு வந்து விடுவேன், உனக்கு அம்மா வெந்நீர் வைத்திருப்பார்" என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு படியாய் இறங்கினான்.

"நீ எப்போதும் தண்ணீரில்தான் குளிப்பதா?" என்றேன்.

"ஆமாம், சனிக்கிழமை தவிர."

"வாலாசாவில் வெந்நீரில் குளித்தாயே."

"என்ன செய்வது? அந்தத் தண்ணீர் ஒரே உப்பு, எனக்குப் பிடிக்கவில்லை. உடம்புக்கும் நல்லது அல்ல. பாலாற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வரலாம் என்றால் யாரும் துணை இல்லை. நேரமும் ஆகும்."

உடையைக் கழற்றியதும் சந்திரன் துடும் எனக் குதித்து நீரில் ஆழ்ந்து மேலே வந்தான். எனக்கு அது அரிய பெரிய வித்தையாகத் தோன்றியது. வேலூரில் என் அத்தைமகன் இப்படிக் குதித்து எழுவதை இமைகொட்டாமல் பார்த்து வியந்து பெருமூச்சு விட்டிருக்கிறேன். சந்திரன் குதித்து நீந்திய போதும் அப்படித்தான் வியந்து பார்த்தேன்.

"சந்திரா! ஊர்க்குப் போவதற்குள் நானும் நீந்தக் கற்றுக் கொள்ளட்டுமா?" என்று ஆவலோடு கேட்டேன்.

சந்திரன் பேசுவதற்கு முன், தோப்புக்காவலாளியின் குரல் கேட்டது. "அதற்கு என்ன சாமி! வாங்க இறங்குங்க. ஒரே நாளில் நான் கற்றுத் தருவேன்" என்றான்.

அவனுடைய தன்னம்பிக்கை எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது.

"இன்றைக்கு வேண்டா, சொக்கான். நாளைக்குப் பார்க்கலாம்" என்றான் சந்திரன் கிணற்றினுள்ளிருந்தே.

காவலாள் சொக்கானும், "சரி, சாமி! நாளைக்குக் காலையில் வந்துவிடு. ஒரு புருடை கொண்டு வந்து வைத்திருப்பேன்" என்றான்.

"புருடை என்றால் என்ன?"

"சுரைக்காய் முற்றி உலர்ந்து போகுமே அது"

"அதை என்ன செய்வது?"

"அதை இடுப்பில் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினால், மேலேயே மிதக்கலாம், கையால் அடித்து நீந்தலாம்."

இதைக் கேட்டதும் என் மனம் குதித்தது. கிணற்றினுள் நீந்தி வருவது போல் கற்பனை செய்து களித்தேன்.

வீட்டுக்குத் திரும்பியபோது, அத்தை கவலையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். "வேலு! நீயுமா கிணற்றில் இறங்கினாய்?" என்று அத்தை கேட்டார்.

"இல்லை, சந்திரன் மட்டும் குளித்தான்."

"வேண்டாம்’பா; உடம்புக்கு ஆகாது. உனக்கு நீந்தவும் தெரியாது."

"எனக்கு ...." என்று நான் வாய் திறந்து நாளைய முயற்சியைச் சொல்வதற்குள் சந்திரன் கண்ணாலேயே என்னைத் தடுத்தான்.

"உனக்கு வெந்நீர் வைத்திருக்கிறேன். வா. குளித்து விடு" என்றார் அத்தை.

சந்திரன் இப்படி அத்தைக்குத் தெரியாமல் மறைத்தது எனக்குத் தவறாகத் தோன்றியது. இருந்தாலும், நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் அந்தத் தவற்றிற்கு உடந்தையாக இருந்தேன். யாருக்கும் சொல்லாமல் மனத்திற்குள் வைத்திருந்தேன்.

சிற்றுண்டி முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் வேலையாள் மாசன் ஒரு கூடை நிறைய எதையோ சுமந்துகொண்டு வந்து எங்கள் எதிரே இறக்கினான். எல்லாம் நுங்காக இருந்தன.

"யார் வெட்டியது?" என்றேன்.

"அவனே வெட்டிக்கொண்டு வந்திருப்பான்" என்றான் சந்திரன்.

"ஆமாம். நான் ஏறாத மரமே இல்லை இந்த ஊரில்" என்றான் மாசன்.

உடனே நுங்கு தின்னத் தொடங்கினோம்.

பகலுணவுக்குப் பிறகு சிறிது படுத்திருந்தோம். மாசன் எங்கள் அருகே வந்து பார்த்து, "தூங்குகிறீர்களோ என்று பார்த்தேன்" என்றான்.

"என்ன செய்தி?" என்று கேட்டேன்.

"இளநீர் தள்ளிக் கொண்டு வரும்படி அப்பா சொன்னார் கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்.

"எவ்வளவு? காலையில் கொண்டு வந்தது போல் இதுவும் ஒரு கூடை கொண்டு வந்திருக்கிறாயோ?"

இது கூடையில் கொண்டுவர முடியுமா? ஒரு கோணியில் போட்டு வந்திருக்கிறேன்.

சந்திரனைப் பார்த்துச் சிரித்தேன். "சந்திரா! சரிதான் கூடை கூடையாய், மூட்டை மூட்டையாய்த் தின்பதற்கு யாரால் முடியும்," என்றேன்.

"இப்படித்தான், உன் பெயரைச் சொல்லி, நான், மாசன், அம்மா, கற்பகம் எல்லோரும் சாப்பிடுவோம்" என்றான்.

அன்று இரவு உறங்குவதற்கு முன் நாளைக் காலையில் பெரிய வித்தையைக் கற்றுக் கொள்ளபோகிறோம் என்ற குதுகுதுப்பான மனத்தோடு கண்மூடினேன்.

வழக்கமாக விழித்துக் கொள்ளும் நேரத்துக்கு முன்பே விழித்து எழுந்தேன். சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தான். அத்தை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். "வேலு! இந்த ஊர் பிடிக்குதா?" என்று கேட்டார்.

"ஆமாம். நல்ல ஊர்தான்" என்றேன்.

"உன் அம்மா அப்பாவுக்கு உன்னைப் பற்றியே கவலையாக இருக்கும்."

"இருக்காது அத்தை"

"இருக்கும் வேலு! சந்திரன் அப்பா சாமண்ணா சின்னக் குழந்தையாக இருந்தபோது எங்கள் அம்மா செத்து விட்டாள். நான்தான் அவனைப் பாலூட்டிச் சோறூட்டி வளர்த்தேன். அந்தப் பாசம் பொல்லாதது. சாமண்ணா சின்னப் பையனாக இருந்தபோது, இப்படி யாராவது எங்காவது வெளியூர்க்கு அழைத்துக் கொண்டு போனால் தம்பியைப் பற்றியே எனக்குக் கவலையாக இருக்கும்.

"சந்திரன் அப்பாவை நீங்கள் தான் வளர்த்தீர்களா?"

"ஆமாம்’பா."

"அதனால்தான் அவரை நீங்கள் குழந்தை குழந்தை என்று கூப்பிடுகிறீர்களா?"

"ஆமாம் வேலு."

அப்போது சந்திரன் காலை நீட்டி என்மேல் கைகளை வைத்து அழுத்தித் திமிர்விட்டான். "யார்? அத்தையா? ஏன் அத்தை! வெந்நீர் வைத்துவிட்டேன் என்று சொல்கிறாயா? தோப்புக்குப் போய்வந்து அப்புறம் குளிப்பான்" என்றான்.

"இன்றைக்கு" என்று நான் வாயெடுப்பதற்குள், "வேலு! அத்தை சொன்னபடி கேள்; சும்மா இரு" என்று என்னைக் கண்ணாலே உருத்துப் பார்த்தான்.

அவன் கருத்தைத் தெரிந்து கொண்டு நான் பேசாமல் இருந்தேன்.

தோப்புக் காவலாள் சுரைப்புருடை வைத்துக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்தான். பல்லை அவசர அவசரமாகத் துலக்கிவிட்டு கிணற்றினுள் இறங்கினேன். காவலாள் எனக்கு முன் இறங்கி அந்தச் சுரையை என் இடுப்பில் கட்டினான். "தயங்காமல் இறங்குங்கள். இறங்கிப் பாருங்கள்" என்றான். மெல்ல மெல்ல முழங்காலளவு நீரிலிருந்து இடுப்பளவிற்கு இறங்கினேன். சுரை என்னைத் தூக்குவதை உணர்ந்தேன். ஒருவகைப் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் பிறந்தன. காவலாளும் சந்திரனும் எனக்கு முன் நீரில் சென்றார்கள். துணிந்து வரச் சொன்னார்கள். எனக்குத் துணிவு வரவில்லை.

கை கொடு என்று காவலாள் சொக்கான் என் கையைப் பிடித்தான். நீரில் மிதந்தேன். கைகால்களை அடிக்கச் சொன்னார்கள். சிறிது தூரம் சென்று திரும்பி வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாகத் துணிவு வந்தது. பெற முடியாத ஒரு பேற்றைப் பெற்று விட்டவன் போல் கரை ஏறினேன். திரும்பியபோது சந்திரன் என்னைப் பார்த்து, "அத்தை வெந்நீர் வைத்திருப்பார்கள். பேசாமல் குளித்துவிடு. இல்லையானால் ஒவ்வொரு சொம்பாக மொண்டு கீழே கொட்டிவிட்டு வெளியே வந்துவிடு" என்றான்.

எனக்கு அவனுடைய போக்குப் புதுமையாக இருந்தது. "சந்திரா! நீ பொல்லாதவனாக இருக்கிறாயே" என்றேன்.

"என்ன பொல்லாதவன்! யாரையாவது அடித்தேனா? எங்காவது திருடினேனா?"

"தப்பு இல்லையா? பொய் இல்லையா?"

"அதனால் யாருக்கு என்ன தீங்கு?"

அன்றுதான் அழகான சந்திரனுடைய பண்பில் ஏதோ களங்கம் இருப்பது போல் உணர்ந்தேன். "இருந்தாலும் எனக்குப் பிடிக்கவில்லை. தப்புத்தான்" என்றேன்.

"இருந்து போகட்டுமே" என்று கவலை இல்லாமல் சொன்னான் சந்திரன். அவன் சொன்ன முறையில் களங்கம் மிகுதியாகப் புலப்பட்டது.

"நான் ஒரு நாளும் இப்படிச் செய்யமாட்டேன்."

"அதனால்தான் நான் வேறு, நீ வேறாக இருக்கிறோம். என் பெயர் சந்திரன். உன் பெயர் வேலு!"

வீட்டை நெருங்கிவிட்டோம். சந்திரன் சொன்னபடி செய்தேன். வேறு வழி இல்லை. செய்த பிறகு, குற்றவாளி போன்ற உணர்ச்சியோடு வெளியே வந்தேன். குற்ற உணர்ச்சி மாறுபடுவதற்கு நெடுநேரம் ஆயிற்று.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி அன்று ஒரு வண்டி பூட்டிவரச் சொல்லி, எலுமிச்சம் புளிச்சோறும் வாழைப்பூ வடையும் செய்துகொண்டு சந்திரனும் நானும் வேலத்து மலையடிவாரத்தில் இருந்த தாழை ஓடைக்குப் புறப்பட்டோம். மாசன் எங்களுக்கு துணையாக வந்தான். கற்பகமும் வருவதாகத் தன் தாயையும் அத்தையையும் கேட்டுப் பார்த்தாள்; வற்புறுத்திப் பார்த்தாள். "அறியாத பெண். நீ அங்கெல்லாம் போகக்கூடாது. ஏதாவது காற்று இது அது இருக்கும் இடம். அவர்கள் ஆண்பிள்ளைகள் போய் வரலாம். நீ போகக் கூடாது" என்று சொல்லி அவளைத் தடுத்து விட்டார்கள். என் மனம் கற்பகத்திற்காக இரக்கம் கொண்ட போதிலும், அவர்கள் சொன்ன காரணத்தை எண்ணிப் பேசாமல் இருந்தேன்.

ஆனால் அங்கே போன இடத்தில் கற்பகத்தின் வயது உள்ள பெண்கள் இருவர் ஆடு மேய்த்துக்கொண்டு திரிவதைக் கண்டேன். அவர்கள் அஞ்சாமல் உலவும் இடத்தில் கற்பகம் வந்தால் தீங்கு என்ன என்று எண்ணினேன் அதைச் சந்திரனிடம் சொல்லவில்லை.

தாழை மரங்கள் நல்ல நிழல் தந்து அடர்த்தியாக இருந்தன. அங்கங்கே சில பூக்கள் காணப்பட்டன. அவற்றை ஒருவன் துறடு கொண்டு பறித்துக் கொண்டிருந்தான். மலர்ந்த பூக்களின் மணம் இன்பமாக இருந்தது. இலையெல்லாம் மடலெல்லாம் முள்ளாக உள்ள மரம்; ஒழுங்கும் அழகும் இல்லாமல் வளரும் மரம், இவ்வளவு மணமுள்ள பூக்களைத் தருகிறதே என்று வியந்தேன்.

ஓடையில் தண்ணீர் மிகுதியாக இல்லை. சலசல என்று மெல்லிய ஒலியோடு நீர் ஓடிச் சென்று கொண்டிருந்தது. ஒரு பாறையின் மேல் பரவலாக ஓடியது, அங்கெல்லாம் பாசி மிகுதியாக இருந்தபடியால் கால்வைத்து ஏறுவதற்குத் தயங்கினேன். மாசன் அஞ்சாமல் பாசி இல்லாத இடமாகக் கால்வைத்து அழைத்துச் சென்றான். ஒரு சின்னக் கோயில் காணப்பட்டது. கன்னிக்கோயில் என்று சொன்னான். தேங்காய் நார் அங்கங்கே இருந்தபடியால், யாரோ வந்து பூசை செய்துவிட்டுப் போகிறார்கள் என்று தெரிந்தது. ஒரு பாறை மேல் உட்கார்ந்து மேலே பார்த்தோம். அந்த இரண்டு பெண்களும் அடுத்த பெரிய பாறைமேல் மடமட என்று ஏறிக் கொண்டிருந்தார்கள்.

"நாமும் அங்கே போவோம். அங்கேயிருந்து கூவினால், எதிரே இருக்கும் மலை அப்படியே கூவும்" என்றான்.

சரி என்று சந்திரனும் நானும் எழுந்தோம். ஏறிச் சென்றோம். அவன் சொன்ன இடத்தில் நின்றோம். அங்கிருந்து ஓ என்று கூவினான். எதிரே இருந்த மலைப் பகுதியிலிருந்து ஓ என்ற ஒலி திரும்பக் கேட்டது. சா-மீ என்று கூவினான். அதுவும் அப்படியே எதிரொலியாக கேட்டது. "இங்கே வா" என்று நான் உரக்கக் கூவினேன்.

எதிரொலியும் அவ்வாறே கேட்டது. உடனே, "வரமாட்டோம்" என்ற குரலும், அதன் எதிரொலியும் கேட்டது. யாருடைய குரல் என்று திரும்பிப் பார்த்தோம். மற்றொரு பாறையில் அந்த இரு சிறுமிகளும் நின்று கொண்டு அப்படிக் கத்தியிருக்க வேண்டும் என்று உணர்ந்தோம். "ஏ பசங்களே!" என்று சந்திரன் கூவினான். எதிரொலியும் கேட்டது. "ஏ அய்யா" என்று அந்தப் பெண்களின் குரலும் அதை அடுத்து எதிரொலியும் கேட்டது.

சிறிது நேரம் அங்கே இருந்தபிறகு, கீழே இறங்கினோம். அந்தப் பெண்களும் இறங்கி வந்தார்கள். அவர்கள் நெருங்கி வந்தபோது சந்திரன் அவர்களைப் பார்த்து, "இங்கே வாங்க" என்றான். கரவு அறியாத அந்தப் பெண்களும் அவ்வாறே வந்தார்கள். "ஏற்றப்பாட்டு, கும்மிப்பாட்டு ஏதாவது பாடுங்கள்" என்றான்.

"ஆடு எங்காவது போய்விடும். நாங்கள் போகணும்" என்றாள் ஒருத்தி. "எங்களுக்கு பாட்டுத் தெரியாது" என்றாள் மற்றவள்.

"அன்றைக்குப் பாடினீர்களே, தெரியும். பாடுங்கள்" என்றான் சந்திரன்.

அவர்கள் மறுத்தார்கள்.

"நான் யார் தெரியுமா? பெருங்காஞ்சி - பெரிய வீட்டு மகன் தெரியுமா?" என்றான் சந்திரன்.

"தெரியும்; இப்போது பாடமாட்டோம்" என்றாள் ஒருத்தி. மற்றொருத்தி, "வாடி போகலாம்" என்று நடந்தாள்.

"பாடாவிட்டால் விடமாட்டோம். இதோ பார், ஆளுக்கு ஓர் அணா தருகிறேன். பாடுங்கள்" என்று சட்டைப்பையிலிருந்து இரண்டு அணா எடுத்து நீட்டினான்.

"பாடுங்கள் சும்மா. வெற்றிலைக்குக் காசு கிடைக்குது" என்றான் மாசன்.

அந்தப் பெண்களும் நாணத்தோடு ஒருத்தி முகத்தை மற்றொருத்தி பார்த்துக்கொண்டு தயங்கித் தயங்கிப் பாடினார்கள். ஒரு பாட்டு முடிந்ததும். இன்னொரு பாட்டு என்று கேட்டான். முதல் பாட்டை விட இரண்டாம் பாட்டை நன்றாகவே பாடினார்கள். ஆனால் நாணம் அவர்களைத் தடுத்தது. சந்திரனிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு போய் மாசன் அவர்களிடம் கொடுத்தான்.

சந்திரன் நடந்துகொண்ட முறையும், காசு கொடுத்துப் பாடச் செய்ததும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன குற்றம் என்றும் சொல்லத் தெரியவில்லை. ஒன்று மட்டும் உணர்ந்தேன். கற்பகத்தையோ மணிமேகலையையோ இப்படி யாரேனும் வழிமறித்துக் காசு காட்டிப் பாட வைத்திருந்தால், சந்திரனும் பொறுக்கமாட்டான்; நானும் பொறுக்கமாட்டேன். இதை நான் உணர்ந்தேன்; சந்திரனுக்கு எப்படி உணர்த்துவது என்று தெரியவில்லை.

கொண்டுபோயிருந்த சோற்றையும் வடையையும் தின்று முடித்தபின், சிறிது நேரம் படுத்திருந்து, எழுந்து வண்டி பூட்டினோம். பொழுதோடு வந்து சேர்ந்தோம். வீட்டில் கற்பகத்தை கண்டபோது அவள் முகத்தில் ஒரு வகை ஏமாற்றம் இருக்க கண்டேன்.

மறுநாள் காலையில் எழுந்ததும் தோப்பை நோக்கி ஆர்வத்தோடு நடந்தேன். முன்போலவே அவசரமாகப் பல் துலக்கிவிட்டு, சுரையைக் கட்டிக் கொண்டு நீரில் இறங்கிச் சுற்றிவந்தேன். சுரையின் கயிறு வயிற்றை இறுக்கினாற்போல் தெரிந்தது. அதை அவிழ்த்து நெகிழ்த்திக் கட்டுமாறு காவாலாளுக்குச் சொன்னேன். அவன் சுரையை அவிழ்த்த சமயம் பார்த்து, சந்திரன் என்னை நீரில் தள்ளிவிட்டான். நான் பயந்து முழுகி இரண்டு விழுங்குத் தண்ணீரும் குடித்து விட்டுக் கரை சேர முடியாமல் தடுமாறினேன். காவலாள் சொக்கன் உடனே பாய்ந்து என்னைத் தாங்கிக் கொண்டான். கரையில் வந்தவுடன், சந்திரனைப் பார்த்து, "என்னைக் கொன்றுவிடப் பார்த்தாயே" என்றேன்.

"பக்கத்திலேயே நானும் சொக்கானும் இருக்கும்போது நீ முழுகிப் போகும்படி விடுவோமா?" என்றான்.

"ஏன் அப்படித் தள்ளினாய்?"

"அப்போதுதான் பயம் போகும்; நீந்த முடியும்."

"அய்யோ! இனிமேல் அப்படிச் செய்யாதே."

"சே! இப்படிப் பயந்தால் எப்போதுதான் நீந்தக் கற்றுக் கொள்ளப் போகிறாய்" என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் பிடித்துத் தள்ளிவிட்டான்.

இந்த முறையும் முழுகித் தண்ணீர் குடித்து எழுந்தேன். சொக்கான் பாய்ந்து தாங்கிக் கொண்டான்.

"உள்ளே போய் மேலே வந்தாய் அல்லவா? கையை அடித்துக்கொண்டாய்; மேலே வந்துவிட்டாய். அதுதான் நீந்துவதற்கு முதல் பாடம்" என்றான்.

அவன் சொன்னது போல் பயம் ஒருவகையாய்த் தெளிந்தது. ஆனாலும் சுரை கட்டும்படியாக மன்றாடினேன். முந்திய நாளைவிட நன்றாக நீந்தினேன்.

அடுத்தநாள் சுரை இல்லாமலே இறங்கவேண்டும் என்ற ஆசை எனக்கே ஏற்பட்டது. அவ்வாறே செய்தேன். சொக்கானை முன்னே போய் நீரில் நீந்தும்படியாகச் செய்து விட்டுப் பின்னே நான் நீந்தினேன். பயம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. தண்ணீரும் தரைபோல் ஆயிற்று. அரிய வித்தை ஒன்றைக் கற்றுக்கொண்ட பெருமிதத்தோடு வீட்டுக்குத் திரும்பினேன்.

அன்று அத்தையைப் பார்த்தவுடன் சந்திரன், "அத்தை! வெந்நீர் வேண்டா, கிணற்றிலேயே குளித்துவிட்டான். நீந்தவும் கற்றுக் கொண்டான்" என்றான்.

அத்தை மோவாய்மேல் வைத்த கையை எடுக்காமல் மரம் போல் நின்றார். "அவனுடைய அம்மா அப்பாவுக்குத் தெரிந்தால்" என்றார்.

"மகன் நீந்தக் கற்றுக் கொண்டதற்காக ஆனந்தப்படுவார்கள்" என்றான் சந்திரன்.

அத்தை என்னுடைய தலையைத் தொட்டுப்பார்த்து, "இன்னும் ஈரம் போகவில்லையே" என்று தன் முந்தானையால் துவட்டினார்.

மேலும் இரண்டு நாள் இருந்துவிட்டு ஊர்க்குப் புறப்பட்டேன். சிலவகைத் தின்பண்டங்கள் செய்து ஒரு புட்டியில் வைத்து, பதிவு நிலையத்துக்கு வருவோர் சிலருடன் சேர்த்து என்னை அனுப்பி வைத்தார்கள்.

புறப்பட்டபோதே, கற்பகம் என்னைப் பார்த்து "இன்னொரு முறை வரும்போது மணிமேகலையை அழைத்துக் கொண்டு வரணும்" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_6&oldid=7875" இலிருந்து மீள்விக்கப்பட்டது