அகல் விளக்கு/அத்தியாயம் 7

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

பள்ளிக்கூடம் திறந்தவுடன் நானும் சந்திரனும் மேல் வகுப்பில் உட்கார்ந்தோம். அங்கே தலைமையாசிரியர் வந்து, 'சந்திரன்!' என்று பெயரைக் கூப்பிட்டு, அவனிடம் வந்து முதுகைத் தட்டிக்கொடுத்தார். "எல்லாப் பாடத்திலும் இவன்தான் முதன்மையான எண்கள் வாங்கியிருக்கிறான். இவன் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவான். நம் பள்ளிக்கூடத்துக்கும் இவனால் நல்ல பெயர் கிடைக்கும்.

இப்படியே படித்து வந்தால், அடுத்த ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநிலத்திலேயே முதல்வனாகத் தேறமுடியும். மற்ற மாணவர்கள் இவனைப் போல் பாடுபட்டுக் கற்கவேண்டும்" என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பாராட்டில் பாதி எனக்குக் கிடைத்ததுபோல் நானும் மகிழ்ந்தேன். சந்திரன் என் பக்கத்தில் உட்காருவது பற்றியும், என் தெருவில் குடியிருப்பது பற்றியும், என் நண்பனாக இருப்பது பற்றியும் பெருமை கொண்டேன்.

அந்த வகுப்பில் வரலாறு, விஞ்ஞானம், கணக்கு ஆகிய மூன்றில் ஒரு பாடத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் அதை முடிவு செய்ய வேண்டும் என்றும் தலைமையாசிரியர் கூறிவிட்டுச் சென்றார்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் எதைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொள்வது என்று எண்ணிக்கொண்டும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டும் சென்றோம். எங்களால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. எங்கள் இரண்டு குடும்பங்களிலும் அதற்கு வழிகாட்டக் கூடியவர்கள் யாரும் இல்லை.

பாக்கிய அம்மையாரின் தம்பி பத்தாவது வரையில் படித்தவர். ஆகையால் அவரைக் கேட்டால் தெரியும் என்று அம்மா சொன்னார். உடனே நானும் சந்திரனும் பாக்கியத்தின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவர் இல்லை. "தம்பி வரும் நேரம் ஆயிற்று. வந்ததும் கேட்டு வைத்துச் சொல்’றேன்" என்றார் அந்த அம்மா. சந்திரனைப் பார்த்து, "தலையைச் சரியாக வாரக் கூடாதா? கலைந்து போயிருக்கிறதே" என்றார்.

பிறகு சந்திரனுடைய தாயைப் பற்றியும் தங்கையைப் பற்றியும் தங்கையின் படிப்பைப் பற்றியும் விரிவாகக் கேட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. இவ்வாறு பேசிக்கொண்டே இருந்தபோது, சிறிது நேரத்தில் அவருடைய தம்பி வந்துவிட்டார். "இந்தப் பிள்ளைகள் என்னவோ கேட்கிறார்கள். சிறப்புப் பாடமாம். எதை எடுத்துக் கொள்ளலாம் என்று உன்னைக் கேட்க வந்திருக்கிறார்கள்" என்றார்.

அந்தத் தம்பியின் குரலிலிருந்து 'ஆ' என்ற ஒலி வந்ததே தவிர, புன்சிரிப்போ முகமலர்ச்சியோ ஒன்றும் காணப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, "போன தேர்வில் எந்தப் பாடத்தில் நல்ல மார்க் வந்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அதோடு பேச்சை முடித்துவிட்டார். யாருக்கு எதில் மிகுதியான மார்க் என்றும் கேட்கவில்லை.

"எனக்கு கணக்கில் மிகுதியான மார்க்; நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து" என்றான் சந்திரன்.

"அதை எடுத்துக்கொள்" என்றார் அவர்.

"இவனுக்கு வரலாற்றில் நாற்பத்தைந்து மார்க். மற்றப் பாடங்களில் அதைவிடக் குறைவு" என்று சந்திரனே என்னைப் பற்றியும் கூறினான்.

"அப்படியானால் வரலாறுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார் அவர்.

இதைத் தெரிந்து கொள்வதற்காகவா இந்த ஊமையிடம் வந்தோம் என்று வெறுப்போடு திரும்பினோம். குறைவான என் எண்களைப் பற்றிப் பாக்கிய அம்மையார் தெரிந்து கொள்ளும்படியாகச் சந்திரன் சொன்னது எனக்கு வருத்தமாகவும் இருந்தது.

நாங்கள் அது பற்றி ஒரு முடிவுக்கும் வரவில்லை. மறு நாள் வகுப்பில் ஆசிரியர் கேட்டபோது சந்திரன் கணக்குப் பாடம் எடுத்துக் கொள்வதாகச் சொன்னான். என்னைக் கேட்டபோது நானும் அதுவே சொன்னேன். உடனே ஆசிரியர் என்னை நோக்கி, "கணக்கில் உனக்கு எத்தனை எண்கள்?" என்றார்.

"முப்பத்தாறு" என்றேன்.

"அப்படியானால் உனக்கு எப்படிக் கணக்குக் கிடைக்கும்?" என்றார்

எனக்குப் பெரிய மனக்குறை ஆகிவிட்டது. அடுத்த வகுப்பில் மற்றோர் ஆசிரியர் வந்து அவ்வாறே கூறினார். சந்திரன் எடுக்கும் பாடமே நானும் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு வழி என்ன என்று கலங்கினேன். சந்திரனும் எனக்காக வருந்தினான். "உனக்காக நான் வரலாறு எடுத்துக் கொள்ளட்டுமா?" என்றான்.

அவனுடைய அன்புணர்ச்சியை எண்ணி உருகினேன். "வேண்டா, கணக்கு ஆசிரியரிடம் நாம் இருவரும் நேரே போய்க் கேட்டுப் பார்ப்போம்" என்றேன்.

மறுநாள் கணக்கு ஆசிரியரிடம் போகவில்லை. ஏதோ ஒருவகை அச்சம் எங்களைத் தடுத்தது. கணக்கு ஆசிரியர் அப்படிப்பட்டவர். ஒருவரையும் அடிக்கமாட்டார்; வைய மாட்டார்; வகுப்பில் ஏதாவது தவறு செய்துவிட்டால் பார்வை பார்த்து அமைதியாக இருப்பார்; கணக்கில் ஏதாவது தவறு செய்தால், பக்கத்தில் வந்து நின்று காதைப் பிடித்துக் கொள்வார்; திருகமாட்டார்; தம் கையில் உள்ள சாக்குத் துண்டினால் கன்னத்தில் குத்துவார்; இவ்வளவுதான்.

மற்ற ஆசிரியர்களோடும் பேசமாட்டார்; பழகமாட்டார்; வகுப்பு இல்லாத நேரத்தில் தம் அறையில் ஒரு மூலையில் சன்னல் ஓரமாக உட்கார்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பார். அவருடைய உயரமான வடிவமும், நீண்ட கறுப்பு அல்பாக்கா சட்டையும், ஒரே நிலையான அமைதியான முகத்தோற்றமும் அப்படி எங்கள் மனத்தில் ஒருவகை அச்சத்தை ஏற்படுத்தின.

மற்ற ஆசிரியர்களுக்கெல்லாம் வழக்கம் போல் ஒவ்வொரு குறும்புப் பெயர் வைத்திருப்போம். கணக்கு ஆசிரியர்க்கு மட்டும் அப்படி ஒரு பெயர் வைத்ததில்லை. எங்களுக்கு முன் தலைமுறையைச் சார்ந்தவர்களும் அப்படி ஒரு பெயர் வைத்ததில்லை. வைத்திருந்தால், அந்தப் பெயர் வழிவழியாக மாணவர்களிடையே வழங்கியிருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஆசிரியரிடம் எப்படி அணுகிக் கேட்பது என்று இரண்டு நாள் தயங்கினோம். மூன்றாம் நாள் சந்திரன் துணிந்தான். என்னை அழைத்துக்கொண்டு அவர் இருந்த அறைக்குள் நுழைந்தான், எங்களைக் கண்ட கணக்கு ஆசிரியர் வாய் திறக்காமல் தலையை மெல்ல அசைத்தார். வரலாம் என்பது அதற்குப் பொருள். அணுகி நின்றோம். கண்ணால் ஒரு வகையாகப் பார்த்து மறுபடியும் தலை அசைத்தார். "என்ன காரணமாக வந்தீர்கள்?" என்பது அதற்குப் பொருள்.

சந்திரன் வாய் திறந்து, "நான் சிறப்புப் பாடமாகக் கணக்கைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்" என்றான்.

ஆசிரியர் வாய் திறந்து, "சரி" என்றார். மறுபடியும் சந்திரன், "இவனும் கணக்கு வேண்டும் என்கிறான்" என்றான்.

"மார்க்"

"முப்பத்தாறு"

ஆசிரியர் உதட்டைப் பிதுக்கினார். பயன் இல்லை என்பது அதற்குப் பொருள்.

"நாங்கள் இருவரும் ஒரே தெருவில் பக்கத்துப் பக்கத்தில் இருந்து படிக்கிறோம். அதனால் ஒரே பாடமாக இருந்தால்-" இவ்வாறு சந்திரனே பேசினான்.

நான் வணக்கமாக வேண்டிக்கொள்ளும் முறையில் நின்றேன்.

"நீ சொல்லித் தருவாயோ?" என்றார் ஆசிரியர்.

"சொல்லித் தருவேன்" என்றான் சந்திரன்.

"சரி, போ" என்று சொல்லிவிட்டு ஆசிரியர் என்னைப் பார்த்துக் கண்களை ஒருமுறை மூடித்திறந்து தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து அசைத்தார்.

நான் வாயைத் திறக்காமலே கைகூப்பி வணக்கம் செலுத்திவிட்டுச் சந்திரனைத் தொடர்ந்து வெளியே வந்தேன்.

அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து ஒருநாள் வகுப்பில் கணக்கு ஆசிரியரின் கையில் என் காது அகப்பட்டுக் கொண்டது. "கணக்கே வேணும் என்றாயே! விதிகளை மனப்பாடம் பண்ணினாயா? கணக்குகளை நாள்தோறும் காலையிலும் மாலையிலும் போட்டாயா? சந்திரனிடம் கேட்டாயா?" என்று என் கன்னத்தில் சாக்குத் துண்டால் குத்தினார்.

அந்த 'தீட்சை' நிறைவேறிய பிறகு, உண்மையாகவே கணக்குப் பாடத்தில் நான் முன்னேறினேன். முப்பத்தாறு எண்கள் வாங்கியவன். கால் தேர்வில் ஐம்பது வாங்கினேன். அரைத் தேர்வில் ஐம்பத்தைந்து வாங்கினேன். சந்திரன் எனக்கு மிகப் பெரிய துணையாக இருந்து உதவினான். மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் போதே சில சந்தேகங்களை எல்லாம் தீர்த்து உதவினான். கணக்கு ஒரு கடினமான பாடம் என்ற பயமே பறந்து போயிற்று. ஆனாலும் சந்திரனைப் போல் அவ்வளவு வல்லவனாக விளங்க முடியவில்லை; அவனைப் போல் தொண்ணூறு, தொண்ணூற்றெட்டு, நூறு எண்கள் பெறமுடியவில்லை.

முந்திய ஆண்டைவிட இந்த ஆண்டில் சந்திரனுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு வளர்ந்தது. அவன் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பழகிக்கொண்டே எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்த உதவியை நன்றியோடு நினைத்துப் போற்றினேன். சில நாட்களில் மாலையில் நெடுந்தொலைவு நடந்துபோய் வரும் வழக்கத்தை மேற்கொண்டோம். பெரும்பாலும் ரயில் நிலையச் சாலையில், அதாவது வடக்கு நோக்கியே நடந்து போய் வந்தோம். நடக்கும்போது பலவகையான செய்திகளைப் பேசிக்கொண்டு போவோம்.

தேர்வு உள்ள காலங்களில் நடக்காமல், கையில் புத்தகமோ குறிப்போ எடுத்துக்கொண்டு மெல்லப் பார்த்துக் கொண்டே நடப்போம். அந்தச் சாலையில் இலுப்பை மரங்கள் இரு பக்கத்திலும் நிறைய வளர்ந்திருந்தன. சில சமயங்களில் அவற்றின் பூக்கள் ஒரு புதுமையான நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். கீழே பழங்கள் போல் வெண்ணிறமாக விழுந்து கிடக்கும். சிறுவனாக இருந்தபோது அவற்றைப் பழங்கள் என்றே எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அவற்றை எடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, "இந்தப் பழங்களைத் தின்னலாமா?" என்று கேட்டேன். "இவைகள் பழங்கள் அல்ல, பூக்கள்" என்று என்னைப் பார்த்துச் சிரித்தான். அன்று அவனிடமிருந்து அந்த வேறுபாட்டைக் கற்றுக் கொண்டேன். ஒருநாள் சந்திரனுக்கு அதைச் சொன்னபோது "இது எனக்குத் தெரியுமே. இலுப்பைப்பூ பழம் போலவே இருக்கும். அதில் உள்ள தேனை உறிஞ்சிச் சுவைப்பார்கள்" என்றான்.

அந்த இலுப்பைமரச் சாலை ஓரமாகவே பாடத்தில் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விடைகள் சொல்லிக் கொண்டும் நடப்போம். ஒருநாள் ஒரு தோப்பின் எதிரே உட்கார்ந்து கணக்கு ஒன்றைச் சந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தேன். அவன் ஒரு குச்சியை எடுத்து மண்ணில் கோடுகள் கிழித்து இருசம முக்கோணத்தில் ஒரு வெட்டு வெட்டி, இரண்டு பகுதிகளிலும் உள்ள கோணங்களின் ஒற்றுமை வேற்றுமையை விளக்கிக் கொண்டிருந்தான். அதை முடித்தவுடன், "நேரம் ஆயிற்று போகலாமா?" என்றான்.

"இன்றைக்கு முழுநிலா நாள்போல் இருக்கிறதே. அதோ பார், நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது. இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம்" என்றேன்.

"உனக்கு நிலா என்றால் மிகவும் விருப்பம்போல் தெரிகிறது.

"ஆமாம். சந்திரன் அல்லவா! உன் பெயர், உன் நிறம், உன் பண்பு எல்லாம் எனக்கு விருப்பம்தான்."

அவ்வாறு நான் சொல்லி முடித்தவுடன் பெருங்காஞ்சியில் கண்ட நிலாவின் காட்சி நினைவுக்கு வந்தது.

"எங்கள் ஊரில் நிலா மிக அழகாக இருந்ததாகச் சொன்னாயே" என்று சந்திரனும் அதையே கூறினான்.

"ஆமாம்" என்று சொல்லிக் கிழக்கு வானத்தை அணி செய்து கொண்டு எழுந்துவந்த முழுநிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் வெள்ளிமேனியும் வட்ட வடிவும், அமிழ்த ஒளியும் பற்றி எண்ணிக் கொண்டிருந்தபோது அதன் உடலில் உள்ள களங்கத்தைப் பற்றிய எண்ணம் வந்தது. என்ன காரணமோ, பெருங்காஞ்சியில் சந்திரனுடைய நடத்தையில் கண்ட மாசு என் நினைவுக்கு வந்தது. கிணற்றில் குளித்த பிறகு வெந்நீரை எடுத்துக் கீழே கொட்டச் சொன்னதும், தாழை ஓடையில் அந்தப் பெண்களுக்குக் காசு கொடுத்து மயக்கிப் பாடச் சொன்னதும் நினைவுக்கு வந்தன. பக்கத்தில் இருந்த சந்திரனைப் பார்த்தேன். புன்முறுவல் கொண்டேன்.

"என்ன அய்யா! அந்தச் சந்திரனைப் பார்த்துவிட்டு என்னையும் பார்த்துச் சிரிக்கிறாயே?" என்றான் சந்திரன்.

"அந்தச் சந்திரனிடத்தில் எவ்வளவு பெரிய களங்கம் இருக்கிறது! உன்னிடத்தில் ஒரு களங்கமும் இல்லை அல்லவா?" என்றேன்.

"போதும் போதும் உன் கதை. எழு, எழு" என்று புறப்பட்டான். நானும் தொடர்ந்து வந்தேன்.

என் நண்பனுடைய உள்ளத்தில் - நடத்தையில் - சிறு களங்கம் இருக்கிறதே. அது இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் மட்டும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை.

இந்த ஆண்டில் சந்திரனுடைய வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர் வந்தார்கள். அத்தைக்கு வேலை மிகுதியாயிற்று. படிப்பதற்கு வேண்டிய அமைதி இல்லை என்று சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவான். தேர்வுக் காலத்தில் தனித்தனியே படித்தால் நல்லது என்று எண்ணி அவன் பாக்கியம் அம்மையாரின் வீட்டுக்குப் போய்விடுவான். அந்த வீட்டில் குழந்தைகளின் கூச்சலும் இல்லை; விருந்தினரின் ஆரவாரமும் இல்லை. இருந்த ஒரு தம்பியும் உணவுக்கடையில் உண்பதுபோல் உண்டு முடித்துத் திண்ணையை நாடி அமைதி பூண்டார். உணவுக் கடையிலும், சிலர் பரிமாறுவோரோடும் வேலையாட்களோடும் நெருங்கிப் பழகிச் சிரிப்பும் ஆரவாரமுமாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், சிலர் வீட்டில் இருப்பதைவிட, உணவுக்கடையில் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். நெடுநேரம் பாடிக்கொண்டும் சீட்டாடிக் கொண்டும் இருப்பார்கள். பாக்கியத்தின் தம்பியோ, வீட்டை வீடாகவும் கருதவில்லை. உணவு விடுதியாகவும் கருதவில்லை. ஒரு சத்திரமாகக் கருதினார் என்று சொன்னால் ஒரு வகையில் பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட வீட்டில் தேர்வுக் காலத்தில் தனியே அமைதியாகப் படிப்பது சந்திரனுக்கு உகந்ததாக இருந்தது.

சந்திரன் வீட்டுக்கு விருந்தினர் வந்தபோது நான் அடிக்கடிப் போவதில்லை. அத்தை மட்டும் சில நாட்களில் கேட்பார்: "ஏன் வேலு! நான்கு நாளாக எங்கள் வீட்டுக்கே வரவில்லையே" என்பார்.

"யார் யாரோ வந்திருந்தார்கள். அதனால் நான் வரவில்லை" என்பேன்.

"யார் வந்தால் என்ன? எனக்குக் கூச்சமா? நீ வரலாமே! நீ என்ன, இப்படிப் புதிய ஆட்களைப் பார்த்தால் பழகுவதற்குக் கூச்சப்படுகிறாயே, சந்திரனைப் பார், யார் வந்தாலும் கலகல என்று பேசிப் பழகுகிறான்." என்பார் அத்தை.

அம்மாவும் அதற்குத் தகுந்தாற் போல், ஒருநாள், "அது என்னவோ தெரியவில்லை அம்மா! இவனும் அப்படி இருக்கிறான். இவன் தங்கை மணிமேகலையும் அப்படித்தான் இருக்கிறாள்" என்றார்.

"மணிமேகலை அப்படி இருக்கலாம். அவள் பெண், வேலு ஏன் அப்படி இருக்கணும்?" என்றார் அத்தை.

அப்படி நான் சின்ன வயதில் பழகியதைப் பற்றியும் அத்தை சொன்னதைப் பற்றியும் பிற்காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கிறேன். அப்படி ஒதுங்கித் தயங்கி வாழ்ந்து வந்த காரணத்தால் நான் எத்தனையோ இடர்களிலிருந்து தப்பியிருக்கிறேன் என்று சொல்லலாம்.

அத்தை வீட்டில் விருந்தினர் வந்தபோதெல்லாம் ஒதுங்கியிருந்த நான், கற்பகம் வந்தபோது அவ்வாறு ஒதுங்கியிருக்கவில்லை. அப்போது மட்டும் அடிக்கடி போய்க் கொண்டிருந்தேன். கற்பகத்தைக் காண்பதற்கென்றே அடிக்கடி போனேன். அவளும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து, என் அலமாரியையும், பெட்டியையும் திறந்து புத்தகங்களை எடுத்துப் படங்கள் பார்த்துவிட்டுச் செல்வாள்.

என் தங்கை மணிமேகலையோ தம்பி பொய்யா மொழியோ அப்படி என் அலமாரியிலும் பெட்டியிலும் கை வைத்தால் எனக்கு உடனே கோபம் வரும். ஆனால் கற்பகம் வந்து எடுத்தால் உவகையோடு இருப்பேன். அவள் பார்க்க வேண்டும் என்றே சில படங்களை நானே எடுத்துக் காட்டுவேன். இது என் தங்கைக்கும் பொறாமையாக இருந்தது. "நான் எடுத்தால் அண்ணன் கோபித்துக் கொள்கிறார். கற்பகம் மட்டும் எடுக்க விடுகிறார்" என்று அம்மாவிடம் குறை சொன்னாள். "நீ எடுத்தால் எல்லாவற்றையும் கலைத்துவிடுகிறாய். கற்பகம் அப்படிக் கலைப்பதே இல்லை" என்றேன் நான்.

கற்பகம் வளர வளர அவளுடைய அழகும் வளர்ந்து வந்தது. முன்னே பாவாடை சட்டை மட்டும் உடுத்தி வந்தவள். இப்போது தாவணியும் உடுத்திவந்தாள். அவளுடைய காதுகளில் திருகாணி இருந்தது போய், வெள்ளைக்கல் தோடு வந்து அழகு செய்தது. மூக்குத்தியும் அணிந்திருந்தாள். அவற்றில் இருந்த கற்கள் அவளுடைய மேனியின் அழகையும் ஒளியையும் எடுத்துக்காட்டுவன போல் இருந்தன.

ஒருநாள் சனிக்கிழமை பிற்பகல், அம்மாவும் தங்கையும் பாக்கியம் வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். தம்பியும் எங்கோ விளையாடப் போயிருந்தான். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது யாரோ உள்ளே வரும் காலடி கேட்டுத் திரும்பினேன். கற்பகம் ஒரு பை நிறையத் தின்பண்டங்கள் கொண்டு வந்து நின்றாள்.

"எப்போது வந்தாய் கற்பகம்" என்றேன்.

"இப்போதுதான். உங்கள் அம்மா இல்லையா?"

"இல்லையே!"

"மணிமேகலை!"

"அவளும் இல்லை" என்று நான் சொன்னவுடன் அந்தப் பையைக் கீழே வைத்து விட்டு நகரத் தொடங்கினாள். "அதைக் கீழே வைத்துவிட்டுப் போகிறாயே, என் கையில் கொடுத்தால் என்ன?" என்று அவளுடைய கையைப் பற்றினேன். அவள் விடுவித்துக்கொண்டு ஓட முயலவே, நான் இறுகப் பற்றினேன். வளையல் இரண்டு நொறுங்கி உடைந்தன. உடனே கையை விட்டேன். "எனக்குக் கோபம் வரும், தெரியுமா?" என்று உடைந்த வளையலைப் பார்த்தாள். அவளுடைய முகம் வாடியது. அந்த வாட்டத்திற்கு இடையே புன்முறுவல் செய்துவிட்டு நகர்ந்தாள்.

நான் செய்த தவறு உணர்ந்து அவள் முகத்தில் விழிப்பதற்கு வெட்கப்பட்டு, அன்றெல்லாம் சந்திரனுடைய வீட்டுக்குப் போகாமலே நின்றேன். மறுநாள் காலையிலும் போகவில்லை. பிற்பகல் அவளே வந்தாள். அம்மாவோடும் தங்கையோடும் பேசிக் கொண்டிருந்தாள். இடையிடையே அவளுடைய பார்வை என்மேல் இருந்தது. அவளுடைய ஒரு கையில் வளையலே இல்லாததைக் கண்டு மனம் வருந்தினேன். குறும்புக்காரி அவள். அதைப் பொருட்படுத்தாமல் "நீங்கள் ஏன் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை? அண்ணாவும் நீங்களும் பேசுவதில்லையா? காய் விட்டு விட்டீர்களா?" என்றாள். "இல்லை. உன்னோடுதான் காய் விட்டிருக்கிறேன்" என்றேன். "அப்படியா? நல்லதுதான்" என்று, வலிய வந்து என் பெட்டியைத் திறந்து அதில் இருந்த கைகுட்டையைக் கேளாமலே எடுத்துக் கொண்டு போய்விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_7&oldid=7876" இலிருந்து மீள்விக்கப்பட்டது