அகல் விளக்கு/அத்தியாயம் 9

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

வைகாசி முடிவில் தேர்வின் முடிவுகள் வந்தன. நான் தேர்ச்சி பெறவில்லை. இன்னும் ஓர் ஆண்டு அதே வகுப்பில் படிக்க வேண்டுமே என்று எண்ணி மிக வருந்தினேன். அம்மாவும் அப்பாவும் "கவலை வேண்டா. நீ நோயிலிருந்து தப்பிப் பிழைத்ததே போதும்" என்று தேற்றிக் கொண்டிருந்தார்கள்.

சந்திரன் தேர்ச்சி பெற்றான். ஆனால் ஒரு பாடத்திலும் முதன்மையான எண்கள் வாங்கவில்லை. ஆசிரியர்கள் எல்லோருக்கும் உடன்படித்த மாணவர்களுக்கும் - இது பெரிய வியப்பாக இருந்தது. வரலாற்று ஆசிரியரின் மகன் சந்திரகுப்தன் நான்கு பாடங்களில் முதல்வனாக இருந்தான். மற்றொருவன் மற்றப் பாடங்களில் முதன்மையான எண்கள் பெற்றுவிட்டான்.

பெருங்காஞ்சிக்குப் போய்ச் சந்திரனைப் பார்த்துத் தேறுதல் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். நானே தேர்ச்சி பெறாதபோது நான் போய் அவனுக்குத் தேறுதல் சொல்வது பொருந்தாது என்று எண்ணி நின்றுவிட்டேன்.

ஆனாலும், சந்திரனிடத்தில் எனக்கு நன்றியுணர்ச்சி இருந்தது. ஏன் என்றால், அவன் சொல்லிக் கொடுத்த கணக்கில்தான் நான் நிறைய எண்கள் வாங்கியிருந்தேன். தமிழ்ப்பாடத்திலும் அதற்கு அடுத்த நிலைதான் இருந்தது. ஆங்கிலத்திலும் விஞ்ஞானத்திலும் எண்கள் குறைந்து போயிருந்தன. அந்தப் பாடங்களில் இன்னும் மூன்று மூன்று எண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சி கிடைத்திருக்கும் என்று தலைமையாசிரியர் சொன்னார்.

சந்திரனுடைய தகப்பனார் ஊரிலிருந்து வந்தார். அவனைச் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்க்கப் போவதாகவும், சென்னையில் உள்ள உறவினர் ஒருவர் அதற்கு வேண்டிய முயற்சி செய்வதாகவும் கூறினார். நான் தேர்ச்சி பெறாததற்காகக் கவலைப்படாமல் தொடர்ந்து படிக்குமாறு தேறுதல் மொழிகள் சொல்லிவிட்டுச் சென்றார். அவன் கல்லூரியில் சேர்வதற்கு முன் அவனைக் காண வேண்டும் என்று விரும்பினேன். அவன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்தேன். நேராக ரயில் ஏறிச் சென்னைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான் என்று பிறகு தெரிந்து கொண்டேன். நானாவது அவனுடைய ஊர்க்குப் போய்ப் பார்க்கத் தவறிவிட்டேனே என்று என்னையே நொந்து கொண்டேன். சென்னையில் அவனுடைய முகவரி தெரிந்தால் கடிதமாவது எழுதலாம் என்று விரும்பினேன். முகவரியும் தெரியவில்லை. இன்னும் சில வாரம் பொறுத்துப் பார்க்கலாம். அதற்குள் அவனிடமிருந்து கடிதம் வரும் என்று நாள்தோறும் அதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன்.

பள்ளி திறந்ததும், முன் படித்த வகுப்பிலேயே மிகச் சோர்வோடு போய் உட்கார்ந்தேன். எனக்குக் கீழ் வகுப்பில் படித்த மாணவர்கள் பலர் என்னோடு வந்து உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் மூன்று ஆண்டுகளாக என் பக்கத்தில் எனக்குத் துணையாக இருந்த சந்திரன் இப்போது இல்லை. அவன் இல்லாமல் நான் மட்டும் தனியே இருந்தது, எனக்குத் துயரமாக இருந்தது. காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும் மாலையில் திரும்பும்போதும் அந்தத் தனிமையை நன்றாக உணர்ந்தேன். வீட்டில் உள்ளவர்களோடும் வகுப்பில் உள்ளவர்களோடும் கலகல என்று பேசிப் பழக எனக்கு மனம் இல்லாமற் போயிற்று. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பிறகுதான் இந்த உணர்ச்சி மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.

இரண்டு வாரம் கழித்துச் சந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சந்திரனுடைய கையெழுத்தைக் கண்டதும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. அதில் தான் சொல்லாமல் சென்னைக்குப் போனது பற்றியும், நான் தேர்வில் தவறிவிட்டது பற்றியும் வருத்தம் தெரிவித்திருந்தான். தனக்கு மனம் நன்றாக இல்லை என்றும், முன்போல் ஊக்கமாகப் படிக்க முடியவில்லை என்றும் சுருக்கமாக எழுதியிருந்தான், அவன் மனநிலையில் அப்படி மாறுதல் நேர்ந்ததற்குக் காரணம், எஸ். எஸ். எல். சி. யில் எண்ணியபடி வெற்றிபெற முடியாமற் போனதுதான் என்று வருந்தினேன். உடனே அந்தப் பழைய குறையை மறந்துவிட்டுப் புதிய ஊக்கத்தோடு முயலும்படியாக எழுதினேன், அந்தக் கடிதத்தைப் பற்றி அம்மாவுக்குச் சொன்னேன். என்ன காரணமோ, புதிய ஊர் பிடித்திருக்காது என்று அம்மாவும் வருந்தினார்.

அதற்குப் பிறகு அவன் பதில் எழுதவில்லை. மறுபடியும் நானே ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு எழுதிய பதிலும் சுருக்கமாகவே எழுதியிருந்தான். விடுமுறையில் ஊர்க்கு வரப்போவதாகவும் அங்கு வந்தால் தோப்பில் பேசிக் கொண்டிருக்கலாம் என்றும் குறித்திருந்தான். ஆனால், விடுமுறை எப்போது என்பதைத் தெரிவிக்கவில்லை.

எனக்கு கால் தேர்வு வந்தது. அவனுக்கும் அப்போது தேர்வு நடக்கும் என்றும், அதன் பிறகு தான் விடுமுறைக்கு வருவான் என்றும் எண்ணியிருந்தேன். என் தேர்வு முடிந்த பிறகு பெருங்காஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்குச் சென்று சேர்ந்ததும் ஏமாற்றம் அடைந்தேன். அவனுடைய விடுமுறைக் காலம் முடிந்து அதற்கு முந்திய நாள் தான் சென்னைக்குப் போய்விட்டதாகக் கூறினார்கள். உடனே திரும்பிவிடலாம் போல் தோன்றியது. சந்திரனுடைய அம்மா, அப்பா, அத்தை மூன்று பேரும் வற்புறுத்தவே சோர்வோடு மூன்று நாள் தங்கியிருந்தேன். அந்தச் சோர்வுக்கு இடையே நான் பெற்ற மகிழ்ச்சி ஒன்று இருந்தது என்றால், அது கற்பகத்தின் முகத்தை இடையிடையே கண்டதில்தான். அவளோ, படிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, சமையலறையில் பயின்று கொண்டிருந்தாள். என் முன் அடிக்கடி வர நாணினாள். அந்த நாணம் எப்படித்தான் அவளிடம் வந்து சேர்ந்ததோ தெரியவில்லை. ஆறு மாத காலத்தில் அவ்வளவு வேறுபாட்டோடு பழகுவாள் என்று நான் எண்ணவில்லை. ஆனாலும், யாரும் இல்லாதபோது, நடைவழியாகப் போனவள், இரண்டு மூன்று முறை புன்முறுவலும் கடைக்கண் பார்வையும் காட்டிவிட்டுச் சென்றாள்.

வழக்கம் போல் மாசன் இளநீர் வெட்டிக் கொண்டு வந்தான். "நுங்கு இல்லையா?" என்று நான் கேட்ட போது, "அதற்கு இப்போது காலம் இல்லை. வேண்டுமானால், பனம் பழம் இருக்குமா என்று பார்த்து வருவேன்" என்றான்.

தென்னந் தோப்புக்குத் தனியே சென்றேன். காவலாள் சொக்கான் என்னை வரவேற்றான். "சுரைப்புருடை வேண்டுமா சாமி!" என்றான்.

"வேண்டா, நீ பக்கத்தில் இரு. நானே நீந்திப் பார்க்கிறேன்" என்று சொல்லிக் கிணற்றினுள் இறங்கினேன். படித்த வாய்பாடு தவறாமல் நினைவுக்கு வருவது போல், நீரில் இறங்கியவுடன் நீந்தும் திறமை தானே வந்தது. ஒருவகைப் பெருமிதத்தோடு திரும்பத் திரும்பச் சுற்றிச் சுற்றி நீந்தினேன். "சொக்கான்! உன் துணை வேண்டா. இனிமேல் நானே தனியே நீந்துவேன். தண்ணீரும் எனக்குத் தரைபோல் ஆகிவிட்டது. நீ போகலாம்" என்றேன்.

"என்ன சாமி! இது ஒரு வித்தையா? நாய்க்குட்டி பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி எல்லாம் பிறந்த மூன்றாம் நாளில் போட்டாலும் நீந்திக் கரைக்கு வந்து சேருது. மனிதக் குட்டிக்கு இது ஒரு வித்தையா?" என்றான் சொக்கான்.

"நாயும் பூனையும் ஆடும் மாடும் யாரும் கற்றுக் கொடுக்காமலே நீந்துகின்றனவே. மனிதன்தான் கற்றுக் கொடுத்து நீந்த வேண்டியிருக்கிறது" என்றேன்.

வழக்கம்போல் அத்தை வெந்நீர் வைத்துக் காத்திருந்தார். முன் சந்திரன் சொல்லிக் கொடுத்தது போல் பொய் சொல்லி நடிக்க முடியவில்லை. "வேண்டா அத்தை! தண்ணீரிலே குளித்தேன். நன்றாக நீந்துகிறேன். பயமே இல்லை" என்றேன்.

"உடம்புக்கு ஆகுமா? சளி பிடித்துவிட்டால்?"

"ஒன்றும் பிடிக்காது. பூச்சி பூச்சி என்று பயந்து இருந்தால் பயன் இல்லை. துணிந்துவிட்டேன்" என்று சொல்லி முடிப்பதற்குள், கற்பகத்தின் சிரிப்பின் ஒலி கேட்டது.

"தண்ணீரிலே குளிப்பதற்குக்கூட ஒரு பெரிய துணிச்சல் வேண்டுமா என்று சிரிக்கிறாள்" என்று அத்தை விளக்கம் தந்தார்.

நானும் மெல்லச் சிரித்து எட்டிப் பார்த்தேன். புன்முறுவலோடு கற்பகம் போய்க் கொண்டிருந்தாள்.

மூன்று நாள் இருந்துவிட்டுப் புறப்பட்டபோது கற்பகத்தின் முகத்தில் மலர்ச்சி இல்லை. கண்களும் கலங்கியிருந்தன. அந்த நேரத்தில் தபால்காரன் ஒரு கவர் கொண்டு வந்து சாமண்ணாவிடம் கொடுத்தான். அதைப் பிரித்துப் பார்த்த அவர், "தமிழில் எழுதக் கூடாதா? எல்லாரும் சீமையில் பிறந்து வளர்ந்ததாக எண்ணிக் கொள்கிறார்கள். வேலு! இது என்ன, பார்த்துச் சொல்" என்று என்னிடம் கொடுத்தார்.

சந்திரனுடைய கல்லூரித் தலைவரிடமிருந்து வந்த கடிதம் அது. அவன் கால் தேர்வில் பெற்ற எண்களை எழுதி, படிப்புப் போதாது. அக்கறை கொள்ள வேண்டும் என்ற குறிப்பும் சேர்க்கப்பட்டிருந்தது. சாமண்ணாவிடம் சொன்னேன்.

அவர் ஒரு பெருமூச்சு விட்டார். என்னைப் பார்த்தார் "சரி, உனக்கு நேரம் ஆகுது. பணம்தான் தண்ணீர் போல் செலவு ஆகிறது; பயன் ஒன்றும் காணோம். அவனைப் பட்டணத்துக்கு அனுப்பிப் படிக்க வைத்ததே தப்பு. என்னவோ, இவ்வளவு படித்தானே, இன்னும் கொஞ்சம் படித்து முடிக்கட்டும் என்று அனுப்பினேன்" என்று சிறிது நேரம் தரையைப் பார்த்தார். மறுபடியும் என்னைப் பார்த்து, "நீயும் அவனோடு போய்ப் படித்துக் கொண்டிருந்தால் அவன் இப்படிக் கெட்டுப் போயிருக்கமாட்டான். மார்க்கு இவ்வளவு குறைந்திருக்காது. எங்களுடைய போதாக் காலம், உனக்கு நோய்வர, நீ பரீட்சையில் தவறி விட்டாய். என் செய்வது? இந்த வருசம் நீ பரீட்சையில் தேறி, அடுத்த ஆனியில் நீயும் பட்டணத்துக்குப் போய்ப் படிப்பதாக இருந்தால்தான் அவனை அனுப்பிப் படிக்க வைக்கப் போகிறேன். இல்லையானால் நிறுத்திவிடப் போகிறேன்" என்றார்.

அதைக் கேட்டு என் மனம் உருகியது. என்ன சொல்வது என்று தெரியாமல் விடை பெற்றுப் புறப்பட்டேன்.

வந்த வழியில் ஒரு குடிசையிருந்தது. அதன் வாயிலில், ஒரு கிழவனும் கிழவியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கிழவி புகையிலையைக் கிள்ளித் தர, கிழவன் அதை வாங்கி வாயில் வைத்துக் கொண்டு, வலக்கையை நெற்றியருகே வளைத்து என்னை உற்றுப் பார்த்தான். "யார் சாமி போகிறது?" என்றான்.

"இந்த ஊருக்கு வந்தேன். வெளியூர்".

"யார் வீட்டுக்கு வந்தீர்கள்?"

"சந்திரன் வீட்டுக்கு-அதாவது சாமண்ணா வீட்டுக்கு".

"அதுதானே நினைச்சேன். மொட்டையம்மா தம்பி பிள்ளை மாதிரி இருக்குதே, அந்தப் பிள்ளைதான் இரண்டு நாளைக்கு முன்னே பட்டணம் போச்சே, இது யாரு என்று பார்த்தேன்.

"சந்திரனைத்தான் பார்க்கலாம் என்று வந்தேன். அவன் இல்லை" என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தேன்.

கிழவியின் குரல் கேட்டது: "அந்தப் பிள்ளை படிக்கப் போயிருக்குதாம் பட்டணத்துக்கு."

"போனதே நல்லதுதான். இந்த ஊரில் இருந்தால், கொழுத்துப்போன பெண் கழுதைகள் அதைக் கெடுத்து விடும். அதுவும், பெரிய வீட்டுப் பிள்ளை என்றால் சொல்லத் தேவையில்லை."

கிழவனின் இந்தப் பேச்சைக் கேட்டு, நின்று மெல்ல நடந்தேன்.

"இன்னுமா அந்தப் பிள்ளையைக் கெடுக்காமல் இருக்கிறார்கள்? உனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எல்லோரும் உன்னைப்போல என்னைப் போலப் பயந்து நடப்பார்கள் என்று கனவு காண்கிறாயே?" என்று கிழவி சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்றேன். அங்கு இருந்த மரத்தில் ஏதோ பறிப்பதுபோல நின்றேன்.

"மொட்டையம்மாவின் தம்பி சாமண்ணா நல்லவர். ஒரு தப்புக்கும் போகமாட்டார். எனக்குத் தெரிந்து இல்லை" என்றான் கிழவன்.

"அப்பன் யோக்கியமா இருந்தால், பிள்ளையும் அப்படி இருக்குதா? அதுதான் உலகத்தில் இல்லையே" என்றாள் அவனுடைய அனுபவம் முதிர்ந்த வாழ்க்கைத் துணைவி.

நிழற்படக் கருவி இருந்தால் அந்தக் கணவனையும் மனைவியையும் அவர்களுடைய கற்புள்ள வாழ்க்கைக்கு இடமாக விளங்கிய அந்தக் குடிசையையும் படம் எடுத்து வைத்துப் பூசை செய்யலாமே என்று எனக்குத் தோன்றியது.

சந்திரனுடைய வாழ்க்கையில் உண்மையாகவே களங்கம் தோன்றிவிட்டதோ என்று வருத்தத்தோடு எண்ணியபடியே நடந்து வந்து ஏரிக்கரையில் பஸ் நிற்கும் இடத்தில் நின்றேன்.

அந்த ஏரிக்கரையின் அழகும் சாலையின் ஒழுங்கான மரங்களின் எழிலும் என் கண்களைக் கவரவில்லை. ஏரியில் நீர் நிரம்பியிருந்தது. நீர் நிரம்பிய காட்சியைப் பார்க்க வேண்டும் என்று முதல்முறை வந்தபோது என் மனம் ஆசை கொண்டது. அன்று பஸ் வரும் என்று காத்து நின்றபோது, என் கண் எதிரே அந்த ஏரி நிறைந்த செல்வத்தைக் கண்டேன், ஆயினும் என் மனம் அந்த அழகில் ஈடுபடவில்லை.

நிறைந்த நீரில் கரையோரத்தே வந்து மோதும் அலைகளைக் கண்டேன். என் மனத்திலே சந்திரனுடைய களங்கம் பற்றிய எண்ணங்களே திரும்பத் திரும்ப அலை அலையாக வந்து மோதிக் கொண்டிருந்தன.

மறுபடியும் என் நல்ல மனம் சந்திரனுடைய அறிவையும் அழகையும் பற்றி எண்ணியது. ஒரு கால் அந்தக் கிழவி சொன்னது பொய்யாக இருக்கலாம். கிழவன் அறிவுரையாகச் சொன்ன கருத்தை அவள் மெய்யெனத் திரித்திருக்கலாம். பொதுவாக ஆணும் பெண்ணும் சிறிது நேரம் எங்காவது பேசுவதைப் பார்த்தாலும் அவர்களுக்கு விபசாரப் பட்டம் கட்டித் தூற்றுவது நம் நாட்டு வழக்கம். அதுவும் வேறு செய்திகள் குறைந்த கிராமத்தில் இப்படிப் பழி தூற்றுவது மிகுதி. ஆகையால் சந்திரனைப் பற்றிக் கிழவி சொன்னது நம்பத் தகுந்தது அல்ல. யாரோ சந்தேகப்பட்டுக் கட்டிவிட்ட கதையைக் கேட்டுக் கொண்டு வந்து அவள் கிழவனிடம் சொன்னாள் என்று எண்ணினேன்.

கிழக்கே ஊர்ப்பக்கம் திரும்பி நோக்கினேன், ஏரி நீர் சலசல என்று பல வாய்க்கால்கள் வழியாக ஓடி வயல்களில் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு வாய்க்கால் ஓரமாக அரளிச் செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. பச்சைப் பசேலென்று இலைகளுக்கு இடையே அதே நிறமான விதைகள் பல இருந்தன. உச்சியில் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த செந்நிறப் பூக்கள் என் கண்களைக் கவர்ந்தன. கீழே இறங்கிச் சென்று ஒரு பெரிய மலர்க்கொத்தைப் பறித்தேன். சில இலைகளும் சேர்ந்து வந்தன. அதை எடுத்துக் கொண்டு கரைமேல் வந்து நின்றேன். பூக்களின் அழகும் மணமும் இன்பமாக இருந்தன.

கூர்மையான முனைகளோடு நீண்டிருந்த இலைகளால் ஒரு பயனும் காணோமே என்று எண்ணினேன். இவ்வளவு அழகான பூக்களுக்கு வரும் சத்து இலைகளுக்கும் வருகிறது. ஆனாலும் இலைகளில் மணம் இல்லை: அழகும் இல்லை. அதனால் இலைகளைப் போற்றுவாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டே, ஓர் இலையை ஒடித்து முகர்ந்தேன். அதிலிருந்து கசிந்த பால் மூக்கில் ஒட்டிக் கொண்டது. அரளி விதை பொல்லாதது, நஞ்சு உடையது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இலையின் பாலும் பழமும் ஏதாவது தீமை செய்யுமோ என்று அஞ்சி மறுபடியும் கீழே இறங்கி வாய்க்காலில் நீரை எடுத்து மூக்கை நன்றாக உள்ளும் புறமும் தேய்த்துக் கழுவிக் கொண்டு வந்தேன். இலைகளை எல்லாம் ஒடித்துப் போட்டுவிட்டு, மலர்களை மட்டும் வைத்துக் கொண்டேன். கீழே உதிர்ந்த அந்த நீண்ட இலைகளை நோக்கினேன்.

"உங்களுக்கு ஒருவகை மதிப்பும் இல்லையா? பயனும் இல்லையா? அய்யோ! மலர்களோடு பிறந்தும், மலர்கள் பிறப்பதற்குக் காரணமாக இருந்தும், உங்களுக்கு வாழ்வு இல்லையே!" என்று எண்ணினேன். மேற்கே வேலத்து மலையின் சிகரம் சிவலிங்கம் போல் வானளாவி நிமிர்ந்து நின்றது. அதன் அடியில்தான் தாழை ஓடை இருந்தது. சந்திரனும் நானும் அங்கே போய்வந்த இன்ப நாள் நினைவுக்கு வந்தது. அந்தத் தாழை மரங்களை நினைத்தேன். தாழை மரத்திலும் பூக்கள் மட்டுமே மதிப்புப் பெறுகின்றன. முள் நிறைந்த அதன் இலைகளை யார் மதிக்கிறார்கள்? அந்த இலைகள்தான் உழைத்துக் காற்றையும் ஒளியையும் மண்ணின் சத்தையும் நீரையும் உட்கொண்டு மலர்களை உண்டாக்கித் தருகின்றன. ஆயினும் அந்த முள் இலைகளை எவரும் போற்றுவதில்லை. அரளி இலைகளை நின்ற இடத்திலேயே எறிந்தேன். தாழையின் இலைகளை அப்படி எறிவதிலும் துன்பம் உண்டு. நம் காலிலும் படாமல், பிறர் காலிலும் படாமல் அவற்றை எறிய வேண்டும். ஆனால் பூக்களோ மணம் நிறைந்த பூக்கள், அவற்றின் மணத்திற்கு நிகர் ஏது?

இவ்வாறு பல எண்ணிக் கொண்டிருந்தபோது ஆங்கில ஆசிரியர் பைரன் என்னும் ஆங்கிலப் புலவரைப் பற்றி வகுப்பில் கேட்டது நினைவுக்கு வந்தது. பைரனுடைய பாட்டுகளை மட்டுமே எடுத்து நுகர வேண்டுமாம்; அந்தக் கவிஞனுடைய வாழ்க்கைச் செய்திகளை மறந்தொழிக்க வேண்டுமாம்; அவை பயனற்ற நாகரிகமும் அற்ற - மதிப்புக்கு உரியனவல்லாத - செய்திகளாம். உடனே, மனிதரிலும் தாழைபோல், அரளி போல் சிலர் உள்ளனர் என்ற உண்மை விளங்கியது. சந்திரனுடைய அறிவும் அழகும் தவிர, அவனுடைய வாழ்க்கையில் நல்லவை வேறு இல்லை என்று எண்ணினேன்.

கீழிருந்து ஒரு நறுமணம் வந்ததை உணர்ந்தேன். என் இடக்கைப் பக்கம் ஒரு பனைமரத்தின் அடியில் துளசிச்செடி ஒன்று இருந்தது. அதன் மணம்தான் என்று உணர்ந்தேன். அந்தச் செடி அவ்வளவு அழகாகத் தோன்றவில்லை. அதனிடம் கவர்ச்சியான மலர்களும் இல்லை. மலர்களுக்கும் இலைகளுக்கும் நிறத்திலும் அவ்வளவாக வேறுபாடு இல்லை. ஆனால் துளசிமலர்கள் போலவே துளசி இலைகளும் நறுமணம் வீசும் சிறப்பு ஒரு புதுமை என உணர்ந்தேன். குனிந்து ஒரு காம்பை ஒடித்து முகர்ந்தேன். அந்த நறுமணம் மலர்களின் மணமா, இலைகளின் மணமா என்று பகுத்துணர முடியவில்லை. எதைக் கிள்ளி எறிவது, ஏன் கிள்ளி எறிவது என்று வியந்தேன். என்னை அறியாமல், அந்தக் கிளையில் இலை இல்லாத குச்சியை ஒடித்து மூக்கின் அருகே கொண்டு சென்றேன். அது வெறுங் குச்சி: இலை, பூ ஒன்றும் இல்லை. ஆனாலும் துளசியில் அருமையான நறுமணம் வீசியது. ஒருகால் இலைகளைத் தொட்ட என் விரல்களில் இருந்த நறுமணமோ என்று விரல்களை நன்றாக வேட்டியில் துடைத்து அந்தக் குச்சியை மறுபடியும் மூக்கின் அருகே கொண்டு சென்றேன். முன் போல் நறுமணம் கமழவே, துளசிக் குச்சிக்கும், நறுமணம் இருத்தலைத் தெளிந்தேன். என் வியப்பு மிகுந்தது.

அதற்குள் சோழசிங்கபுரத்திலிருந்து பஸ் வரவே, ஏறி உட்கார்ந்தேன். பஸ் ஏறியபோது, அரளிப்பூக் கொத்தை எறிந்துவிட்டுத் துளசியை மட்டும் கையோடு எடுத்துக் கொண்டேன். பஸ்ஸிலும் பழைய எண்ணமே தொடர்ந்து வந்தது. அரளியையும் தாழையையும் படைத்த இறைவனே துளசி போல் எல்லாம் நறுமணம் கமழும் செடியையும் படைத்திருக்கின்றான் என்று எண்ணினேன். புலவர் பைரனைப்போல் நண்பன் சந்திரனைப்போல் ஒரு பகுதி மட்டும் மணம் கமழ்ந்து மற்றப் பகுதியெல்லாம் வெறுத்து ஒதுக்கத்தக்க வகையில் வாழும் வாழ்வைவிடத் துளசி போல் வாழும் தூய எளிய வாழ்வு நல்வாழ்வு என்று எண்ணினேன். அந்த வாழ்வு அடக்கமான வாழ்வாக இருந்தாலும், உள்ளும் புறமும் ஒரே வகையாக மணம் கமழும் நல்ல வாழ்வு அல்லவா?

பஸ் வாலாசா ரயில் நிலையத்தைக் கடந்து இலுப்பை மரங்கள் அடர்ந்த சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த இலுப்பை மரங்களின் அடியில் நானும் சந்திரனும் உட்கார்ந்து, சென்ற ஆண்டில் பல நாட்கள் மாலைக் காலத்தில் தரையில் கோடுகள் கிழித்துக் கணக்குப் போட்டது நினைவுக்கு வந்தது. சந்திரன் எவ்வளவு உதவியாக இருந்தான்! அவனுடைய வாழ்வில் என்ன குறை கண்டோம்? யாரோ சொல்லக்கேட்டு அதை நம்பி அவனைப் பழித்து எண்ணலாமா? பைரனுடைய வாழ்வோடு ஒன்றாகச் சேர்க்கலாமா? அவ்வாறு எண்ணக் கூடாது. எண்ணியது குற்றம் என்று உணர்ந்தபடியே பஸ்ஸைவிட்டு இறங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_9&oldid=7878" இலிருந்து மீள்விக்கப்பட்டது