ஆத்திசூடி

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

ஆத்திசூடி

ஆசிரியர்: ஔவையார்

நூல்[தொகு]

கடவுள் வாழ்த்து[தொகு]

:ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
:ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்[தொகு]

1. அறம் செய விரும்பு
தருமம் செய்ய ஆசைப்படு.

2. ஆறுவது சினம்
கோபம் தணியத் தகுவதாம்.

3. இயல்வது கரவேல்
கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.

4. ஈவது விலக்கேல்
ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று தடுக்காதே.

5. உடையது விளம்பேல்
உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.

6. ஊக்கமது கைவிடேல்
எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே.

7. எண் எழுத்து இகழேல்
கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள்.

8. ஏற்பது இகழ்ச்சி
இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.

9. ஐயம் இட்டு உண்
இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு உண்ணு.

10. ஒப்புரவு ஒழுகு
உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்
அறிவு தரும் நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்
ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.

13. அஃகம் சுருக்கேல்
மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.

உயிர்மெய் வருக்கம்[தொகு]

14. கண்டொன்று சொல்லேல்
பார்க்காததைப் பார்க்காதவற்றைப் பார்த்ததாகப் பேசாதே

15. ஙப் போல் வளை
'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துகளைத் தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களைக் காக்க வேண்டும். "ங" என்னும் எழுத்தைக் கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16. சனி நீராடு
சனி(குளிர்ந்த) நீராடு.

17. ஞயம்பட உரை
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

18. இடம்பட வீடு எடேல்
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாகக் கட்டாதே.

19. இணக்கம் அறிந்து இணங்கு
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20. தந்தை தாய்ப் பேண்
உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21. நன்றி மறவேல்
ஒருவர் உனக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறவாதே

22. பருவத்தே பயிர் செய்
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23. மண் பறித்து உண்ணேல்
பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24. இயல்பு அலாதன செய்யேல்
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25. அரவம் ஆட்டேல்
பாம்புகளைப் பிடித்து விளையாடாதே.

26. இலவம் பஞ்சில் துயில்
'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27. வஞ்சகம் பேசேல்
கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களைப் பேசாதே

28. அழகு அலாதன செய்யேல்
இழிவான செயல்களை செய்யாதே

29. இளமையில் கல்
இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளைத் (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30. அறனை மறவேல்
தருமத்தை எப்போதும் மறவாமல் செய்

31. அனந்தல் ஆடேல்
மிகுதியாகத் தூங்காதே

ககர வருக்கம்[தொகு]

32. கடிவது மற
யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33. காப்பது விரதம்
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)
பிற உயிர்களுக்குதீ துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34. கிழமைப்பட வாழ்
உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்.

35. கீழ்மை அகற்று
இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

36. குணமது கைவிடேல்
நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்
நல்லவரோடு நட்பு செய்து பின் அவரைப் பிரியாதே.

38. கெடுப்பது ஒழி
பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.

39. கேள்வி முயல்
கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்.

40. கைவினை கரவேல்
உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளைத் திருடுவதற்கு ஆசைப்படாதே.

42. கோதாட்டு ஒழி
குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).

43. கௌவை அகற்று
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.

சகர வருக்கம்[தொகு]

44. சக்கர நெறி நில்
தருமசக்கர நெறிப்படி வாழ வேண்டும். (அரசன் = ஆள்பவர், தலைவர்).

45. சான்றோர் இனத்து இரு
அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசேல்
பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே.

47. சீர்மை மறவேல்<br />புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.

49. சூது விரும்பேல்
ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்
செய்யும் செயல்களைச் தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.

51. சேரிடம் அறிந்து சேர்
நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்
பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.

53. சொற் சோர்வு படேல்
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.

54. சோம்பித் திரியேல்
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்[தொகு]

55. தக்கோன் எனத் திரி
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.

56. தானமது விரும்பு
யாசிப்பவர்களுக்குத் தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்
நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்.

58. தீவினை அகற்று
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59. துன்பத்திற்கு இடம் கொடேல்
முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினை செய்
ஒரு வேலையை முடிப்பதற்க்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து பின்பு அச்செயலைச் செய்யத் தொடங்கவும்.

61. தெய்வம் இகழேல்
கடவுளைப் பழிக்காதே.

62. தேசத்தோடு ஒட்டி வாழ்
உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.

63. தையல் சொல் கேளேல்
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்
பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.

65. தோற்பன தொடரேல்
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான முடியும் எனத் தெரிந்தே அதைத் தொடங்காதே.

நகர வருக்கம்[தொகு]

66. நன்மை கடைப்பிடி
நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.

67. நாடு ஒப்பன செய்
நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களைச் செய்.

68. நிலையில் பிரியேல்
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர் விளையாடேல்
வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.

70. நுண்மை நுகரேல்
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.

71. நூல் பல கல்
அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.

72. நெற்பயிர் விளைவு செய்
நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட ஒழுகு
ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.

74. நைவினை நணுகேல்
பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.

75. நொய்ய உரையேல்
பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கு இடம் கொடேல்
மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

பகர வருக்கம்[தொகு]

77. பழிப்பன பகரேல்
பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.

78. பாம்பொடு பழகேல்
பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்
குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெற நில்
பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
உன்னையே நம்பியவர்களைக் காப்பாற்றி வாழ்.

82. பூமி திருத்தி உண்
விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்.

83. பெரியாரைத் துணைக் கொள்
அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

84. பேதைமை அகற்று
அறியாமையைப் போக்கு.

85. பையலோடு இணங்கேல்
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருள்தனைப் போற்றி வாழ்
பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த் தொழில் புரியேல்
யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே.

மகர வருக்கம்[தொகு]

88. மனம் தடுமாறேல்
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

89. மாற்றானுக்கு இடம் கொடேல்
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்
சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.

93. மூர்க்கரோடு இணங்கேல்
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

94. மெல்லி நல்லாள் தோள்சேர்
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொல் கேள்
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

96. மை விழியார் மனை அகல்
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.

97. மொழிவது அற மொழி
சொல்லப் படும் பொருளைச் சந்தேகம் நீங்கும் படி சொல்.

98. மோகத்தை முனி
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.

வகர வருக்கம்[தொகு]

99. வல்லமை பேசேல்
உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

100. வாது முற்கூறேல்
பெரியோர்களிடத்தில் முரண்பட்டு வாதிடாதே.

101. வித்தை விரும்பு
கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

102. வீடு பெற நில்
முக்தியைப் பெறுவதற்கான சன்மார்க்கத்திலே வாழ்க்கையை நடத்து.

103. உத்தமனாய் இரு
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.

104. ஊருடன் கூடி வாழ்
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.

105. வெட்டெனப் பேசேல்
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாகப் பேசாதே.

106. வேண்டி வினை செயேல்
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.

107. வைகறைத் துயில் எழு
நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.

108. ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே.

109. ஓரம் சொல்லேல்
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆத்திசூடி&oldid=1479911" இலிருந்து மீள்விக்கப்பட்டது