ஔவையார் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

தனிப்பாடல் திரட்டு என்னும் நூல் தொகுப்பில் உள்ளவை
பாடல்கள் மொத்தம் 70
நூலில் பக்கம் 32 முதல் 42
பாடல்களுக்கான குறிப்புரை செங்கைப் பொதுவன்

குறிப்பு[தொகு]

ஔவையார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர்.
அவர்களை வகைப்படுத்திக் கொள்வதால் பல சிக்கல்கள் உள்ளன.
எனவே அவர்களைப் பதிப்பில் கிட்டியுள்ள பாடல்களை நோக்கி வகைப்படுத்திக் கொள்வது முறையானது.

  • ஔவையார் – சங்கப் பாடல்கள்
  • ஔவையார் – தனிப்பாடல்கள் (12-ஆம் நூற்றாண்டு)
  • ஔவையார் – நீதி நூல்கள் (நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்)
  • ஔவையார் – சமய நூல்கள் (விநாயகர் அகவல், ஔவை குறள்)
  • ஔவையார் - சிற்றிலக்கியம் (பந்தன் அந்தாதி)

தனிப்பாடற்றிரட்டு மூலம் என்னும் நூல் 1940-ல் வெளிவந்துள்ளது.
அதில் 74 பாடல்கள் ஔவையார் பாடல்களாக உள்ளன.
அவை இங்குப் பாடல் நோக்கில் பாகுபடுத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும் அப்பதிப்பிலுள்ள வரிசையெண் பாடலின் இறுதியில் தரப்பட்டுள்ளது.

அரியது, பெரியது, இனியது, கொடியது, கோடி[தொகு]

அரியது
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே. 58
பெரியது
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே. 57
இனியது
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே. 56
கொடியது
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே. 55

குறள் வெண்பா[தொகு]

கோடி

1

மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்.

2

உண்ணீருண் ணீரென் உபசரியார் தன்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.

3

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்.

4

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும். 43

?[தொகு]

        உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
        முடம்பினி லுத்தமனைக் காண்.

திருவள்ளுவ மாலை[தொகு]

1

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக்
குறுகத் தரித்த குறள்.

வெண்பா 1 முதல் 5[தொகு]

1

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறை மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்வித்தை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று. 2
கலைவித்தை எப்போது எடுபடும்? தந்திரமாய் இரண்டுபேரைப் புகழவைக்க வேண்டும். விரல்களில் மோதிரம் போட்டிருக்க வேண்டும். நிழலில் பஞ்சுமெத்தையோ பட்டோ விரித்து அதன்மேல் அமர்ந்திருக்க வேண்டும். இப்படி இருந்துகொண்டு வித்தையை வெளிப்படுத்தினால், அது நஞ்சானாலும் வேம்பானாலும் நன்று என்பது உலகியல்பு.

2

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. 3
தூக்கணாங்குருவிக் கூடு, கறையான் புற்று, சிலந்திவலை, ஆகியவற்றை எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது. எனவே நானே வல்லவன் என்று யாரும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடாது.

3

இவ்வளவு கண்ணுடையாள் இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்ற இளமுலையாள் – இவ்வளவு
நைந்த உடலாள் நலமேவு மன்மதன்றன்
ஐந்துகணை யால்வாடி னாள். 4
கட்டழகைக் காமம் தொலைத்துவிடும்.

4

ஐயம் இடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்
இவ்வளவே ணும்அன்னம் இட்டுண்மின் – தெய்வம்
ஒருவனே என்றும் உணரவல் லீரேல்
அருவினைகள் ஐந்தும் அறும் 5
ஐந்து புலன்களிலும் முன்னோர் கால்வழியில் பதிவு பெற்றிருப்பவை போக்குதற்கரிய வினைகள்.

5

அற்றதலை போக அறாததலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ – வற்றும்
பரமனை யானுக்கிந்த மானைவகுத் திட்ட
பிரமனையான் காணப் பெறின் 6
மானைப் போன்ற இவளைப் பரமனைப் போன்ற இந்த முனிவனுக்கு மனைவியாக்கி வைத்திருக்கும் பிரமனை நான் நேரில் கண்டால், குற்றம் இழைத்தமைக்காக அன்று ஐந்தாம் தலை கிள்ளி எறியப்பட்டது போக எஞ்சியுள்ள நான்கு தலையையும் அறுத்தெறிந்துவிடுவேன்.

வெண்பா 6 முதல் 10[தொகு]

6

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி 7
பூனை கிளியைப் பிடித்துத் தின்னும். எனவே பூனை வந்தால் கிளிப்பேச்சு அடங்கிவிடும். அதுபோலக் கற்றார்முன் கதைக்க முடியாது.

7

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் 8
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்க குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.

8

சுரதம் தனில்இளைத்த தோகை; சுகிர்த
விரதம் தனில்இளைத்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்லபி ராமம்.
சுரதம் = கலவி, உடலுறவு; தோகை = மயில், மயில்போன்ற மெல்லிய தலைவி; சுகிர்தம் = நற்செயல், தவவிரதம்; நிரதம் = ஓயாமல்; தாதா = கொடையாளி; சமர் = போர்; வடு = புண்; துளைத்த = பீடும் பெயரும் பொறித்த; கல் = நடுகல்; அபிராமம் = அழகு

தலைவனோடு கூடிய கலவியால் களைத்த பெண்மயிலாள்; தவவிரதத்தால் மெலிந்த தவசியின் உடம்பு; ஓயாமல் கொடுத்தே களைத்த கொடையாளி; கொடிய போரிலே வீரன் பட்ட புண்களும்; போரிலே வீழ்ந்துசெத்த மறவனுக்கு அவன் பீடும் பெயரும் பொறித்த நடுகல், இவையெல்லாம் அழகு.

9

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் – வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீங்காகும் காண் 10
நம்புகின்ற அடியவர்களுக்கு நல்காமல் சேர்த்துவைத்த செல்வமானது, பதுக்குவதற்கும், பேய் போன்ற கொடியவர்களுக்கும், பரத்தைப் பராரிகளுக்கும், பிறரிடம் வம்பு செய்வதற்கும், கொள்ளையர்களுக்கும், கள்ளுக்கடைக்கும், அரசன் எடுத்துக்கொள்வதற்கும், பணக்காரனைச் சாகடிப்பதற்கும், திருடர்களுக்கும் உதவும். இது பணம் பதுக்கியவனுக்குத் தீங்குதானே?

10

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா 11
சிலம்பி என்னும் தாசியிடம் 500 பொன்னுக்கு தான் பாடியப்பாதிப்பாடலை நிறைவுசெய்ததற்காக (காண் வெண்பா 12) பொறாமையால் ஔவையை 'அடீ'யென்று சொல்ல விரும்பி கம்பர், 'ஒருகாலடீ நாலிலைப் பந்தலடீ" என்று சிலேடையாகச் சொல்லிப் பொருள்கேட்டபோது ஔவை பாடியது. எட்டைக் குறிக்கும் தமிழ்க்குறி ‘அ’. கால் என்னும் பின்னத்தைக் குறிக்கும் தமிழ்க்குறி ‘வ’. இரண்டையும் சேர்த்தால் ‘அவ’. எனவே எட்டேகால் லட்சணம் என்பது அவலட்சணம். எமன் ஏறும் குதிரை எருமைக்கடா. பெரியம்மை வாகனம் கழுதை. மேற்கூரை இல்லாத வீடு குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் குரங்கு. ஆரை = ஆராம்புல், யாரை. கைக்குள் உள்ளது ஆரைப்புல் என விடையைச் சொல்லி, அதன் மற்றொரு பொருளால் அவனை திட்டவும் செய்கிறார்.

வெண்பா 11 முதல் 15[தொகு]

11

வெய்யதாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதுவாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த – பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள்
கடகம் செறிந்தகை யாள் 12
சிலம்பி என்பவள் ஔவையைப் பேணிய பாங்காக இப்பாடலைக் கூறுவர். அடகு = கீரை. அரிசி உணவு இல்லை. எண்ணெயிட்டு வதக்கிய கீரைதான் உள்ளது என்று சொல்லி உண்ணத் தந்தாள். அது விரும்பக்கூடியதாய், நறுமணம் மிக்கதாய், வயிறார வேண்டியமட்டும் தின்னக்கூடியதாய், பசுமை மாறாமல் சமைக்கப்பட்டு அமிழ்தம் போல் இருந்தது. ஔவைக்கு இடும்போது அவளுக்கு ஏற்பட்ட பூரிப்பால் அவளது தோள்வளையல் செறிவுற்றது.

12

"தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ தும்சோழ மண்டலமே" – பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு 14
சிலம்பி என்னும் தாசி 500 பொன் கொடுக்க கம்பர் பாடிய பாதிப்பாட்டை ஔவை நிறைவாகக் கூழுக்குப்பாடியது. தண்ணீரில் சிறந்தது காவிரி நீர். வேந்தரில் சிறந்தவன் சோழன். மண்ணில் சிறந்தது சோழமண்டலம். இவற்றைப் போல சிலம்பில் சிறந்தது சிலம்பி என்னும் நல்லாள் காலில் உள்ள சிலம்பு.

13

கூரிய வாளாற் குறைத்திட்ட கூன்பலா
ஓரிதழாய்க் கன்றாய் உயர்மரமாய்ச் – சீரியதோர்
வண்டுபோற் கொட்டையாய் வன்காயாய்த் தின்பழமாய்ப்
பண்டுபோல் நிற்க பலா. 15
குறமகள் ஒருத்தி செல்லமாக வளர்த்துவந்த பலாமரத்தை யாரோ குறும்புக்கு வெட்டிவிட்டனர். அவள் அழுதுகொண்டிருந்ததை அவ்வழியே சென்ற ஔவையார் பார்த்து அந்தப் பலா தழைக்கப் பாடிய பாடல் இது. வாளால் வெட்டப்பட்ட இந்த வேர்ப்பலா ஓரிதழ்க் கன்றாய், உயர்மரமாய் வளர்ந்து பழம் பழுத்துப் பண்டுபோல் நிற்க வேண்டும் என்கிறது இந்தப் பாடல். ஔவையின் வாக்கு பலித்தது என்பது ஐதீகம்.

14

கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும்
மூழைக் குழக்குத் தினைதந்தாள் – சோழாகேள்
உப்புக்கும் பாடி புளிக்கும் ஒருகவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம். 16
பலாமரம் பண்டுபோல் தழைத்திருக்கக் கண்ட குறமகள் ஔவைக்கு அகப்பையால் மொண்டு தினைச்சோறு போட்டாள். அத்துடன் ஔவை பொங்கி உண்ண ஒரு உழக்குத் தினையரிசியும் தந்தாள். இதனை ஔவையார் சோழவேந்தனிடம் தன் பெருமிதம் தோன்றப் பாடிய பாடல் இது. ஔவை உப்பிட்டு உணவளித்தவரையும் பாடுவாராம். ஏதும் தராமல் புளிக்கச் செய்தவரையும் பாடுவாராம்.

15

நிட்டூர மாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரப்போனும் – முட்டவே
கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும். 17
யார் யார் கெட்டுப்போவார்கள் என்னும் பட்டியல் ஒன்றை ஔவை தருகிறார். அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத குலமகள், கூச்சப்படும் விலைமகள் ஆகியோர் வாழ்வு கெட்டுவிடும் என்கிறார்.

வெண்பா 16 முதல் 20[தொகு]

16

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ
அன்பிலாள் இட்ட அமுது. 18
உள்ளத்தில் அன்பு இல்லாமல் ஒப்புக்காக ஒருத்தி ஔவைக்கு உணவளித்தாள். அதனை வெறுத்த ஔவை பாடிய பாட்டு இது. மாணொக்க வாய் = மாட்சிமை மிக்க வாய்.

17

இருந்து முகம்திருத்தி ஈரொடுபேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப – வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடினான் தான். 19
ஔவையை விருந்தாளியாக அழைத்துச் சென்ற ஒருவன் ஔவையை வெளிப்புறம் காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று தன் மனைவி பக்கத்தில் அமர்ந்து அவன் முகத்தை உருவி முத்தமிட்டான். அவன் தலையைப் பேன்பார்த்து விட்டான். இப்படியெல்லாம் அன்பைக் காட்டிவிட்டு ‘விருந்து வந்திருக்கிறது’ என்றான். உடனே அவள் கொடைத்தன்மை இல்லாத தன் பிறவிக்குணத்தைக் காட்டலானாள். ஆட்டபாட்டத்தோடு கணவனை ஓட ஓட முறத்தால் அடித்தாள். (கொடை பிறவிக்குணம்)

18

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள். 20
கணவனுக்கு ஏற்ற மனைவியாயின் எந்த திலையிலும் கூடி வாழலாம். மனைவி ஏறுமாறாக நடந்தால் கணவன் துறவி ஆகுவதே கொள்ளத் தக்கநெறி.

196

கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்
யான்வந்த தூரம் எளிதன்று – கூனன்
கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா
இருந்தேனுக் கெங்கே இடம். 21
காவிரி நாட்டை ஆளும் சோழனே! கூனன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல் கால் நோவ நடந்துவந்த எனக்குத் தங்குமிடம் எங்கே?

20

பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் – சேரமான்
வாராயோ என்றழைத்த வாய்மேயும் இம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர். 22
பாரி ஔவையை வழிப்பறி செய்து தன் நாட்டுக்கே மீட்டுக்கொண்ட அன்பும், பழையனூர் அரசன் காரி ஔவையிடம் களைக்கட்டு தந்து தன் நாட்டிலேயே இருக்கச் செய்த அன்பும், சேரமான் ஔவையை வாராயோ என்று பணிமொழியால் அழைத்து வைத்துக்கொண்ட அன்பும், ஔவை மழையில் நனைந்து வந்தபோது மாற்றுடையாக ஏற்கும்படி பாரிமகளிர் அளித்த நீலச் சிற்றாடைக்கு நேர்.

வெண்பா 21 முதல் 25[தொகு]

21

ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்
கரியுரிவைக் கங்காளன் காளாப் – பரிவுடனே
கண்ணால ஓலை கடிதெழுத வாராயேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து. 23
ஆனைமுகா! உன் தந்தங்களில் ஒன்றை முரித்து எழுத்தாணி ஆக்கிக்கொண்டுள்ளாய் என்பர். அங்கவை சங்கவை கண்ணாலத்துக்கு நீ வந்து அழைப்போலை எழுதவேண்டும். இல்லாவிட்டால் உன்னைச் சபித்து உன் ஆற்றலை அழித்துவிடுவேன்.

அடுத்துவரும் பாடல்களை ஔவை சொல்ல ஆனைமுகன் ஒழுதினான் என்பர். 22

சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோலால்
ஊரளவும் தான்வருக உட்காதே – பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான்
சங்கவை யுங்கூடத் தான். 24
பாரிமகள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் மணந்துகொள்ள அரசன் (மலையன்) இசைந்துள்ளான். சேர மன்னா! கூச்சப்படாமல் திருமணத்துக்கு வருக.

23

புகார்மன்னன் பொன்னிப் புனல்நாடன் சோழன்
தமாதென்று தானங் கிருந்து – நகாதே
கடிதின் வருக கடிக்கோவ லூர்க்கு
விடியப் பதினெட்டாம் நாள். 25
இன்று விடியப் பதினெட்டாம் நாள் கோவலூரில் திருமணம். சோழ மன்ன! ஏளனம் செய்யாமல், நீ நடத்திவைக்கும் திருமணம் என்று எண்ணி உடனே வருக.

24

வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே – தையலர்க்கு
வேண்டுவன கொண்டு விடியவீ ரொன்பானாள்
ஈண்டு வருக இசைந்து. 26
இன்று விடியப் பதினட்டாம் நாள் திருமணம். தென்னவனே! தகுதிக்குத் தகாது என்று எண்ணாமல் சீர்வரிசையுடன் திருமணத்துக்கு வருக.

25

கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனே மாமலையன் கோவல் – திருமணத்து
முன்மாரி பெய்யும் முதுவாரி யைமாற்றிப்
பொன்மாரி யாகப் பொழி. 27
மழைத்தெய்வமே! மலையன் திருக்கோவலூரில் உன் மழை பொன்மாரியாக இருக்க வேண்டும்.

வெண்பா 26 முதல் 30[தொகு]

26

முத்தெறியும் பெண்ணை முதிர்நீர் அதுதவிர்த்து
தத்திய நெய்ப்பால் தனைப்பெய்து – குத்திச்
செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு
வருமளவும் கொண்டோடி வா 28
திருக்கோவலூர் தெய்வீகனுக்கும் பாரிமகளிர் அங்கவை சங்கவைக்கும் திருமணம் நடக்கிறது. தென்னைமரமே! நீ இளநீர் தருவதை விட்டுவிட்டுத் திருமணத்திற்கு நெய்யும் பாலும் கொண்டுவா.

27

பொன்மாரி பெய்யுமூர் பூம்பருத்தி யாடையாம்
அந்நாள் வயலரிசி ஆகுமூர் – எந்நாளும்
தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில்
ஓங்கும் திருக்கோவ லூர். 29
சேதிமா நாட்டின் ஊர் திருக்கோவலூர். அங்கு பொன்மாரி பெய்யும். பருத்தியும் நெல்லும் செழிக்கும்.

28

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வார்சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார். 30
சொல்லாமல் உதவி செய்பவர்கள் பூக்காலே காய்க்கும் பலாமரம் போன்றவர்கள். சொல்லிவிட்டு உதவி செய்பவர்கள் பூத்துக் காய்க்கும் மாமரம் போன்றவர்கள். உதவுவதாகச் சொல்லிவிட்டுச் செய்யாதவர்கள் பூத்துவிட்டுக் காய்க்காத பாதிரிமரம் போன்றவர்கள்.

29

ஆயன் பதியில் ஆன்பதிவந் துற்றளகம்
மாயனூ துங்கருவி யால்நாளும் – தூயமணிக்
குன்றுபோல் வீறு குவிமுலையாள் தன்னுடன்நீ
இன்றுபோல் என்றும் இரு. 32
திருமண வாழ்த்து. பசுக்களுக்குக் காளைபோல் அமைந்துள்ள மணவாழ்க்கை மாயன் ஊதும் குழலோசை போல் இனிப்பதாய், இன்று போல் என்றென்றும் இருக்கட்டும்.

30

சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னை
சுரப்பாடி யான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவர் தன்கொடையின் சீர். 33
நான் ஒரு சுரம்(பா) பாடினேன். தலையில் முடி சூடிய சேரமான் பொன் விளையும் நாடு ஒன்றைப் பரிசிலாகத் தந்தான். இரப்பவர் எதைக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வர். எனினும் கொடுப்பவர் தம் தகுதி அறிந்து நல்குவர்.

வெண்பா 31 முதல் 35[தொகு]

31

நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும் – மாற்றலரைப்
பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாதென் பாட்டு. 34
ஔவை அகளங்கன் என்னும் படைவீரனைப் பார்த்துப் பாடிய பாட்டு இது. நூற்சேலை எவ்வளவு விலையுயர்ந்ததாக இருந்தாலும் தொடர்ந்து உடுத்தினால் நான்கு மாதங்களில் நைந்துபோகும். நான் பாடும் பாட்டு என்றும் நிலைத்து நிற்கும்.

32

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேயினித்த மோரும் – திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ(று)
எல்லா உலகும் பெறும். 35
புல்வேளூரில் வாழ்ந்த பூதன் ஔவையைப் பாராட்டி விருந்தளித்தான். அந்த விருந்து இந்த உலகையே பரிசாக நல்கியதற்கு இணையாக மதிக்கத்தக்கது. (வழுதுணங்காய் = கத்தரிக்காய்)

33

ஏசி இடலின் இடாமையே நன்றெதிரில்
பேசும் மனையாளின் பேய்நன்று – நேசமிலா
வங்கணத்தின் நன்று வலியபகை வாழ்வில்லாச்
சங்கடத்திற் சாவதே நன்று. 36
வங்கணம் = உதவாமல் முடக்குப் போட்டுக்கொள்ளுதல்

34

கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்
எருதாய் முழப்புடவை யாகித் – திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை. 37
கோரைக்கால் என்னும் ஊரில் வாழ்ந்துவந்த வைணவ ஆழ்வான் ஒருவன் ஔவைக்குத் தந்த கொடையாது யானையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அளவு குறைந்து குதிரை, எருமை, எருது, ஒருமுழம் புடவை கிழிந்த துணி என்று ஆகி, இப்போது ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. ஆனால் அவனது ஆனைக்கால் பெருத்துக்கொண்டே போகிறது.

35

பாடல் பெறானே பலர்மெச்ச வாழானே
நாடறிய நன்மணங்கள் நாடானே – சேடன்
இவன்வாழும் வாழ்க்கை இருங்கடல்சூழ் பாரில்
கவிந்தென் மலர்ந்தென்ன காண். 38
தன்னை மதிக்காத சேடன் என்பவனை ஔவை இகழ்ந்து பாடியது.

பாடல் 36 முதல் 40[தொகு]

36

காலையிலொன் றாவர் கடும்பகலில் ஒன்றாவர்
மாலையிலொன் றாவர் மனிதரெலாம் – சாலவே
முல்லானைப் போல முகமுமக மும்மலர்ந்த
கல்லானைக் கண்டறியோம் நாம். 39
மக்கள் மனம் காலநிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் முல்லான், கல்லான் என்னும் இரட்டையரில் முல்லான் எப்போதும் முகமும் அகமும் மலர்ந்து எப்போதும் கொடையுள்ளம் கொண்டவர்களாகவே விளங்குகிறான். கல்லான் மாறுபட்ட நிலையில் எப்போதும் இருக்கிறான்.

37

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண். 40
அறிவு நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. (அறிவுத்தெய்வம் கலைமகள் படித்துக்கொண்டேயிருக்கிறாள்). யாரும் அதிகம் படித்துவிட்டதாகப் பெருமை பேசக்கூடாது. ஒவ்வொருவருடைய உடம்பும் அவரவர் கைக்கு எட்டுச் சாண் உயரந்தான் இருக்கும். அதுபோல அவரவர் கல்வி அவரவர்களுக்குத் தெரியும்.

38

நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் – நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்கும் துணையாவான்
அந்த அரசே அரசு. 41
நூல் (பூணூல்) அணிந்தவர் ( அந்தணர்) என்றால் நீதி தவறும். உன் உறவினர் ( சத்திரியர்) என்றால் சண்டை வரும். வைசியன் என்றால் மக்களுக்கு துன்பம் வரும். எனவே நான்காம் வர்ணத்திலே வருபவனே நல்ல மந்திரியும் வழித்துணையும் ஆவான்.

39

செம்மான் கரத்தனடி சேயாம் நெடியோனை
அம்மான் எனப்பெற் றருள்வேலா – இம்மான்
கரும்பிறைக்கும் செம்பிறைக்கும் கண்ணம் பிறைக்கும்
அரும்பிறைக்கும் கூந்தல் அணை. 42
செம்மான் கரத்தன் = கையில் மானை வைத்திருக்கும் சிவன். அவன் சேய் முருகன். நெடியோன் என்னும் பெயரும் முருகனுக்கு உண்டு. திருமாலையும் நெடியோன் என்பர். முருகனுக்குத் திருமால் அம்மான். கரும்பைப் பிடித்துருக்கும் இறை காமன். இந்த மானாகிய பெண் மாமனுக்கு இறையானாள். செம்பிறை நெற்றிக்குக் கீழுள்ள தன் கண்ணாகிய அம்பை இறைக்கிறாள். இவளது கூந்தலில் பூ அரும்பு இறைந்தகொண்டிருக்கிறது. அது எனக்குத் தலையடை ஆனால் நல்லது.

40

வாதக்கோன் ஆனையென்றான் வையைக்கோன் பிள்ளையென்றான்
யாதவர்கோன் யாதேனும் இல்லையென்றான் – ஓதக்கேள்
வாதக்கோன் சொல்லதிலும் வையைக்கோன் சொல்லதிலும்
யாதவர்கோன் சொல்லே இனிது. 44
வாதக்கோன் = உடலில் ஓடும் மூச்சு. வையைக்கோன் = உடலில் வைகும் உயிர். யாதவர்கோன் = உடலுக்கு வரும் துன்பம். மூச்சு தன் உடலை ஆனை என்றது. உயிர் தன் உடலைத் தன் பிள்ளை என்றது. துன்பம் தான் குடிகொண்டுள்ள உடலுக்கும் தனக்கும் எந்த உறவும் இல்லை என்றது. எண்ணிப்பார்த்தால், துன்பம் சொல்வதுதான் உண்மை. அந்தத் துன்பமே என்னிடமிருக்கும் இன்பம்.

வெண்பா 41 முதல் 46[தொகு]

41

சுற்றும் கருங்குளவி சூரைத்தூ றாயிரம்பேய்
எற்றும் சுடுகா டிடிகரையின் – புற்றில்
வளர்ந்த மடற்பனைக்குள் வைத்ததேன் ஒக்கும்
தளர்ந்தோர்க்கொன் றீயார் தனம். 45
தளர்ந்தவர்களுக்கு உதவாத தனமானது கரை இடிந்து விழுந்துகொண்டிருக்கும் சுடுகாட்டில் கருங்குளவி சுற்றும் சூரைமுள் புதருக்கிடையே காய்ந்த கருக்குமடலையுடைய பனைமரத்தில் கட்டியிருக்கும் கொம்புத்தேன் போன்றது.

42

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினாயி ரத்தொருவர் – பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென் றறு. 46
100 பேரில் ஒருவர் அவையில் பேசக்கூடியவராகவும், 1000 பேரில் ஒருவர் புலவராகவும், 10 ஆயிரம் பேரில் ஒருவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவராகவும், கோடி பேரில் ஒருவர் தாதா-முனிவராகவும் இருப்பது உலகியல்பு என அறுதியிடலாம்.

43

தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை – அடுத்தடுத்துப்
பின்சென்றான் ஈவது காற்கூலி பின்சென்றும்
ஈயானெச் சம்போல் அறு. 47
தாளாண்மை – கேட்காமல் கொடுப்பது
வள்ளண்மை – கேட்கும்போது தருவது
கூலி – அடுத்தடுத்துப் பின்தொடர்ந்து கேட்கும்போது தருவது
உண்டது கழியும் எச்சம் - ஈயாமை

44

உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்கத்
தள்ளி வழக்கதனைப் பேசி – எள்ளளவும்
கைக்கூலி தான்வாங்கும் காலறுவான் தன்கிளையும்
எச்சமறும் என்றா வது. 48
உண்மையான வழக்கு ஒன்று. ஊரார் பேசும் நீதி ஒன்று. இரண்டையும் தள்ளிவைத்துவிட்டுக் கைக்கூலி வாங்கிக்கொண்டு அழிவழக்கு பேசுபவன் சுற்றமும், மனைவி-மக்களும் இல்லாமல் என்றாவது அழிந்தொழிவான்.

45

வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடி
வழக்கை அழிவழக்குச் செய்தோன் – வழக்கிழந்தோன்
சுற்றமும் தானும் தொடர்ந்தழுத கண்ணீரால்
எச்சமறும் என்றால் அறு. 49
ஆதாயம் கருதி வலிமையானவன் பக்கம் சேர்ந்துகொண்டு அழிவழக்கு பேசுபவன் வழக்குடையான் அழும் கண்ணீரால் கால்வழி அற்றுப்போவான் என்பது அறுதியிட்ட முடிபு.

வெண்பா 46 முதல் 50[தொகு]

[ஓர் அரசன் மகள் ஒரு அரசிளங் குமரனைக் கல்வியறிவில்லாதவன் என்று அயாமல், "ஓர் அறச்சாலையில் இன்ன காலத்தில் நீ வந்தால் நான் வருகிறேன்" என்று எழுதினாள். அதை அவன் கல்வியரிவுள்ள ஒருவனுக்குக் காண்பித்தனன். அவன் அதன் கருத்தையறிந்து அரசிளங்குமாரனை "நீ இவ்விடத்தில் இருந்தால் அரசன் உன் தலையை வெட்டுவான்" என்று அவனைப்போகச்செய்து, தான் அக்காலத்தில் அந்த அரசிளங்குமாரனைப்போலக் கோலங்கொண்டு அங்கிருந்தனன். அரசன் மகள் அவ்வாறே வந்து பிறன் என்று அறியாமற் கூடிய பின்பு, தெரிந்து தற்கொலை செய்துகொண்டு இறந்து, வருகிறவர்களைத் துன்பப்படுத்திக்கொண்டிருந்தாள்; அவ்வறச்சாலைக்கு ஔவையார் ஒருநாள் வந்தனர். அவரையுஞ் சாமந்தோறும் துன்பஞ்செய்யத் தொடங்கியபோது நான்கு சாமத்திலும் பாடியன.]

46

வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் – பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று. 50
பிறர் சொல்லக் கேட்டோ, தானே முயன்றோ வெண்பா கல்லாதவனையும், ஓலையில் எழுதத் தெரியாதவனையும் பெற்ற பெண்பாவி நகைப்புக்கு உள்ளாவாள். அவனை எதற்குத்தான் பெற்றாளோ!

47

கருங்குளவி சூரைத்தூ றீச்சங் கனிபோல்
வருந்தினர்கொன் றீயாதான் வாழ்க்கை – அரும்பகலே
இச்சித் திருந்தபொருள் தாயத்தார் கொள்வாரே
எற்றோமற் றெற்றோமற் றெற்று. 51
வருந்தியவர்களுக்கு ஒன்றுமே உதவாதவன் குளவிக்கூடு, சூரைமுள்ளோடு பழுத்திருக்கும் சூரைப்பழம், கூரான நீண்ட முள்ளுக்கிடையே பழுத்திருக்கும் ஈச்சம்பழம் போன்றவன். அவன் செல்வத்தை அவனுக்குப் பின் வரும் அவனது கால்வழியினர்தாம் அனுபவிப்பர். அவனுக்கு அவன் செலவத்தால் எந்தப் பயனும் இல்லை.

48

வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானம் உளதால் தயையுளதால் – ஆனபொழு(து)
எய்த்தோம் இளைத்தோமென்(று) ஏமாந் திருப்போரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று. 52
வானம் இருக்கிறது. மழை இருக்கிறது. உழுது பயிரிட மண் இருக்கிறது. பிறர் உதவும் தானம் இருக்கிறது. பிறர் காட்டும் தயை இருக்கிறது. இத்தனையும் இருக்கும்போது எய்த்தோம் (ஒன்றுமில்லாதவர் ஆயினோம்), செல்வத்தால் இளைத்துப்போயிருக்கிறோம் என்று ஏமாந்திருப்பது எதற்காக?

49

எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையேபோல் – பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாகாரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
பெண்ணும் ஆணும் தழுவி வாழவேண்டும். பல ஆண்டுகள் நீரில் கிடந்தாலும் ஈரம் படாமல் மிதக்கும் கிடை(வெண்டு) போல் வாழ்வோடு ஒட்டாமல் கிடக்கும் துறவு எதற்காக?

50

கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாரி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் – பெருங்கானிற்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்ற(து)
ஈரிரவும் துஞ்சாதென் கண். 54
நாவல் பழத்தில் சுட்ட-பழம் வேண்டுமா, சுடாத-பழம் வேண்டுமா என்று எருமை-மாடு மேய்ப்பவன் வினவியபோது தோற்றுப்போன ஔவைக்கு இரண்டு நாளாக இரவெல்லாம் தூக்கம் வரவில்லையாம்.
வயிரம் பாய்ந்த கருங்காலி மரத்தை வெட்டும் கோடாரியால் வாழைமரத்தை வெட்ட முடியாதது போன்றது

வெண்பா 51 முதல் 55[தொகு]

51

மாடில்லான் வாழ்வும் மதியில்லான் வாணிபம்நன்
னாடில்லான் செங்கோல் நடத்துவதும் – கூடும்
குருவில்லான் வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடும் விழல். 59
வாழ்வுக்கு மாடு என்னும் செல்வம் வேண்டும். வாணிபம் செய்ய மதி வேண்டும். செங்கோல் நடத்த நல்ல நாடு வேண்டும். இவை இல்லாமல் இவற்றைச் செயல்படுத்தவும் முடியும். ஆனால் குரு இல்லாமல் வித்தை கற்பதும், குணமில்லாத பெண்ணோடு வாழ்வதும், விருந்து வராத வீட்டில் வாழ்வதும் விழல்(வீண்).

52

நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே – வாச
மனையாளைப் பஞ்சணையில் மைந்தர்தமை நெஞ்சில்
வினையானை வேலைமுடி வில். 60
நண்பனைக் காணாத இடத்திலும், ஆசானை எல்லா இடங்களிலும், மனையாளைப் பஞ்சணையிலும், பெற்ற மைந்தர்களை நெஞ்சிலும், இட்ட பணியைச் செய்பவனை வேலை முடிந்த பின்னரும் பாராட்ட வேண்டும்.

53

ஆலைப் பலாவாக்கல் ஆமோ அருஞ்சுணக்கன்
வாலை நிமிர்க்க வசமாமோ – நீலநிறக்
காக்கைதனைப் பேசவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச்சீ ராக்கலா மோ. 61
ஆலமரத்தைப் பலாமரம் ஆக்க முடியுமா? நாய் வாலை நிமிர்த்த முடியுமா? காக்கையைக் (கிளியைப் போலப்) பேசவைக்க முடியுமா? முடியாது. அதுபோலக் கருணை இல்லாத மூர்க்கனைச் சீராளனாக மாற்ற முடியாது.

54

நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின் – பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டில் சோமன் கொடையருமை
புல்லரிடத் தேயறிமின் போய். 62
நிழலின் அருமையை வெயிலில் நின்று தெரிந்துகொள்க.
தீவினையின் கொடுமையை ஈசன் திருவடி கிட்டாதபோது தெரிந்துகொள்க.
பழகுதமிழின் மேன்மையை நாலடியார், திருக்குறள் நூல்களில் கண்டுகொள்க.
(காமம் தருபவன் காமன். கொடைத் தன்மையைத் தருபவன் சோமன்)
சோமன் அருள் கிட்டாமையை அற்பர்களிடம் கண்டுகொள்க.

55

காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசும் உலாவிற் பெதும்பைபுலி – ஆசு
தவலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி. 63
புலிபோல் அச்சம் தருபவை - பிள்ளைத்தமிழ் பாடுவோர்க்கு அம்புலிப் பருவம். உலா பாடுவோர்க்குப் பெதும்பைப் பருவம். ஆசுகவி பாடுவோர்க்கு வண்ணம். என்றாலும் எல்லார்க்கும் அச்சம் தருவது வெண்பா.

வெண்பா 56 முதல் 60[தொகு]

56

ஈதலறம் தீவினைவிட் டீட்டுபொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்தொருமித்(து) – ஆதரவு
பட்டதே இன்பம் பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு. 64
அறம், பொருள், இன்பம், வீடு – பற்றிய விளக்கம்

57

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம். 65
எப்போது எது போகும்

58

போந்த உதாரனுக்குப் பொன்துரும்பு சூரனுக்குச்
சேர்ந்த மரணம் சிறுதுரும்பு – ஆய்ந்த
அறிவோர்க்கு நாரிய ரும்துரும்பாம் இல்லத்
துறவியர்க்கு வேந்தன் துரும்பு. 66
யாருக்கு எது துரும்பு?
ஊதாரிக்கு – பொன்,
சூரனுக்கு – இறப்பு.
அறிஞர்களுக்கு – அன்பு.
இல்லத்துறவிக்கு – வேந்தன்.

59

கல்வி யுடையீர் கருங்கான கத்திடையே
நெல்லி உதிர்த்து நிற்பதெவன் – வல்லாய்கேள்
வெல்லா வழக்கை விலைவாங்கி வெல்விக்கும்
வல்லாளன் சுற்றம்போல் மாண்டு. 69
கல்வியுடையவர்களே! காட்டில் கருநெல்லிக்கனியை உதிர்ப்பதுபோல் கல்வி இல்லாதவனிடம் உன் கவிதையைச் சொல்வது ஏன்? கல்வியில் வல்லவனே கேள்! வெல்லா வழக்கை விலை வாங்கிக்கொண்டு வெல்லவைக்கும் வல்லாளன் (இக்கால வழக்கறிஞர்கள்) போல் செய்தால் அவனைப் போல் சுற்றம் இல்லாமல் மாண்டுபோவீர்.

60

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண் டிலேன். 70
வழுதிக்குத் திருமணம். பசியைப் போக்கிக்கொள்லாம் எனச் சென்றேன். கூட்டம் என்னை நெருக்கித் தள்ளியது. சோறுதான் கிடைக்கவில்லை.

வெண்பா 61 முதல் 63[தொகு]

61

வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழவள நாடு சோறுடைத்து – பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து. 72
நாடும் அதன் சிறப்பும்
சேரர் ஆளும் மலைநாட்டுக்கு வேழம் என்னும் யானை
சோழ நாட்டுக்குச் சோறு
பூழியர் ஆளும் தென்னாட்டுக்கு முத்து
தொண்டை நாட்டுக்கு சான்றோர்.

62

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ – முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவ னுக்கென்னாய்
கொஞ்சமே அஞ்சாதே நீ. 73
நெஞ்சமே! பெரும் பஞ்சமே ஆனாலும் அஞ்சாதே. இதுதான் உனக்கு என்று தலையில் எழுதிய சிவன் சாகவில்லை. காப்பான்.

கட்டளைக் கலித்துறை[தொகு]

1

மேற்பார்க் கமைந்தருள் மூவா எருதும் விளங்குகங்கை
நீர்ப்பாய்ச் சலும்நன் னிலமுமுண் டாகியும் நின்னிடத்திற்
பாற்பாக் கியவதி நீங்கா திருந்தும் பலிக்குழன்றீர்
ஏற்பார்க் கிடாமலன் றோபெருங் கோவில் இறையவனே. 67
சிவனே! உன்னையே அண்ணாந்து பார்த்துகொண்டிருக்கும் எருது உன்னிடம் இருக்கிறது. (உழுது உண்ணலாம்). கங்கை உன்னிடம் இருக்கிறது. தானே நீர் பாயும் கங்கை இருக்கிறது. உன் மனைவி உன்னோடு பால் பட்டு (பங்கு போட்டுக்கொண்டு) கிடக்கிறாள். இவையெல்லாம் இருந்தும் பிச்சை எடுத்து உண்கிறாய். உன்னிடம் இரப்பவர்களுக்கு நீ எதுவும் தருவதில்லை.

2

மதுர மொழிநல் லுரையான் புதல்வன் மலர்ப்பத்ததை
முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே 1
மன்ன! மதுர மொழியானாகிய சிவன் புதல்வன் முருகன். அவனை நினைப்பவர்களை அவன் அண்ணன் ஆனைமுகத்தான் முன்னின்று காப்பான். அவன் பின்னே காத தூரத்தில் முருகன் தேர் வரும். அதன் பின்னே (மாணிக்கவாசகருக்கு நல்கியது போல்) குதிரையும் வரும். அதன் பின்னே ஔவைக்கிழவியும் உன்னைப் புகழ்ந்து பாடிக்கொண்டே வருவாள். எனவே முருகனை நினை.

கலித்தாழிசை[தொகு]

கலித்தாழிசை அல்லது அந்தத்தடி நீட்டிசையாமையின் ஐந்தடிக் கலித்துறை

திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின் றார்மணப் பந்தரிலே
சங்கொத்த வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக்குக் கண்முற் றடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே. 31
திருமணத்தின்போது அங்கவை சங்கவையை அறுகம்புல் போட்டு வாழ்த்த மூவேந்தரும் வந்துள்ளனர். பனந்துண்டமே! உன் பங்குக்கு பந்தற்காலில் கட்ட மூன்று பனங்காய்களுடன் நீ தழைப்பாயாக!

விருத்தம்[தொகு]

இலக்கணக் கவிஞர் சொல்லின்பம் தேடுவர்
மலக்கும்சொல் தேடுவர் வன்க ணாளர்கள்
நிலத்துறும் கமலத்தை நீளும் வண்டதீ
தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல் 13
தாமரைப் பூவைத் தேனீ நாடுவது போல் இலக்கணம் கற்ற புலவர்கள் சொல்லின் பொருளின்பத்தை நாடுவர். கொடியவர் மலம் போன்ற இழிசொல்லில் பயன் காண்பர்.
ஔவையார் தனிப்பாடல்கள் முற்றும்

மேலும்[தொகு]

மேலும் உடன் பாடிய எழுவர் பாடல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஔவையார்_தனிப்பாடல்கள்&oldid=1513207" இலிருந்து மீள்விக்கப்பட்டது