களிப் பொருபது

விக்கிமூலம் இலிருந்து
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

களிப் பொருபது, பலரால் பாடப்பெற்ற இவ்விலக்கியத்தை மூன்றாம் குலோத்துங்க சோழன் தொகுத்ததாக நம்பப்படுகிறது.

அசரீரி பாடியது[தொகு]

இந்தக் கைக் கோளர் இசைக்கெண் கணன் படைத்த
எந்தக் கைக் கோளர் இணை ஆவாரே - அந்திப்
பிறையணிகைக் கோளனுருப் பெற்றவன்பால் வைகும்
நிறையணிக் கோளரே நேர்.

ஒளவையார் பாடியது[தொகு]

மூவுலகை யுங்கடந்து மூதண்டப் பித்திகையை
மேவிஅதற் கப்பாலும் மின்னியதே - பூவிலென்றும்
மங்காத நூல்வேண்டி மாண்கூத்தற் கிட்டசிரச்
சிங்கா தனத்தலைவர் சீர்.

கம்பர் பாடியது[தொகு]

கந்தழியென்(று) ஆன்றோர்கள் கண்டு நிதம்பரவும்
எந்தை முருகன் இளையவராம் - சந்ததியில்
வந்துமகிழ் செங்குந்தர் வாய்மைதனை என்சொல்கேன்
செந்திருமால் செல்வர்களே தேர்ந்து.

புகழேந்தி பாடியது[தொகு]

விண்முகத்தோர் பூமாரி வீசியதும் ஓர்வியப்போ
மண்முகத்தே செங்குந்தர் மாய்சிரங்கள் - எண்முகத்தும்
சிந்தியதத் தம்முடலைச் சேர்ந்தொட்டிக் கொண்டொலித்து
வந்தவிதம் எண்ணவருங் கால்.

அம்பிகாபதி பாடியது[தொகு]

குந்தர் பெருமிதத்தைக் கூறுவதென் பார்த்திபர்காள்
சந்தத் தமிழ்க்கடலார் தாம்போற்ற - விந்தைத்
தலைதந்தார் பாடலுக்குத தாமென்றும் பூவில்
கலைதந்தார் மக்களுக்குக் காண்.

சோழன் பாடியது[தொகு]

ஏதென் றெடுத்துரைக்கேன் என்னாசான் தன்கவியைப்
போதுள் இருந்துவளர் பொன்மாதே - ஈதலவா
சாகாத கல்வியென்று சான்றோர்கள் சாற்றிவைத்த
ஏகாந்தச் சொல்லாகும் எண்.

பாண்டியன் பாடியது[தொகு]

அன்றும் கவிநலத்தை ஆய்ந்தறிந்தேன் பாண்டியிலே
இன்றும் கவிநலத்தை ஈங்கறிந்தேன் - என்றும்தான்
கூத்தற் கெதிருண்டோ கூறும் அவனிதனில்
பார்த்திபரே காண்மின் படித்து.

சேரன் பாடியது[தொகு]

விண்கண்ட தேவரெலாம் வீற்றிருந்தார் ஈங்கென்று
கண்கண்ட மாமுனிவர் காட்டினார் - பண்கொண்ட
கூத்தன் கவிக்குக் குவிந்தலை ஆசனத்திப்
பார்த்திடவே நன்றாய்ப் பதிந்து.

அஞ்சனாட்சி பாடியது[தொகு]

வாழிசக்ர வர்த்திதன்பேர் வாய்ந்தஒட்டக் கூத்தன்பார்
ஏழினொடும் ஏழுமதன் மேலுநிலை - சூழச்செய்
ஈட்டி எழுபதெனும் இந்நூ ற்கொப் பின்மைகண்டீர்
நட்டிலுயர் வாணர்களே நன்கு.

சைவாசாரியார் பாடியது[தொகு]

வாழிஒட்டக் கூத்தன்! வகைவந்தார் தாம்வாழி!
வாழிமன்னன் எந்நாளும்! வையகத்தில் - வாழி
கொலைகளவு கள்காமம் கோள்விலகி மாக்கள்
உலைவில்லா இன்பத் துகந்து.

களிப் பொருபது முற்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=களிப்_பொருபது&oldid=15564" இலிருந்து மீள்விக்கப்பட்டது