திருக்குறள், மு. வரதராசனாரின் தெளிவுரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

அறத்துப்பால்[தொகு]

பாயிரம்[தொகு]

கடவுள் வாழ்த்து[தொகு]

பொருட்பால்[தொகு]

நட்பியல்[தொகு]

நட்பாராய்தல்[தொகு]

1. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

௧. நட்புச் செய்தபிறகு, நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால், ஆராயாமல் நட்புச் செய்வதைப்போல் கெடுதியானது வேறு இல்லை.


2. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.


௨. ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில், தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.


3. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.


௩.ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து, அவனோடு நட்புக்கொள்ள வேண்டும்.


4. குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.


௪. உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப், பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ள வேண்டும்.


5. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.


௫. நன்மையல்லாத செயலைக் கண்டபோது, வருந்தும்படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை, ஆராய்ந்து கொள்ளவேண்டும்.


6. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.


௬. கேடு வந்தபோதும் ஒரு நன்மை உண்டு; அக்கேடு, ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.


7. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.


௭. ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி, அவரைக் கைவிடுதலாகும்.


8. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.


௮. ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும்; அதுபோல், துன்பம் வந்தபோது கைவிடுகின்றவரின் நட்பைக், கொள்ளாதிருக்க வேண்டும்.


9. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்.


௯. கேடு வரும் காலத்தில், கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும், நினைத்த உள்ளத்தை வருத்தும்.


10. மருவுக மாசற்றார் கேண்மைஒன் றித்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.


௧0. குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை, ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

தீ நட்பு[தொகு]

1. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.


௧. அன்புமிகுதியால், பருகுவார்போல் தோன்றினாலும், நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத், தேய்ந்து குறைவது நன்று.


2. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்.


௨. தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதி இல்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன; இழந்தாலும் என்ன?


3. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.


௩. கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல், பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும், ஒரு நிகரானவர்.


4. அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.


௪. போர் வந்தபோது, களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவைவிட, ஒரு நட்பும் இல்லாமல், தனித்திருத்தலே சிறந்தது.


5. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.


௫. காவல் செய்து வைத்தாலும், காவல் ஆகாத கீழ் மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட, ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.


6. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.


௬. அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட, அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை, கோடி மடங்கு நன்மை தருவதாகும்.


7. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்.


௭. அகத்தில் அன்பு இல்லாமல், புறத்தில் நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன, பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.


8. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்.


௮. முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே, தளரச்செய்து, கைவிட வேண்டும்.


9. கனவிலும் இன்னாத மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.


௯. செய்யும் செயல் வேறாகவும், சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகம்.


10. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.


௧0. தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை, எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்.

கூடாநட்பு[தொகு]

1. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை

தேரா நிரந்தவர் நட்பு.

௧. அகத்தே பொருந்தாமல், புறத்தில் பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது, எறிவதற்கு உரிய பட்டடையாகும்.


2. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.


௨. இனம் போலவே இருந்து, உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல், உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.


3. பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்

ஆகுதல் மாணார்க்கு அரிது.


௩. பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தபோதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், உள்ளன்பினால் மாட்சியடையாதவர்க்கு இல்லை.


4. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.


௪. முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி, அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்சவேண்டும்.


5. மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற்று அன்று.


௫. மனத்தால் தம்மோடு பொருந்தாமல் பழகுகின்றவரை, அவர் கூறுகின்ற சொல்லைக்கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.


6. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.


௬. நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும், பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை, விரைவில் உணரப்படும்.


7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான்.


௭. வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும், தீங்கு செய்தலைக் குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.


8. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.


௮. பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும், கொலைக்கருவி மறைந்திருக்கும்; பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும், அத் தன்மையானதே.


9. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.


௯. புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து, அகத்தில் இகழ்கின்றவரை, தாமும் அந் நட்பில் நகைத்து, மகிழுமாறு செய்து, அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.


10. பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல்.


௧0. பகைவர் நண்பராகும் காலம் வரும்போது, முகத்தளவில் நட்புக்கொண்டு, அகத்தில் நட்பு நீங்கி, வாய்ப்புக் கிடைத்தபோது, அதையும் விட வேண்டும்.

பேதைமை[தொகு]

1. பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல்.


௧. பேதைமை என்று சொல்லப்படுவது ஒரு குற்றம்; அது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு, ஊதியமானதைக் கைவிடுதலாகும்.


2. பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கட் செயல்.


௨. ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தைச் செலுத்துவதாகும்.


3. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்.


௩. தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை, ஆகியவை, பேதையின் தொழில்கள்.


4. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.


௪. நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும், தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல், வேறு பேதையர் இல்லை.


5. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு.


௫. எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப், பேதை, தன் ஒரு பிறப்பில் செய்துகொள்ள வல்லவனாவான்.


6. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்.

௬. ஒழுக்க நெறி அறியாத பேதை, ஒரு செயலை மேற்கொண்டால், அந்தச் செயல், முடிவு பெறாமல், பொய்படும்; அல்லது, அவன், குற்றவாளியாகித், தளை பூணுவான்.


7. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.


௭. பேதை பெருஞ்செல்வம் அடைந்தபோது, அவனோடு தொடர்பில்லாத அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


8. மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின்.


௮. பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால், அவன் நிலைமை, பித்துப் பிடித்த ஒருவன், கள் குடித்து மயங்கினாற் போலாகும்.


9. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன்று இல்.


௯. பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப் பிரிவு, துன்பம் ஒன்றும் தருவதில்லை; ஆகையால், பேதையருடன் கொள்ளும் நட்பு, மிக இனியதாகும்.


10. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல்.


௧0. சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன், தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப், படுக்கையில் வைத்தாற் போன்றது.


புல்லறிவாண்மை[தொகு]

1. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையாது உலகு.


௧. அறிவில்லாமையே, இல்லாமை பலவற்றுள்ளும், கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை, உலகம், அத்தகைய இல்லாமையாகக் கருதாது.


2. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்

இல்லை பெறுவான் தவம்.


௨. அறிவில்லாதவன், மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.


3. அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பிழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.


௩. அறிவில்லாதவர், தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம், அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்.


4. வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு.


௪. புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், 'யாம் அறிவுடையேம்' என்று ஒருவன், தன்னைத் தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.


5. கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.


௫. அறிவில்லாதவர், தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்று வல்ல பொருளைப் பற்றியும், மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்.


6. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி.


௬. தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து, நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல், புல்லறிவாகும்.


7. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.


௭. அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல், சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன், தனக்குத்தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.


8. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்.


௮. தனக்கு நன்மையானவற்றைப், பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும், ஒரு நோயாகும்.


9. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.


௯. அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன், தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ, தான் அறிந்த வகையால், அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்.


10. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்.


௧0. உலகத்தார், 'உண்டு' என்று சொல்வதை, 'இல்லை' என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி, விலக்கப்படுவான்.

இகல்[தொகு]

1. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்.


௧. எல்லா உயிர்களுக்கும், மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய், இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.


2. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.


௨. ஒருவன், தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி, அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு, அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் நல்லது.


3. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தரவில் விளக்கம் தரும்.


௩. ஒருவன், இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கிவிட்டால், அஃது, அவனுக்கு, அழிவில்லாத, நிலையான, புகழைக் கொடுக்கும்.


4. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்.


௪. இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது, ஒருவனுக்கு, இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.


5. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிகலூக்கும் தன்மை யவர்.


௫. இகலை எதிர்த்து நிற்காமல், அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை, வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர், யார்?


6. இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து.


௬. "இகல் கொள்வதால், வெல்லுதல் இனியது," என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை, தவறிப் போதலும், அழிதலும், விரைவில் உள்ளனவாம்.


7. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர்.


௭. இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர், வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை, அறிய மாட்டார்.


8. இகலுக்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.


௮. இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல், ஒருவனுக்கு ஆக்கமாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால், கேடு அவனிடம் வரக் கருதும்.


9. இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு.


௯. ஒருவன், தனக்கு ஆக்கம் வரும்போது, இகலைக் கருதமாட்டான்; தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும்போது, அதனை எதிர்த்து, வெல்லக் கருதுவான்.


10. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு.

௧0. ஒருவனுக்கு, இகலால், துன்பமானவை எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பால், நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.


பகைமாட்சி[தொகு]

1. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை.


௧. தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு, எதிர்த்தலை விட வேண்டும்; தம்மைவிட மெலியவர்மேல், பகை கொள்வதை, விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.


2. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.


௨. ஒருவன், அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன், பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்?


3. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.


௩. ஒருவன், அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன், பகைவர்க்கு மிக எளியவன்.


4. நீங்கான் வெகுளி நிறைவிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.


௪. ஒருவன், சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால், அவன், எக்காலத்திலும், எவ்விடத்திலும், எவர்க்கும், எளியவன்.


5. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க்கு இனிது.

௫. ஒருவன், நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவன், பகைவர்க்கு எளியவனாவான்.


6. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்.

௬. ஒருவன், உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால், அவனுடைய பகை, விரும்பி மேற்கொள்ளப் படும்.


7. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

மாணாத செய்வான் பகை.

௭. தன்னை அடுத்துத், தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப், பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.


8. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு

இனனிலனாம் ஏமாப்பு உடைத்து.

௮. ஒருவன், குணம் இல்லாதவனாய்க், குற்றம் பல உடையவனானால், அவன், துணை இல்லாதவன் ஆவான்; அந் நிலைமையே, அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.


9. செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.

௯. அறிவு இல்லாத, அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்துப் பகை கொள்பவர்க்கு, இன்பங்கள், தொலைவில் நீங்காமல் நிற்கும்.

10. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லாது ஒளி.

௧0. கல்வி கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும், புகழ் வந்து பொருந்தாது.


பகைத்திறந்தெரிதல்[தொகு]

1. பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.


௧. பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை, ஒருவன், சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.


2. வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லே ருழவர் பகை.


௨. வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகைகொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.


3. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.


௩. தான் தனியாக இருந்து, பலருடைய பகையைத் தேடிக்கொள்பவன், பித்துப் பிடித்தவரைவிட, அறிவில்லாதவனாகக் கருதப் படுவான்.


4. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

தகைமைக்கண் தங்கிற்று உலகு.


௪. பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும் பண்புடையவனது பெருந்தன்மையில், உலகம் தங்கியிருப்பதாகும்.


5. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.


௫. தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில், அப் பகைகளுள் ஒன்றை, இனிய துணையாகக் கொள்ள வேண்டும்.


6. தேறினும் தேறா விடினும் அழிவின் கண்

தேறான் பகாஅன் விடல்.


௬. இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும், அழிவு வந்த காலத்தில், அவனைத் தெளியாமலும், நீங்காமலும், வாளா விட வேண்டும்.


7. நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மென்மை பகைவ ரகத்து.


௭. துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத், துன்பத்தைச் சொல்லக் கூடாது; பகைவரிடத்தில், மென்மை மேற்கொள்ளக் கூடாது.


8. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு.


௮. செய்யும் வகையை அறிந்து, தன்னை வலிமைப் படுத்திக் கொண்டு, தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத், தானாகவே அழியும்.


9. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த விடத்து.


௯. முள் மரத்தை, இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது, வெட்டுகின்றவரின் கையையே, அது வருத்தும்.


10. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்க லாதார்.


௧0. பகைத்தவருடைய தலைமையைக் கெடுக்க முடியாதவர், திண்ணமாக, மூச்சுவிடும் அளவிற்கும், உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.


உட்பகை[தொகு]

1. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்.


௧. இன்பம் தரும் நிழலும் நீரும், நோய் செய்வனவாக இருந்தால், தீயனவே ஆகும்; அது போலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருமானால், தீயனவே ஆகும்.


2. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.


௨. வாளைப்போல், வெளிப்படையான பகைவர்க்கு, அஞ்ச வேண்டிய தில்லை; ஆனால், உரவினரைப் போல இருந்து, உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு, அஞ்ச வேண்டும்.


3. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.


௩. உட்பகைக்கு அஞ்சி, ஒருவன், தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்; தளர்ச்சி வந்த போது, மட்கலத்தை அறுக்கும் கருவிபோல, அந்த உட்பகை, தவறாமல் அழிவு செய்யும்.


4. மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

ஏதம் பலவும் தரும்.


௪. மனம் திருந்தாத உட்பகை, ஒருவனுக்கு உண்டாகுமானால், அது, அவனுக்குச், சுற்றம் சீர்ப்படாமைக்குக் காரணமான குற்றம் பலவற்றையும் தரும்.


5. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்.


௫. உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது, ஒருவனுக்கு, இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.


6. ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது.


௬. ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால், அவன் அழியாமலிருத்தல், எப்போதும் அரிது.


7. செப்பீன் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி.


௭. செப்பின் இணைப்பைப்போல், புறத்தே பொருந்தியிருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர், அகத்தே பொருந்தியிருக்க மாட்டார்.


8. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி.


௮. உட்பகை உண்டான குடி, அரத்தினால் தேய்க்கப்பட்ட இரும்பு போல, வலிமை குறைக்கப்பட்டுத், தேய்ந்து போகும்.


9. எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாம் கேடு.


௯. எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு, உட்பகையில் உள்ளதாகும்.


10. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று.


௧0. அகத்தில் உடம்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில், பாம்போடு, உடன் வாழ்ந்தாற் போன்றது.


பெரியாரைப் பிழையாமை[தொகு]

1. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலு லெல்லாம் தலை.


௧. மேற்கொண்ட செயலைச் செய்துமுடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்துகொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.


2. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.


௨. ஆற்றல் மிகுந்த பெரியாரை, விரும்பி, மதிக்காமல் நடந்தால், அது, அப்பெரியாரால், நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.


3. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு.


௩. அழிக்க வேண்டுமானால், அவ்வாறே செய்துமுடிக்கவல்லவரிடத்தில், தவறு செய்தலை, ஒருவன், கெட வேண்டுமானால், கேளாமலே செய்யலாம்.


4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்.


௪. ஆற்றல் உடையவர்க்கு, ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்கவல்ல எமனைக், கைகாட்டி அழைத்தாற் போன்றது.


5. யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.


௫. மிக்க வலிமை உடைய அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்காக, எங்கே சென்றாலும், எங்கும் வாழ முடியாது.


6. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.


௬. தீயால் சுடப்பட்டாலும், ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும்; ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் தவறு செய்து நடப்பவர், தப்பிப் பிழைக்க முடியாது.


7. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.


௭. தகுதியால் சிறப்புற்ற பெரியார், ஒருவனை வெகுண்டால், அவனுக்குப், பலவகையால், மாண்புற்ற வாழ்க்கையும், பெரும் பொருளும் இருந்தும், என்ன பயன்?


8. குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து.


௮. மலை போன்ற பெரியார் கெட நினைத்தால், உலகில் அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும், தம் குடியோடு அழிவர்.


9. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.


௯. உயர்ந்த கொள்கையுடைய பெரியார் சீறினால், நாட்டை ஆளும் அரசனும், இடை நடுவே முரிந்து, அரசு இழந்து, கெடுவான்.


10. இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின்.


௧0. மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால், அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும், தப்பிப் பிழைக்க முடியாது.


பெண்வழிச் சேறல்[தொகு]

1. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது.


௧. மனைவியை விரும்பி, அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய்தலை விரும்புகின்றவர், வேண்டாத பொருளும், அதுவே!


2. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நாணாக நாணுத் தரும்.


௨. கடமையை விரும்பாமல், மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க செயலாக, நாணத்தைக் கொடுக்கும்.


3. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்

நல்லாருள் நாணத் தரும்.


௩. மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை, ஒருவனுக்கு, எப்போதும், நல்லவரிடையே இருக்கும்போது, நாணத்தைத் தரும்.


4. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்தல் இன்று.


௪. மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற, மறுமைப்பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந் தன்மை, பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.


5. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்.


௫. மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன், எப்போதும், நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு, அஞ்சி நடப்பான்.


6. இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர்.


௬. மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர், தேவரைப்போல, இவ்வுலகத்தில், சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும், பெருமை இல்லாதவரே ஆவர்.


7. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.


௭. மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையை விட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே, பெருமை உடையது.


8. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

பெட்டாங்கு ஒழுகு பவர்.


௮. மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும், செய்து முடிக்க மாட்டார்; அறத்தையும் செய்ய மாட்டார்.


9. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

பெண்ஏவல் செய்வார்கண் இல்.


௯. அறச் செயலும், அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும், மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.


10. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.


௧0. நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு, தக்க நிலையும் உடையார்க்கு, எக்காலத்திலும், மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.


வரைவின்மகளிர்[தொகு]

1. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும்.


௧. அன்பினால் விரும்பாமல், பொருள்காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.


2. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர்

நயன்தூக்கி நள்ளா விடல்.


௨. கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற, பண்பற்ற பொதுமகளிரின் இன்பத்தை, ஆராய்ந்து, பொருந்தாமல் விட வேண்டும்.


3. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணத்தழீஇ யற்று.


௩. பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத, ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.


4. பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்

ஆயும் அறிவி னவர்.


௪. பொருள் ஒன்றையே பொருளாகக்கொண்ட, பொதுமகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர், பொருந்தமாட்டார்.


5. பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர்.


௫. இயற்கை அறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின், புன்மையான நலத்தைப் பொருந்தார்.


6. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள்.


௬. ஆடல் பாடல் தகுதிகளால் செருக்குக் கொண்டு, தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர், பொருந்தார்.


7. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்

பேணிப் புணர்பவர் தோள்.


௭. நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொது மகளிரின் தோளைப், பொருந்துவர்.


8. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

மாய மகளிர் முயக்கு.


௮. வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்து அறியும் அறிவு இல்லாதவர்க்கு, 'அணங்கு தாக்கு' (மோகினி மயக்கு), என்று கூறுவர்.


9. வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு.


௯. ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகம் ஆகும்.


10. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.


௧0. இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும், கள்ளும், சூதுமாகிய இம் மூவகையும், திருமகளால் நீக்கப் பட்டவரின் உறவாகும்.

கள்ளுண்ணாமை[தொகு]

1. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.


௧. கள்ளின்மேல் விருப்பம் கொண்டுநடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள புகழையும் இழந்துவிடுவர்.


2. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப்பட வேண்டா தார்.


௨. கள்ளை உண்ணக் கூடாது; சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர், கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.


3. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.


௩. பெற்ற தாயின் முகத்திலும், கள்ளுண்டு மயங்குதல், துன்பம் தருவதாகும்; அப்படியானால், குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?


4. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.


௪. நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே, நிற்காமல் செல்வாள்.


5. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல்.


௫. விலைப்பொருள் கொடுத்துக், கள்ளுண்டு, தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமையுடையதாகும்.


6. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.


௬. உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே, கள்ளுண்பவரும், அறிவு மயங்குதலால், நஞ்சு உண்பவரே ஆவர்.


7. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர்.


௭. கள்ளை, மறைந்திருந்து குடித்து, அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு, எந்நாளும் சிரிக்கப் படுவர்.


8. களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.


௮. கள்ளுண்பவன், 'யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்', என்று சொல்வதை விட வேண்டும்; நெஞ்சில் ஒளித்திருந்த குற்றமும், கள்ளுண்டபோதே வெளிப்படும்.


9. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று.


௯. கள்ளுண்டு மயங்கியவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனை, மற்றொருவன், தீவிளக்குக் கொண்டு தேடினாற் போன்றது.


10. கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.


௧0. ஒருவன், தான் கள் உண்ணாதபோது, கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில், உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்க மாட்டானோ?


சூது[தொகு]

1. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூவும்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.


௧. வெற்றியே பெருவதானாலும், சூதாட்டத்தை விரும்பக்கூடாது; வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை, இரை என்று மயங்கி, மீன் விழுங்கினாற் போன்றது.


2. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.


௨. ஒரு பொருள் பெற்று, நூறு மடங்கு பொருளை இழந்துவிடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?


3.உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்

போஒய்ப் புறமே படும்.


௩. ஒருவன், உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய், அவனைவிட்டு நீங்கிப், பகைவரிடத்தில் சேரும்.


4. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன்று இல்.


௪. ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி, அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல், வறுமை தருவது, வேறொன்று இல்லை.


5. கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்.


௫. சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத் திறமையும், மதித்துக் கை விடாதவர், எல்லாப் பொருளும் உடையவராக இருந்தும், இல்லாதவர் ஆய்விடுவர்.


6. அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்

முகடியால் மூடப்பட் டார்.


௬. சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப், பல துன்பப்பட்டு வருந்துவர்.


7. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின்.


௭. சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது, அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும், இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.


8. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது.


௮. சூது, உள்ள பொருளை அழித்துப், பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்துப், பல வகையிலும் துன்பமுற்று, வருந்தச் செய்யும்.


9. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்

அடையாவாம் ஆயம் கொளின்.


௯. சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை, ஆகிய ஐந்தும், அவனைச் சேராமல், ஒதுங்கும்.


10. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறூஉம் காதற்று உயிர்.


௧0. பொருள் வைத்து இழக்க இழக்க, மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல, உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த, உயிர், மேன்மேலும் காதல் உடையதாகும்.


மருந்து[தொகு]

1. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.


௧. மருத்துவ நூலோர், வாதம், பித்தம், சிலேத்துமம் என எண்ணிய மூன்றும், அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும், நோய் உண்டாக்கும்.


2. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


௨. முன் உண்ட உணவு, செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப், பிறகு, தக்க அளவு உண்டால், உடம்பிற்கு, மருந்து என ஒன்று, வேண்டியதில்லை.


3. அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கு மாறு.


௩. முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின், வேண்டிய அளவு அறிந்து, உண்ண வேண்டும்; அதுவே, உடம்பு பெற்றவன், அதை, நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.


4. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.


௪. முன் உண்ட உணவு, செரித்த தன்மையை அறிந்து, மாறுபாடில்லாத உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்றையும், நன்றாகப் பசித்த பிறகு, உண்ணவேண்டும்.


5. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.


௫. மாறுபாடில்லாத உணவை, அளவு மீறாமல், மறுத்து, அளவோடு உண்டால், உயிர், உடம்பில் வாழ்வதற்கு இடையூரான, நோய், இல்லை.


6. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபே ரிரையான்கண் நோய்.


௬. குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில், இன்பம் நிலைநிற்பது போல, மிகப் பெரிதும் உண்பவனிடத்தில், நோய் நிற்கும்.


7. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.


௭. பசித் தீயின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல், மிகுதியாக உண்டால், அதனால், நோய்கள், அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.


8.நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.


௮. நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும் படியாகச், செய்ய வேண்டும்.


9. உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.


௯. மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும், ஆராய்ந்து, செய்ய வேண்டும்.


10. உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று

அப்பால்நாற் கூற்றே மருந்து.


௧0. நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிருந்து கொடுப்பவன் என்று, மருத்துவ முறை, அந்த தான்கு வகைப்பாகுபாடு, உடையது.


குடிமை[தொகு]

1. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு.


௧. நடுவு நிலைமையும், நாணமும், உயர் குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல், மற்றவரிடத்தில், இயல்பாக, ஒருசேர, அமைவதில்லை.


2. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.


௨. உயர்குடியில் பிறந்தவர், ஒழுக்கமும், வாய்மையும், நாணமும், ஆகியஇம் மூன்றிலிருந்தும், வழுவாமல், இயல்பாகவே, நன்னெறியில் வாழ்வர்.


3. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.


௩. உண்மையான உயர் குடியில் பிறந்தவர்க்கு, முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை, ஆகிய நான்கும், நல்ல பண்புகள் என்பர்.


4. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.


௪. பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும், உயர் குடியில் பிறந்தவர், தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச், செய்வதில்லை.


5. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று.


௫. தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வண்மை, வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர், தம் பண்பிலிருந்து, நீங்குவதில்லை.


6. சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற

குலம்பற்றி வாழ்தும்என் பார்.


௬. 'மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம்' என்று கருதி வாழ்வோர், வஞ்சனை கொண்டு, தகுதியில்லாத வற்றைச், செய்ய மாட்டார்.


7. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.


௭. உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில், திங்களிடம் காணப்படும் களங்கம் போல், பலரறிய, உயர்ந்து தோன்றும்.


8. நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.


௮. ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில், அன்பற்ற தன்மை காணப் பட்டால், அவனை, அவனுடைய குடிப் பிறப்புப் பற்றி, ஐயப்பட நேரும்.


9.நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.


௯. 'இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது' என்பதை, முளை காட்டும்; அது போல், குடியில் பிறந்தவரின் வாய்ச் சொல், அவருடைய குடிப் பிறப்பைக் காட்டும்.


10. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு.


௧0. ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால், நாணம் உடையவனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால், எல்லோரிடத்திலும், பணிவு வேண்டும்.

காமத்துப்பால்[தொகு]

களவியல்[தொகு]

கற்பியல்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]