திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அபக்கூக்கு/அதிகாரங்கள் 2 முதல் 3 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
"தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும்." - அபக்கூக்கு 2:14.

அபக்கூக்கு (The Book of Habakkuk)[தொகு]

அதிகாரங்கள் 2 முதல் 3 வரை


அதிகாரம் 2[தொகு]

அபக்கூக்குக்கு ஆண்டவரின் பதிலுரை[தொகு]


1 நான் காவல் மாடத்தில் நிற்பேன்;
கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்;
என் வாயிலாக ஆண்டவர் என்ன கூறப்போகின்றார் என்றும்
என் முறையீட்டுக்கு என்ன விடையளிப்பார் என்றும்
கண்டறிவதற்காகக் காத்திருப்பேன்.


2 ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே:
"காட்சியை எழுதிவை;
விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம்
பலகைகளில் தெளிவாய் எழுது.


3 குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக்
காட்சி இன்னும் காத்திருக்கின்றது;
முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது.
ஒருக்காலும் பொய்க்காது.
அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால்,
எதிர்பார்த்துக் காத்திரு;
அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. [1]


4 இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்;
நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர். [2]

நேர்மையற்றோருக்கு வரும் அழிவு[தொகு]


5 மேலும் செல்வம் [3] ஏமாற்றிவிடும்;
ஆணவக்காரர் நிலைத்து நிற்கமாட்டார்;
அவர்களது பேராசை பாதாளத்தைப் போல் பரந்து விரிந்தது;
சாவைப்போல் அவர்களும் போதும் என்று நிறைவு அடைவதில்லை;
வேற்றினத்தார் யாவரையும் அவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்கின்றனர்;
மக்களினங்கள் அனைத்தையும் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்கின்றனர்.


6 ஆனால் தோல்வியுற்ற அனைவரும் அவர்கள் மேல் பழிமொழிகளையும்,
ஏளனப் பாடல்களையும் இப்படிப் புனைவார்கள்:
'தமக்குரியது அல்லாததைக் தமக்கெனக்
குவித்துக் கொள்கின்றவருக்கு ஐயோ கேடு!
இன்னும் எத்துணைக் காலத்திற்கு இப்படிச் செய்வர்?
அவர்கள் தங்கள் மேல் அடைமானங்களையே
சுமத்திக் கொள்கின்றார்கள்!'


7 உனக்குக் கடன் கொடுத்தவர்கள்
திடீரென எதிர்த்தெழ மாட்டார்களோ?
உன்னைத் திகிலடையச் செய்கின்றவர்கள்
விழித்தெழு மாட்டார்களோ?
அப்பொழுது நீ அவர்களுக்குக் கொள்ளைப் பொருள் ஆவாய்.


8 நீ பல நாட்டினரைச் சூறையாடினாய்;
மனித இரத்தத்தைச் சிந்தினாய்;
நாட்டுக்கும், நகர்களுக்கும் அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும்
கொடுமைகள் செய்தாய்;
இவற்றிற்காக, மக்களினங்களுள்
எஞ்சியோர் யாவரும் உன்னைச் சூறையாடுவர்.


9 தீமையின் பளுவிலிருந்து தப்ப,
தான் வாழுமிடத்தை மிக உயரத்தில் அமைக்க,
தன் குடும்பத்திற்காக நேர்மையற்ற வழியில்
பொருள் சேர்க்கிறவனுக்கு ஐயோ கேடு!


10 உன் திட்டங்களால் உன் குடும்பத்திற்கு மானக்கேட்டை நீ வருவித்தாய்;
மக்களினங்கள் பலவற்றை அழித்தமையால்,
உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.


11 சுவரிலிருக்கும் கற்களும் உனக்கு எதிராகக் கூக்குரலிடும்;
கட்டடத்தின் உத்திரம் அதை எதிரொலிக்கும்


12 இரத்தப்பழியால் நகரைக் கட்டி எழுப்பி,
அநீதியால் பட்டணத்தை நிலை நாட்டுகிறவனுக்கு ஐயோ கேடு!


13 மக்களினங்களின் உழைப்பு நெருப்புக்கு இரையாவதும்,
வேற்றினத்தாரின் களைப்பு வீணாகப் போவதும்
படைகளின் ஆண்டவரது திருச்செயல் அன்றோ?


14 தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல
ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும். [4]


15 அடுத்திருப்பவர் மீது கொண்ட சினத்தினால்
அவர்களைக் குடிவெறியர்களாக்கி
அவர்களது திறந்த மேனியின் அலங்கோலத்தைக் காணும்வரை
குடிக்கச் செய்பவனுக்கு ஐயோ கேடு!


16 நீ மேன்மை அடையாது ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்;
நீயும் குடி, குடித்துவிட்டுத் தள்ளாடு;
ஆண்டவரின் வலக்கையிலுள்ள தண்டனைக்கலம்
உன்னிடம் திரும்பி வரும்;
அப்போது உன் மேன்மை மானக்கேடாய் மற்றும்.


17 லெபனோனுக்கு நீ செய்த கொடுமை உன் மீது வந்து விழும்;
நீ வெட்டி வீழ்த்திய விலங்குகளே உன்னை நடுக்கமுறச் செய்யும்;
ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தினாய்;
நாட்டுக்கும் நகர்க்கும் அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும்
கொடுமைகளை செய்தாய்.


18 சிற்பி செதுக்கிய சிலையாலும்,
வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன?
அவை பொய்களின் பிறப்பிடமே!
ஆயினும் சிற்பி தான் செதுக்கிய ஊமைச் சிலைகளாகிய
கைவேலைகளிலே நம்பிக்கை வைக்கிறான்.


19 மரக்கட்டையிடம், 'விழித்தெழும்' என்றும்
ஊமைக் கல்லிடம் 'எழுந்திடும்' என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ கேடு!
அவை ஏதேனும் வெளிப்பாடு அருள முடியுமோ?
பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே!


20 ஆனால் ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்;
அவர் திருமுன் மண்ணுலகெங்கும் மௌனம் காப்பதாக.


குறிப்புகள்

[1] 2:3 = எபி 10:37.
[2] 2:4 = உரோ 1:17; கலா 3:11; எபி 10:38.
[3] 2:5 - "திராட்சை மது" என்பது எபிரேய பாடம்.
[4] 2:14 = எசா 11:9.

அதிகாரம் 3[தொகு]

அபக்கூக்கின் மன்றாட்டு[தொகு]


1 இறைவாக்கினர் அபக்கூக்கு 'சிகாயோன்' பண்களில் பாடிய மன்றாட்டு :


2 ஆண்டவரே, உம்மைப்பற்றிக் கேள்வியுற்றேன்;
ஆண்டவரே, உம் செயலைக் கண்டு அச்சமடைகிறேன்;
எங்கள் வாழ்நாள் காலத்திலேயே அதை மீண்டும் செய்யும்;
காலப்போக்கில் அதை அனைவரும் அறியும்படி செய்யும்;
சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்.


3 தேமானிலிருந்து இறைவன் வருகிறார்;
பாரான் மலையிலிருந்து புனிதர் வருகிறார். (சேலா)
அவரது மாட்சி விண்ணுலகை மூடியிருக்கின்றது;
அவரது புகழால் மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது;


4 அவரது பேரொளி கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது;
அவர் கையினின்று ஒளிக்கதிர்கள் புறப்படுகின்றன;
அங்கேதான் அவரது வல்லமை மறைந்திருக்கின்றது.


5 அவருக்கு முன்பாகப் பெருவாரி நோய் செல்கின்றது;
அவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து கொள்ளைநோய் புறப்படுகின்றது.


6 அவர் நின்றால், நிலம் அதிர்கின்றது,
அவர் நோக்கினால் வேற்றினத்தார் நடுங்குகின்றனர்;
தொன்றுதொட்டு இருக்கும் மலைகள் பிளவுண்டு போகின்றன.
பண்டைக் காலக் குன்றுகள் அமிழ்ந்து விடுகின்றன.
அவர்தம் வழிகளோ என்றும் உள்ளவை.


7 கூசாவின் கூடாரங்களில் வேதனை நிறைந்திருப்பதை நான் கண்டேன்;
மிதியான் நாட்டுக் கூடாரத்திரைகள் நடுநடுங்கின.


8 ஆண்டவரே, நீர் உம்முடைய குதிரைகள் மேலும்,
வெற்றித் தேர்மேலும் ஏறிவரும்போது,
நீரோடைகள்மீதா உம் கோபத்தீ மூண்டது?
ஆறுகள் மீதா உம் சினம் பெருகியது?
கடல்மீதா உம் சீற்றம் மிகுந்தது?


9 நீர் உம் வில்லைக் கையிலெடுத்து நாணேற்றுகின்றீர்;
அம்பறாத் தூணியை அம்புகளால் நிரப்புகின்றீர்; (சேலா)
நிலத்தை ஆறுகளால் பிளக்கின்றீர்.


10 மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின்றன;
பெரும் வெள்ளங்களை பீறிட்டுப் பாய்கின்றன;
ஆழ்கடல் தன் இரைச்சலை எழுப்புகின்றது;
அது தன் கைகளை மேலே உயர்த்துகின்றது.


11 கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன;
பாய்ந்தோடும் உம் அம்புகளின் ஒளியின் முன்னும்,
பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும்
தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.


12 சினத்தோடு மண்ணுலகில் நடந்து போகின்றீர்;
சீற்றம்கொண்டு வேற்றினத்தாரை நசுக்குகின்றீர்.


13 உம் மக்களை மீட்கவும்,
நீர் திருப்பொழிவு செய்தவரை விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர்.
பொல்லாதவனின் குடும்பத் தலைவனை வெட்டி வீழ்த்துகின்றீர்.
அவனைப் பின்பற்றுவோரை முற்றிலும் அழித்து விடுகின்றீர். (சேலா)


14 அவன் படைத்தலைவனின் தலையை
அவன் ஈட்டிகளைக் கொண்டே பிளக்கின்றீர்;
அவனோ, ஒடுக்கப்பட்டவனை மறைவாக விழுங்கி
மகிழ்வது போல மகிழ்ந்து,
சூறாவளிக் காற்றென என்னைச்
சிதறடிக்கப் பாய்ந்தது வருகின்றான்.


15 ஆனால், நீர் உம்முடைய குதிரைகளால் ஆழ்கடலை மிதித்து,
பெருவெள்ளக் குவியலைச் சிதறடிக்கின்றீர்.


16 இதை நான் கேட்கும்போது என் உடல் நடுநடுங்குகின்றது;
அப்பேரொலியைக் கேட்பதனால் என் உதடுகள் துடிதுடிக்கின்றன;
என் எலும்புகள் உளுத்துப் போகின்றன;
என் காலடிகள் நிற்கும் இடத்திலேயே தடுமாறுகின்றன;
எங்களைத் தாக்கும் மக்கள்மீது இடுக்கண் வரும் நாள்வரை
அமைதியாய்க் காத்திருப்பேன்.


17 அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,
திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும்
ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும்,
வயல்களில் தானியம் விளையாவிடினும்,
கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,
தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,


18 நான் ஆண்டவரில் களிகூர்வேன்;
என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.


19 ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை;
அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போலாக்குவார்;
உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார். [*]

(பாடகர் தலைவர்க்கு;
இசைக் கருவி: நெகினோத்து)


குறிப்பு

[*] 3:19 = 2 சாமு 22:34; திபா 18:33.


(அபக்கூக்கு நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): செப்பனியா:அதிகாரங்கள் 1 முதல் 3 வரை