திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஆமோஸ்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
"வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான். விரைந்தோடுபவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டான், குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது." - ஆமோஸ் 2:15

ஆமோஸ் (The Book of Amos) [1][தொகு]

முன்னுரை

விவிலியத்தில் இடம்பெறும் இறைவாக்குகளுள், ஆமோஸ் உரைத்த தூதுரையே முதலில் எழுத்து வடிவம் பெற்றதாகும். ஆமோஸ் தென்னாடான யூதாவில் பிறந்தவராயினும் வடநாடான இஸ்ரயேலுக்குச் சென்று கி.மு. 8-ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இறைவாக்கு உரைத்தார். அந்நாளில் அந்நாடு சீரும் சிறப்புமாய் இருந்தது. ஆனால் வளமும் வாழ்வும் செல்வருக்குக் வலியோருக்கும் மட்டுமே; ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டுத் தாழ்வுற்றுக் கிடந்தனர்.

வலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் அநீதியும் பொய்ம்மையும் நிறைந்த சமுதாயத்தைக் கண்டு சீறுகிறார் ஆமோஸ். இனம் இனத்தையும் மனிதர் மனிதரையும் கசக்கிப் பிழியும் கொடுமையைக் கடுமையாய்க் கண்டிக்கிறார். நீதியையும் நேர்மையையும் வளர்த்துக் கொண்டாலன்றி, எந்த இனமும் கடவுளின் கடும் தண்டனைக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.

ஆமோஸ்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. வேற்றினத்தார்மீது இறைவனின் தீர்ப்பு 1:1 - 2:5 1340 - 1342
2. இஸ்ரயேல் மீது இறைவனின் தீர்ப்பு 2:6 - 6:14 1342 - 1348
3. ஐந்து காட்சிகள் 7:1 - 9:15 1348 - 1351

ஆமோஸ் (The Book of Amos)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]


1 தெக்கோவாவில் கால்நடைச் செல்வம்
மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ்.
யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும்
ஆண்டுவந்த காலத்தில்,
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்,
இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு: [1]


2 "சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்;
எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்;
இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் தீய்ந்து போகின்றன;
கர்மேல் மலையின் உச்சியும் காய்ந்து போகின்றது". [2]

வேற்றினத்தார்மீது ஆண்டவரின் தீர்ப்பு[தொகு]

தமஸ்கு நகர்


3 ஆண்டவர் கூறுவது இதுவே:
தமஸ்கு நகரினர் எண்ணற்ற [3] குற்றங்கள் செய்ததற்காக,
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்.
ஏனெனில், அவர்கள் கிலயாதை இரும்புக் கருவிகளைக் கொண்டு போராடித்தார்கள்.


4 ஆதலால் அசாயேல் வீட்டின்மேல் தீ மூளச் செய்வேன்.
அது பெனதாது கோட்டைகளை விழுங்கிவிடும்.


5 தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன்.
பிக்காத்தாவேனில் [4] குடியிருப்பவர்களையும்
பெத்ஏதேனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்.
ஆராமின் மக்கள் கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்" என்கிறார் ஆண்டவர். [5]


பெலிஸ்தியா நாடு


6 ஆண்டவர் கூறுவது இதுவே:
"காசா நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்.
அவர்கள் ஒரு முழு இனத்தையே
ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்;


7 ஆதலால் காசாவின் கோட்டை மதில்கள்மேல்
நெருப்பைக் கொட்டுவேன்.
அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.


8 அஸ்தோதில் குடியிருப்பவர்களையும்
அஸ்கலோனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்;
எக்ரோனுக்கு எதிராக என் கையை ஓங்குவேன்;
பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும் அழிந்திடுவர்"
என்கிறார் ஆண்டவராகிய என் தலைவர். [6]


தீர் நகர்


9 ஆண்டவர் கூறுவது இதுவே:
"தீர் நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்;
ஏனெனில், அவர்கள் ஒரு முழு இனத்தையே
ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்;
சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை.


10 ஆதலால் தீரின் கோட்டை மதில்கள் மேல்
நெருப்பைக் கொட்டுவேன்;
அது அச்சுவர்களை விழுங்கிவிடும்." [7]


ஏதோம் நாடு


11 ஆண்டவர் கூறுவது இதுவே:
"ஏதோம் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்;
ஏனெனில், அவன் உறவுமுறையின் கடமைகளை மீறி
வாளேந்தித் தன் சகோதரனையே துரத்தினான்;
தன் ஆத்திரத்தை அடக்கி வைக்காமல் என்றென்றும் கோபத்தைக் காட்டி வந்தான்;


12 ஆதலால் தேமான்மேல் நெருப்பைக் கொட்டுவேன்;
அது பொட்சராவின் கோட்டைகளை விழுங்கிவிடும். [8]


அம்மோனியர் நாடு


13 ஆண்டவர் கூறுவது இதுவே:
"அம்மோன் மக்கள் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்;
ஏனெனில், அவர்கள் தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காகக்
கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழித்தார்கள்.


14 ஆதலால், இராபாவின் கோட்டை மதில்கள்மேல்
நெருப்பைக் கொட்டுவேன்.
அது அச்சுவர்களை விழுங்கி விடும்;
அப்பொழுது, போர்க்காலத்தின் பேரிரைச்சலும்,
சூறாவளி நாளின் கடும் புயலும் இருக்கும்.


15 அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான்.
அவனோடு அதிகாரிகளும் கொண்டு போகப்படுவார்கள்"
என்கிறார் ஆண்டவர். [9]


குறிப்புகள்

[1] 1:1 = 2 அர 15:1-7; 2 குறி 26:1-23; 2 அர 14:23-29.
[2] 1:2 = யோவே 3:16.
[3] 1:3 - "மூன்றும் நான்குமாகிய" என்பது பொருள்.
[4] 1:5 - எபிரேயத்தில் சிற்றின்ப இல்லம், என்பது பொருள்.
[5] 1:3-5 = எசா 17:1-3; எரே 49:23-27; செக் 9:1.
[6] 1:6-8 = எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17;
யோவே 3:4-8; செப் 2:4-7; செக் 9:5-7.
[7] 1:9-10 = எசா 23:1-18; எசே 26:1-28:19;
யோவே 3:4-8; செக் 9:1-4;
மத் 11:21-22; லூக் 10:13-14.
[8] 1:11-12 = எசா 34:5-17; 63:1-6; எரே 49:7-22;
எசே 25:12-14; 35:1-15; ஒப 1-14; மலா 1:2-5.
[9] 1:13-15 = எரே 49:1-6; எசே 21:28-32; 25:1-7; செப் 2:8-11.

அதிகாரம் 2[தொகு]

மோவாபு நாடு


1 ஆண்டவர் கூறுவது இதுவே:
"மோவாபு எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்;
ஏனெனில், அவன் ஏதோம் அரசனின் எலும்புகளைச் சுட்டுச் சாம்பலாக்கினான்.


2 ஆதலால், மோவாபின்மேல் நெருப்பைக் கொட்டுவேன்.
அது கெரியோத்தின் கோட்டைகளை விழுங்கிவிடும்;
இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம் ஆகியவை
ஒருசேர எழும் வேளையில் மோவாபு மடிந்திடுவான்.


3 அந்நாட்டின் ஆட்சியாளனை
அவர்களிடையேயிருந்து அகற்றிவிடுவேன்;
அவனோடு அதிகாரிகள் அனைவரையும் அழித்து விடுவேன்"
என்கிறார் ஆண்டவர். [1]


யூதா நாடு[தொகு]


4 ஆண்டவர் கூறுவது இதுவே:
"யூதா எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவேமாட்டேன்;
ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்தை புறக்கணித்தார்கள்;
அவருடைய நியமங்களை கடைப்பிடிக்கவில்லை;
அவர்களுடைய தந்தையர் பின்பற்றிய பொய்த் தெய்வங்கள்
அவர்களையும் வஞ்சித்துவிட்டன.


5 ஆதலால் யூதாவின்மேல் நெருப்பைக் கொட்டுவேன்;
அது எருசலேமின் கோட்டைகளை விழுங்கிவிடும்."


இஸ்ரயேல் நாட்டின்மீது தீர்ப்பு[தொகு]


6 ஆண்டவர் கூறுவது இதுவே:
"இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்;
ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும்
வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள்.


7 ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்;
ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்;
மகனும் தந்தையும் ஒரே பெண்ணைக் கூடி,
என் திருப்பெயரைக் களங்கப்படுத்துகின்றார்கள்.


8 கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு,
எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு
அபராதம் விதித்துக் கிடைத்த மதுவினைத்
தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள்.


9 நானோ கேதுரு மரத்தின் உயரமும்
கருவாலி மரத்தின் வலிமையும் கொண்ட எமோரியரை
அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்;
மேலே அவர்களுடைய கனிகளையும்,
கீழே அவர்களுடைய வேர்களையும் அழித்துவிட்டேன்; [2]


10 மேலும், எகிப்து நாட்டிலிருந்து உங்களை அழைத்து வந்து,
நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி,
எமோரியர் நாட்டை நீங்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்தேன்.


11 உங்கள் புதல்வர்களுள் சிலரை இறைவாக்கினராய் உயர்த்தினேன்;
உங்கள் இளைஞர்களுள் சிலரை நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்;
இஸ்ரயேல் மக்களே, இது உண்மையன்றோ?" என்கிறார் ஆண்டவர். [3]


12 ஆனால், நீங்கள் நாசீர்களை மது அருந்தச் செய்தீர்கள்;
இறைவாக்கினருக்கு 'இறைவாக்கு உரைக்கக்கூடாது' என்று கட்டளையிட்டீர்கள்.


13 வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல,
உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன்.


14 விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது;
வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான்;
வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது.


15 வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான்.
விரைந்தோடுபவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டான்,
குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது.


16 அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் கொண்டவன்கூடப்
படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 2:1-3 = எசா 15:1-16:14; 25:10-12;
எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8-11.
[2] 2:9 = இச 3:8-11.
[3] 2:11 = 6:1-8.


(தொடர்ச்சி): ஆமோஸ்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை