திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 33 முதல் 34 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஏதோம்...ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும்." - எசாயா 34:13.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 33 முதல் 34 வரை

அதிகாரம் 33[தொகு]

துணை வேண்டும் மன்றாட்டு[தொகு]


1 அழித்தொழிப்பவனே, உனக்கு ஐயோ கேடு!
நீ இன்னும் அழித்தொழிக்கப்படவில்லையே!
நம்பிக்கைத் துரோகியே,
உனக்கு எவரும் துரோகம் செய்யவில்லையா!
நீ அழித்தொழிப்பதை முடித்ததும்,
நீயும் அழிந்தொழிவாய்;
நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன்,
உனக்கும் துரோகம் செய்வார்கள்.


2 ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும்;
நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்;
அதிகாலைதோறும் எங்களைக் காக்கும் கரமாகவும்,
துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும் இருப்பீராக!


3 ஆரவராப் பேரொலி கேட்க
மக்களினங்கள் பின்வாங்கி ஓடுகின்றன;
நீர் கிளர்ந்தெழும்போது
வேற்றினத்தார் சிதறுண்டு போகின்றனர்.


4 பச்சைப் புழுக்கள் சேர்ப்பதுபோல்
கொள்ளைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
வெட்டுக்கிளிகள் பாய்வதுபோல்
அவற்றின்மேல் மனிதர் பாய்கின்றனர்.


5 ஆண்டவர் மாட்சிக்கு உரியவர்;
ஏனெனில் அவர் உன்னதத்தில் உறைகின்றார்;
சீயோனை அவர் நீதியாலும் நேர்மையாலும் நிரப்புகின்றார்;


6 உங்கள் காலத்தில் அவரே பாதுகாப்பாய் இருப்பார்;
அவர் உங்களுக்கு முழு விடுதலை வழங்கி
ஞானத்தையும் அறிவாற்றலையும் நல்குவார்.
ஆண்டவரைப் பற்றிய அச்சமே அவர்களது அரும்செல்வம்.


7 இதோ! வலிமைமிக்க அவர்களுடைய வீரர்கள்
வீதியில் நின்று கதறியழுகின்றனர்;
சமாதானத்தின் தூதர் மனங்கசந்து அழுகின்றனர்.


8 நெடுஞ்சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லை;
வழிப்பயணிகள் கடந்து செல்வதும் இல்லை;
உடன்படிக்கை முறிக்கப்படுகின்றது;
ஒப்பந்தம் மீறப்படுகின்றது;
மனிதருக்கு மரியாதையே கிடையாது.


9 நாடு புலம்பியழுது சோர்ந்து போகின்றது;
லெபனோன் வெட்கி நாணித் தளர்ச்சியடைகின்றது;
சாரோன் பாலைநிலம்போல் ஆகின்றது;
பாசானும் கர்மேலும் இலையுதிர்க்கின்றன.

பகைவருக்கு ஆண்டவரின் எச்சரிக்கை[தொகு]


10 ஆண்டவர் கூறுகின்றார்:
இப்பொழுது நான் எழுந்தருள்வேன்;
இப்பொழுது என்னை உயர்த்திக் கொள்வேன்;
இப்பொழுது என்னை மாட்சிமைப் படுத்துவேன்.


11 நீங்கள் பதரைக் கருத்தாங்கி,
வைக்கோலைப் பெற்றெடுத்தீர்கள்;
உங்கள் உயிர்மூச்சு நெருப்பாகி உங்களையே எரித்துவிடும்.


12 சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல்
மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்;
முட்கள்போல் வெட்டுண்டு நெருப்புக்கு இரையாவார்கள்.


13 தொலையில் உள்ளோரே, நான் செய்வதைக் கேளுங்கள்;
அருகில் உள்ளோரே, என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்.


14 சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்;
இறைப்பற்றில்லாரைத் திகில் ஆட்கொள்கின்றது.
சுட்டெரிக்கும் நெருப்பில் நம்மில் எவர் தங்குவார்?
என்றென்றும் பற்றியெரியும் தழலில் நம்மில் எவர் இருப்பார்?


15 நீதிநெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர்,
கொடுமைசெய்து பெற்ற வருவாயை வெறுப்பவர்,
கையூட்டு வாங்கக் கை நீட்டாதவர்,
இரத்தப் பழிச் செய்திகளைச் செவி கொடுத்துக் கேளாதவர்,
தீயவற்றைக் கண்கொண்டு காணாதவர்;


16 அவர்களே உன்னதங்களில் வாழ்வர்;
கற்பாறைக் கோட்டைகள் அவர்களது காவல்அரண் ஆகும்;
அவர்களுக்கு உணவு வழங்கப்படும்;
தண்ணீர் தரப்படுவதும் உறுதி.

மேன்மைமிகு வருங்காலம்[தொகு]


17 அரசரை உங்கள் கண்கள் அழகுமிக்கவராகக் காணும்;
பரந்து விரிந்த நாட்டை நீங்கள் காண்பீர்கள்;


18 திகிலைப்பற்றி உங்கள் மனம் இவ்வாறு சிந்திக்கும்:
'குடிக்கணக்குச் செய்தவன் எங்கே?
திறைப்பொருளை நிறுத்துப் பார்த்தவன் எங்கே?
கோபுரங்களை எண்ணிக்கை இட்டவன் எங்கே?'


19 உங்களுக்கு விளங்காத குளறுபடியான பேச்சையும்
புரியாத வேற்றுமொழியையும் கொண்ட
காட்டுமிராண்டி மக்களை நீங்கள் மீண்டும் காணமாட்டீர்கள்.


20 நம் விழாக்களின் நகரான சீயோனைப் பார்;
அமைதியின் இல்லமாகவும்,
பெயர்க்கப்படாத முளைகளும்
அறுபடாத கயிறுகளும் கொண்ட
அசைக்க முடியாத கூடாரமாகவும்,
எருசலேம் இருப்பதை உங்கள் கண்கள் காணும்.


21 ஏனெனில், அங்கே ஆண்டவர்
நமக்கெனத் தம் மாட்சியை விளங்கச் செய்வார்;
அது அகன்ற ஆறுகளையும்
விரிந்த நீரோடைகளையும் உடைய இடம் போன்றது;
துடுப்புப் படகு அங்குப் போவதில்லை;
மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை.


22 ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்;
ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்;
ஆண்டவரே நமக்கு வேந்தர்;
அவரே நமக்கு மீட்பு அளிப்பவர்.


23 உங்கள் வடக்கயிறுகள் தளர்ந்து தொங்கும்;
அவற்றால் பாய் மரத்தை நிலையாய்ப் பிடிக்க இயலாது;
பாய் விரிக்கவும் முடியாது;
அப்பொழுது திரளான கொள்ளைப் பொருள் பங்கிடப்படும்;
முடவரும் கொள்ளைப் பொருளைச் சூறையாடுவர்.


24 சீயோனில் வாழ்பவர் எவரும்
'நான் நோயாளி' என்று சொல்லமாட்டார்.
அதில் குடியிருக்கும் மக்களின் தீச்செயல் மன்னிக்கப்படும்.

அதிகாரம் 34[தொகு]

பகைவருக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]


1 வேற்றினத்தாரே,
நெருங்கி வந்து செவிகொடுங்கள்;
மக்களினங்களே, கவனித்துக் கேளுங்கள்;
மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும் கேட்கட்டும்;
வையகமும் அதில் தோன்றுவன யாவும் செவிகொடுக்கட்டும்.


2 வேற்றினத்தார் அனைவர் மேலும்
ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்;
அவர்களின் படைத்திரள் முழுவதற்கும் எதிராக
வெஞ்சினம் கொண்டுள்ளார்;
அவர்களை அவர் அடியோடு அழிப்பார்;
அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்குவார்.


3 அவர்களில் வாளுக்கு இரையானோர் தூக்கியெறிப்படுவர்;
அவர்களின் பிணங்கள் துர்நாற்றமடிக்கும்;
அவர்களின் இரத்தம் மலைகளில் வழிந்தோடும்.


4 விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும் உருகிப்போகும்;
வானின் வெளி ஏட்டுச் சுருளெனச் சுருட்டப்படும்;
திராட்சை இலை உதிர்வதுபோலும்
அத்தி இலை வீழ்வதுபோலும்,
வான் படைகள் அனைத்தும் உதிர்ந்து விடும். [1]


5 ஆண்டவரது வாள் வானில் வெறியேறக் குடித்துள்ளது;
இதோ, ஏதோமின் மேலும்
அழிவுக்கென ஒதுக்கப்பட்ட மக்களினத்தின் மேலும்
தண்டனைத் தீர்ப்புக்காக அது இறங்கப்போகிறது.


6 அவரது வாளில் செம்மறிக்குட்டி,
வெள்ளாடு ஆகியவற்றின் இரத்தக் கறை படிந்துள்ளது;
அதில் கிடாய்களின் சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது;
ஏனெனில், பொட்சராவில் ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்;
ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும்.


7 அவர்களின் காட்டெருதுகள் செத்துவிழும்;
எருதுகளுடன் காளைகளும் மடியும்;
அவர்களின் நாடு இரத்தத்தை வெறியேறக் குடிக்கும்;
தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.


8 ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது;
சீயோன் வழக்கில் நல்தீர்ப்பீன் ஆண்டு அது.


9 ஏதோமின் நீரோடைகள் கீலாகும்;
அதன் தரைப்புழுதி கந்தகமாகும்;
அதன் நிலம் கொழுந்து விட்டெரியும் கீலாகும்.


10 இரவும் பகலும் அது அணையாமல் எரியும்;
அதன் புகை என்றென்றும் எழும்பிக் கொண்டிருக்கும்;
தலைமுறை தோறும் நாடு பாழடைந்து கிடக்கும்;
எவருமே அதன் வழியாய் ஒருபோதும் பயணம் செய்யார். [2]


11 கூகையும் சாக்குருவியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்;
ஆந்தையும் கருங்காகமும் அங்கே தங்கியிருக்கும்;
ஆண்டவர் நூல்பிடித்து அதை உருக்குலையச் செய்வார்;
அவர் தூக்குநூல் பிடித்து அதைப் பாழடையச் செய்வார்.


12 உயர்குடி மக்கள் அங்கே இல்லை;
அரசன் என அழைக்க அங்கே யாரும் இல்லை;
அதன் தலைவர் அனைவரும் ஒன்றுமில்லாது ஒழிவர்.


13 அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும்
அதன் அரண்கள்மேல் காஞ்சொறிப் பூண்டுகளும்
நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்;
அது குள்ள நரிகளின் குடியிருப்பாக மாறும்;
ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும்.


14 காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்;
காட்டாடுகள் ஒன்றையொன்று கத்தி அழைக்கும்;
கூளி அங்கே தங்கித் தான் இளைப்பாறுவதற்கென
இடத்தைக் கண்டுபிடிக்கும்.


15 ஆந்தை அங்கே கூடுகட்டி முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து,
தன் நிழலில் அவற்றைச் சேர்த்து வளர்க்கும்;
பருந்துகளும் சோடி சோடியாய்ச் சேர்ந்துவரும்.


16 ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்;
'எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை,
துணையின்றி எதுவும் இருப்பதில்லை' ஏனெனில்,
ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது.
அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.


17 அவரே அவர்களுக்கென்று சீட்டுப் போட்டார்;
அவர்தம் கை, நூல் பிடித்து
நாட்டை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது;
அவர்கள் அதை என்றுமுள உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;
தலைமுறைதோறும் அதில் தங்கி வாழ்வர். [3]


குறிப்புகள்

[1] 34:4 = மத் 24:29; மாற் 13:25; லூக் 21:26; திவெ 6:13-14.
[2] 34:10 = திவெ 14:11; 19:3.
[3] 34:5-17 = எசா 63:1-6; எரே 49:7-22;
எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12;
ஒப 1-14; மலா 1:2-5.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 35 முதல் 36 வரை