திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஒசேயா/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
"ஆண்டவராம் என் பின்னே அவர்கள் போவார்கள்; நானும் சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்வேன்; ஆம், நான் கர்ச்சனை செய்வேன். அவர்களின் புதல்வர் மேற்கிலிருந்து நடுங்கிக்கொண்டு வருவர்." - ஒசேயா 11:10


ஒசேயா (The Book of Hosea)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

தம் மக்கள்மேல் கடவுளின் பேரன்பு[தொகு]


1 இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்;
எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். [1]


2 எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ,
அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள்;
பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.


3 ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே;
அவர்களைக் கையிலேந்தியதும் நானே;
ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே
என்பதை அவர்கள் உணராமற் போனார்கள்.


4 பரிவு [2] என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து,
அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்;
அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்;
அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.


5 எகிப்து நாட்டுக்கே அவர்கள் திரும்பிப் போவார்கள்;
அசீரியா அவர்களை அரசாளும்;
ஏனெனில் என்னிடம் திரும்பி வர மறுத்துவிட்டார்கள்.


6 அவர்களுடைய தீய எண்ணங்களை முன்னிட்டு
அவர்களின் நகர்களுக்கு எதிராக வாள் பாய்ந்தெழுந்து,
அவர்கள் கதவுகளின் தாழ்ப்பாள்களை நொறுக்கிவிட்டு,
அவர்களை விழுங்கிவிடும்.


7 என் மக்கள் என்னை விட்டு விலகிப் போவதிலேயே
கருத்தாய் இருக்கிறார்கள்,
அவர்கள்மேல் நுகத்தடி பூட்டப்படுவதால் கூக்குரலிடுவார்கள்;
அந்த நுகத்தை அகற்றுவார் எவருமில்லை.


8 எப்ராயிமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்?
இஸ்ரயேலே! உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்?
உன்னை எப்படி அதிமாவைப் போலாக்குவேன்?
செபோயிமுக்குச் செய்ததுபோல் உனக்கும் செய்வேனோ?
என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது,
என் இரக்கம் பொங்கி வழிகின்றது. [3]


9 என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்;
எப்ராயிமை அழிக்கத் திரும்பிவரமாட்டேன்;
நான் இறைவன், வெறும் மனிதனல்ல;
நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர்,
ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

அடிமைத் தளையினின்று திரும்புதல்[தொகு]


10 ஆண்டவராம் என் பின்னே அவர்கள் போவார்கள்;
நானும் சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்வேன்;
ஆம், நான் கர்ச்சனை செய்வேன்.
அவர்களின் புதல்வர் மேற்கிலிருந்து நடுங்கிக்கொண்டு வருவர்.


11 எகிப்தினின்று பறவைகள்போலவும்,
அசீரியா நாட்டினின்று புறாக்களைப் போலவும் நடுங்கிக் கொண்டு வருவர்;
அவர்களைத் தம் வீடுகளுக்கே திரும்பச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.


12 எப்ராயிம் மக்களின் பொய்க்கூற்று என்னைச் சூழ்ந்துள்ளது;
இஸ்ரயேல் குடும்பத்தாரின் வஞ்சகம் என்னை வளைத்துக் கொண்டுள்ளது.
ஆனால், யூதா இறைவனோடு இன்னும் நடக்கிறான்;
தூயவராம் ஆண்டவருக்கு உண்மை உள்ளவனாய் இருக்கிறான்.


குறிப்புகள்

[1] 11:1 = விப 4:22; மத் 2:15.
[2] 11:4 - "மனிதன்" என்பது எபிரேய பாடம்.
[3] 11:8 = இச 29:23.

அதிகாரம் 12[தொகு]

இஸ்ரயேலரின் கடந்த கால அனுபவமும் ஆண்டவரின் கண்டிப்பும்[தொகு]


1 எப்ராயிம் காற்றை உண்டு,
நாள் முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்க ஓடுகிறான்;
பொய்யும் வன்செயலும் அவனிடம் பெருகி விட்டன;
அசீரியாவோடு உடன்படிக்கை செய்கின்றான்;
எகிப்துக்கு எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான்.


2 ஆண்டவருக்கு யூதாவோடு வழக்கு ஒன்று உண்டு;
யாக்கோபை அவன் தீய வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்;
அவன் செயல்களுக்குத் தக்கபடி கைம்மாறு தருவார்.


3 யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே தமையனை முந்திக் கொண்டான்;
பெரியவனாக வளர்ந்த பின்போ கடவுளோடு போராடினான். [1]


4 வான தூதரோடு போராடி வெற்றி கொண்டான்;
கண்ணீர் சிந்தி, அவர் அருளை வேண்டிக்கொண்டான்;
பெத்தேல் என்னுமிடத்தில் அவரை சந்தித்தான்;
அவரும் அங்கே அவனுடன் பேசினார். [2] [3]


5 அந்த ஆண்டவரே படைகளின் கடவுள்;
ஆண்டவர் என்பதே அவரது பெயராம்.


6 ஆதலால், இஸ்ரயேலே! உன் கடவுளிடம் திரும்பி வா;
இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி;
எப்போதும் உன் கடவுளை நம்பிக் காத்திரு.

பேராசையும் தண்டனையும்[தொகு]


7 ஆனால், இஸ்ரயேல் கள்ளத்தராசைக்
கையில் வைத்திருக்கும் கானானியன் போன்றவன்;
அவன் கொடுஞ்செயல் புரியவே விரும்புகின்றான்.


8 எப்ராயிம், 'நான் பணக்காரனாகிவிட்டேன்,
எனக்கென்று செல்வம் சேர்த்துக்கொண்டேன்' என்கிறான்.
ஆனால், அவனது செல்வம் எல்லாம் சேர்ந்தும்கூட
அவனது தீச்செயலின் பழியை அகற்றாது!


9 எகிப்து நாட்டினின்று உன்னை அழைத்து வந்த
நாள்முதல் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;
விழா நாள்களில்போல மறுபடியும் உன்னைக் கூடாரங்களில் வாழச் செய்வேன். [4]


10 இறைவாக்கினர்களிடம் பேசினேன்;
நானே காட்சிகளின் எண்ணிக்கையைப் பெருக்கினேன்;
இறைவாக்கினர் வாயிலாக உவமைகளில் பேசினேன்.


11 கிலயாதில் தீச்செயல் மலிந்திருப்பதால்
அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்;
கில்காலில் காளைகளைப் பலியிடுவதால்
உழவுசால் அருகே இருக்கும் கற்குவியல்போல்
அவர்களுடைய பலிபீடங்கள் ஆகிவிடும்.


12 யாக்கோபு ஆராம் நாட்டிற்குத் தப்பி ஓடினான்;
இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காக ஊழியம் செய்தான்;
அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். [5]


13 இறைவாக்கினர் ஒருவரைக் கொண்டு
ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்திலிருந்து கூட்டி வந்தார்.
இறைவாக்கினர் ஒருவரால் அவன் பாதுகாக்கப்பட்டான். [6]


14 எப்ராயிம் ஆண்டவருக்கு மிகவும் சினமூட்டினான்;
அவனுடைய தலைவர் அவனுடைய இரத்தப் பழியை
அவன் மேலேயே சுமத்துவார்;
அவனுடைய நிந்தையை ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.


குறிப்புகள்

[1] 12:3 = தொநூ 25:26.
[2] 12:3-4 = தொநூ 32:24-26.
[3] 12:4 = தொநூ 28:10-22.
[4] 12:9 = லேவி 23:42-43.
[5] 12:12 = தொநூ 29:1-20.
[6] 12:13 = விப 12:50-51.


(தொடர்ச்சி): ஒசேயா:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை