திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
"உண்பதையும் குடிப்பதையும் தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை. இந்த வாய்ப்பும் கடவுள் தந்ததே எனக் கண்டேன்" - சபை உரையாளர் 2:24.

சபை உரையாளர் (The Book of Ecclesiastes)[தொகு]

முன்னுரை

"சபை உரையாளர்" என்னும் இந்நூல் ஒரு ஞானியின் சிந்தனைகளைக் கொண்டது. அவர் மானிட வாழ்வு எவ்வளவு குறுகியது, முரண்பாடானது எனக் கண்டுணர்கிறார். மனித வாழ்க்கையில் காணப்படும் அநீதிகளும் அவநம்பிக்கைகளும் அவருக்குப் பெரும் புதிர்களாகத் தோன்றுகின்றன. எனவே, "வாழ்க்கையே வீண்" என்ற முடிவுக்கு வருகிறார். மனித வாழ்வின் போக்கை ஆண்டு நடத்தும் இறைவனின் வழிகளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் மக்கள் கடுமையாக உழைத்து இறைவன் அருளும் கொடைகளை வேண்டுமளவு துய்த்து மகிழுமாறு அறிவுரை கூறுகிறார்.

இந்நூலில் மனித வாழ்க்கையின் நிலையாமை, இயலாமை முதலியன விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் இந்நூல் விவிலியத்தில் இடம்பெற்றுள்ளமை மனிதர் தோல்வி மனப்பான்மையையும் மனத்தளர்வையும் இறைவனது துணையால் வெல்லலாம் என்பதையே காட்டுகின்றது. இந்நூல் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகப் பலரும் கருதலாம். ஆயினும், இக்கருத்துகளை எதிரொலிக்கும் இதே விவிலியம் கடவுள்மீது வைக்கும் நம்பிக்கைதான் மானிட வாழ்வுக்கு நிறைபொருளை அளிக்கும் என்று வற்புறுத்திக் கூறுவதையும் அவர்கள் உணரவேண்டும்.

சபை உரையாளர்[தொகு]

நூலின் பிரிவுகள்


பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. வாழ்க்கை பயனற்றது 1:1 - 1:11 979
2. சபையுரையாளரின் அனுபவம் 1:12 - 2:25 979 - 981
3. ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு 3:1-15 981 - 982
4. உலகில் காணப்படும் அநீதி 3:16 - 4:16 982 - 983
5. கடவுளுக்குக் கொடுக்கும் வாக்கைப்

பற்றிய எச்சரிக்கை

5:1-7 983
6. உலக வாழ்க்கை பயனற்றது 5:8 - 6:12 983 - 985
7. வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள் 7:1 - 8:8 985 - 987
8. நல்லாரும் பொல்லாரும் 8:9 - 9:12 987 - 988
9. ஞானத்தைப் பற்றிய சிந்தனைகள் 9:13-18 988
10. மதிகேட்டைப் பற்றிய சில குறிப்புகள் 10:1-20 988 - 989
11. ஞானமுள்ளவரின் செயல்கள் 11:1-8 989 - 990
12. இளையோருக்கு அறிவுரை 11:9 - 12:8 990
13. தொகுப்புரை 12:9-14 991

சபை உரையாளர்[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

வாழ்க்கை பயனற்றது[தொகு]


1 தாவீதின் மகனும் எருசலேமின் அரசருமாகிய
சபையுரையாளர் உரைத்தவை:


2 வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்;
வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்.


3 மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்;
ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன?


4 ஒரு தலைமுறை மறைகின்றது; மறு தலைமுறை தோன்றுகின்றது;
உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது.


5 ஞாயிறு தோன்றுகின்றது; ஞாயிறு மறைகின்றது.
பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது.


6 தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது;
பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது.
இப்படிச் சுழன்று சுழன்று வீசித்
தன் இடத்திற்குத் திரும்புகின்றது.


7 எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன;
எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை;
மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன.


8 அனைத்தும் சலிப்பையே தருகின்றன;
அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது.
எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை;
எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை.


9 முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்;
முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும்.
புதியது என்று உலகில் எதுவுமே இல்லை.


10 ஏதேனும் ஒன்றைப்பற்றி, 'இதோ, இது புதியது'
என்று சொல்லக் கூடுமா? இல்லை.
அது ஏற்கெனவே, நமது காலத்திற்கு முன்பே,
பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே!


11 முற்காலத்தவரைப் பற்றிய நினைவு
இப்போது யாருக்கும் இல்லை;
அவ்வாறே, வரும் காலத்தவருக்கும்
தமக்கு முந்திய காலத்தவரைப்பற்றிய நினைவு இருக்கப்போவதில்லை.

சபையுரையாளரின் அனுபவம்[தொகு]


12 சபையுரையாளனாகிய நான் எருசலேமில்
இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன்.
13 இவ்வுலகில் நடக்கிற எல்லாவற்றையும்
ஞானத்தின் துணை கொண்டு கூர்ந்து ஆராய்வதில்
என் சிந்தையைச் செலுத்தினேன்.
மானிடர் பாடுபட்டுச் செய்வதற்கென்று
அவர்களுக்குக் கடவுள் எவ்வளவு தொல்லைமிகு
வேலையைக் கொடுத்திருக்கிறார்!
14 இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன்.
அனைத்தும் வீணான செயல்களே;
காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.


15 கோணலானதை நேராக்க இயலாது;
இல்லாததை எண்ணிக்கையில் சேர்க்க முடியாது.


16 எனக்குமுன் எருசலேமில் அரசராய் இருந்தவர்கள் எல்லாரையும் விட
நான் ஞானத்தை மிகுதியாகத் தேடிப்பெற்றவன்;
மிகுந்த ஞானத்தையும் அறிவையும் அனுபவத்தால் பெற்றவன் என்று
எனக்குள் சொல்லிக் கொண்டேன். [*]
17 ஞானத்தையும் அறிவையும்பற்றித் தெரிந்துகொள்வதில்
என் சிந்தையைச் செலுத்தினேன்;
மடமையையும் மதிகேட்டையும்பற்றி அறிய முயன்றேன்.
இதுவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானதே எனக் கண்டேன்.


18 ஞானம் பெருகக் கவலை பெருகும்;
அறிவு பெருகத் துயரம் பெருகும்.


குறிப்பு

[*] 1:16 = 1 அர 4:29-31.


அதிகாரம் 2[தொகு]


1 "இன்பத்தில் மூழ்கி அதன் இனிமையைச் சுவைப்போம்;
நெஞ்சே! நீ வா!" என்றேன்.
அதுவும் வீண் என நான் கண்டேன்.
2 சிரித்துக் களித்தல் மதிகெட்ட செயல் என்றேன்;
3 இன்பம் நன்மை பயக்காது என்றேன்.
ஞானத்தின் மீதுள்ள ஆவலை விட்டுவிடாமலே,
மதுவால் உடலுக்குக் களிப்பூட்டவும்
மதிகெட்ட திட்டத்தில் ஈடுபடவும் தலைப்பட்டேன்;
மக்கள் தங்கள் குறுகிய உலக வாழ்க்கையில் செய்யக்கூடிய
நலமான செயல் எதுவென்று அறிவதற்காக இவ்வாறு செய்யலானேன்;
4 பெரிய காரியங்களைச் செய்து முடித்தேன்;
எனக்கென்று வீடுகளைக் கட்டினேன்;
திராட்சைத் தோட்டங்களை அமைத்தேன்.
5 எனக்கென்று தோட்டம், பூங்கா பல அமைத்து
அவற்றில் எல்லா வகையான பழமரங்களையும் நட்டேன்;
6 தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக்
குளங்களை வெட்டினேன்;
7 ஆண் பெண் அடிமைகளை விலைக்கு வாங்கினேன்;
என் வீட்டிலேயே பிறந்த அடிமைகளும் எனக்கு இருந்தார்கள்;
ஏராளமான ஆடுமாடுகளும் எனக்கு இருந்தன.
எனக்குமுன் எருசலேமில் இருந்த எவருக்கும்
அத்தனை ஆடுமாடுகள் இருந்ததில்லை. [1]
8 வெள்ளி, பொன், மன்னர்களின் செல்வம்,
மாநிலங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன்.
இசைவல்ல ஆடவரும் பெண்டிரும் என்னைப் பாடி மகிழ்வித்தனர்.
மகிழ்வூட்டும் மங்கையரையும் வைத்திருந்தேன். [2] [3]


9 இவ்வாறு என் செல்வம் வளர்ந்தது.
எருசலேமில் எனக்குமுன் இருந்த எல்லாரையும்விடப்
பெரிய செல்வனானேன்.
எனினும், எனக்கிருந்த ஞானம் குறைபடவில்லை. [4]
10 என் கண்கள் விரும்பின அனைத்தையும் அவற்றிற்கு அளித்தேன்.
எந்த மகிழ்ச்சியையும் என் மனத்திற்குக் கொடுக்க நான் தவறவில்லை.
என் முயற்சி அனைத்தும் என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டியது.
இதுவே என் முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்த பலனாகும்.
11 நான் செய்த செயல்கள் யாவற்றையும்
அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும்
நினைத்துப் பார்த்தபோதோ,
அவையாவும் வீண் என்பதைக் கண்டேன்.
அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்;
முற்றும் பயனற்ற செயல்களே.


12 நான் ஞானம், மூடத்தனம், மதிகேடு ஆகியவற்றை
ஆராயத் தலைப்பட்டேன்.
ஓர் அரசன் தனக்கு முன்னிருந்த அரசர் செய்ததைத் தவிர வேறென்ன செய்வான்?
13 ஒளி இருளை விட மேலானதாய் இருப்பதுபோல,
ஞானமும் மதிகேட்டைவிட மேலானதாய் இருக்கக் கண்டேன்.


14 ஞானிகளின் கண்கள் ஒளி படைத்தவை;
மூடரோ இருளில் நடப்பவர்.
ஆயினும், ஒருவருக்கு நேர்வதே
மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.


15 மூடருக்கு நேரிடுவது போலவே எனக்கும் நேரிடும்.
அப்படியானால் நான் ஞானத்தில் வளர்ந்தது எதற்காக?
அதனால் பயனென்ன என்று சிந்தித்து,
அதுவும் வீணே என்ற முடிவுக்கு வந்தேன்.
16 ஞானிகளையோ, மூடரையோ
யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை.
வருங்காலத்தில் அனைவரும் மறக்கப்படுவர்.
மூடர் மடிவதுபோல ஏன் ஞானிகளும் மடியவேண்டும்?
17 எனவே, நான் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டேன்.
மேலும், உலகில் செய்யப்படுபவை யாவும்
எனக்குத் தொல்லையையே கொடுத்தன.
எல்லாம் வீண்; யாவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.


18 நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ
அவற்றின் மீதெல்லாம் வெறுப்புக் கொண்டேன்.
ஏனெனில், அவற்றை எனக்குப்பின் வருகிறவர்களுக்கு
விட்டுச் செல்ல வேண்டுமென்பது எனக்குத் தெரியும்.
19 அவர்கள் ஞானமுள்ளவராய் இருக்கலாம் அல்லது மதிகேடராய் இருக்கலாம்;
யாருக்குத் தெரியும்?
எத்தகையவராய் இருப்பினும்,
நான் இவ்வுலகில் ஞானத்தோடு உழைத்து அடைந்த பயன்களுக்கெல்லாம்
அவர்களே உரிமையாளர் ஆவர்.
20 என் உழைப்பும் வீணே.
நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்துபோனேன்.
21 ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும்
திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்;
உழைத்துச் சேர்த்த சொத்தை
அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார்.
அவரது உழைப்பும் வீணே.
22 இது பெரிய அநீதி.
உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும்
வகுத்த செயல் திட்டங்களுக்காகவும்
அவருக்குக் கிடைக்கும் பயனென்ன?
23 வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்;
வேலையில் தொந்தரவு;
இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை.
எல்லாம் வீணே. [5]
24 உண்பதையும் குடிப்பதையும்
தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட,
நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை.
இந்த வாய்ப்பும் கடவுள் தந்ததே எனக் கண்டேன். [6]
25 அவரின்றி ஒருவருக்கு எப்படி உணவு கிடைக்கும்?
அவரால் எப்படி இன்பம் துய்க்க இயலும்?
26 கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு
ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார்.
பாவம் செய்கிறவருக்கோ
செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்;
ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு
விட்டுச் செல்வதற்கே.
இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். [7]


குறிப்புகள்

[1] 2:7 = 1 அர 4:23.
[2] 2:8 = 1 அர 10:10, 14-22.
[3] 2:4-8 = 1 அர 10:23-27; 2 குறி 9:22-27.
[4] 2:9 = 1 குறி 29:25.
[5] 2:23 = யோபு 5:7; 14:1.
[6] 2:24 = சஉ 3:13; 5:18; 9:7; லூக் 12:19; 1 கொரி 15:32.
[7] 2:26 = யோபு 32:8; நீமொ 2:6.


(தொடர்ச்சி): சபை உரையாளர்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை