திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்)/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே... ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்." - சபை உரையாளர் 11:9.


சபை உரையாளர் (The Book of Ecclesiastes)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]


1 உன் பணத்தை வைத்துத் துணிந்து கடல் வாணிபம் செய்;
ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும்.


2 உன் பணத்தைப் பிரித்து ஏழெட்டு இடங்களில் முதலாக வை.
ஏனெனில், எங்கு, எவ்வகையான இடர் நேருமென்பதை நீ அறிய இயலாது.


3 வானத்தில் கார்முகில் திரண்டு வருமாயின்,
ஞாலத்தில் மழை பெய்யும்.
மரம் வடக்கு நோக்கி விழுந்தாலும்
தெற்கு நோக்கி விழுந்தாலும்
விழுந்த இடத்திலேதான் கிடக்கும்.


4 காற்று தக்கவாறு இல்லையென்று காத்துக்கொண்டே இருப்போர்,
விதை விதைப்பதில்லை;
வானிலை தக்கபடி இல்லை என்று சொல்லிக்கொண்டே இருப்போர்
அறுவடை செய்வதில்லை.


5 காற்றின் போக்கையோ,
கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ
நீ அறிய இயலாது;
அவ்வாறே, அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும்
உன்னால் அறியமுடியாது.
6 காலையில் விதையைத் தெளி;
மாலையிலும் அப்படியே செய்.
அதுவோ இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூறமுடியாது.
ஒருவேளை இரண்டுமே நல்விளைச்சலைத் தரலாம்.


7 ஒளி மகிழ்ச்சியூட்டும்;
கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்.
8 மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும்
அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்.
இருள் சூழ்ந்த நாள்கள் பல இருக்கும்
என்பதையும் அவன் மறக்கலாகாது.
அதற்குப்பின் வருவதெல்லாம் வீணே.

இளையோருக்கு அறிவுரை[தொகு]


9 இளையோரே!
இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே.
இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள்.
மனம் விரும்புவதைச் செய்யுங்கள்;
கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள்.
ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும்
உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.


10 மனக் கவலையை ஒழியுங்கள்.
உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்;
குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே.


அதிகாரம் 12[தொகு]


1 ஆகையால், உன்னைப் படைத்தவரை
உன் இளமைப் பருவத்தில் மறவாதே.
"வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே" என்று
நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன்
அவரை உள்ளத்திலே நினை.
2 அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள்
ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும்,
மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும்,
3 வீட்டுக்காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறு முன்னும்,
அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள,
பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்துபோகுமுன்னும்,
4 தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக்கொள்ள,
சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க,
இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும்,
உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.


5 மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத்
திகில் கொள்ளுமுன்னும்,
வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும்,
வெட்டுக்கிளியைப்போல நடை தட்டுத்தடுமாற,
ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும்,
உற்றார் வீதியில் அழுது புலம்ப
நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும்,
உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை;
6 வெள்ளிக் கயிறு அறுந்து,
பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும்,
குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க,
கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும்,
7 மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும்,
கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும்
உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. [*]


8 வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபை உரையாளர்;
எல்லாமே வீண்.

தொகுப்புரை[தொகு]


9 சபை உரையாளர் ஞானமுள்ளவராயிருந்ததோடு
தாம் அறிந்தவற்றைத் தொகுத்துத் தந்தார்.
10 சபை உரையாளர் இனிய நடையில் எழுத முயன்றுள்ளார்.
உண்மையை ஒளிவு மறைவில்லாமல் எழுதிவைத்திருக்கிறார்.
11 ஞானமுற்றவர்களின் சொற்கள் ஆயரின் கோல்போல் வழிநடத்தும்.
தொகுத்து வைத்த முதுமொழிகள்
பசுமரத்தாணிபோல உள்ளத்தில் பதியும்.
அவை ஒரே ஆயரால் அளிக்கப்பட்டவை.


12 பிள்ளாய்! மேலும் ஓர் எச்சரிக்கை;
நூல்கள் பல எழுதுவதால் பயன் ஒன்றுமில்லை.
மிகுதியான படிப்பு உடலுக்கு இளைப்பு.


13 இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்:
கடவுளுக்கு அஞ்சி நட;
அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி.
இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்.
14 நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்,
மறைவான செயலுக்குங்கூட,
அது நல்லதோ தீயதோ எதுவாயினும்,
அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்.


குறிப்பு

[*] 12:3-7 - இப்பகுதி மனிதர் முதுமைப் பருவம் எய்தி,
அவரது உடல் தளர்வுறுவதைக்
குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
"வீட்டுக்காவலர்" = கைகள்;
"வலியோர்" = கால்கள்;
"அரைப்போர்" = பற்கள்;
"பலகணி வழியாகப் பார்ப்போர்" = கண்கள்;
"கதவுகள்" = காதுகள்;
"இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர்" = குரல்வளை நரம்புகள்;
"வாதுமை மரம் பூப்பூத்தல்" = தலைமுடி நரைத்தல்.

(சபை உரையாளர் நிறைவுற்றது)


(தொடர்ச்சி):இனிமைமிகு பாடல்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை