திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
தாவீது யாழ் மீட்டுகிறார். ஓவியர்: குவெர்ச்சீனோ. காலம்: 17ஆம் நூற்றாண்டு.

2 சாமுவேல் (The Second Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23[தொகு]

தாவீதின் இறுதி மொழிகள்[தொகு]


1 மேன்மை மிக்கவரும் யாக்கோபின் கடவுளிடம் திருப்பொழிவு பெற்றவரும் இஸ்ரயேலின் இனிமைமிகு பாடகரும் ஈசாயின் மைந்தருமான தாவீதின் இறுதிமொழிகளாவன:


2 ஆண்டவரின் ஆவி என் மூலம் பேசினார்; அவரது வார்த்தை என் நாவில் ஒலித்தது.


3 இஸ்ரயேலின் கடவுள் என்னோடு பேசினார்; 'இஸ்ரயேலின் பாறை' எனக்கு கூறினார்: 'மானிடரை நீதியோடு ஆள்பவன், இறை அச்சத்துடன் ஆள்பவன்,


4 விடியற்கால ஒளியெனத் திகழ்கின்றான்; முகிலற்ற காலைக் கதிரவனென ஒளிர்கின்றான்; மண்ணினின்று புல் முளைக்கச் செய்யும் மழையென விளங்குகின்றான்'.


5 என் குடும்பம் இறைவனோடு இணைந்துள்ளது அன்றோ? அனைத்திலும், திட்டமிடப்பட்டு, உறுதியாக்கப்பட்டு, என்றும் நிலைக்கும் உடன்படிக்கையை அவர் என்னோடு செய்து கொண்டார்.
என் அனைத்து மீட்பும் விருப்பும் அவரால் உயர்வு பெறாதோ?


6-7 இழிமக்கள் அனைவரும் இரும்புத் தடியும் ஈட்டிக்கோலும் கொண்டு, நெருப்பால் முற்றிலும் சுட்டெரிக்கப்படுவனவும் கையால் தொடத்தகாதவனவுமான காட்டு முட்களைப் போன்றவர்.

தாவீதின் புகழ்மிகு வீரர்கள்[தொகு]

(1 குறி 11:10-41)


8 தாவீதோடிருந்த வீரர்களின் பெயர்கள்: தக்கமோனியன் யோசப்பாசெபத்து. மூவருள் முதல்வனாக இருந்த அவன், 'எஸ்னீயன் அதினோ' என்று அழைக்கப்பட்டான். ஏனெனில் அவன் ஒரே சமயத்தில் எண்ணூறு பேரைத் தாக்கிக் கொன்றான்.


9 அவனுக்கு அடுத்தவன் அகோகிக்குப் பிறந்த தோதோவின் மகன் எலியாசர். போரிடுமாறு ஒன்றுதிரண்டு வந்த பெலிஸ்தியரை எதிர்த்துச் சென்ற போது தாவீதுடன் இருந்த வலிமைமிகு வீரர் மூவருள் ஒருவன் அவன். முதலில் இஸ்ரயேலர் பின் வாங்கினர்.
10 அப்பொழுது அவன் தனித்து நின்று, கை சோர்வுற்று வாளோடு ஒட்டிக்கொள்ளும் அளவிற்குப் பெலிஸ்தியரைத் தாக்கினான். ஆண்டவர் அன்று பெரும் வெற்றியைத் தந்தார். அவன் வீரர்கள் கொள்ளையடிப்பதற்காக அவனிடம் திரும்பினர்.


11 அடுத்தவன் ஆராரியன் ஆகேயின் மகன் சம்பா. பயறு நிறைந்த வயல் ஒன்றில் பெலிஸ்தியர் கூட்டமாகத் திரள, மக்கள் புறமுதுகுகாட்டி அவர்கள்முன் ஓடினார்கள்.
12 அப்போது அவன் வயல் நடுவே நின்று அதைப் பாதுகாத்தான்; பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினான். ஆண்டவர் மாபெரும் வெற்றியைத் தந்தார்.


13 முப்பது படைத்தலைவருள் மூவர் அறுவடைக் காலத்தில் தாவீது தங்கியிருந்த அதுல்லாம் குகைக்கு வந்தனர். அரக்கர்களின் கணவாயில் பெலிஸ்தியர் கூட்டம் பாளையமிறங்கி இருந்தது.
14 அப்போது தாவீது பாதுகாப்பான கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியர் பெத்லகேமில் இருந்தனர்.
15 தாவீது, ஏக்கத்துடன், "பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்கத் தருபவன் யார்?" என்று கேட்டார்.
16 அம்மூன்று வலிமைமிகு வீரரும் பெலிஸ்தியரின் அணிகளுக்குள் புகுந்து சென்று பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து நீர் மொண்டு, அதைத் தாவீதிடம் எடுத்து வந்தனர். தாவீதோ அதை குடிக்க விரும்பாமல் ஆண்டவருக்காக வெளியே ஊற்றினார்.
17 "தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் இரத்தமன்றோ இது! ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும்?" என்று சொல்லி, அவர் அதைக் குடிக்க விரும்பவில்லை. இம் மூன்று வீரரும் ஆற்றிய செயல்கள் இவையே!


18 யோவாபின் சகோதரன், செரூயாவின் மகன் அபிசாய் முப்பதின்மருக்குத் தலைவனாக இருந்தான். அவன் முந்நூறு பேருக்கு எதிராகத் தன் ஈட்டியைச் சுழற்றி அவர்களைக் கொன்றான். மூவருக்கு [*] இணையாக அவன் பெயர் பெற்றவன்.
19 அம்முப்பதின்மரில் அவனல்லவோ அதிகப் புகழ்பெற்றிருந்தான்? அவர்களின் தலைவனும் அவனே. ஆயினும் முன்னைய மூவருக்கும் அவன் சமமாக இல்லை.


20 கப்சவேலைச் சார்ந்த யோயாதாவின் மகன் பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். சிங்கம் போன்ற இரு மோவாபிய வீரரைக் கொன்றவன். பனி பெய்து கொண்டிருந்த ஒருநாள் குகைக்குள் அவன் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
21 உருவில் பெரிய ஒரு எகிப்தியனை அவன் கொன்று போட்டான். ஈட்டியைக் கையில் கொண்டிருந்த அந்த எகிப்தியனிடம் இவன் ஒரு கோலோடு சென்று, ஈட்டியை அவன் கையிலிருந்து பிடுங்கினான். பின் அவன் ஈட்டியைக் கொண்டே அவனைக் கொன்றான்.
22 யோயாதாவின் மகன் பெனாயா இவற்றைச் செய்து, முதல் மூவருக்கு இணையாகப் பெயர் பெற்றுத் திகழ்ந்தான்.
23 முப்பது பேரில் அவனும் புகழ் பெற்றிருந்தான். ஆனால் முதல் மூவருக்கு அவன் சமமாக இல்லை. ஆயினும் அவனைத் தாவீது தன் மெய்க்காப்பாளனாக ஏற்படுத்தினார்.


24 யோவாபின் சகோதரன் அசாவேல் முப்பது பேரில் ஒருவன். அவர்கள் யாரெனில், பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்.
25 அரோதியன், சம்மா, அரோதியன் எலிக்கா,
26 பல்தியன் ஏலேசு, தெக்கோவைச் சார்ந்த இக்கேசின் மகன் ஈரா,
27 அனத்தோத்தியன் அபியேசர், ஊசாத்தியன் மெபுன்னாய்,
28 அகோகியன் சல்மோன், நெற்றோபாயன் மகராய்,
29 நெற்றோபாயன் பானாவின் மகன் ஏலேபு, பென்யமினியரின் கிபயாவைச் சார்ந்த இரிபாயின் மகன் இத்தாய்,
30 பிரத்தோனியன் பெனாயா, காகசு நீரோடைகளின் இதாய்,
31 அர்பாத்தியன் அபிஅல்போன், பர்குமியன் அஸ்மவேத்து,
32 சால்போனியன் எலியகுபா, யாசேனின் மகன் யோனத்தான்,
33 அராரியன் சம்மா, அராரியன் சாராரின் மகன் அகீயாம்,
34 மாகாத்தியன் அகஸ்பாயியின் மகன் எலிபலேற்று, கிலோனியன் அகித்தோபலின் மகன் எலியாம்,
35 கர்மேலியன் எட்சரோ, அர்பியன் பாராய்,
36 சோபாவைச் சார்ந்த நாத்தானின் மகன் இகால், காத்தியன்பானி,
37 அம்மோனியன் செலேக்கு, செரூயாவின் மகனும் யோவாபின் படைக்கலன் தாங்குவோனுமான பெயரோத்தியன் நகராய்,
38 இத்ரியன் ஈரா, இத்ரியன் காரேபு,
39 இத்தியன் உரியா, இவர்கள் அனைவருமே அந்த முப்பது பேர்.

குறிப்பு

[*] 23:18 சில எபிரேய ஏடுகளில் 'முப்பது' என்பது பாடம். (காண் 1 குறி 11:25).

அதிகாரம் 24[தொகு]

மக்கள் தொகையைத் தாவீது கணக்கிடல்[தொகு]

(1 குறி 21:1-27)


1 மீண்டும் இஸ்ரயேல்மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், "புறப்பட்டுப் போய், இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய்" என்று தூண்டிவிட்டார்.
2 அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, "மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையைக் கணக்கிடுங்கள்" என்றார்.


3 யோவாபு அரசரை நோக்கி, "ஆண்டவராம் கடவுள் வீரர்களை இப்போது இருப்பதைப்போல் இன்னும் நூறு மடங்கு மிகுதிப்படுத்துவாராக! என் தரைவராம் அரசர் இதைக் காண்பாராக! ஆனால் என் தலைவராம் ஆண்டவர் இதைச் செய்ய விரும்புவது ஏன்?" என்று கேட்டார்.
4 இருப்பினும் யோவாபுக்கும் படைத்தலைவருக்கும் எதிராக அரசரின் வார்த்தையே நிலைத்தது. இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடுவதற்காக யோவாபும் படைத்தலைவர்களும் அரசர் முன்னிலையினின்று புறப்பட்டுச் சென்றனர்.


5 அவர்கள் யோர்தானைக் கடந்து, காத்துப் பள்ளத்தாக்கின் நடுவே இருந்த நகரின் வலப்புறம் ஆரோயரில் கூடாரமிட்டு, பின் யாசேர் நோக்கிச் சென்றனர்.
6 கிலயாது வந்தடைந்த பிறகு, தத்தீம் கொத்சி எல்லைக்குள் சென்று, தாண்யானுக்கும் சீதோன் சுற்றுப்புறத்திற்கும் சென்றனர்.
7 பிறகு தீர் கோட்டைக்கும், இவ்வியர் கானானியரின் அனைத்து நகரங்களுக்கும் சென்று, அங்கிருந்து யூதாவின் தென்புறமான பெயேர்செபாவரை சென்றனர்.
8 இவ்வாறு அவர்கள் நாடெங்கும் சென்று ஒன்பது மாதங்களும் இருபது நாள்களும் கடந்தபின் எருசலேமை வந்தடைந்தனர்.
9 யோவாபு, வீரர்களின் தொகைக்கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு பேர் யூதாவிலும் இருந்தனர்.


10 வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்தபிறகு தாவீது மனம் வருந்தினார். "நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உம் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன்" என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார்.


11 தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:
12 "நீ சென்று இவ்வாறு ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: 'நான் உன் மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன் படி நான் செய்வேன்'".
13 காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: "உனது நாட்டில் ஏழு ஆண்டு பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப்பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்".


14 "நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழவேண்டாம்" என்று தாவீது கூறினார்.
15 ஆண்டவர் காலை முதல் குறித்த நேரம் வரை இஸ்ரயேலின் மீது கொள்ளை நோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர்.
16 வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக் கொண்டிருந்த வானதூதரை நோக்கி, "போதும்! உன் கையைக் கீழே போடு" என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார்.


17 மக்கள் அழித்துக் கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, "பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!" என்று கூறினார்.


18 அன்று காது தாவீதிடம் வந்து அவரை நோக்கி, "நீர் சென்று எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பும்" என்றார்.
19 தாவீது காதின் வார்த்தைப்படி எழுந்து சென்று ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றினார்.


20 அப்போது அரசரும் அவருடைய பணியாளரும் தன்னை நோக்கி வருவதை அரவுனா கண்டான். அரவுனா புறப்பட்டுச் சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அரசரை வணங்கினான்.
21 "என் தலைவராம் அரசர் உம் அடியானிடம் வருவதேன்?" என்று அரவுனா வினவ, தாவீது "மக்களிடமிருந்து கொள்ளை நோய் விலக ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பவேண்டும். அதற்காக உன்னிடமிருந்து உன் போரடிக்கிற களத்தை விலைக்கு வாங்க வந்தேன்" என்று கூறினார்.


22 "என் தலைவராம் அரசர் அதை எடுத்துக்கொண்டு தம் விருப்பம் போல் பலி செலுத்துவாராக! இதோ எரிபலிக்கு வேண்டிய காளைகள்; போரடிக்கும் உருளைகளும் காளைகளின் நுகத்தடிகளும் விறகாகட்டும்!
23 அரசரே! இவையனைத்தையும் அரவுனா தங்களுக்குத் தருகிறான்! ஆண்டவராம் கடவுள் உம்மை ஏற்றுக் கொள்வாராக!" என்று அரவுனா தாவீதிடம் கூறினான்.


24 "இல்லை! நான் உன்னிடம் விலைக்குத்தான் வாங்குவேன். நான் இலவசமாகப் பெற்று என் கடவுளாம் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தமாட்டேன்" என்று அரசர் அரவுனாவிடம் கூறி, போரடிக்கும் களத்தையும் காளைகளையும் தாவீது ஐம்பது வெள்ளிக் காசுகளுக்கு வாங்கினார்.
25 தாவீது அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவருக்கு எரி பலிகளும், நல்லுறவுப் பலிகளும் செலுத்தினார். நாட்டுக்காகச் செய்த மன்றாட்டை ஆண்டவர் கேட்டருள, இஸ்ரயேலிலிருந்து கொள்ளைநோய் நீங்கியது.


(சாமுவேல் - இரண்டாம் நூல் நிறைவுற்றது)



(தொடர்ச்சி): அரசர்கள் - முதல் நூல்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை