திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தானியேல்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
"என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைவிட்டோம்.." - தானியேல் 9:4-5

தானியேல் (The Book of Daniel)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

எழுபது வாரங்கள்: கபிரியேலின் விளக்கம்[தொகு]


1 பிறப்பினால் மேதியனாகிய அகஸ்வேருவின் மகன் தாரியு
கல்தேய நாட்டின் அரசனாகி ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.
2 அவனது முதல் ஆட்சியாண்டில் தானியேல் ஆகிய நான்,
எருசலேம் பாழ்நிலையில் கிடக்கும் காலம்,
எரேமியா இறைவாக்கினர்க்கு ஆண்டவர் உரைத்தபடி எழுபது ஆண்டுகள் ஆகும் என்று
நூல்களிலிருந்து படித்தறிந்தேன். [1]


3 நான் நோன்பிலிருந்து சாக்கு உடை அணிந்து சாம்பலில் அமர்ந்து
என் தலைவராகிய கடவுளிடம் திரும்பி மன்றாடி வேண்டிக் கொண்டேன்.
4 என் கடவுளாகிய ஆண்டவர்முன் என் பாவங்களை அறிக்கையிட்டு நான் மன்றாடியது:
"என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன்.
உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன்
நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து
அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்!
5 நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்;
பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம்.
உம் கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைவிட்டோம்.
6 எங்களுடைய அரசர்கள் தலைவர்கள், தந்தையர்கள்,
நாட்டிலுள்ள மக்கள் அனைவர்க்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள்
உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவி கொடுக்கவில்லை.
7 என் தலைவரே! நீதி உமக்கு உரியது;
எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே.
ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும்,
இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள்,
உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு,
அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும்
உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.
8 ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும்
தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது.
ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
9 எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு.
நாங்களோ உம்மை எதிர்த்துநின்றோம்.
10 எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம்
தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார்.
11 நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.
இஸ்ரயேலர் யாவரும் உமது திருச்சட்டத்தை மீறி
உம் குரலுக்குப் பணிய மறுத்து, விலகிச் சென்றனர்.
கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடி,
சாபமும் கேடும் எங்கள் தலைமேல் கொட்டப்பட்டன.
ஏனெனில், நாங்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
12 எங்களுக்கும் எங்களை ஆண்டுவந்த எங்கள் அரசர்களுக்கும் எதிராக
அவர் கூறியதை எங்கள்மீது அவர் சுமத்தியுள்ள
பெரும் துன்பத்தின் வழியாய் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏனெனில், எருசலேமுக்கு எதிராக நிகழ்ந்ததுபோல்
உலகில் வேறெங்கும் நடக்கவே இல்லை.
13 மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளவாறே,
இத்துணைத் துன்பமும் எங்கள்மேல் வந்துள்ளது.
ஆயினும், நாங்கள் எங்கள் கொடிய செயல்களை விட்டொழித்து,
உமது உண்மை வழியை ஏற்று,
ஆண்டவரும் எம் கடவுளுமான உமக்கு உகந்தவர்களாய் நடக்க முயலவில்லை.
14 ஆகையால் ஆண்டவர் எங்களுக்கு உரிய தண்டனையைத்
தயாராக வைத்திருந்து எங்கள்மீது சுமத்தினார்.
ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர்
தாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் நீதியுள்ளவர்.
ஆனால், நாங்கள்தான் அவரது குரலுக்குப் பணிய மறுத்தோம்.


15 அப்படியிருக்க, எங்கள் தலைவராகிய கடவுளே!
உம் மக்களை நீர் மிகுந்த ஆற்றலோடு எகிப்து நாட்டிலிருந்து மீட்டு,
இன்றுவரை உமது பெயருக்குப் புகழ் தேடிக்கொண்டீர்.
நாங்களோ பாவம் செய்தோம், பொல்லாதன புரிந்தோம்.
16 ஆனால், எம் தலைவரே!
உம்முடைய நீதிச் செயல்களுக்கேற்ப உமது நகரமும்
உமது திருமலையுமாகிய எருசலேமைவிட்டு
உம் சினமும் சீற்றமும் விலகுவதாக!
ஏனெனில் எங்கள் பாவங்கள் எங்கள் தந்தையரின் கொடிய செயல்களில் காரணமாக,
எருசலேமும் உம் மக்களும் எங்களைச் சுற்றி வாழும் மக்களிடையே
நிந்தைப் பொருளாக மாறிவிட்டனர்.
17 ஆகையால், எங்கள் கடவுளே!
இப்பொழுது உம் அடியானின் வேண்டுதலையும்
விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்ளும்.
பாழாய்க் கிடக்கிற உமது தூயகத்தின்மீது
தலைவராகிய உம்மை முன்னிட்டே உமது முகத்தை ஒளிரச் செய்வீராக!
18 என் கடவுளே! செவி சாய்த்துக் கேட்டருளும்;
உம் கண்களைத் திறந்து எங்கள் பாழிடங்களையும்
உமது பெயர் தாங்கிய நகரையும் நோக்கியருளும்.
நாங்கள், எங்கள் நேர்மையை நம்பாமல்,
உமது பேரிரக்கத்தையே நம்பி,
எங்கள் மன்றாட்டுகளை உமது முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம்.
19 என் தலைவரே! கேளும்; என் தலைவரே! மன்னித்தருளும்;
செவிகொடுத்துச் செயலாற்றும்;
என் கடவுளே! உம்மை முன்னிட்டுக் காலம் தாழ்த்தாதேயும்;
ஏனெனில் உமது நகரமும் உம் மக்களும் உமது பெயரையே தாங்கியுள்ளனர்."


20 நான் இவ்வாறு சொல்லி வேண்டிக் கொண்டு,
என் பாவங்களையும் என் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களின்
பாவங்களையும் அறிக்கையிட்டு,
என் கடவுளின் திரு மலைக்காக என் விண்ணப்பங்களை
என் கடவுளாகிய ஆண்டவர்முன் சமர்ப்பித்தேன்.
21 இவ்வாறு நான் வேண்டுதல் செய்து கொண்டிருக்கும்பொழுது,
முதல் காட்சியில் நான் கண்ட கபிரியேல் என்ற மனிதர்
மாலைப் பலிவேளையில் விரைவாய்ப் பறந்து வந்து,
என்னைத் தொட்டு என்னிடம் பின்வருமாறு சொன்னார்: [2]
22 "தானியேல்! உனக்கு விவேகத்தையும் மெய்யுணர்வையும் அளிக்க
நான் புறப்பட்டு வந்துள்ளேன்.
23 நீ வேண்டுதல் செய்யத் தொடங்கிய போதே
கட்டளை ஒன்று பிறந்தது;
நான் அதை உனக்குத் தெரிவிக்க வந்தேன்;
ஏனெனில் நீ மிகுதியான அன்புக்கு உரியவன்;
ஆதலால் நான் சொல்வதைக் கவனித்து
காட்சியின் உட்பொருளை உணர்ந்துகொள்.


24 உன்னுடைய இனத்தவரும் உனது புனித நகரும்
குற்றங்கள் புரிவதையும் பாவம் செய்வதையும் நிறுத்திவிடுவதற்கும்,
கொடிய செயல்களுக்கும் கழுவாய் தேடுவதற்கும்,
முடிவற்ற நீதியை நிலைநாட்டுவதற்கும்,
திருக்காட்சியையும் இறைவாக்குகளையும் முத்திரையிடுவதற்கும்,
[3] திருத்தூயகத்தைத் திருநிலைப்படுத்துவதற்கும்
குறிக்கப்பட்ட கெடு எழுபது வாரங்கள் ஆகும்.


25 ஆகவே, நீ அறிந்து தெளிவுபெற வேண்டியதாவது:
எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புமாறு கட்டளை பிறப்பதற்கும்,
அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டவர் வருவதற்கும்
இடையே உள்ள காலம் ஏழு வாரங்கள் ஆகும்.
பின்பு சதுக்கங்களும் அகழிசூழ் அரண்களும் அமைத்து
அந்நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அறுபத்திரண்டு வாரங்கள் ஆகும்.
ஆயினும் அது தொல்லை நிறைந்த காலமாய் இருக்கும்.
26 அதன்பிறகு திருப்பொழிவு செய்யப்பட்டவர்
குற்றமற்றவராயிருந்தும் கொலை செய்யப்படுவார்.
படையெடுத்து வரவிருக்கும் அரசனின் குடிமக்கள்
நகரையும் தூயகத்தையும் அழித்துவிடுவர்.
பெரும் பிரளயம் போல முடிவு வரும்.
கடவுளின் ஆணைப்படி இறுதிவரை போரும் பேரழிவுமாய் இருக்கும்.
27 ஒருவாரம் அவன் பலரோடு உடன்படிக்கை செய்து கொண்டு அரசாள்வான்.
அந்த வாரத்தின் பாதி கழிந்தபின்,
பலியையும் காணிக்கையும் நிறுத்திவிடுவான்.
திருக்கோவிலின் முனையில் பாழாக்கும் அருவருப்பு வைக்கப்படும்.
அதை அங்கு வைத்துப் பாழ்படுத்தியவன்
கடவுளின் ஆணைப்படி இறுதியில் அழிவுறுவான்." [4]


குறிப்புகள்

[1] 9:2 = எரே 25:11; 29:10.
[2] 9:21 = லூக் 1:19-26.
[3] 9:24 - எபிரேயத்தில் 'மிகு தூயவர்' எனவும் பொருள் கொள்ளலாம்.
[4] 9:27 = தானி 11:31; 12:11; மத் 24:15; மாற் 13:14.


அதிகாரம் 10[தொகு]

மாபெரும் காட்சி[தொகு]


1 பாரசீக அரசராகிய சைரசின் மூன்றாம் ஆட்சியாண்டில்
பெல்தசாச்சர் என்று பெயரிடப்பட்டிருந்த தானியேலுக்கு
ஒரு வாக்கு வெளிப்படுத்தப்பட்டது.
அது உண்மையான வாக்கு;
அது ஒரு பெரும் தொல்லையைப் பற்றியது.
அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்.
அதைப் பற்றிய தெளிவு, காட்சி வாயிலாகக் கிடைத்தது.


2 அந்நாளில் தானியேல் ஆகிய நான்
மூன்று வாரங்களாக அழுது கொண்டிருந்தேன்.
3 அந்த மூன்று வாரம் முழுவதும் நான் சுவையான உணவு அருந்தவில்லை.
இறைச்சியோ திராட்சை இரசமோ என் வாயில் படவில்லை;
என் தலையில் எண்ணெய்கூடத் தடவிக் கொள்ளவில்லை.
4 முதல் மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று
நான் திக்ரீசு என்னும் பெரிய ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தேன்.
5 என் கண்களை உயர்த்திப் பார்க்கையில்,
மெல்லிய பட்டாடை உடுத்திக் கொண்டு
தம் இடையில் ஊபாசு நாட்டுத் தங்கக்கச்சை
கட்டியிருந்த ஒருவரைக் கண்டேன்.
6 அவரது உடல் பளிங்கு போல் இருந்தது;
அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப்போல் இருந்தது;
அவருடைய கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும்,
கைகளும் கால்களும் மினுமினுக்கும் வெண்கலம் போலும்,
அவரது பேச்சொலி மக்கள் கூடத்தின் ஆரவாரம் போலும் இருந்தன. [1]
7 தானியேல் ஆகிய நான் மட்டுமே இந்தக் காட்சியைக் கண்டேன்.
என்னுடன் இருந்தவர்கள் அதைப் பார்க்கவில்லை;
ஆனால் அவர்கள் மிகுந்த நடுக்கமுற்று ஒளிந்துகொள்ள ஓடிவிட்டார்கள்.
8 தனித்து விடப்பட்ட நான் மட்டுமே இப்பெரும் காட்சியைக் கண்டேன்.
நான் வலுவிழந்து போனேன்;
என் முகத்தோற்றம் சாவுக்கு உள்ளானவனைப்போல் வெளிறியது.
என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.
9 அப்போது அவரது பேச்சொலி என் காதில் விழுந்தது.
அதைக் கேட்டதும் தரையில் முகம் குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன்.


10 அப்பொழுது ஒரு கை என்னைத் தொட்டது;
கைகளையும் முழங்கால்களையும் நான் ஊன்றி எழுந்து நிற்கும் படி செய்தது.
ஆயினும், நான் நடுங்கிக்கொண்டே இருந்தேன்.
11 அவர் என்னை நோக்கி, "மிகவும் அன்புக்குரிய தானியேல்!
நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளைக் கேள்;
நிமிர்ந்து நில். ஏனெனில், உன்னிடம்தான் நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.
இவ்வாறு அவர் சொன்னவுடன் நடுங்கிக்கொண்டே நான் எழுந்து நின்றேன்.
12 அப்பொழுது அவர் என்னைப் பார்த்துக் கூறியது:
"தானியேல்! அஞ்ச வேண்டாம், உய்த்துணர வேண்டும் என்னும் உள்ளத்தோடு
உன் கடவுள் முன்னிலையில் நீ உன்னைத் தாழ்த்திக் கொண்ட
முதல் நாள் தொடங்கி உன் மன்றாட்டு கேட்கப்பட்டுவருகிறது.
உன் மன்றாட்டுக்கேற்ப இதோ! நான் வந்துள்ளேன்.
13 பாரசீக நாட்டின் காவலனாகிய தூதன்
இருபத்தொரு நாள் என்னை எதிர்த்து நின்றான்.
அங்கே பாரசீக அரசர்களோடு நான் தனித்து விடப்பட்டதால்,
தலைமைக் காவலர்களுள் ஒருவராகிய மிக்கேல் எனக்குத் துணைசெய்ய வந்தார்.
14 உன் இனத்தார்க்கு இறுதி நாள்களில் நடக்கவிருப்பதை
உனக்கு உணர்த்துவதற்காக நான் உன்னிடம் வந்தேன்.
இந்த காட்சி நிறைவேற இன்னும் நாள்கள் பல ஆகும்."


15 அவர் இந்த வார்த்தைகளை எனக்குச் சொன்னபோது
நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேசாதிருந்தேன்.
16 அப்போது, மானிட மகனின் தோற்றம் கொண்ட ஒருவர்
என் உதடுகளைத் தொட்டார்.
நானும் வாய் திறந்து பேசி, எனக்கு எதிரில் நின்றவரை நோக்க,
"என் தலைவரே! இந்தக் காட்சியின் காரணமாய் நான் வேதனையுற்றேன்.
என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.
17 என் தலைவருடைய ஊழியனாகிய நான்
என் தலைவராகிய உம்மோடு உரையாடுவது எப்படி?
ஏனெனில் நான் வலிமை இழந்துவிட்டேன்;
என் மூச்சும் அடைத்துக் கொண்டது" என்றேன்.


18 அப்பொழுது, மனிதச் சாயல் கொண்ட அவர்
மறுபடியும் என்னைத் தொட்டு வலுவூட்டினார்.
19 மேலும் அவர், "மிகுந்த அன்புக்குரியவனே! அஞ்சாதே;
உனக்குச் சமாதானம் உண்டாவதாக!
திடங்கொண்டு துணிவாயிரு" என்றார்.
இவ்வாறு அவர் பேசியபோது, எனக்குத் துணிவு உண்டாகி,
"என் தலைவர் பேசட்டும்; ஏனெனில், நீர் எனக்கு வலுவூட்டினீர்" என்றேன்.
20 அப்பொழுது அவர் கூறியது:
"உன்னிடம் நான் வந்த காரணம் உனக்குத் தெரிகிறதா?
இப்பொழுது பாரசீக நாட்டுக் காவலனோடு மீண்டும் போரிடச் செல்கிறேன்.
நான் அவனை முறியடித்தபின் கிரேக்க நாட்டுக் காவலன் வருவான்.
21 ஆனால் அதற்கு முன் 'உண்மை நூலில்' எழுதியுள்ளதை உனக்குத் தெரிவிப்பேன்.
இவர்களை எதிர்த்துப் போராடுவதில்
உங்கள் காவலராகிய மிக்கேலைத் தவிர
எனக்குத் துணை நிற்பார் யாருமில்லை." [2]


குறிப்பு

[1] 10:5 - 6 = திவெ 1:13-15; 2:18; 19:12.
[2]10:13, 21 = திவெ 12:7.


(தொடர்ச்சி): தானியேல்:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை