திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 149 முதல் 150 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அல்லேலூயா! தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்!". - திருப்பாடல் 150:1. பளிங்குக் கல் கலை. காப்பிடம்: புளோரன்சு நகர் பெருங்கோவில். 15ஆம் நூற்றாண்டு.

திருப்பாடல்கள்[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 149 முதல் 150 வரை

திருப்பாடல் 149[தொகு]

மக்களில் மகிழ்ச்சியுறும் மாமன்னர் போற்றி![தொகு]


1 அல்லேலூயா!
ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.


2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து
மகிழ்ச்சி கொள்வதாக!
சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக!


3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து
அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!


4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு
வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.


5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக!
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!


6 அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்;
அவர்களின் கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும்.


7 அவர்கள் வேற்றினத்தாரிடம் பழிதீர்த்துக் கொள்வார்கள்;
மக்களினங்களுக்கு தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;


8 வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;
உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.


9 முன்குறித்து வைத்த தீர்ப்பை அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;
இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது.
அல்லேலூயா!


திருப்பாடல் 150[தொகு]

தூயகத்தில் இறைவன் போற்றி![தொகு]


1 அல்லேலூயா!
தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்!
வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்!


2 அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்!
அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்!


3 எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்!
வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள்.


4 மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்!
யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்!


5 சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்!
'கலீர்' எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்!


6 அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக!
அல்லேலூயா!


(திருப்பாடல்கள் நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): நீதிமொழிகள்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை