திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 69 முதல் 70 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
தாவீது அரசரும் அவருடைய மகன் சாலமோன் அரசரும். கண்ணாடி நிறப்பதிகை ஓவியம். காப்பிடம்: ஸ்ட்ராஸ்பர்க் மறைமாவட்டக் கோவில், பிரான்சு.

திருப்பாடல்கள்[தொகு]

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 69 முதல் 70 வரை

திருப்பாடல் 69[தொகு]

உதவிக்காக வேண்டல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
'லீலிமலர்' என்ற மெட்டு;
தாவீதுக்கு உரியது)



1 கடவுளே! என்னைக் காப்பாற்றும்;
வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது.


2 ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்;
நிற்க இடமில்லை;
நிலைகொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்;
வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது.


3 கத்திக் கத்திக் களைத்துப்போனேன்;
தொண்டையும் வறண்டுபோயிற்று;
என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து
என் கண்கள் பூத்துப்போயின;


4 காரணமில்லாமல் என்னை வெறுப்போர்
என் தலைமுடியைவிட மிகுதியாய் இருக்கின்றனர்;
பொய்க்குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர்.
நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்? [1]


5 கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்;
என் குற்றங்கள் உமக்கு மறைவானவை அல்ல.


6 ஆண்டவரே! படைகளின் தலைவரே!
உமக்காகக் காத்திருப்போர்
என்னால் வெட்கமுறாதபடி செய்யும்;
இஸ்ரயேலின் கடவுளே!
உம்மை நாடித் தேடுகிறவர்கள்
என்பொருட்டு மானக்கேடு அடையாதபடி செய்யும்.


7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்;
வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.


8 என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்;
என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.


9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம்
என்னை எரித்துவிட்டது;
உம்மைப் பழித்துப் பேசினவர்களின்
பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. [2]


10 நோன்பிருந்து நான் நெக்குருகி அழுதேன்;
அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று.


11 சாக்குத் துணியை என் உடையாகக் கொண்டேன்;
ஆயினும், அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.


12 நகர வாயிலில் அமர்வோர்
என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்;
குடிகாரர் என்னைப்பற்றிப் பாட்டுக் கட்டுகின்றனர்.


13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில்
உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்;
கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால்
எனக்குப் பதில் மொழி தாரும்;
துணை செய்வதில் நீர் மாறாதவர்.


14 சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்;
என்னை வெறுப்போரிடமிருந்தும்
ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்.


15 பெருவெள்ளம் என்னை அடித்துக் கொண்டு போகாதிருப்பதாக!
ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக!
படுகுழி தன்வாய் திறந்து
என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!


16 ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;
உம் பேரன்பு நன்மை மிக்கது;
உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும்.


17 உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதேயும்;
நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்;
என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும்.


18 என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்;
என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும்.


19 என் இழிவும், வெட்கக்கேடும்,
மானக்கேடும் உமக்குத் தெரியும்;
என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர்.


20 பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது;
நான் மிகவும் வருந்துகின்றேன்;
ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்;
யாரும் வரவில்லை;
தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்;
யாரையும் காணவில்லை.


21 அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்;
என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். [3]


22 அவர்களுடைய விருந்துகளே
அவர்களுக்குக் கண்ணியாகட்டும்!
அவர்களுடைய படையல் விருந்துகளே
அவர்களுக்குப் பொறியாகட்டும்!


23 அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளியிழக்கட்டும்!
அவர்களின் இடைகள் இடையறாது தள்ளாடட்டும்! [4]


24 உமது கடுஞ்சினத்தை அவர்கள்மேல் கொட்டியருளும்;
உமது சினத்தீ அவர்களை மடக்கிப் பிடிப்பதாக!


25 அவர்களின் பாசறை பாழாவதாக!
அவர்களின் கூடாரங்களில் ஒருவனும் குடிபுகாதிருப்பானாக! [5]


26 நீர் அடித்தவர்களை அவர்கள்
இன்னும் கொடுமைப்படுத்துகின்றார்கள்;
நீர் காயப்படுத்தினவர்களின் நோவைப்பற்றித்
தூற்றித் திரிகின்றார்கள்.


27 அவர்கள்மீது குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்!
உமது நீதித் தீர்ப்பினின்று அவர்களைத் தப்ப விடாதேயும்!


28 மெய்வாழ்வுக்குரியோரின் அட்டவணையிலிருந்து
அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்!
அவற்றை நேர்மையாளரின் பெயர்களோடு சேர்க்காதேயும்! [6]


29 எளியேன் சிறுமைப்பட்டவன்;
காயமுற்றவன்;
கடவுளே!
நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!


30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்;
அவருக்கு நன்றி செலுத்தி,
அவரை மாட்சிமைப்படுத்துவேன்;


31 காளையைவிட இதுவே ஆண்டவருக்கு உகந்தது;
கொம்பும் விரிகுளம்பும் உள்ள எருதைவிட
இதுவே அவருக்கு உகந்தது.


32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்;
கடவுளை நாடித் தேடுகிறவர்களே,
உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.


33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்;
சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.


34 வானமும் வையமும் கடல்களும்
அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும்.


35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்;
யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்;
அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்;
நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.


36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர்
அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;
அவரது பெயர்மீது அன்புகூர்வோர் அதில் குடியிருப்பர்.


குறிப்புகள்

[1] 69:4 = திபா 35:19; யோவா 15:25.
[2] 69:9 = யோவா 2:17; உரோ 15:3.
[3] 69:21 = மத் 27:48; மாற் 15:36; லூக் 23:36; யோவா 19:28-29.
[4] 69:22-23 = உரோ 11:9-10.
[5] 69:25 = திப 1:20.
[6] 69:28 = விப 32:32; திவெ 3:5; 13:8; 17:8.


திருப்பாடல் 70[தொகு]

உதவிக்காக வேண்டல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
நினைவு கூர்தலுக்காகத்
தாவீது பாடியது)



1 கடவுளே! என்னை விடுவித்தருளும்;
ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்!


2 என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும்
வெட்கமும் குழப்பமும் அடைவராக!
எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர்
வெட்கத்தால் தலைகுனிந்து பின்னிட்டுத் திரும்புவராக!


3 என்னைப் பார்த்து, 'ஆ! ஆ!' என்று ஏளனம் செய்வோர்
பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவராக!


4 உம்மை நாடித் தேடும் அனைவரும்
உம்மில் மகிழ்ந்து களிகூர்வராக!
நீர் அருளும் மீட்பில் நாட்டம் கொள்வோர்
'கடவுள் மாட்சி மிக்கவர்' என்று எப்போதும் சொல்வர்.


5 நான் சிறுமையுற்றவன், ஏழை;
கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்;
நீரே எனக்குத் துணை; என்னை விடுவிப்பவர்;
என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 71 முதல் 72 வரை