திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது;
உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது" - நீதிமொழிகள் 3:15 (செருமானியம்). ஓவியர்: யான் வெர்மீர். ஆண்டு: சுமார் 1660.


நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

அதிகாரங்கள் 2 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை[தொகு]


1 பிள்ளாய்!
என் அறிவுரையை மறவாதே;
என் கட்டளைகளை உன் இதயத்தில் இருத்திக்கொள்.
2 அவை உனக்கு நீண்ட ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும்
நிலையான நலன்களையும் அளிக்கும்.
3 அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக!
அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் பூண்டுகொள்.
4 அப்பொழுது, நீ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவனாவாய்;
அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய். [1]
5 முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு;
உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.
6 நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்;
அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.
7 உன்னை நீ ஒரு ஞானி என்ற எண்ணிக்கொள்ளாதே;
ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு. [2]
8 அப்பொழுது உன் உடல், நலம் பெறும்;
உன் எலும்புகள் உரம் பெறும்.
9 உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று;
உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும்
ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு.
10 அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்;
குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்.
11 பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை
வேண்டாமென்று தள்ளி விடாதே;
அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே. [3]
12 தந்தை தன் அருமை மகனைக் கண்டிப்பதுபோல்,
ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ
அவர்களைக் கண்டிக்கின்றார். [4]

ஞானத்தின் மேன்மை[தொகு]


13 ஞானத்தைத் தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்;
மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்;
14 வெள்ளியை விட ஞானமே மிகுநலன் தருவது;
பொன்னைவிட ஞானத்தால் வரும் செல்வம் மேலானது.
15 ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது;
உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது.
16 அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது.
அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது.
17 அதன் வழிகள் இன்பம் தரும் வழிகள்;
அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை.
18 தன்னை அடைந்தோர்க்கு அது
வாழ்வெனும் கனிதரும் மரமாகும்;
அதனைப் பற்றிக்கொள்வோர் நற்பேறு பெற்றோர்.
19 ஆண்டவர் ஞானத்தால் பூவுலகிற்கு அடித்தளமிட்டார்;
விவேகத்தால் வானங்களை நிலைபெறச் செய்தார்.
20 அவரது அறிவாற்றலால் நிலத்தின் அடியிலிருந்து
நீர் பொங்கி எழுகின்றது;
வானங்கள் மழையைப் பொழிகின்றன.
21 பிள்ளாய்!
விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்;
இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்தி வை.
22 இவை உனக்கு உயிராகவும்,
உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.
23 நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்;
உன் கால் ஒருபோதும் இடறாது.
24 நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது;
உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்.
25 பொல்லார் திகிலடைவதையும்
அவர்களுக்கு அழிவு வருவதையும் காணும்போது
நீ அஞ்சாதே.
26 ஆண்டவர் உனக்குப் பக்கத்துணையாய் இருப்பார்;
உன் கால் கண்ணியில் சிக்காதபடி உன்னைக் காப்பார்.
27 உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின்,
தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே.
28 அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே,
'போய் வா, நாளைக்குத் தருகிறேன்' என்று சொல்லாதே.
29 அடுத்திருப்பார்க்குத் தீங்கிழைக்க திட்டம் தீட்டாதே;
அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?
30 ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது,
அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே.
31 வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே;
அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.
32 ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்;
நேர்மையாளரோடு அவர் உறவுகொள்கின்றார்.
33 பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்;
அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.
34 செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்;
தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்; [5]
35 ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்;
அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.


குறிப்புகள்

[1] 3:4 = லூக் 2:52.
[2] 3:7 = உரோ 12:16.
[3] 3:11 = யோபு 5:17; எபி 12:5-6.
[4] 3:12 = திவெ 3:19.
[5] 3:34 = யாக் 4:6; 1 பேது 5:5.


அதிகாரம் 4[தொகு]

ஞானத்தினால் வரும் நன்மைகள்[தொகு]


1 பிள்ளைகளே!
தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்;
மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
2 நான் உங்களுக்கு நற்போதனை அளிக்கின்றேன்;
நான் கற்பிப்பதைப் புறக்கணியாதீர்கள்;
3 நான் என் தந்தையின் அருமை மைந்தனாய்,
தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
4 அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே:
"நான் சொல்வதை உன் நினைவில் வை;
என் கட்டளைகளை மறவாதே; நீ வாழ்வடைவாய்.
5 ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு;
நான் சொல்வதை மறந்துவிடாதே; அதற்கு மாறாக நடவாதே.
6 ஞானத்தை புறக்கணியாதே; அது உன்னைப் பாதுகாக்கும்;
அதை அடைவதில் நாட்டங்கொள்;
அது உன்னைக் காவல் செய்யும்.
7 ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்;
உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு.
8 அதை உயர்வாய்க் கொள்; அது உன்னை உயர்த்தும்;
அதை நீ தழுவிக்கொள்; அது உன்னை மாண்புறச் செய்யும்.
9 அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்;
மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும்."
10 பிள்ளாய்! கவனி; நான் சொல்வதை ஏற்றுக்கொள்;
அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
11 ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்;
நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன்.
12 நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது;
நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய்.
13 பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்;
அதை விட்டுவிடாதே;
அதைக் கவனமாய்க் காத்துக்கொள்;
அதுவே உனக்கு உயிர்.
14 பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே;
தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.
15 அதன் அருகில் செல்லாதே; அதில் கால்வைக்காதே;
அதை விட்டு விலகி உன் வழியே செல்.
16 தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் தூக்கம் வராது;
யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது.
17 தீவினையே அவர்கள் உண்ணும் உணவு;
கொடுஞ் செயலே அவர்கள் பருகும் பானம்.
18 நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது;
அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது.
19 பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது;
தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
20 பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு;
நான் சொல்வதைக் கவனி.
21 என் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்;
உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை.
22 அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்;
அவர்களுக்கு உடல் நலமும் தரும்.
23 விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்;
ஏனெனில், அதனின்று பிறப்பவை
உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.
24 நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது;
வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது.
25 உன் கண்கள் நேரே பார்க்கட்டும்;
எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து.
26 நேர்மையான பாதையில் நட;
அப்பொழுது, உன் போக்கு இடரற்றதாயிருக்கும். [*]
27 வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே;
தீமையின் பக்கமே காலெடுத்து வைக்காதே.


குறிப்பு

[*] 4:26 = எபி 12:13.

(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை