திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பவளத்திலும் ஞானமே சிறந்தது; நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது" - நீதிமொழிகள் 8:11. படம்: சிப்பியில் முத்து.

நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]


1 என் பிள்ளையே,
என் வார்த்தைகளை மனத்தில் இருத்து;
என் கட்டளைகளைச் செல்வமெனப் போற்று;
2 என் கட்டளைகளைக் கடைப்பிடி, நீ வாழ்வடைவாய்;
என் அறிவுரையை உன் கண்மணிபோல் காத்துக்கொள்வாய்.
3 அவற்றை உன் விரல்களில் அணியாகப் பூண்டுகொள்;
உன் இதயப் பலகையில் பொறித்துவை.
4 ஞானத்தை உன் சகோதரி என்று சொல்;
உணர்வை உன் தோழியாகக் கொள்.
5 அப்பொழுது நீ விலைமகளிடமிருந்து தப்புவாய்;
தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து காப்பாற்றப்படுவாய்.
6 ஒரு நாள் நான் என் வீட்டின் பலகணியருகில் நின்றுகொண்டு,
பின்னல் தட்டி வழியாகப் பார்த்தபோது,
7 பேதைகளிடையே ஓர் இளைஞனைக் கண்டேன்;
மதிகோடான அவனை இளைஞரிடையே பார்த்தேன்.
8 அவன் தெரு வழியாக நடந்துபோய்,
அதன் கோடியில் அவள் வீட்டை நோக்கிச் சென்றான்.
9 அது மாலை நேரம், பொழுது மயங்கும் வேளை;
அந்த இரவிலே, இருட்டும் நேரத்திலே,
10 அங்கே ஒரு பெண் அவனைக் காண வந்தாள்.
அவள் விலைமகளைப் போல உடுத்தி,
வஞ்சக நெஞ்சினளாய் வந்தாள்.
11 அவள் வெளிப் பகட்டு மிகுந்தவள்;
வெட்கத்தை ஒழித்தவள்;
வீட்டில் அவளது கால் தங்காது.
12 அவள் நடுத்தெருவிலும் நிற்பாள்;
முச்சந்தியிலும் நிற்பாள்;
மூலைமுடுக்குகளிலும் பதுங்கியிருப்பாள்.
13 அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு,
நாணமிலாத் துணிவுடன் அவனைப் பார்த்து,
14 "நான் பலிகளைப் படைக்க வேண்டியிருந்தது;
இன்று நான் என் பொருத்தனைகளை நிறைவேற்றிவிட்டேன்;
15 அதனாலேதான் உன்னைக் காணவந்தேன்;
உன்னை ஆவலோடு தேடினேன்; கண்டுகொண்டேன்.
16 என் மஞ்சத்தை மெத்தையிட்டு அழகுசெய்திருக்கின்றேன்;
எகிப்து நாட்டு வண்ணக் கம்பளம் விரித்திருக்கின்றேன்.
17 வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கக் கலவையிட்டு,
என் படுக்கையை மணம் கமழச் செய்திருக்கின்றேன்.
18 நீ வா; விடியற்காலம் வரையில் இன்பத்தில் மூழ்கியிருப்போம்;
இரவு முழுவதும் காதலாட்டத்தில் களித்திருப்போம்.
19 என் கணவன் வீட்டில் இல்லை.
நெடுந்தொலைப் பயணம் செய்யப் புறப்பட்டுப் போய்விட்டான்.
20 அவன் பை நிறையப் பணம் கொண்டுபோயிருக்கின்றான்;
முழுநிலா நாள்வரையில் திரும்பிவர மாட்டான்" என்று சொன்னாள்.
21 இவ்வாறு பல இனிய சொற்களால் அவனை அவள் இணங்கச் செய்தாள்;
நயமாகப் பேசி அவனை மயக்கிவிட்டாள்.
22 உடனே அவனும் உணர்வு மழுங்கினவனாய்
அவள் பின்னே சென்றான்;
வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போலவும்,
வலையில் சிக்கிக் கொள்ளப் போகும் கலைமானைப் போலவும்,
23 கண்ணியில் விழப்போகும் பறவையைப் போலவும் சென்றான்.
ஓர் அம்பு அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாயும் வரையில்
தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்.


24 ஆகையால் பிள்ளைகளே!
எனக்குச் செவிகொடுங்கள்;
நான் சொல்வதைக் கவனியுங்கள்.
25 உங்கள் மனத்தை அவள் வழிகளில் செல்லவிடாதீர்கள்;
மயக்கங்கொண்டு அவள் பாதைகளில் நடவாதீர்கள்.
26 அவள் பலரைக் குத்தி வீழ்த்தியிருக்கின்றாள்;
வலிமை வாய்ந்தோரையும் அவள் கொன்றிருக்கின்றாள்.
27 அவள் வீடு பாதாளத்திற்குச் செல்லும் வழி;
சாவுக்கு இட்டுச் செல்லும் பாதை.


அதிகாரம் 8[தொகு]

ஞானத்திற்குப் புகழுரை[தொகு]


1 ஞானம் அழைக்கிறதன்றோ?
மெய்யறிவு குரல் எழுப்புகிறதன்றோ?


2 வழியருகிலுள்ள உயரமான இடத்திலும்,
தெருக்கள் கூடும் இடத்திலும் அது நிற்கின்றது.


3 நகருக்குள் நுழையும் வாயிலருகே,
நகர வாயிலை நெருங்கும் இடத்திலே,
அது நின்று கொண்டு இவ்வாறு உரத்துச் சொல்லுகிறது: [1]


4 மானிடரே! உங்களுக்கே நான் இதை உரைக்கின்றேன்;
ஒவ்வொரு மனிதருக்கும் சொல்லுகின்றேன்.


5 முன்மதியற்றோரே! விவேகமாயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்;
மதிகேடரே! உணர்வைப் பெறுங்கள்.


6 நான் சொல்வதைக் கவனியுங்கள்;
மிகத் தெளிவாகச் சொல்கின்றேன்;
நான் ஒளிவு மறைவின்றிக் கூறுகின்றேன்.


7 ஏனெனில், என் வாய் உண்மையே பேசும்;
பொல்லாங்கான பேச்சு என் நாவுக்கு அருவருப்பு.


8 என் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை;
உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை.


9 உணர்வாற்றல் உள்ளோர்க்கு அவை யாவும் மிகத் தெளிவு;
அறிவை அடைந்தோர்க்கு அவை நேர்மையானவை.


10 வெள்ளியைவிட மேலாக என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்;
பசும் பொன்னைவிட மேலாக அறிவை விரும்புங்கள்.


11 பவளத்திலும் ஞானமே சிறந்தது;
நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.


12 நானே ஞானம்; நான் விவேகத்தோடு வாழ்கின்றேன்;
அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளேன்.


13 ஆண்டவருக்கு அஞ்சுவது தீமையைப் பகைக்கச் செய்யும்;
ஆணவத்தையும் இறுமாப்பையும்
தீமையையும் உருட்டையும் புரட்டையும் நான் வெறுக்கின்றேன்.


14 திட்டம் இடுவதும் நானே; இட்டதைச் செய்வதும் நானே.
உணர்வும் நானே; வலிமையும் எனதே.


15 அரசர் ஆட்சி செலுத்துவதும் என்னால்;
ஆட்சியாளர் சட்டம் இயற்றுவதும் என்னால்.


16 அதிகாரிகள் ஆளுவதும் என்னாலே;
உலக நீதிபதிகள் அனைவரும் உண்மைத் தீர்ப்பு வழங்குவதும் என்னாலே,


17 எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்;
என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.


18 என்னிடம் செல்வமும் மேன்மையும்,
அழியாப் பொருளும் அனைத்து நலமும் உண்டு.


19 என்னை அடைந்தவர்கள் பெறும் பயன்
பசும்பொன்னைவிடச் சிறந்தது;
என்னை அடைந்தவர்களுக்குக் கிடைக்கும் விளைச்சல்
தூய வெள்ளியை விட மேலானது.


20 நான் நேர்மையான வழியைப் பின்பற்றுகின்றேன்;
என் பாதை முறையான பாதை.


21 என்மீது அன்புகூர்வோருக்குச் செல்வம் வழங்குகின்றேன்;
அவர்களுடைய களஞ்சியங்களை நிரப்புகின்றேன்.


22 ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, [2]
தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே,
என்னைப்படைத்தார். [3]


23 தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே,
நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.


24 கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்;
பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை.


25 மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே,
குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.


26 அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே,
உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.


27 வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது,
கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது,
நான் அங்கே இருந்தேன்.


28 உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது,
ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது,
நான் அங்கே இருந்தேன்.


29 அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி,
அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது,
பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது,


30 நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் [3] இருந்தேன்;
நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்;
எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன்.


31 அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்;
மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.


32 எனவே, பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்!


33 நற்பயிற்சி பெற்று ஞானத்தை அடையுங்கள்;
அதைப் புறக்கணியாதீர்கள்.


34 என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று,
என் கதவு நிலையருகில் காத்திருந்து,
எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!


35 என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்;
ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.


36 என்னைத் தேடி அடையாதோர் தமக்குக் கேடு வருவித்துக் கொள்வர்;
என்னை வெறுக்கும் அனைவரும் சாவை விரும்புவோர் ஆவர்!


குறிப்புகள்

[1] 8:1-3 = நீமொ 1:20-21.
[2] 8:22 - "படைப்பின் தொடக்கத்திலேயே" என்பது
"வழியின் தொடக்கம்" என எபிரேய பாடத்தில் உள்ளது.
[3] 8:22 = திவெ 3:14.

(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை