திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/மீக்கா/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
"நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும்; பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்." - மீக்கா 1:4.

மீக்கா (The Book of Micah) [1][தொகு]

முன்னுரை

மீக்கா இறைவாக்கினர் யூதாவில் உள்ள நாட்டுப்புற நகர் ஒன்றில் தோன்றியவர். ஒசேயா, எசாயா ஆகியோரின் காலத்தவர்.

இஸ்ரயேல் மக்கள் நேர்மையற்று நடந்தனர்; அநீதிக்குத் தலை வணங்கினர்; தீச்செயல்கள் பல புரிந்தனர்; ஏழைகளை ஏமாற்றினர்; அனாதைகளை நசுக்கினர். தென்னாட்டினரான யூதா மக்களும் இதுபோன்றே வாழ்ந்து வந்தனர். எனவே இஸ்ரயேல் மக்களுக்கு ஆமோஸ் இறைவாக்கினர் முன்னறிவித்த தண்டனைத் தீர்ப்பு தம் நாட்டினர் மீதும் வரும் என்று மீக்காவும் முன்னறிவித்தார். அதே நேரத்தில் மீட்புப் பற்றியும் முன்னறிவித்தார்.

மீக்கா[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இஸ்ரயேல்மீது தண்டனைத் தீர்ப்பு 1:1 - 3:12 1361 - 1365
2. மீட்பும் அமைதியும் 4:1 - 5:15 1365 - 1368
3. எச்சரிக்கையும் வருங்கால நம்பிக்கையும் 6:1 - 7:20 1368 - 1371

மீக்கா (The Book of Micah)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]


1 யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு,
எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில்
மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு
அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக்
கண்ட காட்சி இதுவே: [*]

சமாரியாவையும் எருசலேமையும் பற்றிய ஓலம்[தொகு]


2 மக்களினங்களே, நீங்கள் அனைவரும் கேளுங்கள்;
நிலவுலகே, அதில் உள்ளவையே, செவிகொடுங்கள்.
தலைவராகிய ஆண்டவர் தம் திருக்கோவிலிருந்து
உங்களுக்கு எதிராகச் சான்றுபகரப் போகிறார்.


3 இதோ! ஆண்டவர் தாம் தங்குமிடத்திலிருந்து
புறப்பட்டு வருகின்றார்;
அவர் இறங்கிவந்து நிலவுலகின் மலையுச்சிகள் மிதிபட நடப்பார்.


4 நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும்,
பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும்,
அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும்;
பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.


5 யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும்
இஸ்ரயேல் குடும்பத்தாரின் பாவங்களை முன்னிட்டுமே
இவை எல்லாம் நேரிடும்.
யாக்கோபின் குற்றத்திற்குக் காரணம் யாது?
சமாரியா அன்றோ!
யூதாவின் தொழுகைமேடுகளுக்குக் காரணம் யாது?
எருசலேம் அன்றோ!


6 ஆதலால், சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும்
திராட்சை நடும் தோட்டமாகவும் செய்திடுவேன்;
அதன் கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு,
அதன் அடித்தளங்கள் வெளியிலே தெரியும்படி செய்வேன்.


7 அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம்
துகள் துகளாக நொறுக்கப்படும்;
அதன் பணயங்கள் எல்லாம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்;
அதன் சிலைகளை எல்லாம் உடைத்து கற்குவியல் ஆக்குவேன்;
ஏனெனில், விலைமகளுக்குரிய பணயமாக அவை சேர்க்கப்பட்டன;
விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும்.


8 இதை முன்னிட்டே நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்;
வெறுங்காலோடு ஆடையின்றித் திரிவேன்;
குள்ளநரிகளைப்போல் ஊளையிடுவேன்;
நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன்.


9 ஏனெனில், சமாரியாவின் புண் ஆறாது;
யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது;
என் மக்களின் வாயிலாம் எருசலேமையும் வந்து எட்டியுள்ளது.

எதிரி எருசலேமின் அருகில் வந்துள்ளான்[தொகு]


10 காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்; கதறியழவும் வேண்டாம்;
பெத்லயப்ராவில் புழுதியில் விழுந்து புரளுங்கள்.


11 சாபீரில் குடியிருப்போரே,
ஆடையின்றி மானக்கேடுற்று அகன்று போங்கள்;
சானானில் குடியிருப்போரும் வெளியே வருவதில்லை;
பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும்.
அங்கு உங்களுக்கு அடைக்கலம் கிடைக்காது.


12 மாரோத்தில் குடியிருப்போர் நன்மை வரும் என
ஆவலோடு காத்திருக்கின்றனர்;
ஏனெனில், தீமை ஆண்டவரிடம் இருந்து இறங்கி
எருசலேமின் வாயில்மேல் விழுந்தது.


13 இலாக்கீசில் குடியிருப்போரே,
விரைந்தோடும் குதிரைகளைத் தேரிலே பூட்டுங்கள்;
மகள் சீயோனின் பாவத்திற்கு ஊற்று நீங்களே;
இஸ்ரயேலின் குற்றங்கள் முதலில் காணப்பட்டது உங்களிடம்தான்.


14 ஆதலால், மோரசேத்துகாத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய்;
அக்சீபின் வீடுகள் இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும்.


15 மாரேசாவில் குடியிருப்போரே,
கொள்ளைக்காரன் ஒருவன் உங்கள்மேல்
திரும்பவும் வரும்படி செய்வேன்;
இஸ்ரயேலின் மேன்மை அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும்.


16 உங்கள் அருமைப் பிள்ளைகளுக்காகத் துக்கங் கொண்டாட
உங்கள் தலையை மொட்டையடித்துக்கொள்ளுங்கள்;
கழுகைப்போல் முற்றிலும் மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் அவர்கள் உங்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு
நாடுகடத்தப்படுவார்கள்.


குறிப்பு

[*] 1:1 = 2 அர 15:32-16:20; 18:1-20:21;
2 குறி 27:1-7; 28:1-32:33.

அதிகாரம் 2[தொகு]

எளியோரை ஒடுக்குவோருக்கு வரும் தண்டனை[தொகு]


1 தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து
தீச்செயல் புரியத் திட்டமிட்டுக்
கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு!
பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கைவலிமையினால்
அவர்கள் அதைச்செய்து முடிக்கின்றார்கள்.


2 வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு,
அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்;
வீடுகள்மேல் இச்சை கொண்டு
அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்;
ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும்
உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.


3 ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே:
'இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்;
அதனினின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது;
நீங்கள் ஆணவம் கொண்டு நடக்கமாட்டீர்கள்;
ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும்.


4 அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி,
'அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே;
ஆண்டவருடைய மக்களின் உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே!
நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக்
கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே!'
என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.


5 ஆதலால், நூல்பிடித்துப் பாகம் பிரித்து
உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.


6 அவர்கள் பிதற்றுவது:
'சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்;
அவற்றைக் குறித்துப் பேசவேண்டாம்;
மானக்கேடு நம்மை அணுகாது.


7 யாக்கோபின் குடும்பத்தாரே,
ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ?
இவற்றைச் செய்பவர் அவர்தாமோ?
நேர்மையாய் நடப்போரிடம் அவர் பரிவுடன் பேசமாட்டாரோ?'


8 ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப்
பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்!
போரில் நாட்டம் கொள்ளாமல், அமைதியை நாடுவோரின்
மேலாடையைப் பறிக்கின்றீர்கள்;
இதனால், அவர்களின் மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்;


9 என் மக்களின் கூட்டத்திலுள்ள பெண்களை
அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து விரட்டுகின்றீர்கள்;
அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம்
என் மாட்சி என்றும் விளங்காதவாறு செய்துவிடுகின்றீர்கள்.


10 எழுந்து அகன்றுபோங்கள்;
இது இளைப்பாறும் இடம் அல்ல;
நாட்டில் தீட்டு ஏற்பட்டுவிட்டது;
அது அழிவைக் கொண்டுவரும்.
அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.


11 'திராட்சை இரசத்தையும் மதுவையும் பற்றி
உங்களுக்கு உரையாற்றுவேன்' என்று கூறி,
வீண் சொற்களையும் பொய்களையும் பிதற்றுகிறவன்தான்
இம்மக்களுக்கு ஏற்ற உரையாளன்!


12 யாக்கோபே! நான் உங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டுவேன்;
இஸ்ரயேலில் எஞ்சியோரை ஒன்றாகத் திரட்டுவேன்;
இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை
ஆடுகளைக் கிடையில் மடக்குவது போலவும்,
மந்தையை மேய்ச்சல் நிலத்தில் வளைப்பது போலவும்
ஒன்றாகச் சேர்ப்பேன்.
13 அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத்
தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்;
அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்;
ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்."


(தொடர்ச்சி): மீக்கா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை