திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 31 முதல் 33 வரை

விக்கிமூலம் இலிருந்து
யாக்கோபு தம் சகோதரர் ஏசாவுடன் சமாதானம் செய்துகொள்கிறார் (தொநூ 33). ஓவியர்: பீட்டர் பவுல் ரூபன்சு (1577-1640). காப்பிடம்: எசுக்காட்லாந்து.

தொடக்க நூல்[தொகு]

அதிகாரங்கள் 31 முதல் 33 வரை

அதிகாரம் 31[தொகு]

யாக்கோபு லாபானிடமிருந்து தப்பியோடல்[தொகு]


1 லாபானின் புதல்வர்,
'நம் தந்தைக்குரிய யாவற்றையும் யாக்கோபு கைப்பற்றி
அவருடைய சொத்தைக்கொண்டே,
இந்தச் செல்வத்தை எல்லாம் சேர்த்துக்கொண்டான்'
என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதை யாக்கோபு கேட்டார்.
2 லாபானின் மனமும் முன்புபோல் இல்லை என்று யாக்கோபு கண்டார்.
3 ஆண்டவர் யாக்கோபை நோக்கி,
"உன் மூதாதையரின் நாட்டிற்கும்
உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ;
நான் உன்னோடு இருப்பேன்" என்றார்.
4 எனவே யாக்கோபு ராகேலையும் லேயாவையும்
தம் மந்தை இருந்த புல்வெளிக்கு வரும்படி ஆளனுப்பினார்.
5 பிறகு அவர் அவர்களை நோக்கி,
"உங்கள் தந்தையின் மனம் என்பால் முன்பு போல் இல்லை என்று காண்கிறேன்.
என் தந்தையின் கடவுளோ என்னோடு இருந்து வருகிறார்.
6 உங்கள் தந்தைக்காக முழு வலிமையுடன் உழைத்தேன்
என்று உங்களுக்குத் தெரியும்.
7 உங்கள் தந்தையோ என்னை ஏமாற்றி,
என் கூலியைப் பத்து முறை மாற்றினார்.
அவர் வழியாக எனக்கு எவ்விதத் தீங்கும் நேரிடக் கடவுள் விடவில்லை.
8 ஏனெனில், 'கலப்பு நிறமானவை உனக்குரிய ஊதியம்' என்றபோது,
ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளையே ஈன்று வந்தன.
'வரியுள்ளவை உனக்குரிய ஊதியம்' என்றபோதோ
ஆடுகளெல்லாம் வரியுடைய குட்டிகளையே ஈன்றன.
9 இவ்விதமாய்க் கடவுளே
உங்கள் தந்தையின் மந்தைகளை எடுத்து எனக்குத் தந்தருளினார்.


10 ஆடுகள் சினையுறும் காலத்தில் நான் ஒரு கனவு கண்டேன்.
அதில் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது,
ஆடுகளோடு பொலியும் கிடாய்கள் வரியும், கலப்பு நிறமும்,
புள்ளியும் உடையனவாய் இருந்தன.
11 அக்கனவில் கடவுளுடைய தூதர்,
'யாக்கோபு!' என்று என்னை அழைக்க,
நான், 'இதோ! அடியேன்' என்றேன்.
12 அவர், 'உன் கண்களை உயர்த்திக் கிடாய்கள் யாவும்
வரியும் கலப்புநிறமும் புள்ளியும் உடைய ஆடுகளுடன் பொலிவதைப் பார்.
ஏனெனில், லாபான் உனக்குச் செய்தது அனைத்தையும் நான் கண்டேன்.
13 நீ கல்லைத் திருப்பொழிவு செய்து,
எனக்கு நேர்ச்சை செய்து கொண்ட இடமாகிய பெத்தேலின் இறைவன் நானே.
நீ உடனே எழுந்து இந்த நாட்டை விட்டுப் புறப்பட்டு
உன் பிறந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்' என்று கூறினார்" என்றார். [1]
14 அதற்கு ராகேலும், லேயாவும்,
"எங்கள் தந்தையின் குடும்பத்தில் எங்களுக்குப்
பங்கும் உரிமைச் சொத்தும் இன்னும் உண்டோ?
15 அவர் எங்களை அன்னியப் பெண்களைப் போல்
விலைக்கு விற்று,
எங்களுக்காக வாங்கியதையும் முழுமையாக விழுங்கிவிடவில்லையா?
16 ஆனால், செல்வத்தையெல்லாம் எங்கள் தந்தையிடமிருந்து கடவுள் பிடுங்கி,
நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரிமையாக்கினார்.
ஆகையால் கடவுள் உங்களுக்குச் சொன்னதையெல்லாம் செய்யுங்கள்" என்றனர்.


17 அப்போது யாக்கோபு,
தம் மக்களையும், மனைவியரையும்
ஒட்டகங்களின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
18 பதான் அராமில் ஈட்டிய செல்வம் அனைத்தையும் திரட்டிக்கொண்டு,
மந்தைகள் எல்லாவற்றையும் ஓட்டிக்கொண்டு,
கானான் நாட்டிலிருந்த தம் தந்தை ஈசாக்கை நோக்கிப் பயணமானார்.


19 லாபான் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கப் போயிருந்தபொழுது,
ராகேல் தம் தந்தையின் குலதெய்வச் சிலைகளைத் திருடிக் கொண்டுவிட்டார்.
20 மேலும் யாக்கோபு,
தாம் ஓடிப்போகிற செய்தியை
அரமேயனான லாபானுக்குத் தெரிவிக்காமல் ஏமாற்றிவிட்டார்.
21 அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
நதியைக் கடந்து கிலயாது மலைநாட்டை நோக்கித் தப்பியோடினார்.

லாபான் யாக்கோபைத் துரத்திப் பிடித்தல்[தொகு]


22 யாக்கோபு தப்பியோடிய செய்தி
லாபானுக்கு மூன்றாம் நாள் தெரிவிக்கப்பட்டது.
23 உடனே அவன் தன் உறவினர்களைக் கூட்டிக்கொண்டு,
ஏழு நாள்களாக அவரைப் பின்தொடர்ந்து சென்று,
அவர் இருந்த கிலயாது மலைப்பகுதியை நெருங்கினான்.
24 அன்றிரவு கனவில் அரமேயனான லாபானுக்குக் கடவுள் தோன்றி அவனை நோக்கி,
'நீ யாக்கோபிடம் நல்லதோ கெட்டதோ யாதொன்றும் பேச வேண்டாம்' என எச்சரித்தார்.


25 லாபான் யாக்கோபை நெருங்கியபொழுது,
யாக்கோபு கிலயாது மலைப்பகுதியில் கூடாரம் அடித்திருந்தார்.
அம்மலைப் பகுதியில் லாபானும் அவன் உறவினரும் கூடாரமடித்துத் தங்கினர்.
26 அவன் யாக்கோபை நோக்கி:
"நீர் இப்படிச் செய்யலாமா?
என்னை ஏமாற்றி என் புதல்வியரை வாள் முனையில் பிடித்த
கைதிகளைப் போல் இட்டுச் செல்லலாமா?
27 எனக்கு ஒன்றும் தெரிவிக்காமல் என்னை ஏமாற்றிவிட்டு,
ஏன் இரகசியமாய் ஓடி வந்தீர்?
நான் மேளதாள வாத்தியங்களுடன்
மகிழ்ச்சியாய் உங்களை வழியனுப்பி வைத்திருப்பேனே!
28 என் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும்
நான் முத்தமிட விடாமல் செய்துவிட்டது ஏன்?
நீர் முட்டாள்தனமாக நடந்து கொண்டீர்.
29 இப்போதோ, உமக்குத் தீங்கிழைக்க என்னால் முடியும்.
ஆனால் நேற்றிரவு உம் தந்தையின் கடவுள் என்னை நோக்கி,
'நீ யாக்கோபிடம் நல்லதோ கெட்டதோ யாதொன்றும் பேச வேண்டாம்' என்று எச்சரித்தார்.
30 உம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பும் ஆவலினால் நீர் இவ்வாறு வந்துவிட்டீர்.
ஆனால் என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்?" என்றான்.
31 யாக்கோபு அவனுக்கு மறுமொழியாக,
"நீர் உம் புதல்வியரை வன்முறையில்
என்னிடமிருந்து பிரித்து வைத்துக்கொள்வீர் என்று அஞ்சினேன்.
32 ஆனால், உம் குலதெய்வச் சிலைகளை யாரேனும் திருடியிருந்தால்,
அவன் உயிரோடு இருக்க வேண்டாம்.
உம்முடைய பொருள் ஏதாவது இங்கே என்னிடம் இருக்கின்றதா என்று
நம் உறவினர் முன்னிலையில் பரிசோதித்துப் பார்த்து எடுத்துக் கொள்ளும்" என்றார்.
அவற்றை ராகேல் திருடியிருந்தது யாக்கோபுக்குத் தெரியாது.


33 அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும்,
லேயாவின் கூடாரத்திலும்,
இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் நுழைந்து தேடிப்பார்த்தும்
ஒன்றையும் கண்டு பிடிக்கவில்லை.
பின் அவன் லேயாவின் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து,
ராகேலின் கூடாரத்திற்குள் நுழைந்தான்.
34 இதற்கிடையே ராகேல் குலதெய்வச் சிலைகளை எடுத்துத்
தம் ஒட்டகச் சேணத்தினுள் ஒளித்துவைத்து,
அதன் மேல் உட்கார்ந்துகொண்டார்.
லாபான் கூடாரமெங்கும் சோதித்துப் பார்த்தும்
ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை.
35 அவர் தன் தந்தையை நோக்கி,
"என் தலைவராகிய உம் முன்னிலையில் என்னால் நிற்க முடியவில்லை
என்று சினம்கொள்ள வேண்டாம்.
ஏனெனில், நான் மாதவிலக்காய் இருக்கிறேன்" என்றார்.
எனவே அவன் எவ்வளவு தேடிப்பார்த்தும்
குலதெய்வச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
36 அப்பொழுது யாக்கோபு சினமுற்று
லாபானுடன் வாதிட்டு மறுமொழியாகக் கூறியது:
"நான் செய்த குற்றம் என்ன?
நான் செய்த பாவம் என்ன?
ஏன் இப்படி என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்?
37 என் உடைமைகளெல்லாம் சோதித்துப் பார்த்தீரே;
உம் வீட்டுப் பொருளில் ஏதேனும் கண்டுபிடித்தீரா?
அப்படியானால், அதை என் உறவினர்,
உம் உறவினர் முன்னிலையில் இங்கே வையும்.
இவர்களே உமக்கும் எனக்கும் இடையே தீர்ப்பு வழங்கட்டும்
38 இதற்கானத்தானா நான் உம்மோடு இருபது ஆண்டுகளாக இருந்தேன்?
உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் சினை அழியவில்லையே!
உம்முடைய மந்தைக்கிடாய்களில் ஒன்றையும் நான் தின்னவில்லையே!
39 கொடிய விலங்குகளால் அடிபட்டவைகளை
நான் உம்மிடம் கொண்டுவரவில்லையே!
மாறாக அவற்றிற்கும் ஈடு செய்தேன்.
ஆனால் இரவிலோ பகலிலோ களவுபோனவற்றிற்காக
நீர் என் கையிலிருந்து ஈடு வாங்கிக்கொண்டீரே!
40 பகலில் கொடும் வெயிலும்
இரவில் கடும் குளிரும் என்னை வாட்டின.
அதனால் என் கண்களுக்கு உறக்கமே இல்லை.
41 இவ்விதமாய் நான் உமது வீட்டில் உம் புதல்வியருக்காகப்
பதினான்கு ஆண்டுகளும்
உம் மந்தைகளுக்காக ஆறு ஆண்டுகளுமாக
இந்த இருபதாண்டுகள் உம்மிடம் வேலை செய்தேன்.
நீரோ என் ஊதியத்தைப் பத்துமுறை மாற்றினீர்.
42 ஆபிரகாமின் கடவுளும்
ஈசாக்கின் அச்சமுமான என் தந்தையின கடவுள்
என்னோடு இருந்திராவிடில்
உண்மையாகவே நீர் என்னை வெறுங்கையனாய் அனுப்பியிருப்பீர்.
ஆனால், கடவுள் என் துன்பத்தையும் கடின உழைப்பையும் கண்டு
நேற்றிரவு உம்மை எச்சரித்திருக்கிறார்" என்றார்.

யாக்கோபு-லாபான் உடன்படிக்கை[தொகு]


43 அதற்கு மறுமொழியாக லாபான் யாக்கோபை நோக்கி,
"இப்புதல்வியர் என் புதல்வியர்;
இப்பிள்ளைகள் என் பிள்ளைகள்.
இம் மந்தை என் மந்தை.
நீர் காண்பவை யாவும் என்னுடையவையே.
இப்படியிருக்க, என் புதல்வியர்க்கோ
அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கோ
நான் இன்று என்ன செய்துவிடப்போகிறேன்?
44 வாரும்; நானும் நீரும் இப்பொழுது உடன்படிக்கை செய்துகொள்வோம்.
அது உமக்கும் எனக்குமிடையே சான்றாக இருக்கட்டும்" என்றான்.
45 எனவே யாக்கோபு ஒரு கல்லை எடுத்து,
நினைவுத்தூணாக நிறுத்தினார்.
46 யாக்கோபு தம் உறவினரை நோக்கி,
"கற்கள் சேகரித்துக்கொண்டு வாருங்கள்" என்றார்.
அவர்களும் கற்களைக் கொண்டு வந்து ஒரு குவியல் எழுப்பி,
அக்குவியல் அருகே உணவருந்தினர்.
47 அதற்கு லாபான் 'எகர்சகதுத்தா'[2] என்றும்
யாக்கோபு 'கலயேது' [3] என்றும் பெயரிட்டனர்.
48 பின்னர் லாபான்,
'இக்குவியல் இன்று உமக்கும் எனக்கும் சான்றாகுக' என்றான்.
ஆகவே, அதற்கு அவன் 'கலயேது' என்று பெயரிட்டான்.
49 மீண்டும் அவன்,
'நாம் ஒருவர் ஒருவரை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும்
ஆண்டவரே நம்மைக் கண்காணிப்பாராக!' என்று சொல்லி
அதற்கு 'மிஸ்பா' என்றும் பெயரிட்டான். [4]
50 மேலும் அவன்,
"நீர் என் புதல்வியரைத் துன்புறுத்தினாலோ,
அவர்களைத் தவிர வேறு பெண்களை மணந்து கொண்டாலோ,
நம்மிடையே வேறு எவரும் இல்லையெனினும்,
உமக்கும் எனக்குமிடையே கடவுளே சாட்சி என்பதை நினைவில்கொள்ளும்" என்றான்.
51 மீண்டும் லாபான் யாக்கோபை நோக்கி,
"இதோ இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் பாரும்.
இவற்றை எனக்கும் உமக்கும் இடையே நிறுத்தி வைத்துள்ளேன்.
52 நான் இந்தக் குவியலைக் கடந்து வந்து
உமக்குத் தீங்கிழைக்கமாட்டேன் என்பதற்கும்
நீர் இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் கடந்து வந்து
எனக்குத் தீங்கிழைக்க மாட்டீர் என்பதற்கும்
இந்தக் குவியல் சான்று; இந்த நினைவுத் தூண் சான்று.
53 ஆபிரகாமின் கடவுள், நாகோரின் கடவுள்,
அவர்களின் தந்தையின் கடவுள்,
நம்மிடையே நீதி வழங்குவாராக" என்றான்.
பின்னர் யாக்கோபு ஈசாக்கின் அச்சம் என்ற
தம் தந்தையின் கடவுள் பெயரால் ஆணையிட்டு வாக்களித்தார்.
54 பின்பு அவர் மலையின் மேல் பலி செலுத்தி
உணவு அருந்தும்படி தம் உறவினரை அழைத்தார்.
அவர்கள் உணவருந்திய பின் அன்றிரவு மலையிலேயே தங்கினார்கள்.

யாக்கோபு ஏசாவைச் சந்திக்கத் தயார்செய்தல்[தொகு]


55 அதிகாலையில் லாபான் எழுந்து,
தன் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும் முத்தமிட்டு
அவர்களுக்கு ஆசி வழங்கினான்.
பின்னர் அவன் அவர்களை விட்டுப்பிரிந்து
தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.


குறிப்புகள்

[1] 31:13 = தொநூ 28:18-32.
[2] 31:47 அரமேயத்தில், 'சாட்சியக் குவியல்' என்பது பொருள்.
[3] 31:47 எபிரேயத்தில், 'சாட்சியக் குவியல்' என்பது பொருள்.
[4] 31:49 எபிரேயத்தில், 'கண்காணித்தல்' என்பது பொருள்.


அதிகாரம் 32[தொகு]


1 பின்னர், யாக்கோபு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.
கடவுளின் தூதர்கள் வழியில் அவரைச் சந்தித்தார்கள்.
2 யாக்கோபு அவர்களைக் கண்டபோது,
'இதுதான் கடவுளின் படை' என்று கூறி,
அந்த இடத்திற்கு 'மகனயிம்' என்று பெயரிட்டார்.


3 பின்பு, யாக்கோபு ஏதோம் நாட்டிலுள்ள
சேயிர் பகுதியில் வாழ்ந்து வந்த தம் சகோதரன் ஏசாவிடம் தூதரை அனுப்பினார்.
4 அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
"நீங்கள் என் தலைவன் ஏசாவிடம் போய்,
உம் ஊழியனாகிய யாக்கோபு கூறுவது:
'நான் இதுவரை லாபானிடம் அன்னியனாய் தங்கியிருந்தேன்.
5 மாடுகளும், கழுதைகளும், ஆடுகளும்,
வேலைக்காரரும், வேலைக்காரிகளும் எனக்கு உள்ளனர்.
உம் பார்வையில் எனக்குத் தயை கிடைக்கும்படி
என் தலைவரான உமக்கு ஆளனுப்பி அறிவிக்கிறேன்' என்று சொல்லுங்கள்."


6 அத்தூதர் யாக்கோபிடம் திரும்பி வந்து,
"நாங்கள் உம் சகோதரர் ஏசாவிடம் போனோம்.
அவர் இதோ நானூறு பேருடன் உம்மைச் சந்திக்க வருகிறார்" என்றனர்.
7 யாக்கோபு மிகவும் அஞ்சிக் கலங்கித்
தம்முடன் இருந்த ஆள்களையும்,
ஆடுமாடு ஒட்டகங்களாகிய மந்தைகளையும் இரு பகுதிகளாகப் பிரித்தார்.
8 ஏனெனில், ஏசா வந்து ஒரு பகுதியைத் தாக்கினாலும்
எஞ்சிய பகுதியாவது தப்புமே என்று நினைத்துக் கொண்டார்.
9 மேலும் யாக்கோபு,
"என் மூதாதை ஆபிரகாமின் கடவுளும்
ஈசாக்கின் கடவுளுமான ஆண்டவரே!
நீர் என்னை நோக்கி,
'உன் சொந்த நாட்டிற்கும் உன் உறவினரிடமும் திரும்பிப் போ;
நான் உனக்கு நன்மையே புரிவேன்' என்று உரைத்தீர்.
10 அடியேனுக்கு நீர் காட்டிய பேரன்பு முழுவதற்கும்
நம்பிக்கைக்குரிய தன்மை முழுவதற்கும் நான் தகுதியற்றவன்.
நான் இந்த யோர்தானைக் கடந்து சென்றபோது
என்னிடமிருந்தது ஒரு கோல் மட்டுமே.
இப்போதோ, இரண்டு பரிவாரங்கள் உடையவன் ஆனேன்.
11 என் சகோதரர் ஏசாவுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன்.
அவர் கையினின்று என்னை விடுவித்தருளும்.
இல்லையேல் அவர் வந்து என்னையும் பிள்ளைகளையும்,
தாய்களையும் தாக்குவார்.
12 நீர் 'நான் உனக்கு உறுதியாக நன்மை புரிவேன்;
உன் வழிமரபை எண்ண முடியாத கடல் மணலைப் போலப் பெருகச் செய்வேன்"
என்று வாக்களித்துள்ளீர்' என்றார். [1]
13 அன்றிரவு அவர் அங்கேயே தங்கி,
தமக்குச் சொந்தமானவற்றிலிருந்து
14 சகோதரர் ஏசாவுக்கு அன்பளிப்பாக இருநூறு வெள்ளாடுகளையும்,
இருபது வெள்ளாட்டுக் கிடாய்களையும்,
இருநூறு செம்மறியாடுகளையும், இருபது செம்மறிக் கிடாய்களையும்,
15 முப்பது பெண் ஒட்டகங்களையும் அவற்றின் குட்டிகளையும்,
நாற்பது பசுக்களையும், பத்துக் காளைகளையும்,
இருபது பெண் கழுதைகளையும், பத்து ஆண் கழுதைகளையும் தேர்ந்தெடுத்தார்.
16 அவற்றுள் ஒவ்வொரு மந்தையையும்
வேலைக்காரர் கையில் தனித்தனியாய் ஒப்புவித்து,
'நீங்கள் மந்தைகளுக்கு இடையே இடம்விட்டு,
எனக்குமுன் ஓட்டிக்கொண்டு போங்கள்' என்று சொன்னார்.
17 பின்பு அவர் முதலில் போகிறவனை நோக்கிக்
கட்டளையிட்டுக் கூறியது:
"என் சகோதரர் ஏசா உனக்கு எதிர்ப்பட்டு,
'நீ யாருடைய ஆள்? நீ எங்கே போகிறாய்?
உனக்கு முன் செல்லும் இவை யாருடையன?' என்று உன்னிடம் கேட்டால்,
18 "இவை உம் ஊழியன் யாக்கோபினுடையவை.
அவர் தம் தலைவராகிய ஏசாவுக்கு இவற்றை அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார்.
அவரும் எங்கள் பின்னர் வருகிறார்' என்று நீ சொல்வாய்" என்றார்.
19 அதேவிதமாய் அம்மந்தைகளை ஓட்டிச் செல்லும்
இரண்டாம், மூன்றாம் ஆள்களுக்கும்
மற்ற அனைவருக்கும் கட்டளையிட்டுக் கூறியது:
"ஏசாவை நீங்கள் சந்திக்கும்பொழுதும்,
20 'இதோ உம் ஊழியன் யாக்கோபு எங்கள் பின்னால் வருகிறார்' என்று சொல்லுங்கள்".
ஏனெனில், யாக்கோபு
'நான் அவர் முன்னே இவ்வன்பளிப்புகளை அனுப்பி அவரை அமைதிப்படுத்துவேன்.
பின்பு நான் அவரை நேரில் காணும்பொழுது,
அவர் ஒருவேளை என்னை ஏற்றுக் கொள்வார்' என்று நினைத்தார்.

யாக்கோபு 'இஸ்ரயேல்' என்ற பெயர் பெறுதல்[தொகு]


21 அவ்விதமே யாக்கோபின் அன்பளிப்புகள் அவருக்கு முன் சென்றன.
அவரோ அன்றிரவு கூடாரத்தில் தங்கினார்.
22 அந்த இரவிலேயே அவர் எழுந்து,
தம் இரு மனைவியரையும் இரு வேலைக்காரிகளையும்
புதல்வர் பதினொருவரையும் அழைத்துக் கொண்டு
யாபோக்கு ஆற்றின் துறையைக் கடந்தார்.
23 அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது,
தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார்.
24 யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க,
ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார்.
25 யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர்
அவரது தொடைச்சந்தைத் தொட்டார்.
யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது.
26 அப்பொழுது ஆடவர்
'என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது' என,
யாக்கோபு, "நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்"
என்று மறுமொழி சொன்னார். [2]
27 ஆடவர், "உன் பெயர் என்ன?" என,
28 அவர், "நான் யாக்கோபு" என்றார்.
அப்பொழுது அவர், "உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது,
"இஸ்ரயேல்" [3] எனப்படும்.
ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி
வெற்றி கொண்டாய்" என்றார். [4]
29 யாக்கோபு அவரை நோக்கி
"உம் பெயரைச் சொல்லும்" என்றார்.
அவர் "என் பெயரை நீ கேட்பதேன்?" என்று,
அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார். [5]
30 அப்பொழுது யாக்கோபு,
"நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும்
உயிர் தப்பிப் பிழைத்தேன்" என்று சொல்லி,
அந்த இடத்திற்குப் 'பெனியேல்' [6] என்று பெயரிட்டார்.
31 அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன்
கதிரவன் தோன்றினான்.
தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார்.
32 அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை
தொடைச் சந்துச் சதைநாரை உண்பதில்லை.
ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின்
தொடைச் சந்துச் சதைநாரைத் தொட்டார்.


குறிப்புகள்

[1] 32:12 = தொநூ 12:17.
[2] 32:26 = ஓசே 12:3-4.
[3] 32:28 எபிரேயத்தில், 'இறைவனோடு போராடுகிறான்' என்பது பொருள்.
[4] 32:28 = தொநூ 35:10.
[5] 32:29 = நீத 13:7-18.
[6] 32:30 எபிரேயத்தில், 'இறைவனின் முகம்' என்பது பொருள்.


அதிகாரம் 33[தொகு]

யாக்கோபு-ஏசா சந்திப்பு[தொகு]


1 யாக்கோபு தம் கண்களை உயர்த்திப் பார்க்க,
ஏசா நானூறு ஆள்களோடு வருவதைக் கண்டார்.
உடனே அவர் லேயாவிடமும் ராகேலிடமும்
இரு வேலைக்காரிகளிடமும் பிள்ளைகளைப் பிரித்து ஒப்படைத்தார்.
2 முதல் வரிசையில் வேலைக்காரிகளையும்
அவர்களுடைய பிள்ளைகளையும்,
இரண்டாம் வரிசையில் லேயாவையும், அவருடைய பிள்ளைகளையும்,
இறுதியில் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினார்.
3 அவர் அவர்களுக்கு முன் சென்று
தம் சகோதரரை நெருங்கிச் செல்கையில்
ஏழு முறை தரையில் வீழ்ந்து அவரை வணங்கினார்.


4 ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி
அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார்.
இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்.
5 பின் கண்களை உயர்த்தி,
பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு,
"உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?" என்று கேட்டார்.
அவரும் "உம் அடியானாகிய எனக்குக்
கடவுள் கருணையுடன் அருளிய பிள்ளைகளே இவர்கள்"
என்று பதில் சொன்னார்.
6 அப்பொழுது வேலைக்காரிகளும்
அவர்களுடைய பிள்ளைகளும் அணுகி அவரை வணங்கினர்.
7 அவ்வாறே லேயாவும் அவருடைய பிள்ளைகளும் வணங்கினர்.
இறுதியாக யோசேப்பும் ராகேலும் நெருங்கி வந்து வணங்கினர்.
8 அப்போது ஏசா யாக்கோபை நோக்கி,
"எனக்கு எதிர்கொண்டு வந்த பரிவாரம் எதற்காக?" என்று கேட்டார்.
யாக்கோபு, "என் தலைவராகிய உம் பார்வையில்
எனக்குத் தயை கிடைப்பதற்காக" என்று பதில் சொன்னார்
9 ஏசா, "என் சகோதரனே,
ஏற்கெனவே என்னிடம் மிகுதியாக உள்ளது.
உன்னுடையதை நீயே வைத்துக்கொள்" என்றார்.
10 யாக்கோபு, "இல்லை.
உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருப்பது உண்மையானால்
நான் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்.
உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல் இருக்கிறது.
ஏனெனில், நீர் எனக்குக் கனிவு காட்டியுள்ளீர்.
11 எனவே, உமக்கு அடியேன் கொண்டு வந்துள்ள
அன்பளிப்பைத் தயவு செய்து ஏற்றுக் கொள்ளும்.
ஏனெனில், கடவுளின் கருணையினால் எனக்கு வேண்டிய மட்டும் உள்ளது"
என்று சொல்லி வற்புறுத்த, அவரும் அவற்றைப் பெற்றுக்கொண்டார்.


12 பிறகு அவர் "நாம் சேர்ந்து பயணம் செய்வோம்.
உனக்குமுன் நான் செல்வேன்" என்றார்.
13 அதற்கு யாக்கோபு,
"பச்சிளங்குழந்தைகளும் பால் கொடுக்கும் ஆடு, மாடுகளும்
என்னிடம் உள்ளன என்று என் தலைவராகிய உமக்குத் தெரியும்.
அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக் கொண்டு வந்தால்,
என் மந்தையெல்லாம் செத்துப் போகும்.
14 தலைவராகிய நீர் எனக்குமுன்னே செல்வீராக!
நானோ மந்தைகள், பிள்ளைகளின் நடைக்கு ஏற்ப
மெதுவாக வந்து சேயிரில் உம்மைச் சந்திப்பேன்" என்றார்.
15 அதற்கு ஏசா,
"அப்படியானால் என்னுடைய ஆள்களில் சிலரை
உன்னிடம் விட்டுச் செல்கிறேன்" என்று சொல்ல,
அவர் "வேண்டாம்;
என் தலைவராகிய உமது பார்வையில்
எனக்குத் தயை கிடைத்ததே போதும்" என்றார்.


16 ஆகையால், ஏசா அன்றே புறப்பட்டு,
தாம் வந்த வழியே சேயிருக்குத் திரும்பினார்.
17 யாக்கோபு சுக்கோத்தை வந்தடைந்தவுடன்,
அங்கே தமக்கென்று ஒரு வீடு கட்டினார்.
தம் மந்தைகளுக்குக் குடில்களை அமைத்தார்.
இதனால் அந்த இடத்திற்குச் 'சுக்கோத்து' [1] என்று பெயரிட்டார்.


18 இவ்வாறு யாக்கோபு பதான் அராமிலிருந்து திரும்பி வந்தபின்
கானான் நாட்டைச் சார்ந்த செக்கேம் நகருக்கு
நலமுடன் வந்து சேர்ந்தார்.
அந்நகருக்கு எதிரே பாளையம் இறங்கினார்.
19 கூடாரமடித்துத் தங்கிய அந்நிலப்பகுதியை
செக்கேமின் தந்தை ஆமோரின் புதல்வரிடமிருந்து
நூறு வெள்ளிக்காசுக்கு அவர் விலைக்கு வாங்கினார். [2]
20 பின்பு, அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி
அதற்கு 'ஏல்-எலோகே-இஸ்ரயேல்' [3] என்று பெயரிட்டார்.


குறிப்புகள்

[1] 33:17 எபிரேயத்தில் 'குடில்' என்பது பொருள்.
[2] 33:19 = யோசு 24:32; யோவா 4:5.
[3] 33:20 எபிரேயத்தில் 'இஸ்ரயேலின் கடவுளாகிய இறைவன்' என்பது பொருள்.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 34 முதல் 35 வரை