திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோசுவா/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
யோசுவாவின் ஒற்றர்களும் இராகாபு என்னும் பெண்மணியும். இத்தாலிய ஓவியப் பாணி. காலம்: 17ஆம் நூற்றாண்டு.

யோசுவா (The Book of Joshua) [1][தொகு]

முன்னுரை

இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, மோசேக்குப் பின் இஸ்ரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் யோசுவா. இவர் கானான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, இஸ்ரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது 'யோசுவா' என்னும் இந்நூல்.

இந்நூலின் காணக்கிடக்கும் நிகழ்ச்சிகளுள், யோர்தான் ஆற்றைக் கடத்தல், எரிகோவின் வீழ்ச்சி, வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறுதல், உடன்படிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

முன்பு மோசேயின் மூலம் இஸ்ரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும்.


யோசுவா[தொகு]

நூலின் பிரிவுகள்


பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. கானான் நாட்டைக் கைப்பற்றல்

அ) யோசுவா தலைமைப் பொறுப்பேற்றல்
ஆ) இஸ்ரயேலரின் வெற்றிகள்
இ) தோல்வியுற்ற மன்னர்களின் பெயர்கள்

1:1 - 12:24

1:1-18
2:1 - 11:23
12:1-23

326 - 344

326 - 327
327 - 343
343 - 344

2. நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தல்

அ) யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதி
ஆ) யோர்தானுக்குக் மேற்கே உள்ள பகுதி
இ) அடைக்கல நகர்கள்
ஈ) லேவியர்க்குரிய நகர்கள்

13:1 - 21:45

13:1-33
14:1 - 19:51
20:1-9
21:1-45

344 - 356

344 - 345
346 - 354
354
354 - 356

3. கிழக்கே குடியேறிய குலத்தார் 22:1-34 356 - 358
4. யோசுவாவின் இறுதி மொழிகள் 23:1-16 359 - 360
5. செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பித்தல் 24:1-33 360 - 362

யோசுவா (The Book of Joshua)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை


அதிகாரம் 13 நிமித்திகன் தந்தை பெயர் என்ன[தொகு]

கானானைக் கைப்பற்ற யோசுவாவுக்கு அழைப்பு[தொகு]


1 ஆண்டவரின் ஊழியர் மோசே இறந்தபின், நூனின் மகனும் மோசேயின் உதவியாளருமாகிய யோசுவாவிடம் ஆண்டவர் பின்வருமாறு கூறினார்:
2 "என் ஊழியன் மோசே இறந்துவிட்டான். இப்பொழுது நீ புறப்பட்டு, யோர்தானைக் கடந்து, இந்த மக்கள் அனைவரோடும் நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் செல்.
3 மோசேக்கு நான் கூறியவாறு உன் காலடிபடும் இடத்தை எல்லாம் உங்களுக்குக் கொடுப்பேன்.
4 பாலைநிலத்திலிருந்து இந்த லெபனோன் வரையிலும், யூப்பிரத்தீசு பேராறு தொடங்கி இத்தியர் நாடு முழுவதுமாகக் கதிரவன் மறையும் பெருங்கடல் வரையிலும் உங்கள் நிலமாக இருக்கும்.
5 உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன்; கைவிடவும் மாட்டேன். [1][2]
6 வீறுகொள், துணிந்துநில். ஏனெனில் இம்மக்களின் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நாட்டை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்வாய். [3]
7 திடமும் உறுதியும் கொண்டு என் ஊழியன் மோசே கட்டளையிட்ட எல்லாச் சட்டங்களையும் கடைப்பிடிப்பதில் கவனமாயிரு. நீ அதனின்று வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே. அப்பொழுதுதான் நீ செல்லும் வழியெல்லாம் வெற்றி பெறுவாய்.
8 இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம் எல்லாம் நலம் பெறுவாய்; வெற்றி காண்பாய்.
9 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்."


10 யோசுவா மக்களின் மேற்பார்வையாளருக்குக் கட்டளையிட்டுக் கூறியது:
11 பாளையத்தின் நடுவே சென்று இவ்வாறு மக்களுக்குரிய கட்டளையாகக் கூறுங்கள்: "உங்களுக்கு வேண்டிய உணவைத் தயார் செய்யுங்கள். ஏனெனில், இன்னும் மூன்று நாள்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் உடைமையாக உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உரிமையாக்கிக்கொள்ள இந்த யோர்தானைக் கடப்பீர்கள்."


12 ரூபன், காத்தின் மக்களுக்கும், மனாசேயின் அரைக் குலத்திற்கும் யோசுவா கூறியது:
13 "உங்களுக்கு ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டதை நினைவுகொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அமைதி அருள்வார். இந்நாட்டை உங்களுக்கு அளிப்பார்.
14 உங்கள் மனைவியரும், குழந்தைகளும், கால்நடைகளும், மோசே உங்களுக்குக் கொடுத்த கீழை யோர்தானில் தங்கலாம். ஆனால் வலிமைமிக்க நீங்கள் படைக்கலம் தாங்கிய போர் வீரர்களாக உங்கள் சகோதரர்களுக்கு முன்பாகக் கடந்து சென்று அவர்களுக்கு உதவுங்கள்.
15 ஆண்டவர் உங்களுக்குச் செய்ததுபோல் உங்கள் சகோதரர்களையும் அந்நாட்டில் குடியேற்றி அவர்களுக்கும் அமைதி அருள்வார். அதுவரை அவர்களுக்கு உதவுங்கள். அவர்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர். பின்னர், கதிரவன் உதிப்பதும், கடவுளின் ஊழியர் மோசே உங்களுக்கு அளித்ததும், நீங்கள் ஏற்கெனவே உடைமையாக்கிக் கொண்டதுமான கீழையோர்தானுக்குத் திரும்பிவந்து அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்." [4]


16 அவர்கள் யோசுவாவிடம், "நீர் எங்களுக்குக் கட்டளை இடுவதை நாங்கள் செய்வோம். நீர் அனுப்பும் இடத்திற்கெல்லாம் நாங்கள் செல்வோம்.
17 நாங்கள் மோசேக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்ததுபோல் உமக்கும் கீழ்ப்படிவோம். உம் கடவுளாகிய ஆண்டவர் மோசேயுடன் இருந்ததுபோல் உம்மோடும் இருப்பாராக.
18 உம் வாய் மொழியை எதிர்ப்பவன் எவனும், நீர் எங்களுக்குக் கட்டளை இடுபவை அனைத்திற்கும் செவிகொடுக்காதவன் எவனும் கொல்லப்பட வேண்டும். வீறுகொண்டு துணிந்து நிற்பீராக" என்றனர்.

குறிப்புகள்

[1] 1:3-5 = இச 11:24-25.
[2] 1:5 = இச 31:6,8; எபி 13:5.
[3] 1:6 = இச 31:6,7,23.
[4] 1:12-15 = எண் 32:28-32; இச 3:18-20; யோசு 22:1-6.

அதிகாரம் 2[தொகு]

யோசுவாவின் ஒற்றர்களும் இராகாபும்[தொகு]


1 நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பினார். அவர்களிடம், "நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள்" என்றார். அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர். [1]
2 சில இஸ்ரயேலர், இரவில் நாட்டைப்பற்றிய உளவு அறிய வந்தனர் என்ற செய்தி எரிகோ மன்னனுக்கு எட்டியது.
3 உடனே அவன், "உன் வீட்டுக்கு வந்து உன்னோடு தங்கியிருக்கும் ஆள்களை வெளியே கொண்டுவா. ஏனெனில் அவர்கள் நாடு முழுவதையும் உளவறிய வந்துள்ளனர்" என்று இராகாபிடம் சொல்லுமாறு ஆள் அனுப்பினான்.
4 அப்பெண் அவ்விருவரையும் அழைத்து ஒளித்துவைத்தபின், "சில மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது.
5 இருட்டியபின் வாயில் கதவு சாத்தப்படும்பொழுது அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. விரைவாக அவர்களைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்" என்றார்.
6 அவர் அவர்களை மாடியில் ஏற்றி அங்கிருந்த சணல் தட்டைகளுக்குள் அவர்களை மறைத்து வைத்தார்.
7 அந்த ஆள்கள் யோர்தானுக்குச் செல்லும் வழியில் ஆற்றந்துறைவரை அவர்களைத் தேடிச் சென்றனர். தேடி வந்தவர்கள் வெளியேறியதும் வாயிற்கதவு மூடப்பட்டது.


8 அவரோ, மாடியில் இருந்த ஒற்றர்கள் உறங்குமுன் அவர்களிடம் சென்றார்.
9 அவர்களிடம் அவர், "இந்நாட்டை ஆண்டவர் உங்களுக்கு அளிப்பார் என்று நான் அறிவேன். ஏனெனில் உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது. உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர்.
10 எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்பொழுது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர். நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள். [2]
11 அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது. உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது. ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள்.
12 நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதுபோல் நீங்களும் என் தந்தை வீட்டிற்கு இரக்கம் காட்டுவீர்கள் என்று இப்பொழுது எனக்கு ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளியுங்கள். நம்பத் தகுந்த அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள்.
13 என் தாய், தந்தை, என் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான குடும்பங்கள் அனைத்தையும் வாழவிடுங்கள். சாவிலிருந்து எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்" என்றார்.
14 அதற்கு அந்த ஒற்றர்கள், "எங்கள் உயிர் உம்கையில் உள்ளது. எங்களைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தால் ஆண்டவர் எங்களுக்கு நாட்டை அளிக்கும்போது நாங்கள் உங்களுக்கு இரக்கம் காட்டுவோம். நம்பிக்கையுடன் நடந்துகொள்வோம்" என்றனர்.
15 அவர் ஒரு கயிற்றின்மூலம் அவர்களைச் சாளரம் வழியாக இறக்கிவிட்டார். ஏனெனில், அவரது வீடு கோட்டைச் சுவரோடு இணைந்திருந்தது. அங்கே அவர் வாழ்ந்து வந்தார்.


16 அவர் அவர்களிடம், "உங்களைத் துரத்துபவர்கள் கண்டுபிடிக்காதபடி நீங்கள் மலையை நோக்கிப் போங்கள். துரத்துபவர்கள் திரும்பும்வரை அங்கே மூன்று நாள்கள் ஒளிந்து கொள்ளுங்கள். பின்னர், உங்கள் வழியே செல்லுங்கள்" என்றார்.
17 அப்பொழுது ஒற்றர்கள், "நீர் எங்களிடமிருந்து பெற்ற வாக்குறுதியிலிருந்து நாங்கள் தவற மாட்டோம்.
18 நாங்கள் இந்நாட்டுக்குத் திரும்பி வரும்பொழுது நீர் இந்தச் சிவப்புக் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட சாளரத்தில் கட்டிவையும். உம் தாய், தந்தை, உம் சகோதரர்கள், மற்றும் உம் தந்தை வீட்டில் உள்ள அனைத்தையும் உம் வீட்டில் சேர்த்து வைத்திரும்.
19 உம் வீட்டடிலிருந்து கதவுக்கு வெளியே எவராவது வந்தால் அவரது சாவுக்கு அவரே பொறுப்பாவார். நாங்கள் குற்றமற்றவர்கள். ஆனால் உம்மோடு வீட்டிலிருப்பவர் மீது எவராவது கை வைத்ததால் அந்த இரத்தப்பழி எங்கள் தலைமீது விழும்.
20 நமக்குள் நடந்த இந்தப் பேச்சு வார்த்தையை நீர் வெளிப்படுத்தினால், எங்களிடமிருந்து நீர் பெற்ற வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல" என்றனர்.
21 அவர், "உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் வெளியே சென்றபின் அவர் ஒரு கருஞ்சிவப்புக் கயிற்றைச் சாளரத்தில் கட்டி வைத்தார்.


22 அவர்கள் மலைக்குச் சென்று, துரத்தி வந்தவர்கள் திரும்பிச் செல்லும் வரை மூன்று நாள்கள் அங்கே தங்கினார்கள். துரத்தியவர்கள் வழிநெடுகத் தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
23 அங்கே தங்கியிருந்த இரண்டு ஒற்றர்களும் மலையிலிருந்து கீழே இறங்கிப் பயணம் செய்து நூனின் மகன் யோசுவாவிடம் வந்து தங்களுக்கு நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர்.
24 மேலும், அவர்கள் யோசுவாவிடம், "நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர்" என்றார்கள்.

குறிப்புகள்

[1] 2:1 = எபி 11:31; யாக் 2:25.
[2] 2:10 = விப 14:21; எண் 21:21-35.



(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை