திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
துன்புறும் யோபை அவர்தம் நண்பர் குற்றம் சாட்டுகிறார்கள். ஓவியர்: ஜெரார்டு சேஃகர் (1591-1651). ஓலாந்து. காப்பிடம்: ப்ராக்

யோபு (The Book of Job) [1][தொகு]

முன்னுரை

விவிலியத்தின் ஞான இலக்கியங்களுள் 'யோபு' என்னும் இந்நூல் தலைசிறந்தது. ஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் பெயர் யோபு. அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும், அவர் கடவுளைத் தூற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்துவந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றனர்.

பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு 'நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்?' என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம்போல் அமைந்துள்ளது இந்நூல்.

இந்நூலின் காலம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இது பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர்.

யோபு[தொகு]

நூலின் பிரிவுகள்


பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை 1:1 - 2:13 765 - 768
2. யோபும் அவர்தம் நண்பர்களும்

அ) யோபின் முறையீடு
ஆ) முதல் உரையாடல்
இ) இரண்டாம் உரையாடல்
ஈ) மூன்றாம் உரையாடல்
உ) ஞானத்தின் மேன்மை
ஊ) யோபின் இறுஊதிப் பதிலுரை

3:1 - 31:40

3:1-26
4:1 - 14:22
15:1 - 21:34
22:1 - 27:23
28:1-28
29:1 - 31:40

768 -797

768 - 769
769 - 780
780 - 787
787 - 792
792 - 793
793 - 797

3. எலிகூவின் உரைகள் 32:1 - 37:24 797 - 804
4. யோபுக்கு ஆண்டவரின் பதில் 38:1 - 42:6 804 - 810
5. முடிவுரை 42:7-17 810 - 811

யோபு[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

சாத்தான் யோபைச் சோதித்தல்[தொகு]


1 ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார்.
அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார்.
கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார்.
2 அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.
3 அவருடைய உடைமைகளாக ஏழாயிரம் ஆடுகளும்,
மூவாயிரம் ஒட்டகங்களும்,
ஐந்நூறு ஏர்க் காளைகளும்,
ஐந்நூறு பெண் கழுதைகளும் இருந்தன.
பணியாள்களும் மிகப் பலர் இருந்தனர்.
கீழை நாட்டு மக்கள் எல்லாரிலும் இவரே மிகப் பெரியவராக இருந்தார்.
4 அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில்
தமக்குரிய நாளில் விருந்து தயாரித்து,
தம் மூன்று சகோதரிகளைத்
தம்முடன் உண்டு குடிப்பதற்கு அழைப்பது வழக்கம்.
5 விருந்து நாள்களின் முறை முடிந்ததும்,
யோபு அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவார்.
"என் பிள்ளைகள் ஒருவேளை பாவம் செய்து,
உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும்" என்று யோபு நினைத்து,
காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப
எல்லார்க்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார்.
யோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது வழக்கம்.
6 ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர்.
சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான். [1]
7 ஆண்டவர் சாத்தானிடம், "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார்.
சாத்தான் ஆண்டவரிடம், "உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்றான்.
8 ஆண்டவர் சாத்தானிடம், "என் உழியன் யோபைப் பார்த்தாயா?
அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும்,
கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும்
மண்ணுலகில் ஒருவனும் இல்லை" என்றார்.
9 மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம்,
"ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?
10 அவனையும் அவன் வீட்டாரையும்,
அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா?
அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா?
அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா?
11 ஆனால், உமது கையை நீட்டும்;
அவனுக்குரியவற்றின்மீது கை வையும்.
அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்" என்றான். [2]
12 ஆண்டவர் சாத்தானிடம்,
"இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே;
அவன்மீது மட்டும் கை வைக்காதே" என்றார்.
சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.

யோபு பிள்ளைகளையும் செல்வத்தையும் இழத்தல்[தொகு]


13 ஒருநாள் யோபின் புதல்வரும் புதல்வியரும்
தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு
திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர்.
14 அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து,
"எருதுகள் உழுதுகொண்டிருந்தன;
கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.
15 அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர்.
ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர்.
நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.
16 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து,
"கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து,
ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது.
நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.
17 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து,
"கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து
அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர்.
ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர்.
நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.
18 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து,
"உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில்
உண்டு திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர்.
19 அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி,
வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது.
வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர்.
நான் ஒருவன்மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.
20 யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்;
தம் தலையை மழித்துக்கொண்டார்.
பின்பு தரையில் விழுந்து வணங்கி,


21 "என் தாயின் கருப்பையினின்று
பிறந்த மேனியனாய் யான் வந்தேன்;
அங்கே திரும்புகையில்
பிறந்த மேனியனாய் யான் செல்வேன்;
ஆண்டவர் அளித்தார்;
ஆண்டவர் எடுத்துக்கொண்டார்.
ஆண்டவரது பெயர்
போற்றப்பெறுக!" என்றார்.


22 இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை;
கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.


குறிப்புகள்

[1] 1:6 = தொநூ 6:2.
[2] 1:9-11 = திவெ 12:10.


அதிகாரம் 2[தொகு]

சாத்தான் யோபை மீண்டும் சோதித்தல்[தொகு]


1 ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர்.
சாத்தானும் அவர்கள் நடுவே வந்து, ஆண்டவர்முன் நின்றான்.
2 ஆண்டவர் சாத்தானிடம் "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார்.
சாத்தான் ஆண்டவரிடம், "உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்றான்.
3 அப்போது ஆண்டவர் சாத்தானிடம்,
"என் ஊழியன் யோபைப் பார்த்தாயா?
அவனைப்போல் மாசற்றவனும் நேர்மையானவனும்,
கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனுமில்லை.
காரணமின்றி அவனை அழிக்க
நீ என்னை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்ட போதிலும்,
அவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான்" என்றார்.
4 சாத்தான் மறுமொழியாக ஆண்டவரிடம்,
"தோலுக்குத் தோல்; எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பார்.
5 உமது கையை நீட்டி அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும்.
அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மை இழித்துரைப்பது உறுதி" என்றான்.
6 ஆண்டவர் சாத்தானை நோக்கி,
"இதோ! அவன் உன் கையிலே! அவன் உயிரை மட்டும் விட்டுவை" என்றார்.
7 சாத்தானும் ஆண்டவரின் முன்னின்று புறப்பட்டுப் போனான்.
அவன் யோபை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை
எரியும் புண்களால் வாட்டி வதைத்தான்.
8 ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு,
யோபு சாம்பலில் உட்கார்ந்தார்.
9 அப்போது அவரின் மனைவி அவரிடம்,
"இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்!
கடவுளைப் பழித்து மடிவதுதானே?" என்றாள்.
10 ஆனால் அவர் அவளிடம்,
"நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்!
நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?" என்றார்.
இவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை.


11 அப்போது யோபின் நண்பர் மூவர்,
அவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர்.
தேமாவைச் சார்ந்த எலிப்பாசு, சூகாவைச் சார்ந்த பில்தாது,
நாமாவைச் சார்ந்த சோப்பார் ஆகியோர்
தம்மிடத்திலிருந்து கிளம்பி வந்து,
அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர்.
12 தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது,
அவரை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
அவர்கள் வாய் விட்டு அழுதார்கள்;
ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள்.
வானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள்.
13 அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும்
தரையில் உட்கார்ந்திருந்தனர்.
அவருடைய துயரின் மிகுதியைக் கண்டு
எவரும் ஒரு வார்த்தைகூட அவருடன் பேசவில்லை.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை