திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
"1 நாங்கள் தப்பிக் கரை சேர்ந்த பின், அந்தத் தீவின் பெயர் மால்தா என்று அறிந்துகொண்டோம். அத்தீவினர் எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர். மழை பெய்து குளிராயிருந்த காரணத்தால் அவர்கள் தீ மூட்டி எங்கள் அனைவரையும் அருகே அழைத்துச் சென்றனர். பவுல் சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்துத் தீயில் போட்டபோது, ஒரு விரியன் பாம்பு சூட்டின் மிகுதியால் வெளியே வந்து, அவரது கையைப் பற்றிக் கொண்டது. அவர் கையில் பாம்பு தொங்குவதை அத்தீவினர் பார்த்தபோது, 'இவன் ஒரு கொலைகாரன் என்பது உறுதி. கடலிருந்து இவன் தப்பித்துக் கொண்டாலும் நீதீயின் தெய்வம் இவனை வாழவிடவில்லை' என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். ஆனால் அவர் அந்தப் பாம்பை நெருப்பில் உதறினார். அவருக்குக் கேடு எதுவும் நேரிடவில்லை." - திருத்தூதர் பணிகள் 28:1-5

திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)[தொகு]

அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

அதிகாரம் 27[தொகு]

பவுல் உரோமைக்குச் செல்லுதல்[தொகு]


1 நாங்கள் கப்பலேறி இத்தாலியா செல்ல வேண்டுமெனத் தீர்மானித்தவுடன்
அவர்கள் பவுலையும் வேறுசில கைதிகளையும்
அகுஸ்து படைப் பிரிவைச் சேர்ந்த யூலியு என்னும் நூற்றுவர் தலைவரிடம் ஒப்படைத்தனர்.
2 நாங்கள் அதிராமித்தியக் கப்பலொன்றில் ஏறினோம்.
அது ஆசிய மாநிலத்துத் துறைமுகங்களுக்குச் செல்லவிருந்தது.
எங்களுடன் தெசலோனிக்காவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு
என்னும் மாசிதோனியரும் இருந்தார்.
3 மறுநாள் நாங்கள் சீதோன் துறைமுகம் போய்ச் சேர்ந்தோம்.
யூலியு பவுலை மனித நேயத்துடன் நடத்தினார்.
அவர் தம் நண்பர்களிடம் செல்லவும்
அவர்கள் அவரைக் கவனித்துக் கொள்ளவும் யூலியு அனுமதித்தார்.
4 அங்கிருந்து நாங்கள் கப்பலேறி,
எதிர்க்காற்று வீசியபடியால் சைப்பிரசு தீவின் பாதுகாப்பான பகுதி வழியாகச் சென்றோம்;
5 பின் சிலிசியா, பம்பிலியா பகுதிகளை ஒட்டியுள்ள ஆழ்கடலைக் கடந்து
லீக்கியா நாட்டின் மீரா நகர் வந்து சேர்ந்தோம்.
6 நூற்றுவர் தலைவர் அங்கே இத்தாலியா செல்லும் அலக்சாந்திரியக் கப்பலொன்றையும் கண்டு
அதில் எங்களெல்லாரையும் ஏற்றினார்.
7 பல நாள்கள் நாங்கள் மெதுவாகப் பயணம் செய்தோம்;
அரும்பாடுபட்டுக் கினிதுவுக்கு எதிரே வந்தோம்.
எதிர்க்காற்று வீசியபடியால் தொடர்ந்து செல்ல முடியாமல்
சல்மோன் முனையைக் கடந்து
கிரேத்துத் தீவின் பாதுகாப்பான பகுதி வழியாகச் சென்றோம்;
8 பின் அரும்பாடுபட்டுக் கரை ஒரமாகப் பயணம் செய்து
இலசயா பட்டணத்துக்கு அருகிலுள்ள 'செந்துறை' [1] என்னுமிடம் வந்து சேர்ந்தோம்.
9 இவ்வாறு பல நாள்கள் கழிந்தன.
நோன்பு நாளும் ஏற்கெனவே கடந்துவிட்டது.
அதன்பிறகு கப்பலில் பயணம் செய்வது ஆபத்தானது என்று பவுல் ஆலோசனை கூறினார்.
10 அவர் அவர்களைப் பார்த்து,
"நண்பர்களே! இக்கப்பல் பயணம் கப்பலுக்கும்
அதிலுள்ள சரக்குகளுக்கும் மட்டுமல்ல,
நம் உயிருக்கும் கூட ஆபத்தானது;
பெருங்கேட்டை விளைவிக்கக் கூடியது" என்று கூறினார்.
11 ஆனால் நூற்றுவர் தலைவர் பவுல் கூறியவற்றை நம்பாமல்
கப்பல் தலைவரும் கப்பலோட்டுநரும் கூறியதையே நம்பினார்.
12 அந்தத் துறைமுகம் குளிர்காலத்தில் தங்க ஏற்றதாயில்லை.
ஆகவே பெரும்பான்மையோர் அங்கிருந்து கப்பலேறி
எப்படியாவது குளிர்காலத்தைச் செலவிட
பெனிக்சு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று விரும்பினர்.
கிரேத்துத் தீவின் இத்துறைமுகம்
தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கி அமைந்துள்ளது.

கடலில் பேய்ப்புயல்[தொகு]


13 தென்றல் காற்று வீசியபோது எங்களது நோக்கம் கைகூடியது என எண்ணி
நங்கூரத்தைத் தூக்கிவிட்டு கிரேத்துத் தீவு கரையோரமாகச் சென்றோம்.
14 சிறிது நேரத்தில் 'வாடைக் கொண்டல்' [2] என்னும் பேய்க் காற்று வீசத் தொடங்கியது.
15 கப்பல் அதில் அகப்பட்டுக் கொண்டதால்
காற்று வீசிய திசைக்கு எதிராக அதைச் செலுத்த முடியவில்லை;
எனவே காற்று வீசிய திசையிலேயே கப்பலோடு அடித்துச் செல்லப்பட்டோம்.
16 கவுதா என்னும் சிறு தீவின் பாதுகாப்பான பகுதியில் கப்பல் செல்லும்போது
கப்பலின் பின்னால் இணைக்கப்பட்டுள்ள படகை
அரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்த முடிந்தது.
17 அவர்கள் அதைத் தூக்கிக் கப்பலில் வைத்த பின்
வடத்தால் கப்பலை இறுகக் கட்டினார்கள்.
கப்பல் புதைமணலில் [3] விழுந்துவிடாதபடி, கப்பற்பாயை இறக்கிக்
காற்று வீசிய திசையிலேயே அடித்துச் செல்ல விட்டோம்.
18 புயலால் நாங்கள் மிகவும் அலைக்கழிக்கப்பட்டதால்
மறுநாள் கப்பலிலுள்ள சரக்குகளை அவர்கள் கடலில் எறியத் தொடங்கினார்கள்.
19 மூன்றாம் நாளில் கப்பலின் தளவாடங்களை
அவர்கள் தங்கள் கையாலேயே எடுத்துக் கடலில் வீசினார்கள்.
20 கதிரவனோ, விண்மீன்களோ பல நாள்களாய்த் தென்படவில்லை.
கடும்புயல் வீசி மழை பெய்து கொண்டிருந்தது.
இனி தப்பிப் பிழைப்போம் என்னும் எதிர்நோக்கே
எங்களுக்குச் சிறிதும் இல்லாமல் போய்விட்டது.
21 பல நாளாகக் கப்பலில் இருந்தோர் எதுவும் உண்னாமலிருந்தனர்.
பவுல் அவர்கள் நடுவில் எழுந்து நின்று கூறியது:
"நண்பர்களே! நீங்கள் நான் சொல்வதைக் கேட்டுக்
கிரேத்துத் தீவை விட்டுப் புறப்படாமலிருந்திருக்க வேண்டும்.
அப்போது இந்தக் கேடும் இழப்பும் நேர்ந்திருக்காது.
22 இப்போதும் நீங்கள் மனஉறுதியுடன் இருக்குமாறு உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன்.
கப்பலுக்குத்தான் இழப்பு நேரிடுமேயன்றி
உங்களுள் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாது.
23 என்மேல் உரிமையுடையவரும் நான் வழிபடுபவருமான கடவுளின் தூதர்
நேற்றிரவு என்னிடம் வந்து,
24 'பவுலே, அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்படவேண்டும்.
உம்மோடுகூடக் கப்பலிலுள்ள அனைவரையும்
கடவுள் உம் பொருட்டுக் காப்பாற்றப் போகிறார்' என்று கூறினார்.
25 ஆகவே நண்பாகளே! மன உறுதியுடனிடருங்கள்.
நான் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
அவர் என்னிடம் சொன்னவாறே நடக்கும்.
26 எனினும் நாம் ஒரு தீவில் தள்ளப்படுவது உறுதி."
27 பதினான்காம் நாள் இரவு வந்தபோது நாங்கள் ஆதிரியா கடலில்
அங்குமிங்குமாக அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தோம்.
நள்ளிரவில் நாங்கள் ஒரு கரைப் பக்கம் வந்து கொண்டிருப்பதாகக்
கப்பலோட்டுநர்கள் நினைத்தார்கள்.
28 அவர்கள் ஆழத்தை அளந்து பார்த்து
இருபது ஆள் ஆழம் [4] என்று கண்டார்கள்.
சற்று தூரம் சென்று மீண்டும் அளந்து பார்த்து
பதினைந்து ஆள் ஆழம் எனக் கண்டார்கள்.
29 பாறையில் எங்காவது மோதி விடுவோமோ என அவர்கள் அஞ்சிக்
கப்பலின் பின்பகுதியிலிருந்து நான்கு நங்கூரங்களை இறக்கி
எப்போது விடியுமோ என ஆவலோடு காத்திருந்தார்கள்.
30 கப்பலோட்டுநர்கள் கப்பலில் இருந்து
தப்பி ஓட வழி தேடினார்கள்.
கப்பலின் முன் புறத்தில் இருந்து நங்கூரங்களை இறக்கப் போவதுபோல் நடித்துக்
கப்பலிலிருந்த படகைக் கடலில் இறக்கினார்கள்.
31 பவுல் நூற்றுவர் தலைவரையும் படைவீரர்களையும் பார்த்து,
"இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால்
நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது" என்று கூறினார்.
32 ஆகவே, படைவீரர்கள் படகைக் கட்டியிருந்த கயிறுகளை வெட்டி
அது கடலில் அடித்துச் செல்லப்பட விட்டுவிட்டார்கள்.
33 பொழுது விடியும் வேளை வந்தபோது
பவுல் அனைவரையும் கூப்பிட்டு
அவர்களை உணவருந்துமாறு வேண்டிக் கொண்டார்.
"இன்றோடு பதினான்கு நாள்காளாக நீங்கள் தொடர்ந்து
எதுவும் உண்ணாமல் பட்டினிகிடந்து
என்ன நிகழுமோவெனக் காத்திருக்கிறீர்களே!
34 எனவே நீங்கள் உணவருந்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அப்போதுதான் நீங்கள் உயிர்பிழைக்க முடியும்.
ஏனெனில் உங்களுள் எவர் தலையிலிருந்தும்
ஒருமுடி கூட விழாது" என்றார்.
35 இவற்றைக் கூறியபின் பவுல் அப்பத்தை எடுத்து,
கடவுளுக்கு நன்றி கூறி,
அதைப் பிட்டு அனைவர் முன்னிலையிலும் உண்ணத் தொடங்கினார்.
36 உடனே அனைவரும் மனஉறுதி பெற்று உணவுண்டனர்.
37 கப்பலில் மொத்தம் இருநூற்று எழுபத்தாறு பேர் இருந்தோம்.
38 அனைவரும் வயிறார உண்டதும்
அவர்கள் கப்பலில் இருந்த கோதுமையைக்
கடலில் தூக்கி எறிந்து அதன் பளுவைக் குறைத்தார்கள்.

கப்பல் புயலில் சிக்குதல்[தொகு]


39 பொழுது விடிந்தபோது
தாங்கள் இருந்த இடம் எதுவென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால் ஏதோ மணல்கரையுள்ள வளைகுடாப்பகுதி வருகிறதென்று கண்டு,
முடிந்தால் கப்பலைக் கரையில் சேர்க்கலாமென்று அவர்கள் விரும்பினார்கள்.
40 எனவே நங்கூரங்களை அவிழ்த்து அவற்றைக் கடலில் விட்டு விட்டார்கள்;
அதே வேளையில் சுக்கான்களின் கயிறுகளையும் தளர்த்தினார்கள்;
காற்று வீச்சுக்கேற்ப முன்பாயை உயர்த்திக் கட்டிக்
கப்பலைக் கரையை நோக்கிச் செலுத்தினார்கள்;
41 ஆனால் கப்பல் நீரடி மணல் திட்டையில் மோதியது.
கப்பலின் முன் பகுதி புதைந்து அசையாமல் இருந்தது.
பின்பகுதி அலைகளின் வேகத்தால் உடைந்து போயிற்று.
42 கைதிகளில் எவரும் நீந்தித் தப்பிவிடக் கூடாதென்று
படைவீரர்கள் அவர்களைக் கொன்றுவிட திட்டமிட்டார்கள்.
43 நூற்றுவர் தலைவர் பவுலைக் காப்பாற்ற விரும்பி
அவர்கள் திட்டத்தை நிறைவேற்றவிடவில்லை.
எனவே நீந்தத் கூடியவர்கள் கடலில் குதித்து முதலில் கரைசேரவும்,
44 மற்றவர்கள் பலகைகளையாவது கப்பலின்
உடைந்த துண்டுகளையாவது பற்றிக் கொண்டு
கரைசேரவும் ஆணை பிறப்பித்தார்.
இவ்வாறு எல்லாரும் பாதுகாப்பாய்க் கரை சேர்ந்தார்கள்.


குறிப்புகள்

[1] 27:8 - "செந்துறை" என்பது "கலோயிலிமெனசு" என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம்.
[2] 27:14 - வாடைக்கொண்டல் என்பது யூரக்கிலோன் என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம்.
[3] 27:17 - புதை மணல் என்பது சீர்த்தி என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம்.
இப்புதை மணல் லிபியா கடல்பகுதியில் உள்ளது.
[4] 27:28 - "ஆள் ஆழம்" என்பதன் கிரேக்க சொல் "ஒர்கியா" ஆகும்.


அதிகாரம் 28[தொகு]

மால்தா தீவில் பவுல்[தொகு]


1 நாங்கள் தப்பிக் கரை சேர்ந்த பின்,
அந்தத் தீவின் பெயர் மால்தா என்று அறிந்துகொண்டோம்.
2 அத்தீவினர் எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர்.
மழை பெய்து குளிராயிருந்த காரணத்தால்
அவர்கள் தீ மூட்டி எங்கள் அனைவரையும் அருகே அழைத்துச் சென்றனர்.
3 பவுல் சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்துத் தீயில் போட்டபோது,
ஒரு விரியன் பாம்பு சூட்டின் மிகுதியால் வெளியே வந்து,
அவரது கையைப் பற்றிக் கொண்டது.
4 அவர் கையில் பாம்பு தொங்குவதை அத்தீவினர் பார்த்தபோது,
"இவன் ஒரு கொலைகாரன் என்பது உறுதி.
கடலிருந்து இவன் தப்பித்துக் கொண்டாலும்
நீதீயின் தெய்வம் இவனை வாழவிடவில்லை" என்று
ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள்.
5 ஆனால் அவர் அந்தப் பாம்பை நெருப்பில் உதறினார்.
அவருக்குக் கேடு எதுவும் நேரிடவில்லை.
6 அவருக்கு வீக்கம் ஏற்படப் போகிறது அல்லது
திடீரெனச் செத்து விழப்போகிறார் என்று
அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும்
அவருக்குத் தீங்கு எதுவும் ஏற்படாததைக் கண்டு
தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள்;
அவர் ஒரு தெய்வம் என்று சொல்லத் தொடங்கினார்கள்.
7 அந்த இடத்துக்கு அருகில் அத்தீவின் தலைவருடைய நிலங்கள் இருந்தன.
அவர் பெயர் புப்பிலியு.
அவர் எங்களை வரவேற்று மூன்று நாள் அன்புடன் விருந்தோம்பினார்.
8 புப்பிலியுவினது தந்தை காய்ச்சலினாலும்
வயிற்று அளைச்சலாலும் நோயுற்றுக் கிடந்தார்.
பவுல் அங்குச் சென்று அவர்மேல் தம் கையை வைத்து
இறைவனிடம் வேண்டி அவரை நலமாக்கினார்.
9 இந்நிகழ்ச்சிக்குப்பின் அத்தீவில் நோயுற்றிருந்த ஏனையோரும்
அவரிடம் வந்து குணமடைந்தனர்.
10 அவர்கள் எங்களுக்கு மதிப்பு அளித்து
பல கொடைகளையும் தந்தார்கள்;
நாங்கள் கப்பலேறியபோது எங்களுக்குத் தேவையான
அனைத்துப் பொருள்களையும் கொடுத்தார்கள்.

பவுல் உரோமையை அடைதல்[தொகு]


11 மூன்று மாதங்களுக்குப்பிறகு குளிர் காலத்தில்
அத்தீவில் ஒதுங்கியிருந்த ஒரு சிறிய கப்பலில் ஏறினோம்.
அதில் மிதுனச் [1] சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
அது அலக்சாந்தரியாவைச் சார்ந்தது.
12 நாங்கள் சிரக்கூசா துறைமுகத்தை அடைந்து
அங்கு மூன்று நாள் தங்கியிருந்தோம்.
13 அங்கிருந்து கரையோரமாகச் சுற்றி வந்து
இரேகியு என்னுமிடத்தை அடைந்தோம்.
ஒரு நாள் அங்குத் தங்கிய பின் தெற்கிலிருந்து காற்று வீசுவே
இரண்டாம் நாள் புத்தயோலி என்னுமிடம் சென்றோம்.
14 அங்கு நாங்கள் சகோதரர் சகோதரிகளைக் கண்டோம்.
நாங்கள் அவர்களோடு ஏழு நாள் தங்குமாறு
அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டார்கள்.
அதன்பின் நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம்.
15 அங்குள்ள சகோதரர் சகோதரிகள் எங்களைப்பற்றிக் கேள்வியுற்று,
'அப்பியு சந்தை' [2] 'மூன்றுவிடுதி' [3] என்னுமிடங்கள் வரை
எங்களை எதிர்கொண்டு வந்தார்கள்.
பவுல் அவர்களைக் கண்டபோது துணிவு கொண்டு
கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.
16 நாங்கள் உரோமைக்கு வந்தபோது
பவுல் தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதி பெற்றுக் கொண்டார்.
ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார்.

பவுல் உரோமையில் நற்செய்தி அறிவித்தல்[தொகு]


17 மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல்
யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார்.
அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி,
"சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ,
மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை.
எனினும் எருசலேமில் நான் கைது செய்யப்பட்டு
உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன்.
18 அவர்கள் என்னை விசாரித்தபோது
மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால்
என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.
19 யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான்,
"சீசரே என்னை விசாரிக்க வேண்டும்" என்று
கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன்.
ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. [4]
20 இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன்.
இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு
நான் விலங்கிடப்பட்டுள்ளேன்" என்றார்.
21 அவர்கள் அவரை நோக்கி,
"உம்மைக் குறித்து எங்களுக்கு யூதேயாவிலிருந்து கடிதமொன்றும் வரவில்லை.
மேலும் இங்கு வந்த சகோதரருள் எவரும்
உம்மைக் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை;
தீயது எதுவும் பேசவுமில்லை.
22 ஆயினும் இதுபற்றி நீர் எண்ணுவதை நாங்கள் கேட்டறிய விரும்புகிறோம்.
ஏனெனில் இந்தக் கட்சியை எல்லா இடங்களிலும்
மக்கள் எதிர்த்துப் பேசுகிறார்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்" என்றார்கள்.
23 அதற்காக ஒரு நாளைக் குறித்தார்கள்.
அன்று பலர் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வந்தனர்.
பவுல் காலை முதல் மாலை வரை அவர்களுக்கு
இறையாட்சியைப் பற்றிச் சான்றுகளுடன் விளக்கினார்.
மோசேயின் சட்டம் மற்றும் இறைவாக்கினர் நூல்கள் அடிப்படையில்
இயேசுவை அவர்கள் நம்பும்படி செய்தார்.
24 சிலர் பவுல் கூறியதை நம்பினர்; மற்றவர்கள் நம்பவில்லை.
25 இப்படி அவர்கள், தங்களிடையே மன வேற்றுமை கொண்டவர்களாய்க்
கலைந்து செல்லும்போது பவுல் அவர்களிடம் ஒன்று கூறினார்:
"நம் மூதாதையருக்கு இறைவாக்கினர் எசாயா மூலம்
தூய ஆவியார் பின்வருபவற்றைப் பொருத்தமாகக் கூறியுள்ளார்:


26-27 'நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும்


கருத்தில் கொள்வதில்லை.
உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும்
உணர்வதில்லை.
இம்மக்களின் இதயம் கொழுத்துப் போய்விட்டது.
காதுகள் மந்தமாகிவிட்டன.
இவர்கள் தம் கண்களை மூடிக் கொண்டார்கள்;
எனவே கண்ணால் காணாமலும்
காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும்
மனம் மாறாமலும் இருக்கின்றனர்.
நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன் என


நீ இம்மக்களிடம் போய்ச் சொல்.' [5]


28 "ஆகையால் கடவுள் இந்த மீட்பைப் பிற இனத்தார்க்கு அளித்துள்ளார்.
அவர்கள் செவி சாய்ப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்."
29 அவர் இப்படிச் சொன்னதும் யூதர்கள் தங்களிடையே
மிகுந்த வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து போய்விட்டார்கள்.
30 பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும்
தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார்.
தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று,
31 இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத் துணிவோடு
தடையேதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.


குறிப்புகள்

[1] 28:11 - "மிதுனம்" என்பது "தியோஸ் குரோய்" என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம்.
[2], [3] 28:15 - "அப்பியு சந்தை", "மூன்று விடுதி" என்பவை
"அப்பியுபோரம்," "திரெஸ்தபர்னே" என்னும் கிரேக்க பெயர்களின் தமிழாக்கம்.
[4] 28:19 = திப 25:11.
[5] 28:26-27 = எசா 6:9,10; மத் 13:14, 15.

(திருத்தூதர் பணிகள் நிறைவுற்றது)


(தொடர்ச்சி):புதிய ஏற்பாடு/திருமுகங்கள்: முன்னுரை