திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்." - மத்தேயு 21:8-9

மத்தேயு நற்செய்தி (Matthew)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்[தொகு]

(மாற் 11:1-11; லூக் 19:28-38; யோவா 12:12-19)


1 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று
ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது
இரு சீடர்களை அனுப்பி,
2 "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள்.
சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும்
அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள்.
அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.
3 யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால்,
'இவை ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள்.
உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்" என்றார்.

4-5 "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்;


இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்;
அவர் எளிமையுள்ளவர்;
கழுதையின் மேல் ஏறி வருகிறார்;


கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்"


என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. [1]
6 சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.
7 அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து,
அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு,
இயேசுவை அமரச் செய்தார்கள். [2]
8 பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள்.
வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். [3]
9 அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர்,
"தாவீதின் மகனுக்கு ஓசன்னா! [4]
ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!
உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். [5]
10 அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய,
"இவர் யார்?" என்னும் கேள்வி எழுந்தது.
11 அதற்குக் கூட்டத்தினர், "இவர் இறைவாக்கினர் இயேசு;
கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்" என்று பதிலளித்தனர்.

இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்[தொகு]

(மாற் 11:15-19; லூக் 19:45-48; யோவா 2:13-22)


12 பின்பு இயேசு கோவிலுக்குள் சென்றார்;
கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும்
வெளியே துரத்தினார்.
நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும்
புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.
13 "என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று
மறைநூலில் எழுதியுள்ளது.
ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்" என்று அவர்களிடம் சொன்னார். [6]
14 பின்பு பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும்
கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர்.
இயேசு அவர்களைக் குணமாக்கினார்.
15 அவர் வியத்தகு செயல்கள் செய்வதையும்
"தாவீதின் மகனுக்கு ஓசன்னா" என்று கோவிலுக்குள்
சிறு பிள்ளைகள் ஆர்ப்பரிப்பதையும் கண்டு
தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் கோபம் அடைந்தனர். [7]
16 அவர்கள் அவரிடம், "இவர்கள் சொல்வது கேட்கிறதா?" என,
இயேசு அவர்களிடம், "ஆம்! "பாலகரின் மழலையிலும்
குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்" என்று
ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா?" என்று கேட்டார். [8]
17 பின்பு அவர் அவர்களை விட்டு அகன்று
நகரத்திற்கு வெளியே உள்ள பெத்தானியாவுக்குச் சென்று
அன்றிரவு அங்குத் தங்கினார்.

அத்தி மரத்தைச் சபித்தல்[தொகு]

(மாற் 11:12-14, 20-24)


18 காலையில் நகரத்திற்குத் திரும்பி வந்தபொழுது
அவருக்குப் பசி உண்டாயிற்று.
19 வழியோரத்தில் ஓர் அத்தி மரத்தை அவர் கண்டு அதன் அருகில் சென்றார்.
அதில் இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணாமல்,
"இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்" என்று அதைப் பார்த்துக் கூறினார்.
உடனே அந்த அத்தி மரம் பட்டுப் போயிற்று.
20 இதனைக் கண்ட சீடர்கள் வியப்புற்று,
"இந்த அத்தி மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று?" என்று கேட்டார்கள்,
21 இயேசு அவர்களிடம் மறுமொழியாக,
"நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால்
அத்தி மரத்துக்கு நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்;
அது மட்டுமல்ல, இந்த மலையைப் பார்த்து,
'பெயர்ந்து கடலில் விழு' என்றாலும் அது அப்படியே நடக்கும் என
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [9]
22 நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது
நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்" என்று கூறினார்.

இயேசுவின் அதிகாரத்திற்குச் சவால்[தொகு]

(மாற் 11:27-33; லூக் 20:1-8)


23 இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது
தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி,
"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?
இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டார்கள். [10]
24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக,
"நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.
நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால்,
எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.
25 யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது?
விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?" என்று அவர் கேட்டார்.
அவர்கள் "'விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால்,
'பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை' எனக் கேட்பார். [11]
26 'மனிதரிடமிருந்து' என்போமானால்,
மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது.
ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்" என்று
தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
27 எனவே அவர்கள் இயேசுவிடம்,
"எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்.
அவரும் அவர்களிடம்
"எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று
நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்.

இரு புதல்வர்கள் உவமை[தொகு]


28 மேலும் இயேசு,
"இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள்.
அவர் மூத்தவரிடம் போய்,
'மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார்.
29 அவர் மறுமொழியாக,
'நான் போக விரும்பவில்லை' என்றார்.
ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.
30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார்.
அவர் மறுமொழியாக,
'நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை.
31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?" என்று கேட்டார்.
அவர்கள் "மூத்தவரே" என்று விடையளித்தனர்.
இயேசு அவர்களிடம்,
"வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே
இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார்.
நீங்களோ அவரை நம்பவில்லை.
மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர்.
அவர்களைப் பார்த்த பின்பும்
நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை;
அவரை நம்பவுமில்லை" என்றார். [12]

கொடிய குத்தகைக்காரர் உவமை[தொகு]

(மாற் 12:1-12; லூக் 20:9-19)


33 "மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்:
நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு,
சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி [13] வெட்டி
ஒரு காவல் மாடமும் கட்டினார்;
பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு
நெடும் பயணம் மேற்கொண்டார். [14]
34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது
அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி
தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.
35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து,
ஒருவரை நையப் புடைத்தார்கள்;
ஒருவரைக் கொலை செய்தார்கள்;
ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.
36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட
மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார்.
அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.
37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு
அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.
38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள்,
'இவன்தான் சொத்துக்கு உரியவன்;
வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்;
அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று
தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து,
திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.
40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது
அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?" என இயேசு கேட்டார்.
41 அவர்கள் அவரிடம்,
"அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்;
உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும்
வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு
அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்" என்றார்கள்.
42 இயேசு அவர்களிடம்,

"கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று.


ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது;


நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!"


என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? [15]
43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்;
அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார்
அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
44 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார்.
இது யார் மேல் விழுமோ அவரும் நசுங்கிப் போவார்'" என்றார்.
45 தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது,
தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர்.
46 அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும்
மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால்
அவர்களுக்கு அஞ்சினார்கள்.


குறிப்புகள்

[1] 21:4,5 = செக் 9:9.
[2] 21:9 - "ஓசன்னா" எபிரேயச் சொல்லுக்கு "விடுவித்தருளும்" என்பது பொருள்.
ஆனால் எபிரேய வழக்கில் வாழ்த்தைத் தெரிவிக்கும் சொல்லாகவும் அது அமைந்தது.
[3] 21:7 = 1 அர 1:33.
[4] 21:8 = 2 அர 9:13.
[5] 21:9 = திபா 118:26.
[6] 21:13 = எசா 56:7.
[7] 21:15 = யோவா 12:19.
[8] 21:16 = திபா 8:2.
[9] 21:21 = மத் 17:20; லூக் 17:6; யோவா 14:12; 1 கொரி 13:2.
[10] 21:23 = யோவா 2:18.
[11] 21:25 = யோவா 3:27.
[12] 21:32 = லூக் 3:12; 7:29,30.
[13] 23:33 - பிழிவுக்குழி என்பது திராட்சைப் பழங்களை மிதித்துச்
சாறு பிழிவதற்காகப் பாறையில் வெட்டப்படுகிறது.
[14] 21:33 = எசா 5:1-7.
[15] 21:42 = திபா 118:22,23; திப 4:11; 1 பேது 2:7.

அதிகாரம் 22[தொகு]

திருமண விருந்து உவமை[தொகு]

(லூக் 14:15-24)


1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது:
2 "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்:
அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.
3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு
அவர் தம் பணியாளர்களை அனுப்பினார்.
அவர்களோ வர விரும்பவில்லை.
4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம்,
'நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்.
காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச்
சமையல் எல்லாம் தயாராயுள்ளது.
திருமணத்திற்கு வாருங்கள்' என
அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை.
ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.
6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து
இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.
7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி
அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார்.
அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
8 பின்னர் தம் பணியாளர்களிடம்,
'திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது.
அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.
9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும்
திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்' என்றார்.
10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று
வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர்.
திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.
11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது
அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.
12 அரசர் அவனைப் பார்த்து,
'தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?' என்று கேட்டார்.
அவனோ வாயடைத்து நின்றான். [1]
13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம்,
'அவனுடைய காலையும் கையையும் கட்டிப்
புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள்.
அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்றார். [2]
14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர்,
ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்."

சீசருக்கு வரி செலுத்துதல்[தொகு]

(மாற் 12:13-17; லூக் 20:20-26)


15 பின்பு பரிசேயர்கள் போய்
எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.
16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி,
"போதகரே, நீர் உண்மையுள்ளவர்;
எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை
உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்;
ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?
நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்"
என்று அவர்கள் கேட்டார்கள்.
18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு,
"வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்" என்றார்.
அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.
20 இயேசு அவர்களிடம்,
"இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார்.
21 அவர்கள், "சீசருடையவை" என்றார்கள்.
அதற்கு அவர், "ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும்
கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று அவர்களிடம் கூறினார். [3]
22 இதைக் கேட்ட அவர்கள் வியந்து,
அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வி[தொகு]

(மாற் 12:18-27; லூக் 20:27-40)


23 அதே நாளில்,
உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, [4]
24 "போதகரே, ஒருவர் மகப்பேறின்றி இறந்து போனால்
அவருடைய மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு
தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே உரைத்திருக்கிறார். [5]
25 எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர்.
மூத்தவர் திருமணம் செய்து மகப்பேறின்றிக் காலமானதால்
அவருடைய மனைவியை அவர் சகோதரர் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று.
26 அப்படியே இரண்டாம் மூன்றாம் ஏழாம் சகோதரர் வரை அனைவருக்கும் நடந்தது.
27 அவர்கள் அனைவருக்கும் பின்பு அப்பெண்னும் இறந்தார்.
28 அப்படியானால் உயிர்த்தெழும்போது
அவர் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாய் இருப்பார்?
அவர்கள் யாவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே" என்று கேட்டனர்.
29 இயேசு மறுமொழியாக,
"உங்களுக்கு மறைநூலும் தெரியாது; கடவுளின் வல்லமையும் தெரியாது.
எனவேதான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
30 ஏனெனில் உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை;
அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.
31 இறந்தோர் உயிர்த்தெழுதலைப் பற்றிக்
கடவுள் உங்களுக்கு உரைத்துள்ளதை நீங்கள் வாசித்ததில்லையா?

32 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே"


என்று அவர் கூறியிருக்கிறார்.
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்" என்று கூறினார்.
33 அவருடைய போதனையைக் கேட்ட கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

முதன்மையான கட்டளை[தொகு]

(மாற் 12:28-34; லூக் 10:25-28)


34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார்
என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். [6]
35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர்
அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,
36 "போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?" என்று கேட்டார்.
37 அவர்,

"'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும்,
முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' [7]

38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.

39 'உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக'


என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. [8]
40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும்
இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன" என்று பதிலளித்தார்.

தாவீதின் மகன் பற்றிய விளக்கம்[தொகு]

(மாற் 12:35-37; லூக் 20:41-44)


41 பரிசேயர் ஒன்றுகூடி வந்தபோது இயேசுவும் அவர்களைப் பார்த்து
கேள்வி கேட்கத் தொடங்கினார்.
42 அவர், "மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அவர் யாருடைய மகன்?" என்று கேட்டார்.
அவர்கள், "தாவீதின் மகன்" என்று பதிலளித்தார்கள்.
43 இயேசு அவர்களிடம், "அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால்
அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி?

44 ஆண்டவர் என் தலைவரிடம்,


"நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும் வரை


நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்!"


என்று உரைத்தார்' என அவரே கூறியுள்ளார் அல்லவா! [9]
45 எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால்
அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?" என்று கேட்டார்.
46 அதற்கு எவரும் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகக் கூற இயலவில்லை.
அந்நாள் முதல் அவரிடம் எவரும் எதுவும் கேட்கத் துணியவில்லை. [10]


குறிப்புகள்

[1] 22:12 = திவெ 19:7,8.
[2] 22:13 = மத் 8:12; 25:30; லூக் 13:28.
[3] 22:21 = உரோ 13:7.
[4] 22:23 = திப 23:8.
[5] 22:24 = இச 25:5.
[6] 22:32 = விப 3:6.
[7] 22:37 = இச 6:5; 1 யோவா 2:7.
[8] 22:39 = லேவி 19:18; கலா 5:14.
[9] 22:44 = திபா 110:1; திப 2:34; எபி 1:13; 1 கொரி 15:25.
[10] 22:46 = லூக் 20:40.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 23 முதல் 24 வரை