திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவான் (அருளப்பர்) நற்செய்தி/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search


"இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்...அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: 'நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்' என்றார்." - யோவான் 13:4-5, 12-14


யோவான் நற்செய்தி (John)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

சீடரின் காலடிகளைக் கழுவுதல்[தொகு]


1 பாஸ்கா விழா தொடங்கவிருந்தது.
தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது
என்பதை இயேசு அறிந்திருந்தார்.
உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர்
அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
2 இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை
சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது.
இரவுணவு வேளையில்,
3 தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும்
தாம் கடவுளிடமிருந்து வந்தது போல்
அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய்,
4 இயேசு பந்தியிலிருந்து எழுந்து,
தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு
ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.
5 பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச்
சீடர்களுடைய காலடிகளைக் கழுவி
இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
6 சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர்,
"ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?" என்று கேட்டார்.
7 இயேசு மறுமொழியாக,
"நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது;
பின்னரே புரிந்து கொள்வாய்" என்றார்.
8 பேதுரு அவரிடம்,
"நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்" என்றார்.
இயேசு அவரைப் பார்த்து, "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால்
என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.
9 அப்போது சீமோன் பேதுரு,
"அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல,
என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்" என்றார்.
10 இயேசு அவரிடம்,
"குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும்.
அவர் தூய்மையாகிவிடுவார்.
நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள்.
ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார்.
11 தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது.
எனவேதான் "உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார்.


12 அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு
தம் மேலுடையை அணிந்துகொண்டு
மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது:
"நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?
13 நீங்கள் என்னைப் "போதகர்" என்றும் "ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள்.
நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே.
நான் போதகர்தான், ஆண்டவர்தான்.
14 ஆகவே ஆண்டவரும் போதகருமான நான்
உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால்
நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
15 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு
நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.[1]
16 பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல;
தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.[2]
17 இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.
18 உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை.
நான் தேர்ந்துகொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும்.
எனினும்,


"என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்"


என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.[3]
19 அது நிறைவேறும்போது,
'இருக்கிறவர் நானே' என்று நீங்கள் நம்புமாறு
இப்போதே, அது நிறைவேறுமுன்பே,
அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன்.
20 நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."[4]

இயேசுவும் அவரைக் காட்டிக் கொடுப்பவனும்[தொகு]

(மத் 26:20-25; மாற் 14:17-21; லூக் 22:21-23)


21 இப்படிச் சொன்னபின் இயேசு உள்ளம் கலங்கியவராய்,
"உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
22 யாரைப் பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல்
சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.
23 இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புக் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார்.
அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார்.
24 சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி,
"யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்கேள்" என்றார்.
25 இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர்,
"ஆண்டவரே அவன் யார்?" என்று கேட்டார்.
26 இயேசு மறுமொழியாக,
"நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்"
எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச்
சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.
27 அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் [5]
சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.
இயேசு அவனிடம், "நீ செய்யவிருப்பதை விரைவில் செய்" என்றார்.
28 இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப்
பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்து கொள்ளவில்லை.
29 பணப்பை யூதாசிடம் இருந்ததால்,
திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ
ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ
இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர்.
30 யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான்.
அது இரவு நேரம்.

புதிய கட்டளை[தொகு]


31 அவன் வெளியே போனபின் இயேசு,
"இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார்.
அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.
32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால்
கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்.
33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.
நீங்கள் என்னைத் தேடுவீர்கள்.[6]
ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது.
இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.
34 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்'
என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.[7]
35 நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார்.

பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்[தொகு]

(மத் 26:31-35; மாற் 14:27-31; லூக் 22:31-34)


36 சீமோன் பேதுரு இயேசுவிடம்,
"ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?" என்று கேட்டார்.
இயேசு மறுமொழியாக,
"நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது;
பின்னரே என்னைப் பின்தொடர்வாய்" என்றார்.
37 பேதுரு அவரிடம்,
"ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது?
உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றார்.
38 இயேசு அவரைப் பார்த்து,
"எனக்காக உயிரையும் கொடுப்பாயோ?
நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என
உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார்.[8]


குறிப்புகள்

[1] 13:12-15 = லூக் 22:27; எபே 5:2; பிலி 2:5, 8.
[2] 13:16 = மத் 10:24; லூக் 6:40; . யோவா 15:20
[3] 13:18 = திபா 41:9.
[4] 13:20 = மத் 10:40; மாற் 9:37; லூக் 9:48; 10:16.
[5] 13:27 = லூக் 22:3.
[6] 13:33 = யோவா 7:34.
[7] 13:34 = மத் 19:19; லூக் 10:27; யோவா 3:23; 2 யோவா 5.
[8] 13:38 = மத் 26:31-35; மாற் 14:29-31.

அதிகாரம் 14[தொகு]


1 மீண்டும் இயேசு,
"நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்.
கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.
2 தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.
அப்படி இல்லையெனில்,
"உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்" என்று சொல்லியிருப்பேனா?[1]
3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின்
திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்.
அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.[2]
4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்றார்.
5 தோமா அவரிடம்,
"ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது.
அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை
நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார்.
6 இயேசு அவரிடம்,
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே.[3]
என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.[4]


7 "நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்.
இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள்.
அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார்.[5]
8 அப்போது பிலிப்பு, அவரிடம்,
"ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார்.
9 இயேசு அவரிடம் கூறியது:
"பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும்
நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா?
என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்.
அப்படியிருக்க, "தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்?
10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?
நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை.
என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.
11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்.
நான் சொல்வதை நம்புங்கள்;
என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால்
என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.
12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்;
ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்.
ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.[6]
13 நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்.
இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.[7]
14 நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.
15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.


16 "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை
உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன்.
17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்.
உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது.
ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை.
நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள்.
ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.
18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.[8]
19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது.
ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள்.
ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.
20 நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை
அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்.
என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார்.
நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்."[9]


22 யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் - அவரிடம்,
"ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல்
எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?" என்று கேட்டார்.
23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்:
"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்.
என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார்.
நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.
24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.
நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னடையவை அல்ல;
அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.
25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர்
உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்;
நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.[10]
27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்;
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.
நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல.
நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.[11]
28 "நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று
நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே!
நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால்
நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.
ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.
29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே,
இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.
30 இனி நான் உங்களோடு மிகுதியாக பேசப் போவதில்லை;
ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கின்றான்.
அவனுக்கு என் மேல் அதிகாரம் இல்லை.
31 ஆனால் நான் தந்தையின் மீது அன்பு கொண்டுள்ளேன் என்பதையும்
அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும்
உலகு தெரிந்து கொள்ள வேண்டும்.
எழுந்திருங்கள், இங்கிருந்து போவோம்.[12]


குறிப்புகள்

[1] 14:2 = 1 தெச 4:7.
[2] 14:3 = எபி 6:19,20.
[3] 14:6 = "வழியும் ..... நானே" என்னும் சொற்றொடரை
"உண்மைக்கும் வாழ்வுக்கும் வழி நானே"
எனவும் மொழிபெயர்க்கலாம்.
[4] 14:6 = யோவா 1:4; எபி 10:19,20.
[5] 14:7 = 2 கொரி 4:4..
[6] 14:12 = மத் 21:21.
[7] 14:13 = மத் 7:7-11; திப 3:16; 1 யோவா 3:22
[8] 14:18 = மத் 28:20;
[9] 14:21 = 1 யோவா 2:5; 3:24; 4:21.
[10] 14:26 = எபே 3:5; 1 யோவா 2:20, 27.
[11] 14:27 = உரோ 5:1; எபே 2:14-18.
[12] 14:31 = யோவா 6:38


(தொடர்ச்சி): யோவான் (அருளப்பர்) நற்செய்தி: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை