பல்லவர் வரலாறு/16. மூன்றாம் நந்திவர்மன் - (கி.பி. 825-850)

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

16. மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850)

மரபு

இவன் தந்திவர்மன் மகன். தந்திவர்மன் கதம்ப அரசர் மகளை மணந்த செய்தியே சிறப்பாகப்பட்டயத்திற் கூறியுள்ளதால், மூன்றாம் நந்திவர்மன் அவ்வரசிக்குப் பிறந்தவனாதல் வேண்டும் என்று கொள்ளலாம். இதனை வேலூர் பாளையப் பட்டயமும் உறுதிப்படுத்துகிறது.

பட்டயங்கள்

(1) இவன் காலத்துப் பட்டயங்களில் சிறந்தது வேலூர் பாளையப் பட்டயமே ஆகும். இது பொன்னேரிக் கூற்றத்துத் திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒரு சிற்றூரைத் தேவதானமாக விடுத்ததைக் கூறுவது. இப் பட்டயத்தில் பல்லவ அரசர் பட்டியல் முதலிய பல செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. இது நந்திவர்மன் பட்டம் பெற்ற 6ஆம் ஆண்டில் விடப்பட்டதாகும். (2) இவனது பத்தாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டு இவனது தெள்ளாற்று வெற்றியைக் குறிக்கிறது. அக் கல்வெட்டு திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்) கோவிலில் உள்ளது. (3) இவனது 12ஆம் ஆட்சி ஆண்டில் செந்தலைக் கல்வெட்டொன்று வெளியிடப் பட்டது. (4) இவனது 17ஆம் ஆட்சி ஆண்டில் திருவல்லம் கோவிலில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டது. அதில், மூன்று சிற்றூர்களைச் சேர்த்து ‘விடேல் விடுகு-விக்கிரமாதித்த சதுர்வேதிமங்கலம்’ என்னும் பெயரில் தீக்காலிவல்லம் சிவபெருமானுக்குக் கொடுத்ததாகக் கண்டுள்ளது. (5) உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டு ஒன்று. இவனது 18ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது. (6) கோவிலடிக் கருகில் திருச்சன்னம்பூண்டியில் உள்ள சடையர் கோவில்கல்வெட்டு இவனது 18ஆம் ஆட்சி ஆண்டைக் குறிக்கிறது. (7)திருப்பராய்த் துறையில் உள்ள ஆதிமூலேச்சுரர் கோவிற் சுவரில் உள்ள கல்வெட்டு இவனது 22ஆம் ஆட்சி ஆண்டைக்குறிக்கிறது. (3) குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் கல்வெட்டு ஒன்று இவனது 23ஆம் ஆட்சி ஆண்டைக் குறிக்கின்றது. இதற்குப் பிறகு வேறு கல்வெட்டுக் கிடைக்கவில்லை. ஆதலின். இப்பேரரசன்.ஏறத்தாழ 25ஆண்டுகளேஅரசனாக இருந்தான் போலும் என்று அறிஞர்கருதுகின்றனர்.

தெள்ளாறு எறிந்த காலம்

இவனது 10ஆம் ஆட்சி ஆண்டு முதல் வெளியிடப்பட்ட எல்லாக் கல்வெட்டுகளிலும் இவன் “தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்” என்றே குறிக்கப்படுகிறான். ஆனால், இவனது 6ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்த வேலூர் பாளையப் பட்டயத்தில் இது காணவில்லை. எனவே, இவன் தனது 6ஆம் ஆண்டிற்குப் பின்னும் 10ஆம் ஆண்டிற்கு முன்னும் தெள்ளாற்றுப் போரில் வாகை சூடி இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

நந்திக் கலம்பகம்

இஃது இந்த அரசன் மீது பாடப்பட்டது. இதில் பல பாக்கள் இவனது தெள்ளாற்றுப் போரையே குறிக்கின்றன. நாம் இந் நூலால் அறியத்தக்கவை பின் வருவன. அவை - “இவன் சந்திர மரபினன்; சேர சோழ பாண்டியரை வெறியலூர், பழையாறு. வெள்ளாறு, தெள்ளாறு இவற்றில் நடந்த போர்களில் முறியடித்தவன்; மூவேந்தரிடமும் வடபுலத்தரசரிடமும் திறை பெற்றவன்.” என்பன. இவன் பல இடங்களில் ‘அவனி நாரணன், அவனி நாராயணன்’ என்று குறிக்கப்பட்டடுள்ளான். இவன் காலத்தில் காவேரிப்பாக்கம் அவனிநாராயணசதுர்வேதிமங்கலம் எனப்பெயர் பெற்று இருந்தது. எனவே மூன்றாம் நந்திவர்மன் அவனி நாராயணன் எனப்பட்டான். என்பதை நன்குணரலாம். இவன் காலத்தில் தமிழ்ப் பெருவணிகன் ஒருவன் சென்று சையாமில் ஒரு குளம் தொட்டான். அதற்கு ‘அவனி நாரணன் குளம் எனப் பெயரிட்டான்’ என்று அங்குள்ள கல்வெட்டொன்று கூறுகிறது. இதனால், இவனது காலத்தில் கடல்வாணிபம் சிறந்தமுறையில் நடந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. இவன் சிறந்த கடற்படை வைத்திருந்ததாக நந்திக் கலம்பகமும் கூறுகின்றது.

இவன் கழற்சிங்கனா?

இவன் நந்திக் கலம்பகத்தில் (செ. 13, 28) ‘கழல் நந்தி’ எனப்படுகிறான்: செ.59இல் ‘பல்லவர்கோள் அரி என்று கூறப்படுகிறான். ‘அரி-சிங்கம்’ என்பதை நாம் அறிவோம். எனவே மூன்றாம் நந்திவர்மன் கழல்சிங்கன்றான் என்பதில் ஐயமின்மை உணர்க. ஆயின்.

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற் சிங்கன் அடியார்க்கும் அடியேன்”

என்று சுந்தரர் தொகையிற் சுட்டப்பட்டவன் இவனா? எனின். ஆம் மேற்சொன்ன சையாம் செய்தியை நேர்க்க. இவன் காலத்தில் கடல்கடந்த நாடுகளில் இவன் பெற்றிருந்த செல்வாக்கையும் கடல்வாணிகத்தையம் நன்குணரலாம் அன்றோ? இன்னபிற சான்றுகளால்.இம்மூன்றாம்நந்திவர்மனே பெரியபுராண நாயன்மாருள் ஒருவனான கழற்சிங்கன் என்பது நன்கு விளங்குகிறது.[1] விளங்குமேல். இவனது உண்மைவரலாறு அறியகல்வெட்டுகளோடு நந்திக் கலம்பகம் சுந்தரர் தேவாரம், பெரியபுராணம் முதலியனவும் பெருந்துணைபுரியலாம் அல்லவா?

பல்லவர் - இரட்டர் போர்

பல்லவநாட்டை இருமுறை வென்ற மூன்றாம் கோவிந்தன் கி.பி. 814இல் இறந்தான். அவன்மகனான முதலாம் அமோகவர்ஷன் கி.பி. 814இல் தனது ஆறாம் வயதில் அரசன் ஆனான். அவன் கி.பி.880 வரை அரசாண்டான்.

தந்திவர்மன் காலத்தில் இரட்ட அரசனான மூன்றாம் கோவிந்தன் காஞ்சியை இருமுறை கைப்பற்றிப் பல்லவனைத் திறை கட்டுமாறு பணித்து மீண்டான் என்பதை முன்னரே கவனித்தோம் அல்லவா? அந்தக் கப்பங்கட்டும் கொடுமையை ஒழிக்க நந்திவர்மன் விரும்பினான் போலும்! அதனால், அவன், தான் பட்டம பெற்றவுடன், பெண்ணை யாற்றங்கரை வரை பாண்டியன் தன் நாட்டைப் பிடித்துக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், வடக்கு நோக்கித்தன் படைகளைத் திருப்பினான். நடந்த போரைப் பற்றிய குறிப்புகள் நந்திக்கலம்பகத்தில் கூறப்பட்டுள்ளன.

“எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி-இனவேழம்
கோமறுகிற் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகிற் போகாப்பொழுது”.
“.... குருக்கோட்டை குறுகா மன்னர்
போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி....”
“கேளாதார்,
குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும்
அஞ்சரங்கள் ஆர்த்தான் அருள்.”[2]

இக் குருக்கோட்டை என்பது பெல்லாரிக் கோட்டத்தில் துங்கபத்திரையாற்றங்கரையில் உள்ள குருகோடு[3] என்பதே ஆகும். அங்குள்ள மலைமீது அழகிய கோட்டையும் சாளுக்கியர் காலத்துக் கோவில்களும் பிறவும் அழிந்த நிலையில் இருக்கக் காணலாம்.[4]

கொடும்பாளுர்க் கல்வெட்டு ஒன்றில் விக்கிரமகேசரி என்பவனுக்குப் பாட்டன், வாதாபி கொண்டவன் என்று கூறப்பட்டுள்ளான். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இப்படி ஒருவன் இருந்திருத்தல் முடியாது என்று பலர் கருதினர். அந்தச் சிற்றரசன் மூன்றாம் நந்திவர்மன் காலத்துச் சிற்றரசன்; ஆதலின், தன் பேரரசனுக்குத்துணையாக வடபுலம்சென்று ‘குருக்கோடு’ என்னும் இடத்தில் இரட்டர்க்கு அடங்கிய சாளுக்கியனை (சிற்றரசனை) வென்றிருக்கலாம்; அவ் வெற்றிக்காகத் தன்னை வாதாபி கொண்டவன் (வாதாபி-இங்குச் ‘சாளுக்கியர் தலைநகர்’ என்ற அளவில் பொருள் கொள்ள வேண்டும்) என்றும் கூறிக்கொண்டிருக்கலாம்; இன்றேல், இராட்டிரகூடர் தோற்ற பிறகு வாதாபி மீதே அவன் படையெடுத்திருக்கலாம். அவன் பரதுர்க்க மர்த்தனன் (பகைவர் கோட்டையை அழித்தவன்) எனப் பெயர் கொண்டவன். இவற்றை எல்லாம் நன்கு ஆர்ாயின் மூன்றாம் நந்திவர்மனான கழற்சிங்கன் முதலில் இராட்டிரகூடரைத் தோற்கடித்துத் தான் பேரசசன் என்பதை நிலைநிறுத்தினான் என்பது தெரியலாம். இவனது வடபுல வெற்றியை வேலூர் பாளையப் பட்டயமும் குறிப்பாக உணர்த்துதல் காண்க.

“படைக்கலப் பயிற்சியிற் பண்பட்ட நந்திவர்மன். பிறரால் பெறுதற்கரிய பல்லவப் பெருநாட்டின் செழிப்பைப் பெற்றான். அவன் அதற்காகப் போர்க்களத்தில் தன் பகைவரைக் கொன்றான். அவனது வாளால் துணிக்கப்பட்ட யானைகள் அணிந்திருந்த முத்து மாலைகள் போர்க்களத்தில் சிதறிக் கிடந்த காட்சி:போர்க்களமங்கை தன் பற்களைக் காட்டி நகைப்பது போல இருந்தது.[5]

இப் பட்டயம் நந்திவர்மனது தெள்ளாற்றுப் போருக்கு முன்பு வெளியிடப்பட்டது என்பது இங்கு நினைக்கத்தக்கது. ஆகவே இங்குக் குறித்த போர்மேற்சொன்ன பல்லவர் - இரட்டர் போரே ஆகும். ‘பகைவர்’ என்று பட்டயமும் நந்திக்கலம்பகமும் பன்மையிற் பகர்ந்தமை. இராட்டிரகூட அரசன். அவனுக்கு உட்பட்டுக் குருக்கோட்டையில் ஆண்டசிற்றரசன் ஆகிய இருவரைக் குறிக்கும் எனக் கோடலில் தன்றில்லை. நாம் முன் பலமுறையும் புகழ்ந்து கூறிய சிறந்த கல்வெட்டுப் புலவரான சேக்கிழாரும் கழற்சிங்க நாயனார் (மூன்றாம் தந்திவர்மன்) புராணத்தில் இந்தப் போரைக் குறிப்பாக உணர்த்தல் கவனிக்கத்தக்கது:-

“ஆடக மேருவில்லார் அருளினால் அமரிற் சென்று
கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு”[6]

இப் போர் ஏறக்குறைய கி.பி. 830இல் நடந்ததெனக் கொள்ளலாம். இப் போரில் வெற்றிபெற்றதால், பல்லவன் தனது வடமாகாணத்தைக் காத்துக் கொண்டான் இராட்டிர கூடனுக்குத் தான் அடங்கியவன் ஆகான் என்பதையும் காட்டிக்கொண்டான்: இதனால், தான் பேரரசன் என்பதையும் நிலைநாட்டினான். இதன் பிறகே கழற்சிங்கனாகிய நந்திவர்மன் தனது நாட்டின் தென்பகுதி யைப்பிடித்துக் கொண்டபாண்டியன்மீது திரும்பினான்.

அமோகவர்ஷன் கங்கனோடு சந்து செய்துகொண்டு பேரழியான ‘சந்திரபலப்பை’ என்ற தன் மகளைக் கங்க இளவரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். அந்தக்கங்க இளவரசன் பெயர் பூதுகன் என்பது. அவன் ஆட்சிக்காலம் கி.பி.837-870 ஆகும்.[7] அமோகவர்ஷன் தன் மற்றொரு மகளான சங்கா என்னும் இலக்குமி போன்றவளை நந்தி வர்மனுக்கு மணம் செய்து கொடுத்தான்.[8] இதனால் அவன் கங்கனைப் பெண்கொடுத்து உறவு கொண்டாற் போலப் பல்லவனையும் பெண்கொடுத்து உறவுகொண்டான் என்பது உய்த்துணரப்படுகிறதன்றோ?

இத்தகைய திருமண முறையால், அரசியல் அறிஞனான அமோகவர்ஷன் பல்லவனையும் கங்கனையும் உறவினராக்கிக் கொண்டான்; விந்தமலைக்குத் தென்பால் பகைவர் இன்றி இன்பமாகத் தன் காலத்தைக் கழித்தான்.[9]

பல்லவர்-பாண்டியர் போர்

மூன்றாம் நந்திவர்மன் செய்த போர்களில் தெள்ளாற்றுப் போர் ஒன்றையே சிறப்பாக இவன் காலத்தார் கருதினர் போலும் இவனும் அங்ஙனமே கருதினான்.இஃது உண்மை என்பதை இவனுடைய 10ஆம் ஆட்சி ஆண்டுக்குப் பிற்பட்ட எல்லாக் கல்வெட்டுகளும் கூறுகின்றன. தெள்ளாற்று எறிந்த நந்திவர்மன் என்றே இவன் அவற்றிற் குறிக்கப்படுகிறான். அங்ஙனம் அது சிறந்தது என்பதைக் கலம்பகமும் கூறுகின்றது. அந்நூலில் தெள்ளாற்றுப் போர் பல பாக்களில் குறிக்கப்பட்டுள்ளது.[10] அக்காலத்தில் வாழ்ந்து ‘பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் என்பவர்,

“வன்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
உண்மையால் பாரான் உரிமையா- திண்மையால்
தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ(டு)
யார்வேந்தர் ஏற்பார் எதிர்”

என்று பாடிப் புகழ்ந்துள்ளார். எனவே, பட்டயக் குறிப்புகளாலும் மேற்சொன்ன இலக்கியச்சான்றுகளாலும், “தெள்ளாற்றுப் போர் மிகப் பெரியதும் கொடியதும் இன்றியமையாததும் ஆனது” என்பது நன்கு விளங்குகின்றது. இனி இப் போரில் தொடர்பு கொண்டவர் யாவர் என்பதைக் காண்போம்.

பல்லவன் -தமிழரசர்

தந்திவர்மன் காலத்தில் (கி.பி.775-825) மதுரையை ஆண்ட முதலாம் வரகுண பாண்டியன் (கி.பி.765-815) பல்லவர்க்கு உட்பட்டிருந்த சோழ நாட்டைக் கைப்பற்றித் தொண்டைநாட்டையும் பெண்ணையாறுவரை கவர்ந்தான் என்பதை முற்பகுதியில் குறித்தோம் அல்லவா? அவன்பெண்ணையாற்றங்கரையில் இருந்த காலம் ஏறத்தாழக் கி.பி. 780ஆகும். அதுமுதல் தெள்ளாற்றுப் போர்வரை சோழ நாடும் தொண்டை நாட்டின் தென்பாதியும் பாண்டியர் வசமே இருந்தது என்னலாம். வரகுணன் இறந்த பிறகு, சீமாறன் சீவல்லபன் என்னும் அவன் மகன் பட்டம்பெற்று (கி.பி. 830-862) ஆண்டான்.[11] அவன் காலத்திற்றான் நந்திவர்மன் ஆகிய கழற்சிங்கன் (கி.பி. 825-850) பல்லவ அரசனாக இருந்தான். இவன் (கி.பி.830 அல்லது 832க்குள்) முன் சொன்ன வட புலப்போரை முடித்துக் கொண்டு திரும்புவதற்குள், பாண்டியன் மாறன். தனக்கு அடங்கிய சேர சோழருடனும் பெருஞ் சேனையுடனும் பெண்ணையாற்றைத் தாண்டி வட ஆர்க்காட்டுக் கோட்டத்திற்குள் நுழைந்தனன். உடனே நந்திவர்மன். வடக்கே வெற்றிபெற்ற தன் பெருஞ் சேனையுடன் மீண்டு. பகைவரைத் தெள்ளாற்றில் (வந்தவாசிக் கூற்றத்தில் உள்ளது) எதிர்த்துப் பெரும்போர் நிகழ்த்தி முற்றிலும் முறியடித்தான். இப்போர் ஏறக்குறையக் கி.பி. 832இல் நடந்திருத்தல் வேண்டும். இப்போர் மிகவும் கொடுமையானது.

நந்திவர்மன் தெள்ளாற்றில் தோற்று ஓடிய பகைவரைவிட்டிலன். இவன் அவர்களைத் துரத்திச் சென்று கட்ம்பூர் (செ.25), வெறியலூர் (27). வெள்ளாறு (19.22, 61), பழையாறு(31) என்னும் இடங்களில் தோற்றகடித்துப் பாண்டிய நாட்டு எல்லையை அடைந்தவன். பாண்டியன் முதலிய பகைவர், எல்லைப்புறத்தில் இருந்த குறும்பில் (கோட்டைக்குள்) ஒளிந்தனர். பல்லவன் அங்கும் அவரை முறியடித்து மீண்டான் என்று நந்திக்கலம்பகம் (செ. 4) நவில்கின்றது.

இப் போருக்குக் காரணம் என்ன?

(1) இராட்டிரகூடர்க்குப் பல்லவன் திறை கொடுத்த மறுத்து அவன்மீது போர்தொடுத்து வென்றாற்போலச்சோழன் மறுத்திருக்க வேண்டும். அவற்குத்துணையாகப் பாண்டியன் முதலியோர் போரிட வந்திருத்தல் வேண்டும். பல்லவ நாட்டை, நந்திவர்மன் இல்லாத காலத்திற் கைப்பற்ற முனைந்திருத்தல் வேண்டும்.

(2) இவனிடம் பொறாமை கொண்டு பட்டம் பெற விழைந்த இவன் தம்பி பகைவருடன் சேர்ந்துகொண்டமை ஒரு காரணமாகும்.

இந்த இரண்டும் உண்மை என்பதைக் கீழ் வருவனவற்றால் அறியலாம்:-

(1) “உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா
மன்னவரே மறுக்கம் செய்யும்
பெருமையாற் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றாம் அன்றே”[12]
(2) ‘தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக
வென்ற தலைமான விரதுவசன்
செம்பியர் தென்னார் சேரர் எதிர்வந்து
மாயச் செருவென்ற பாரி முடிமேல்...”[13]

பல்லவன்-காவிரி நாடன்

இங்ஙனம் தமிழ்வேந்தர் முற்றும் முறியடிக்கப்பட்டபின் காவிரி நாடான சோணாடு, பழையபடியே பல்லவர் கைப்பட்டது. இதனை நந்திக் கலம்பகத்தாலும் நந்திவர்மன் கல்வெட்டுக்களாலும் நன்கறியலாம். கலம்பகத்துப் பாக்கள் பல (செ.17,28,57,58,86)

நந்திவர்மனைக் ‘காவிரி நாடன்’ என்றே குறித்துள்ளன; அவை, ‘காவிரி வளநாடா’ (17), ‘காவிரி வளநாடன்’ (28), ‘காவிரி நன்னாடா’ (57), ‘பொன்னி நன்னாட்டு மன்னன்’ (56), ‘காவிரி வளநாடு ஆள்வோனே’ (86) என்பன. தஞ்சைக் கோட்டத்தில் உள்ள திருநெய்த்தானத்தில் இவனது கல்வெட்டு இருக்கின்றது. ஆதலின், இச் சான்றுகளைக் கொண்டு காணின், இவனது ஆட்சி தஞ்சைக் கோட்டத்தில் நிலைத்திருத்தமை நன்கு அறியலாம்.

பேரரசன்

இதுகாறும் கூறிய செய்திகளால், மூன்றாம் நந்திவர்மன் வடக்கிலும் தெற்கிலும் அச்சமின்றி நாட்டையாண்டபெருவீரனாகப் பிற்காலத்தைக் கழித்தான் என்பதை உணரலாம். இவன் பேரரசன் என்பதை நந்திக்கலம்பகம் பலபடக் குறித்துள்ளது. அவை “மூவேந்தரும் வடபுலத்தரசரும் திறைதந்தனர்; (செ.27); “புகாராகிய காவிரிப் பூம்பட்டனம் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது’ (செ44):இவனிட்டவழக்கன்றோ வழக்கிந்தவையத்தார்க்கே (53): “அறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன்” (60): “பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவன்” (61): “இவ் வையம் எல்லாம் படக்குடை ஏந்திய பல்லவன்” (65): “தண் செங்கோல் நந்திதனிக் குடையுடையவன்” (72): “தமிழ்த் தென்றல் புகுந்துலவும் தண் சோணாடன்” (74) என்பன.

நல்லியல்புகள்

‘அறம் பெருகும் தனிச் செங்கோல் மாயன்’ (செ.60) தண் செங்கோல் நீந்தி (72) பகை இன்றிப் பார்காக்கும் பல்லவர் கோன் (70) முதலிய நந்திக்கலம்பகத் தொடர்களால், மூன்றாம் நந்திவர்மன் செங்கோல் அரசன்: அறம் வளர அரசாண்டபெருமகன்; குடிகளைக் காக்கும் தொழில் பூண்டவன். இவனது ஆட்சி தண்மையாக இருந்தது. என்பன நன்குணரலாம். இதனையே ‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்’ என்று சுந்தரரும், “நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான்” என்று சேக்கிழாரும்

கூறிப் பாராட்டினார். இப் பேரரசன் கல்வி கேள்விகளில் வல்லவன்; ‘நந்தி நூல் வரம்பு முழுதும் கண்டான் (செ.3). ‘நூற்கடற் புலவன்’ (26) என்று கலம்பகம் கூறுதல் காண்க. இவன் சிறந்த வள்ளல் என்பது, ‘நந்தி, வறியோர் சொன்ன பொருள் நல்குவன்’ (24) ‘ஒழியா வண்கைத் தண்ணருள் நந்தி’ (43) முதலிய தொடர்களால் அறியலாம்.

ஏனைப் பல்லவ அரசர் போலன்றி. இவன் தமிழிற் பெரும் புலவனாக இருந்தான் என்பது ‘பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி'[14] ‘....தமிழ்நந்தி'[15] என வரும் தொடர்களால் அறியலாம்.

நந்திக்கலம்பகம் கூறிய மேற்சொல்லப்பட்ட எல்லா நல்லியல்புகளும் நந்திவர்மனது வேலூர் பாளையப் பட்டயத்தில் காணலாம். ‘நந்திவர்மன் ஆட்சியில் (1) வசந்த காலம் சிறப்பளித்ததுபோல முன்னர்ச் சிறப்பளித்ததில்லை; (2) நல்லியல்புகள் பொருந்திய பல் பெருமக்கள் பிறந்திருந்தனர்; (3) பெண்மக்கள் சிறந்த கற்புடையவராக இருந்தனர். (4) வள்ளல்கள் பலர் இருந்தனர். (5) சான்றோர் அடக்கமாக இருந்தனர். (6) குடிகள் அரசனைச்சார்ந்து நின்றனர்.”

மனைவியர்

இப் பேரரசனுக்கு இருந்த மனைவியருள் இருவரே. பட்டயங்களிற் குறிக்கப்பட்டுளர்; நந்திவர்மனிடம் தோற்ற இராட்டிரகூட அரசனான அமோகவர்ஷ நிருபதுங்கள் மகளான சங்கள் ஒருத்தி. ‘இவள், இலக்குமியின் அவதாரம்’ என்னலாம்; ஈன்ற தாயைப்போலக் குடிகளைப் பாதுகாத்தான். அரசனது நற்பேறே இவளாகப் பிறப்பெடுத்து வந்தது போலும்! இவள் சிறந்த நுட்ப அறிவுடையவள்; எல்லாக் கலைகளிலும் வல்லவன்,[16] என்று பாகூர்ப் பட்டயம் பகர்கின்றது.[17] மற்றொரு ഥனைவி அடிகள் கத்தன் மாறம்

பாவையார் என்பவள். இவள் தென்னாற்றில் தோற்றோடிய சீமாறன் மகள் என அறிஞர் கருதுகின்றனர். இவள் 75 ஆண்டுகட்குமேல் உயிருடன் இருந்தனள். இவ்வம்மை சிறந்த சிவபக்தி உடையவள்; பல கோவில் திருப்பணிகள் செய்துள்ளவன்.[18]

அரசியல்

நந்திவர்மன் காலத்தில் கடல் வாணிபம் சிறந்து இருந்தது. இவன் பெரிய கடற்படை வைத்திருந்தான். அக்காலத்தில் மல்லை (மாமல்லபுரம்), மயிலை (மைலாப்பூர்) ஆகிய இரண்டும் சிறந்த துறைமுகப் பட்டினங்களாக இருந்தன என்பது. இவ்விரண்டையும் ஒருசேரப் பல இடங்களில் நந்திக் கலம்பகம் குறித்துப் போதலால் உணரலாம். காஞ்சிபுரம் தலைநகரமாக விளக்க முற்றிருந்தது.

இவன் வடக்கிலும் தெற்கிலும் பெரும்போர் இயற்றினன் ஆதலின். நாட்டில் வறுமை உண்டாயிற்றுப் போலும்/அதனை இவன் நீக்கினான் என்று கலம்பகம் (செ.11) கூறுகின்றது. அதேகாலத்தில் சோணாட்டில் பஞ்சம் உண்டானதைக் கோட்புலி நாயனார் வரலாற்றில்[19] காண்கிறோம். ‘அவர் போருக்குப் போயிருந்த பொழுது பெரும் பஞ்சம் உண்டானது. அதனால் அவர் சிவனடியார்கென வைத்திருந்த நெற் குவியலை உறவினர் பயன்படுத்திக் கொண்டனர்’ என வரும் செய்தி உண்மையே என்பதைக் கலம்பகத்தால் உய்த்துணலாம்.

திருப்பணிகள்

இப் பெருவேந்தன் சிற்றூர்களைத் தேவதானமாக விடுத்தான். அவற்றுள் ஒன்று திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு ஒரு சிற்றுர் விடப்பட்டது. இவன்திருநாகேச்சுரத்தைத் தன் பெயரால் ‘குமார மார்த்தாண்டபுரம்’ என்றழைத்துத் தானமாக விடுத்தனன்; திருவல்லம் பெருமானுக்குப் பல அறங்கள் செய்துள்ளான்.

இவன் திருச்சிராப்பள்ளிக் கடுத்த திருக்கற்குடி என்னும் இடத்தில் உள்ள நிலத்தை நான்மறையாளருக்கு அளித்தனன்; திருவிடை மருதூரிற்கோவில் திருப்பணி செய்துள்ளான். இவன் காலத்தில் திண்டிவனம் கூற்றத்தில் ‘திகைத்திறலார்’ என்றவர் பெருமாளுக்கு ஒரு கோவில் கட்டினார், நந்திவர்மன் மனைவி யான் மாறம் பாவையார் தஞ்சையை அடுத்த நியமம் என்னும் சிற்றுாரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சித்திரை நாளில் திருவமுது செய்தருள நெல், பால், தயிர் 5 நாழியும், அரிசி பதக்கும் வாங்க 5 கழஞ்சு பொன் அளித்தான்.மேலும் இவ்வம்மை செய்துள்ள திருப்பணிகள் பல. இவள் கணவனான கழற்சிங்கன் காவேரிப்பாக்கத்துக்கு ‘அவனி நாராயணசதுர்வேதி மங்கலம்’ என்ற தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக அளித்தான். இங்ஙனம் மூன்றாம் நந்திவர்மன் செய்த தேவதானங்கள் பல; விடுத்த பிரமதேயங்கள் பல; செய்தகோவில் திருப்பணிகளும் பல. இவனுடைய சிற்றரரும் பிறரும் செய்த அறப்பணிகள் பல. குன்றாண்டார் கோவில் (புதுக்கோட்டை) திரு ஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க வழுவூரான் என்பவன் அரிசி தானம் செய்தான்.[20] நந்திவர்மன், பொன்னேரிக்கடுத்த திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவன் கோவிலுக்கு அவ்வூரையே தேவதானமாக விட்டான்[21] ஒருவன் திருநெய்த்தானம் சிவன் கோவில் நந்தா விளக்குக்காகப் பொன் அளித்தான்.[22] ஒருவன் செந்தலை - சுந்தரரேசுவர் கோவிலுக்கு நிலமளித்தான்[23] திருவல்லம் கோவிலுக்கு மூன்று சிற்றுார்கள் தேவதானமாகவிடப்பட்டன. அங்குத் திருப்பதிகம் ஒதுவார் உள்ளிட்ட பல பணி செய்வோர்க்கு 2000 காடி நெல்லும், 20 கழஞ்சு பொன்னும் தரப்பட்டன.[24] ஒருவன் திருப்பராய்த்துரையில் உள்ள கோவிலில் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் தந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது.[25] ஒருவன் குடிமல்லம் பரசுராமேசுவரர்க்குத் திருநந்தாவிள்க்குகட்கும் நெய்க்குமாக நிலமளித்தான்.[26]

சிவனடியான்

இவன், “சிவனை முழுதும் மறவாத சிந்தையன்” என்று கலம்பகம் போற்றுகின்றது. சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையுள் இவனை ஒரு நாயனாராகப் பாடிப் புகழ்ந்து. “கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று கூறியுள்ளார். மேற்சொன்ன இவனுடைய திருப்பணிகளும் இவன் சிவபக்தன் என்பதை மெய்ப்பிக்கின்றன. இவற்றை அரண் செய்வது போல வேலூர் பாளையப் பட்டய வரிகள் காண்கின்றன: அவை, சிவனது திரு அடையாளம் நெற்றியிற் கொண்ட (திருநீறு அணிந்த) நந்திவர்மன் கைகளைக் குவித்து, ‘எனக்குப் பின்வரும் அரசர் இந்தத் திருப்பணியைப் பாதுகாப்பராக’ என்று வேண்டுகின்றான் என்பன.

இவன் காலத்து அரசர் (கி.பி. 825-850)

இக்காலத்துக் கங்க அரசன் முதலாம் பிருதிவீபதி (கி.பி.853 - 880) என்பவன்: இராட்டிரகூட அரசன் அமோகவர்ஷ நிருபதுங்கள் (கி.பி.814 - 880): பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 830-862) என்பவன் ஆவன்.


  1. Dr. C. Minakshi’s Ad. and S. “Lise under the Pallavas’ p300.
  2. கலம்பகம், செ.2, 35, 44, 84
  3. Historical Inscriptions of S. India, p.84.
  4. Bellary Gazetteer, pp.231-235.
  5. S.I.I. Vol.II. No.98: போர் இவ்வளவு கடுமையாக நடந்ததாற் போலும் அமோகவர்ஷன், தெற்கே படையெடுத்துச் சென்றதன் சிற்றரசன் பங்கயனை உடனே வருமாறு கட்டளை போக்கினான்.
  6. செ.2.
  7. இதனை முதன் முதலில் விளக்கிக் காட்டிய பெருமை டாக்டர் மீனாக்ஷி அம்மையார்க்கே உரியது.

    vide her “Ad. and S. Life under the Pallavas’ pp.302-304.

    இராசசிம்மனைக் கழற்சிங்கன் என்று தவறாகக் கருதிச் சுந்தரர் காலத்தைக் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் நிறுத்தினோர் பலராவர்.
  8. MVK Rao’s “Gangas of Talakad.’ p. 79.
  9. Ibid, pp.84-85.
  10. நந்திக்கலம்பகம், செய்.28, 29, 33, 38, 42, 49, 52, 53, 63, 71, 75, 77, 79, 80, 85, 86.
  11. தெள்ளாற்றுப் போர் வரகுணன் காலத்து என்று திரு துப்ராய் அவர்கள் கூறல் பொருந்துவதன்று. wide his “Pallavas’ pp.79-80. ஸ்ரீமாதன் காலத்தில் நடந்ததே எனத் திருநீலகண்ட சாத்திரியார் கூறலேஏற்புடையது. Vide his “Pandian Kingdom’. p.73. Foot-note.
  12. சுந்தரர் தேவாரம்.
  13. நந்திக்கலம்பலம் செ.81.
  14. நந்திக் கலம்பகம் செ25.
  15. Ibid, p.26,
  16. SII. Vol. II Part v. p.509.
  17. Ep, Indica, Vol. XVIII, p. 13.
  18. Dr. C. Minakshi’s Pallaväs, pp. 161, 162.
  19. பெரியபுராணம் வரலாற்றுக்கு (History) எந்த அளவு துணை செய்கிறது என்பதை அறிய இஃதொரு சான்றாகும்.
  20. 347 of 1914.
  21. S.I.I. Vol.1 p.567.
  22. 52 of 1895.
  23. 11 of 1899,
  24. S.I.I. Vol. III p.93
  25. 180 of 1907.
  26. Ep.Ind. Vol.II p.224.