பாற்கடல்/அத்தியாயம்-12

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search




12

லியாணமான கையோடு சோனா அத்தை தனிக் குடித்தனம் போய்விட்டாள்.

ஆனால், அதே பந்தலில் திருமணம் ஆன அம்மாவுக்கு, ஏழு எட்டு வருடங்களுக்குப் பிறகுதான் அந்தப் பதவி கிட்டிற்று என்பது அவள் விதியின் விளைபாட்டு.

அண்ணாவுக்கு பெங்களுரில் வேலை, லீவுக்கு லீவு லால்குடி வந்துவிடுவார். வாத்தியார் வேலையில் லீவுக்குக் கேட்பானேன்! நவராத்திரி (அல்லது மைக்கேல்மஸ்), கிறிஸ்துமஸ், பொங்கல், கோடை விடுமுறை; வெள்ளையன் ராஜ்யம். அவன் பண்டிகை தவிர, இந்துப் பண்டிகைக்கு வேறு.

ஆம்படையான்தான் அப்பப்போ வந்துவிடுகிறானே என்பதன்றி தனிக்குடித்தனம் உடனே வைக்காததற்கு இன்னொரு காரணம் உண்டு. ஊருக்கு அண்ணா அனுப்பும் மாதாமாதக் கப்பம் பாதிக்கப்படுமே! குடும்பம் என்றால் அவசரக் கடன்கள், எதிர்பாராத செலவுகள் அப்பப்போ எத்தனை எத்தனை! ஒருவாறு சமாளிச்சுத் தலைநிமிர்ந்து கொண்டுதானே சிறிசுகள் அவசரத்தை கவனிக்க முடியும் சிறிசுகளுக்கு என்ன அவசரம்? வயசு வேணது கிடக்கு.

'பாற்கடல்' கதையில் ஒரு வாக்கியம் வருகிறது. 'குடும்பம் என்பது பாற்கடல்' இந்த வாக்கியந்தான் கதையின் முதுகெலும்பு. உருவகத்தில்தான் பாற்கடல். உள்ளபடி உப்புக் கடல்தான்!

விடுமுறைக்கு விடுமறை அண்ணா குண்டாக வருவார். ஹோட்டல் சாப்பாடு அவருக்கு நன்றாக ஒத்துக்கொண்டிருந்தது. அது கன்னடச் சீமை, மாதவச் சமையல், நெய் கை வழிய, பிஸிபேளா ஹுளி அன்னா, மைசூர் ரஸா, எதிலும் பருப்பு சொதச் சொதா. காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதைதான்.

அண்ணாவின் ஹோட்டல் வாழ்க்கை பற்றி ஒரு துணுக்கோடு நிறுத்திக்கொள்கிறேன். பானை சோற்றுக்கு - இல்லை, பருப்புக்கு ஒரு பதம்.

போன புதிதில் ரஸத்தைத் தெளிவாக விட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். ரஸம் என்றால் தெளிவாய்த்தான் இருக்கும் என்கிற நினைப்புப் போலும். ஆனால் பரிமாறும்போது, தவறாமல் அலுக்காமல் Server, “தெளிவா? அடியா?” என்று கேட்பானாம். என்னடா தினமும் இப்படிக் கேட்கிறானே என்று ஒருநாள், "சரி கலக்கித்தான் விடேன்!” என்றாராம். தான் எதிர்பாராது கண்ட புது ருசியைத் தெரிவிக்கும் ரீதியில் அண்ணா எங்களுக்கு அவ்வப்போது விழித்துக் காட்டும் ஆச்சரியத்தையும், குரலில் சுருதி பேதத்தையும், எழுத்தில் கொணர இயலவில்லை.

“அன்றிலிருந்து முதலில் தெளிவு ரஸத்தில் ஒரு Course; அடுத்து கக்கலும் கரைசலுமாக வண்டல் ரஸத்தில் ஒரு Course அடிப்பேன்.“

“ஸாக்கா? பேக்கா ?” கேள்விக்குக் கன்னடம் தெரியாத வெளியூர்க்காரன். 'ஸாக்குலே கொஞ்சம் பேக்குலே கொஞ்சம் விடுங்கோ’ என்றானாம். அது மாதிரி என்று அந்தக் கதையும் சொல்வார். நாங்கள் முழங்காலை இறுகக் கட்டிக்கொண்டு, குதூகலத்தில் குமுங்குவோம்; கொக்கரிப்போம்! எங்களுக்கு நா சுரக்கும்.

“சரி, அம்மாப்பெண்ணே ! பையன்கள் ரொம்ப ரஸிக்கிறான்கள். நாளைக்கு மைசூர் ரஸம் வைத்துவிட வேண்டியதுதான்.“

மைசூர் ரஸம், கத்தரிக்காய் எண்ணெய் வதக்கல். கத்தரிக்காயை நாலாகப் பிளந்து உள்ளே மஸாலாப் பொடி அடைத்து, வாணலி எண்ணெயில் அப்படியே போட்டு, மேலே தட்டுப் போட்டு மூடி, உள்ளே அப்படியே அது குமுங்க வேண்டியதுதான்.

நமுட்டு விஷமத்தில்தான் விவரிக்கிறேன். இதைப் படித்துவிட்டுப் பிள்ளையாண்டான்மார்கள் படப் போகும் எரிச்சலில் நான் இப்பவே காணும் உவகை தான்.

“கதையில் கூடவா அப்பா சாப்பாட்டு விவகாரத்தைக் கொண்டு வரணும்? மானம் போகிறது. அது என்ன கத்தரிக்காய் எண்ணெய்க் கறியோ? அது மாறினால் உருளைக்கிழங்கு வதக்கல். பாங்க் மானேஜராக உத்தியோகம் பண்ணுண மனுஷனா இருக்கா பார்? என்னவோ சமையல்காரன்...” உஷார் ! உஷார் பசங்களா! நா காக்க ஜாதியைப் பற்றிப் பேசுவதோ தொழிலைப் பழிப்பதோ சட்ட விரோதம்.

இவர்கள் ஏன் இப்படிக் குமுறுகிறார்கள்? வகையாகப் பணணிப் போட்டால் ஒரு வளை வளைப்பதில் குறைச்சல் இல்லை. தின்றால் குற்றம் இல்லை. தின்பதை எழுதினால்தான் குற்றமா?

என் ரஸனையைப் பற்றிக் கவிஞர் 'அபி' சொல்வதைக் கேளுங்கள்.

“லா.ச.ரா.வின் இயற்கை வர்ணனைகளிலும், உணவு பற்றி அவர் எழுத்தில் வெளிப்படும் இலக்கியத்தரமான விவரங்களிலும், தனித்தனியாக பி.எச்.டி. பண்ணுவதற்கே விஷயங்கள் இருக்கின்றன.“

உணவு பற்றி மேலை எழுத்தாகட்டும்; இதிகாச காலத்திலிருந்து நம் வரலாறு ஆகட்டும் - வேணது வழங்கியிருக்கிறது. அதற்கெதிரில் நான் எந்த மூலை? படித்தாலேதானே! படிக்காமலே தீர்ப்பு.

எந்த மேனாட்டுக் கதையையோ நாவலையோ எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்று குடி, அல்லது தீனி அல்லது இரண்டும். பக்கத்துக்குப் பக்கம் இடறி விழுந்தேயாகணும்.

Thomas Mannஇன் புகழ் பெற்ற Budden broks. முதல்அத்தியாயம், முப்பது பக்கங்களுக்கு மேல் ஜெர்மனியில் ஓர் உயர்தரக் குடும்பத்தின் சாப்பாட்டை வெகு சாவகாசமாக விவரிக்கின்றது. அதனாலேயே அந்த அத்தியாயம் தனிப் பிரசித்தி பெற்றது.

Hemingwayக்கு ஒரு பக்கத்தில் ஒரு பாராவுக்குள்ளே, ஒரு விஸ்கி & சோடா அல்லது தீனி காணாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.

Irving wallaceஇன் The Plot எனும் நாவல் திண்டு கனம். அதில் ஒரு பத்திரிகை நிருபன், சாப்பாட்டு ராமன். முக்கியமான பாத்திரம்; நாவலின் கடைசி அத்தியாயம் வரை வருகிறான். அடேயப்பா! அவன் தின்கிற தீனியும், பருகுகிற குடி வகைகளும், நமக்குப் புரியாவிட்டாலும் ஆச்சரியத்தைத் தருகின்றன. கணக்கெடுத்தால், புத்தகத்தில் கால்பங்கு இந்த விவரத்துக்கே தேறும். புத்தகமும் சுவாரசியமானது.

மேல்நாட்டுக் கற்பனை இலக்கியத்தில் மாற்றி மாற்றி டான்ஸ், நாடகம், Opera, இடையிடையே விருந்து, சிறு தீனி, ஐஸ்கிரீம், சாக்லெட், முந்திரி, காப்பி இதுபோல இந்தத் திண்டியும் தீனியுமே கதையின் சம்பவக்கோவைக்கு இன்றியமையாத காரைப் பூச்சாக அமைகின்றன.

வெகு சமீபத்தில் –

அகதா கிறிஸ்தியின் மர்மச் சிறுகதைகள் இரண்டு படித்தேன். தலைப்புகள் என்ன தெரியுமா? "A drink of Chocolate A Box of Chocolate தனித்தனி, வேறுபட்ட கதைகள். ஆனால் தலைப்பின் அடிப்படையில்தான் விஷயம்.

Charles Dickens-ன் அமர நாவல் Tale of Two Cities கதாநாயகன் Sydney Carton தன் வாழ்க்கை வியர்த்தமாகப் போனதைக் கண்ணாடிக் கோப்பையிலிருந்து பூமியில் மதுவைச் சிந்திச் சின்னமாக உணர்த்துகிறான்.

Victor Hugoவின் இதிகாச காவியம் Les Miserable கதாநாயகன் Jean Val jean இழைத்த குற்றமே, பட்டினி கிடக்கும் தன் சகோதரியின் குழந்தைகளுக்காகத் திருடிய ரொட்டியில் நேர்ந்து, அதற்காக அவன் சிறை சென்று அனுபவித்த துன்பங்களுக்கும் அந்தக் காவியத்துக்கே அஸ்திவாரமாகவும் அமைகிறது.

ஒரு கோடிதான் காட்டியிருக்கிறேன். என்னால் இன்னும் சொல்லிக்கொண்டே போக முடியும். Oliver Twist, Little woman, Hunger (By Kunt Hamsun) இல்லை. நிறுத்திக்கொள்கிறேன். வெறும் பெயர்களை உதிர்த்து, நான் படித்திருக்கிறேன் என்று காட்டுவது ரஸமட்டம்.

நம் நாகரிகத்துக்கும், நம்பிக்கைகளுக்கும் வருவோமா? கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், மலையாளம்- எத்தனை விதச் சமையல்கள், தின்பண்டங்கள் - இத்தனை பிரதேசப் பக்குவங்களையும் ருசி தெரிந்தவன் ஒருவனேனும் நம்மில் உளனா? எனக்குச் சந்தேகந்தான். இத்தனைக்கும் நான் சைவ உணவு வரைக்கும்தான் சொல்கிறேன். மற்றது பற்றித்தான் எனக்குத் தெரியாதே! பழக்கப்பட்ட தமிழ்நாடு வரைக்குமே எடுத்துக்கொள்வோம். பதார்த்தங்களைத் தயாரிக்கும் வகைகளில், மாயவரத்துக்கும் தஞ்சாவூருக்குமே வேறுபாடு. தஞ்சாவூர் சமையலுக்கும் திருச்சினாப்பள்ளிக்கும் வித்தியாஸம்; திருச்சிக்கும் திருநெல்வேலிக்கும் வித்தியாஸம்; சரி சரி இந்த அத்தியாயம் வெறும் சமையல் குறிப்பாகவே ஆகிவிடப் போகிறது என்று எனக்கே அச்சம் வந்துவிட்டது.

நம் மரபை இதிகாச காலத்திலிருந்து எடுத்துக் கொண்டோமானால், விருந்தோம்பல்தான் சமுதாய வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமே. சமாராதனைகள், வன போஜனங்கள், வைக்கத்தஷ்டமி, ஊட்டுப் பிறை - சுருங்கச் சொல்லின் மீனாட்சி அம்மன் கல்யாணத்தில் மீனாட்சி அம்மனின் 64 கேள்வி. அதற்குப் பதிலென ஆண்டவன் திறந்துவிட்ட குண்டோதரப் பசியைத் தொட்டு, சிறுத்தொண்டனின் பிள்ளைக் கறி வழி 'அன்னம் அஹஞ்ச ப்ரம்மா’ என்கிற ஸுத்திரத்தில் கொண்டுபோய் விடுவதற்குள் இந்தப் பக்கங்கள் என்ன, பிரபஞ்சத்தையே ஏடாகப் புரட்டினும் போதா.

ஒரு கிழவி, கூழுக்குப் பாடியே தமிழை வளர்த்தாள்.

நம் பண்டைய வைத்தியப் புத்தகங்களில் தினப்படிக்கே ஆரோக்கிய வளர்ச்சியை முன்னிட்டு விதித்திருக்கும் உணவு விமரிசை, இந்நாளில் கட்டுப்படியாகாது. நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. உதாரணம்; பாலைக் கறந்த அரை மணி நேரத்துக்குள் காய்ச்சிச் சாப்பிட்டாக வேணும். காய்கறிகளைச் செடியினின்று பறித்த ஒரு மணி நேரத்துக்குள் சமைத்தாக வேண்டும். இல்லாவிடில் பலன் இல்லை. பைப்பாலையும் புட்டிப்பாலையும் குடித்துக்கொண்டு, கொத்தவால் சாவடியில் மூட்டையில் குமுங்கிக் கீழே கொட்டிய கோஸையும் வெங்காயத்தையும் தின்றுகொண்டிருப்பவர்களுக்குச் சாத்தியமா? விட்டுத்தள்ளு.

இதுமாதிரி ஒரு பாரா. ஏழையின் வாழ்க்கையைச் சித்திரிப்பதாக எண்ணம்:

“ரிக்ஷாக்கார முனிசாமி - (கதையில் ஏன் ரிக்ஷாக்காரன் எபபவுமே முனிசாமியாக இருக்கிறானோ தெரியவில்லை) ஸீட்டின்மேல் சாய்ந்தபடி, ரிக்‌ஷாத் தட்டில் அமர்ந்து இடதுகையில் தோசை, அதன்மேல் வைத்த கறியோடு விண்டு விண்டு வாயில் போட்டுக் கொண்டிருக்க, அவன் ஆசைக்கிழத்தி - (பகவானே, எனக்காக அவளே முனிசாமியின் மனைவியாகவும் இருக்கட்டும்) அருகில் நின்றபடி தகரக் குவளையை வீசி வீசி ஆட்டியபடி உள்ளிருக்கும் கஞ்சியை ஆற்றிக்கொண்டிருந்தாள். குவளையிலிருந்து ஆவி பறந்தது.“

இதைப் படிக்கையில்: “ஆகா, என்ன தத்ரூபமான சித்திரம் என்ன realism என்ன பிரதிபலிப்பு!”

கையால் இழுக்கும் ரிக்ஷா இந்நாளில் கண்ணில் படுவது அரிது. இந்நாளில் குப்பம்மா அப்படி ஆற்றிக் கொடுத்த கஞ்சியை முனிசாமி குடிக்கிறானா என்பதே சந்தேகம் - இது என் முணுமுணுப்பு.

எழுதினவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால் ஒரு சின்னக் கேள்வி: குப்பம்மாள் அவ்வளவு ஸ்டைலாக ஆற்றிய கஞ்சியில் ஒரு முழுங்கேனும் பரீக்ஷார்த்தமாகவேனும் நம்மால் குடிக்க முடியுமா ?

“எழுதினால் குடித்தாகணுமா ? இதென்ன நியாயம் ?”

அப்போது எண்ணெய்க் கத்திரிக்காய் சாப்பிட்டதைத்தானே எழுதுகிறேன்! குடிக்காத கஞ்சியைப் பற்றி எழுதினால் விசேஷம். அனுபவித்த பதார்த்தத்தைப் பற்றி எழுதுவது குற்றம். தரக்குறைவு. வாதம் அப்படிப் போகிறது அல்லவா?

கூடவே சமர்ப்பித்துக் கொள்கிறேன். சாப்பாட்டு விஷயத்தில் மேற்கோள் காட்டிக் கட்சி ஜயிப்பதற்கு ஒன்றுமில்லை. உண்மையில் இதில் வியாஜ்யமே ஏது? சிருஷ்டியின் இயக்கமே அதுதான். அவ்வளவுதான்; பிறந்து, உண்டு, அழிவது. இடையில் நடப்பது, நிகழ்வது அத்தனையும், அடிப்படையில், விதவிதமான பெயர்களில் பொழுதின் விதவிதமான வியாபகம். விதவிதமான விஸ்தரிப்பு - ருசிகள் தனித்தனி, அவ்வளவுதான்.

நன்றாக உழை
நன்றாக உண்
நன்றாக உறங்கு

காய்ந்த வயிற்றில் எந்தக் கலையும் வளராது. அதுவும் இலையும் காயும் போல்தான்.

ஆனால் முட்டிய வயிறும் அதற்கு உதவாது. நீர்ப்பாய்ச்சல் அதிகமானால் செடி அழுகிவிடுவது போல். ஆகவே –

கூடவே பசித்திரு.

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் இல்லை - எந்தக் கலைக்கும் இந்தச் சூத்திரம் பொருந்தும். பசி மிகவும் ஆரோக்கியமான உணர்ச்சி, உடல் பசியை மட்டும் நான் குறிக்கவில்லை.

எதையும் பழிக்காமல்
எதிலும் நேர்த்தி
ஆனந்தத்தின் தூய்மை இதுதான்.

என்னைப் பொறுத்தவரை என் ருசிகள் உணக்கைதான். 'சீலம்' என்று சமயத்துக்கு, வீட்டுப் பெண்களின் அவ்வப்போதைய மனநிலைக்கேற்றவாறு, செல்லமாகவும், எரிச்சலிலும் சொல்வார்கள். வீட்டில் மட்டும் இல்லை. என் நாக்கை வளர்த்ததில் என் ரஸிகர் குழாத்துக்கும் (அவ்வட்டம் எவ்வளவு சிறியதாயிருப்பினும்) பெரும் பங்கு உண்டு. டில்லியிலிருந்து கன்யாகுமரி வரை அவர்களுடைய கரை கடந்த உபசரிப்புக்கும் திணிப்புக்கும் ஆளாகிப் புனிதனாகி இருக்கிறேன்.

குருக்கள் வீட்டில், அன்பிலேயே குழைத்து, மோர் கூட இலாது, வெறும் நீரும் சோறும் பிசைந்து, கையிலோ, தாமரை இலையிலோ, இட்ட பழையதிலிருந்து, உத்தியோக ரீதியில் - தனியாக எனக்கு எப்படிக் கட்டுப்படியாகும்? - Hotal Asoka வில் A.C. அறையில், ரொட்டித் துண்டுகள் மிதக்கும் ஸூப்பில் தொடங்கி எண்ணி இருபத்துநான்கு தினுசுகள் வழி, கடைசியாக, சைனா மண் கிண்ணத்தில் பதமான வெந்நீரில் விரல் நுனிகளை நனைத்துக்கொண்டு எழுந்ததும், ஒரு முழுங்கு மட்டுமே கொள்ளும் சின்னஞ் சிறு கோப்பையில் காபியில் முடிந்து - (அப்புறமும் ஏதோ ஒரு தினுசில் திருப்தியில்லாத) Dinner வரை சாப்பிட்டிருக்கிறேன்.

ஆனால் இந்தத் தகவலில் பெருமையும் இல்லை. இது தகவலும் இல்லை. நான் வெறும் உண்டி வளர்ப்பான் என்கிற எண்ணத்துக்கே, இந்த விவரங்கள் இடம் தர ஏதுவாக இருக்கின்றன. அதனாலேயே இதில் Vulgarity தட்டுகிறதோ என்றுகூட பயமாயிருக்கிறது. ஆனால் என் நினைப்பு அது அல்ல. இந்தத் தப்புக்கு உடனே பிராயச்சித்தம் தேடுவதும் அவசியமாகி விட்டது.

1967-இல் அதிகாரிகள் ஏதோ ஒரு பயிற்சி பெற (Training) டில்லிக்கு அனுப்பினார்கள். மொத்தம் ஆறு வாரப் பயிற்சி. அதுவரை எனக்கு அவ்வளவு நீண்ட பயணம் நேர்ந்ததில்லை. கேட்கப்புகின், குறுகிய பயணங்களுக்குக் கூட அகக் கண்ணில் மங்க ஆரம்பித்து விட்டதோ என்னவோ? அவளே பொழுதில் பாதிக்கு மேல். நினைவில் அதற்கும் மேல். இருளில்தானே இழைந்து கிடக்கிறாள்! இந்த நிலைக்கு அணை கோலியே, என் பாட்டனார், அவருடைய கவித்துவத்தில் ஓரிடத்தில் அவளைத் தோத்தரிக்கிறார்.

“பேணேம் ஆனாலும், முதிர் அன்பால்
வம்சமுறையே எதிரும் கருணாநிதியே”

(உன்னை நாங்கள் வழிபடாவிட்டாலும், உன்னுடைய முதிர்ந்த அன்பில் வம்சவழியில் எங்களுக்குத் துணை நிற்கும் (அல்லது தோன்றிக் கொண்டிருக்கும்) கருணாநிதியே!)

(பெருந்திருப் பாட்டி! நாங்கள் பேரன்மார்கள், சிறிசுகள். இப்படித்தான் இருப்போம். நாங்கள் மறந்தாலும், நீ எங்களை மறக்காதே என்பதுதான் தாத்பரியம். இதில் வேடிக்கை, அவளும் அப்பத்தான்!)

டெல்லிக்குப் புறப்படுகையில் எனக்கு வயது ஐம்பது தாண்டிவிட்டது. டெல்லி சேர்ந்ததும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியிருந்தது. கலம் அழுக்கு ஏறியிருந்தாலும் Pant-இலோ, பைஜாமாவிலோ படுத்துறங்கும் வடநாட்டாருக்கு வேட்டியைக் கண்டால் எளப்பம். இல்லை - நான் போன சமயம் அப்படி 'ஸாதி வாலா’ என்று கேலி பண்ணுவார்கள். பாஷை தெரியாது. ஆங்கிலம் தெரிந்தவன்கூட வீம்புக்குத் தன் பாஷைதான் பேசவான். அவர்களுடைய தேசப்பற்று சில விஷயங்களில் அப்படி, வகுப்பின் சூழ்நிலையிலேயே ஆதரவு இல்லை. உள்பகையும் அவநம்பிக்கையும் தான் உணர முடிந்தது. முதல் தினத்திலிருந்தே, சென்னை திரும்ப இன்னும் எத்தனை நாள் என்று குழந்தை மாதிரி எண்ண ஆரம்பித்தவிட்டேன்.

ஆனால் நல்ல வேளை; இந்நிலையினின்று மீட்சிக்கு விடிவும் கண்டது. கடைசிவரை துணையும் இருந்தது. இச்சமயம் பத்திரிகைகளில் அடிபட்டுக் கொண்டிருந்த என் பெயர் டில்லி தமிழ் மக்களின் கண்ணிலும் ஏற்கெனவே பட்டுக்கொண்டிருந்ததன் விளைவாக, நான் வந்திருக்கும் மோப்பம், என் அதிர்ஷ்டவசமாகக் கண்டு என்னை அனைத்துக்கொண்டார்கள். நான் எழுத்தாளன் என்கிற முறையைக் காட்டிலும், அவர்களுக்கும் ஏதோ ஓர் ஏக்கம் இருந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு புதுமுகத்தைப் பார்த்ததும் சொந்த மனுசாளைக் கண்டமாதிரி இருந்ததோ என்னவோ? எப்படியிருந்தால் என்ன? எனக்கு மீட்சி.

என்னோடு சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும், கோயமுத்தூரிலிருந்தும் வந்திருந்த சகாக்கள் பிரதி தினமும் அதே சுக்கா சப்பாத்தி, அதே ஆலு, அதே சாயாவில் ஆறு வார தண்டனையை அனுபவித்து நாக்கு செத்துப்போய்க் கொண்டிருக்கையில், நான் கரோல் பாக், லோடி நகர், சாணக்கியபுரி, ராம கிருஷ்ணாபுரம் என்று ஆங்காங்கே விருந்தினனாக எழுந்தருளி, வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர்க் குழம்பு, தேங்காய்த் துவையல், சாம்பார், இட்டிலி, தோசை, மிளகாய்ப்பொடி, அடையென்று திளைத்துக் கொண்டிருந்தேன். மிளகு ரஸம், பருப்புப்பொடி, கருவடாம், மணத்தக்காளி வத்தல். என்ன இருந்தாலும் உள்ளூரச் சென்னை அரித்துக் கொண்டிருந்தது.

ஸரோஜினி நகரில் ரிசர்வ் பாங்க் ஆபிஸர் ஒருவர் சாப்பிட அழைத்திருந்தார்.

இலையில் எல்லாம் பரிமாறியாகிவிட்டது. சாதம் ஒன்றுதான் பாக்கி. மாமி திடீரென மாயமாகிவிட்டாள். அவர் பொங்கி வழிகிறார். “எனக்கு அவசரமே இல்லை!“ என்று அவரை நான் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கையில் இலை மேல் ஈ ஓட்டக் கையை ஆட்டும் நிலை நெருங்கிக் கொண்டிருக்கையில்.

“எங்கே போய்த் தொலைந்தாய்?“ அவர் எரிந்து விழுந்தார்.

மாமி கையோடு தான் கொணர்ந்திருந்த சின்னக் கிண்ணியிலிருந்து என் இலையில் மட்டும் ஓரமாய் எதையோ பரிமாறினாள். ஊறுகாய்.

“பண்டங்கள் எல்லாம் ஆறிப்போகிறது, ஊறுகாய்க்கு என்ன அவசரம்? எங்கே தொலைஞ்சே?”

“அப்படியில்லே, நாலு ப்ளாக் தாண்டி, ஒரு மாஸமா திருச்சினாப்பள்ளிக்காரர் குடித்தனம் வந்திருக்கா. இன்னிக்குச் சாயந்திரம் இவரைப் பார்க்க வராராம். இவருக்காகச் சீமை ஊறுகாய் மெனக்கெட்டு அவாளிடம் கேட்டு வாங்கி வந்தேன். இவர் ஒரு கதையில் எழுதியிருக்கார்; கசப்பு நார்த்தங்காய் கல்லையே ஜீரணம் பண்ணிவிடுமாம்; ஆனால் தன்னை ஜீரணம் பண்ணிக்கத் தெரியாதாம்! அது நெணைப்பு வந்தது.“

இலைமேல் என் முகம் குனிந்துவிட்டது. இரண்டு சொட்டுக்கள் சர்க்கரைப் பொங்கல்மேல் விழுந்ததை மாமா, மாமி, குழந்தைகள் எல்லோருமே பார்த்து விட்டார்கள். நான் என்ன செய்ய முடியும்? என்ன செய்யனும்? கண்ணீரில் புனித நீராடினேன்.

பெண்ணினத்துக்கே உரித்தான தாய்மையின் பரிவில் 2000 மைல்களை ஒரு கணத்தில் கடக்க வைத்துச் சென்னையில் அசோக் நகர், பெருமாள் கோயில் தெரு 21-Cயில் என் குடும்பத்துடன் என்னைச் சேர்ப்பித்த இந்த அம்மாளின் மந்திரக்கோலை என்ன என்பேன் ? இதுபோல் என் எழுத்துமூலம், நான் கண்டும் காணாமலும் தாய்மார்கள் எத்தனைபேர் ஆங்காங்கே சிதறியிருக்கிறார்களோ ? தனித்தனியாக என் நன்றியை அவர்களிடம் எவ்வாறு தெரிவித்துக் கொள்வேன்? அனைவருக்கும் என் நமஸ்காரத்தைத் தான் சொல்லிக்கொள்ள முடியும்.

தருணம் நேர்ந்துவிடுகிறது. அந்தச் சமயத்தின் பரவசத்துடன் அதன் பாதிப்பு நிற்கவில்லை. சிந்தனையில் ஊறி, மோனத்தில் உருவேறி, வேளை வரும்போது மோனத்தின் வாக்காக எழுத்தில் வெளிப்படுகையில் கூடவே அதன் பரிவாரமென…

நெஞ்சில் அமைதி தவழ்விக்கும் கண்ணுக்குக் காணா வெண்புறாக்களும்,

நெஞ்சில் ரஹஸ்யப் பாளம் எதையோ கீறிக் கவிதை சொரிய வைக்கும் கண்ணுக்குத் தெரியா க்ரவுஞ்சங்களும் விடுபடுகின்றன. உள்ளே சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றன.

பாற்கடலைக் கடைகையில் தோன்றிய குமிழிகள் தாம் இவையென்றாலும் உள்ளே அமுதத் துளிகள் தங்கியிருப்பதால் இந்தக் குமிழிகளும் அமரத்துவம் அடைந்து விட்டன. உன் வாழ்க்கையின் இருள் நேரங்களுக்கு இந்தக் குமிழிகள்தாம் வெளிச்சங்கள் என்று ஏதோ தைரியம் சொல்கிறது. ஆறுதல் அடைகிறோம்.

இந்த இடைமறிப்பு இப்போதைக்கு இத்துடன் நிற்கட்டும். அம்ருத மந்தனத்தில் இதுபோன்ற தோற்றுவாய்கள் இன்னும் எத்தனை எத்தனையோ!

“இதோ பார் அம்மாப்பெண்ணே, தனிக்குடித்தனம் போறே! நீங்கள் இரண்டுபேரும் சிறிசுகள். உங்களுக்கு அவசரமேயில்லை. சட்டுச் சட்டுன்னு குழந்தைகளைப் பெத்துண்டு உடம்புதான் கெட்டுப்போகும். இங்கேயே இதுக்குள்ளேயே உனக்கு ரெண்டு குறைப்பிரசவமாயிடுத்து. இங்கெல்லாம் சொல்றா. ஹோட்டல்லே சாதம் மல்லிப்பூவா, பார்வையாயிருக்கணும்னு, வடிக்கிறபோது சுண்ணாம்பைக் கலக்கறானாம்….”

அப்பா ! ஹோட்டல்காரனை வாழ்த்தணும். அம்மாப்பெண்ணுக்கு அவனாலேதான் விடியப்போறது!

“சோனா சுருக்கப்போய்ச் சேர்ந்தாளோ, ஹாலாஸ்யம் உடம்பு பிழைச்சுது. ஏற்கெனவே மூல உபத்ரவக்காரன்.“

ஒஹோ ப்ளேட்டு இப்போ அப்பிடி வாசிக்கிறதா?

-“புருஷாளுக்கு அவா உடம்பைப் பற்றி நினைப்பே இருக்காது. உழைக்கிற கட்டை நீயாத்தான் பார்த்து வாரத்துக்கு ஒரு முறையேனும் எண்ணெய் தேச்சுக்கிறா னான்னு பார்த்துக்கணும்.“

சபாஷ் மன்னி! பெண்ணை அனுப்பும்போது, ஹாலாஸ்யத்தைப் பேச்சுக்குக்கூட எண்ணெய்க் குளியலில் சேர்க்காமல் அம்போவில் விட்டுவிட்டு, “சோனா! வாரம் தவறாமல் ரெண்டு முறை எண்ணெய் தேச்சுக்கோ! செளக்கியம் சேர்த்துக்கோ !”

இப்போ இப்படியாக்கும்!

திண்ணையில் இதே சமயத்தில் வேறுமாதிரி உபதேசம் நடக்கிறது.

“சுந்தரம் சுப்ரமணியனோடே கார்த்திகேயனையும் அனுப்பறேன். அங்கே ஒருத்தருக்கொருத்தர் துணையாக ஒழுங்காகப் படிக்கட்டும்."

“என்னப்பா நீங்கள் சொல்லணுமா? கண்டிப்பாகக் கார்த்திகேயனை கவனிச்சுக்கிறேன்.“

“சம்பளம் வந்ததும் முதல் நினைப்பு உனக்கு லால்குடியாத்தான் இருக்கணும். மணியார்டர் பண்ணிட்டு அப்புறம் மற்றதை கவனி. இந்த மாசக் கடைசியில், உன் தாத்தாவுக்குத் திவசம் வரது அரிசிக்காரி யோகாம்பாளுக்குப் போன மாஸமே பாக்கி நின்னுபோச்சு.“

‘லக்ஷ்மி ஆசைநாயகிக்கு மாதம் தவறாமல் செலுத்தற கப்பத்தில் increment கேட்கிறாளா? சப்தரிஷி சம்பாதிக்க ஆரம்பிச்சா அவளுக்குத்தானே முதல் பங்கு!’ என்று நினைத்துக்கொள்வேன். வாய்விட்டுச் சொல்ல முடியுமா என்று அண்ணா எங்களிடம் சொல்வார்.

ஆகவே, இந்த வரலாற்றில் தன் முதல் வெற்றிப் பிரவேசத்தில், தன் இல்லத்தரசியாக, அம்மாப்பெண் பெங்களூருக்கு வருகிறாள். கூடவே தம்பிமாரும் குட்டி மைத்துனனும், அனுமார் அண்டையிலே காவல், பரதன் பக்கத்திலே காவல், சத்ருக்னன் வாசலில் காவல்.

-சே, நான்தான் சமயம் கிடைத்ததென்று வேடிக்கை பண்ணுகிறேன். அம்மா, அண்ணா இருவருமே இது விஷயத்தில் ஒருமித்துத்தான் சொல்கிறார்கள்.

“தனியாயிருக்க வேணும், தேனிலவு அநுபவிக்க வேணும் என்கிற எண்ணம் எங்களுக்குக் கனவில்கூடக் கிடையாது. எல்லோருடனும் சேர்ந்து இருந்துவிட்டுத் தனியாக இருந்தால் எங்களுக்கே பாந்தமாயிருக்காது. அத்தங்கா - அம்மாஞ்சி கலியாணம் பண்ணிண்டு அதுவும் சிறுவயதிலிருந்தே சேர்ந்து வளர்ந்துவிட்டு அதிலே என்ன தேனிலவு கிடைக்கும்? ஐரோப்பியர்கள் கொண்டாடுவான்னு, நான் கேட்டதை, படிச்சதை, உங்களிடம் சொல்கிறேன். அதனுடைய நிலவரம் என்ன வென்று ஸ்திரமா எங்களுக்கு ஒண்ணும் தெரியாது.”

“பெங்களூரில் பத்து வருஷம் வாழ்ந்தோமே, எங்கள் பூரண சந்தோஷ நாட்களும் அங்கேதான். எங்கள் வாழ்க்கையின் பேரிடிகள் விழத் தொடங்கின இடமும் அதுதான்!” என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.

சந்தோஷம் என்றால் சினிமா, டிராமா, கூத்து அல்ல. 'டாக்கி' வர இன்னும் எத்தனையோ வருடங்கள் இருந்தன. திரையில் உருவங்கள் வெறும் வாயை மென்றுகொண்டிருக்கையில் வசனங்கள் திரையில் பூத்து மறையும். அதுவும் எப்பவோ ஆடிக்கொரு தடவை. அமாவாசையைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது. அமாவாசை மாதம் ஒரு முறை வருகிறது. தவிர அண்ணாவுக்கு அப்பா இருக்கிறாரே!

காலையில் ஸ்நானம், சமையல், ஸ்தோத்திரம் எல்லாம் முடிச்சுண்டு, பள்ளிக்கூடத்துக்கு, வேலைக்கனுப்பறவாளை அனுப்பிவிட்டு, நானும் சாப்பிட்டு - மத்தியானம் பக்கத்துக் கட்டில் ஒரு மாமி மணி கோக்கச் சொல்லிக் கொடுப்பாள். மணிகள் (beads) - கண்ணாடிக் குழல்கள் வகுப்பே நடத்தினாள்; பத்துப் பன்னிரண்டு மாமிகள் ஒண்ணு சேருவோம். மணிக்கார மாமி கட்டுலே நுழையறபோதே அவள் அங்கங்கே, கூடத்தில் அறையில் மணியும் குழலும் தைத்தும் கோத்தும் தொங்கவிட்டிருக்கும் திரைகளைத் தள்ளிக் கொண்டு தான் நுழையணும். 'கிளு கிளு குலு குலு,' வேடிக்கையா இருக்கும்.

சிலர் மத்தியான வேளைக்கு டிபன் டப்பாவில் சாதமோ, முறுக்கு, சீடை, தேங்குழல் இதுமாதிரி கொண்டு வந்திருப்பா. எல்லாரும் பங்கிட்டுக் கொள்வோம். வாத்தியார் மாமி ஒண்ணுகூடத் தன்னுதுன்னு தெறிக்கமாட்டாள். கெட்டிக்காரி. தவிர எப்படிக் கட்டுப்படியாகும்? நானும் அத்தி பூத்த மாதிரி என்னிக்கானும் பண்ணுவேன். பஜ்ஜி, பக்கோடா. பயந்தான். எண்ணெய்ச் சட்டி இந்த ரேட்டுக்கு வெச்சுதுன்னா ஊருக்கு அனுப்பறதிலே துண்டு விழுமே, அவாளுக்குக் கணக்குச் சொல்லணுமே!

அலுப்புத் தட்டாமல் இருக்க, முறை போட்டுண்டு ஒரு மாமி, ராமாயணம், பக்தவிஜயம்னு ஏதேனும் புண்ணிய கதை உரக்கப் படிப்பா, அவளுக்கு நான் ஒரு தம்ளர் காபி கொண்டு வந்து கொடுப்பேன். எங்களுக்கே பெங்களூர் வந்துதான் கிலுப்தமா காபிப் பழக்கமாச்சு. சந்தோஷமா பேசிண்டும் சிரிச்சுண்டும் வகுப்பு நடக்கும். நான் கத்துண்டேனே ஒழிய, நம் வீட்டில் திரை வைத்துத் தொங்கவிடத் துணியேது? புதுசா வாங்க வேண்டாமா?

அண்ணா சாயந்திரம் பள்ளிக்கூடத்திலேருந்து வந்து காபி சாப்பிட்டுவிட்டு உடனே ட்யூஷனுக்குக் கிளம்பிவிடுவார். இரவு எட்டு, ஒன்பதுக்குத்தான் திரும்புவார்.

காலையிலேயே கூடத்தில் மூணு நாலு ட்யூஷன் நடக்கும்.

ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில், மாலை வேளைகளில் லால்பாக் மைதானத்தில் மிலிட்டரி பாரேட் - இல்லாட்டா மிலிட்டரி band - ரொம்ப நன்னாயிருக்கும் ஆத்துக்குத் திரும்பி வந்ததும் மோருஞ் சாதத்தைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தால், அவ்வளவு தான்.

எங்கேயாவது கதா காலக்ஷேபம் இருந்தால் போவோம். சங்கீத உபன்யாசத்துக்கு அப்போ ஒரு தனி மவுசு. ஸரஸ்வதிபாயை அப்போ கேட்டிருக்கேன். அப்பத்தான் தைரியமா மேடை ஏறின புதுசு. அவா ஜாதிக் கட்டுக் கட்டிண்டு, மூக்கில் புல்லாக்கு - மங்களகரமாக இருப்பாள். அந்த திரெளபதி சபையில், தனக்கு நியாயம் கேட்கிற இடத்தைப் பாட்டும் வசனமுமா அள்ளி வீசி. ரொம்ப நன்னாயிருக்கும். அடேயப்பா! கண்ணில் திரெளபதியே வந்துவிடுவாள்.

அம்மா இந்த அளவுக்கு ஒரு விஷயத்தை வாய் விட்டுப் புகழறாள்னா, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.

அம்மாவுக்குக் கொட்டி அளக்கற சுபாவம் கிடையாது. எடை போடுவதோடு சரி.

காய்கறிகள் இங்கே கொஞ்சம் தைரியமா நடமாடும். கோஸ், உருளை.

அம்மா குடும்பத்தின் சந்தோஷங்கள் இவை.

'நாளைக்குச் சோறு வடியல் எப்படி?’ என்கிற கவலை விட்ட நாட்கள். 'சந்தோஷம் என்று தனியா என்னடா இருக்கு? மனம் நிறைஞ்சுவிட்டால் அதை விட என்ன வேணும்? யாருக்கேனும் அப்படியிருக்கோ நெஞ்சைத் தொட்டு, அவாள் வாதங்களையே கேட்டுக்க வேண்டியதுதான். அல்ப விஷயம் சொல்ப விஷயத்தில் மனம் நிரம்பி வழியறதே, இன்றைக்கு இது கிடைச்சதே இதுவே திருப்தி; இதுதான் சந்தோஷம். சந்தோஷத்தில் மனச்சாக்ஷிக்குப் பங்கு உண்டு.“

லால்குடிக்கு அப்புறம் இங்கேயும் எனக்கு முன்னால் இரண்டு சிசுக்கள் நிறையும் குறையுமாகக் காலாவதி ஆகிவிட்டன. பெரியவர்கள் சொற்படி அம்மாவும் அண்ணாவும் ராமேஸ்வரம் போய்வந்தார்கள். வீட்டில் திலோமம் நடந்தது. அம்மா கடும் விரதங்கள் இருந்தாள்.

பிறகு –

நள வருடம் ஐப்பசி ௴ 14 ௳க்குச் சரியான 30-10-1916 அன்று காலை 9-15 மணிக்கு பெங்களூரில் அடியேன் ஜனனமானேன்.

ஆகவே வரலாற்றுக்குள் ஒருவழியாக - உருப்படியாக சரித்திர ரீதியாக நுழைந்துவிட்டேன். ஆனால் பிறக்கும்போது நான் உருப்படியாகப் பிறக்கவில்லை. அங்கஹரீனம் இல்லை. வாஸ்தவந்தான். ஆனால் உடம்பு பூரா நீலம் பாரித்துக் கட்டையாக விழுந்தேனாம். பிறகு டாக்டரோ, மருத்துவச்சியோ - எனக்குத் தெரியாது - குழந்தையைத் தலைகீழாகப் பிடித்துச் சப்பையில் இரண்டு அறை அறைந்த பிறகுதான் அழுகை புறப்பட்டதாம். அதுவும் திருப்தியாக இல்லை. பூனைக்குட்டி போல் ஏதோ முனகல், தவம் கிடந்து பெற்ற குழந்தைக்குச் சீட்டு உறுதியாகவில்லை. யார் சொல்லியோ, கழுதைப்பாலை ஒரு பாலாடை புகட்டிய பிறகுதான் கழுதைப்பால் - நெருப்பு. - உடல் நீலம் மறையத் தொடங்கி நானும் ஜன்னியிலிருந்து மீட்கப்பட்டேன். நான் நினைவு வயதை அடைந்தபிறகு எனக்கு அழுகை வருமளவுக்குக் குழந்தைகளும் பெரியவர்களும் அம்மா கூடச் சில சமயங்களில் சேர்ந்துகொண்டு –

அழுதமூஞ்சி சிரிச்சுதாம்
கழுதைப் பாலைக் குடிச்சுதாம்

என்று பாடிக்கொண்டு, என்னைச் சுற்றிக் கும்மி அடிப்பார்கள்.

ன் பெயரில் நான் ராமேசுவர ப்ரஸாதம் என்பதற்கு அடையாளமாக

—ராம நாமம்

—என் தாத்தாவின் பெயர் (ராமசுவாமி) முன் பகுதி

—இந்தக் குடும்ப ஸ்தாபகர் பெயர் (அமிர்தமய்யர்) மூன்றும் சேர்ந்து கொடி கட்டிப் பறக்கின்றன.

என் ஆண்டு நிறைவுக்கு இருநூறு பேருக்குச் சாப்பாடாம், கூடம் கொள்ளவில்லையாம், நாலு பந்தியாம். குடும்பச் சந்தோஷங்கள் இப்படி

கொழ கொழ கன்னே—

அத்தனையும் பால் சதை. கொழ கொழவா? தோசை மாவு பொங்கி வழிந்த மாதிரி தகதகக்கும் சிவப்பு. (சொல்லாமல் இருக்க முடியாது) கன்னச் சதையில் புதைந்துபோன பொத்தான் விழிகள், மஞ்சள் நிற விழிகள் - சொப்பு வாய்க்கடியில் மூன்று மோவாய்கள், நெற்றியில் அடையாக வழியும் மயிர்.

"Ah what a darling child!"

மைதானத்தில் நின்றபடி paradeயோ பார்க்கில் bandடயோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்திருக்கும் ஐரோப்பியக் குடும்பங்களில் யாரேனும் ஒரு ஸ்திரீ, அம்மா இடுப்பிலிருந்து அம்மாவைக் கேட்காமலே குழந்தையை வாரிக்கொண்டதும், அம்மாவுக்கு ஒரே வெட்கமாகப் போய்விடுமாம்! அங்கிருந்து குழந்தை அவர்கள் கோஷ்டியில், ஆண் பெண் அடங்கலாகக் கைமாறிக்கொண்டே போய், அவர்களுடைய கொஞ்சலிலிருந்து ஒருவாறு மீண்டு அம்மா கைக்குத் திரும்பி வரும்போது, கூடவே பிஸ்கட் பாக்கெட், சாக்லெட் பெட்டி (பெட்டியில் - ஞாபகமிருக்கட்டும், விளையாட்டுச் சாமான்கள்)

தெரியவில்லையா இன்னும்? இத்தனையும் என் பிரதாபந்தான்.

ராமாமிருதத்தின் குழந்தைப் பருவத்தில் அவன் உடல் செழிப்பு, நிறம், கவர்ச்சி பற்றி லால்குடியிலும் சென்னையிலுங் கூடப் பலர் நினைவு கூட்டல் கேட்டிருக்கிறேன்.

“குழந்தைக்குச் சுத்திப் போடுடி!“

ஒரு முறை இரு முறை இப்படி நேர்ந்தால் திருஷ்டி கழிக்கலாம். இது காரணமாகப் பிறர் இடுப்புச் சவாரி குழந்தைக்குத் தினப்படி மாமூல் ஆகிவிட்டால், தினப்படிக்கு திருஷ்டி கழித்துக் குழந்தை மிளகாய்க் கமறலில் செத்துப்போக வேண்டியதுதான், லால்குடிக்குப் போகும்போது நிச்சயமாக இந்தச் சடங்கு நடைபெறும். பெங்ளுரில்..? எனக்கு எப்படித் தெரியும்? தெரிந்துதான் என்ன ஆக வேண்டும்? ஆனால் அம்மாவுக்குப் பொதுவாக இப்படியெல்லாம் பாராட்டும் சுபாவம் கிடையாது. அனுபவத்தில் அதுதான் எனக்குத் தெரியும்.

கிராப்பு வேறு வெட்டிவிட்டதும் கப்பலிலிருந்து இறங்கிய பரங்கி (Feranghi)க் குழந்தை போலாகி விட்டேன். முகவார்ப்பும் அப்படித்தான்.

இவையெல்லாம் தற்பெருமையாகப்படின், வாசகர்கள் பொறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. என் கூச்சத்தைப் பற்றி இங்கு தெரிவித்துக் கொள்வதில் என்ன பயன்? சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது! பிறகு ஏழு எட்டிலிருந்து பதிமூன்று, பதினாலு வயதுவரை தேவாங்காய் (ஒரு சிறு கூனலையும் போட்டுக்கொண்டு) மாறிவிட்டேனே, அதுபற்றி இவ்வளவு விவரமாகச் சொல்லப் போறேனா? சொன்னால்தான் உங்களுக்குப் பிடிக்குமா?

பத்து மாதத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டேனாம். கலசத்தில் உற்பவித்த உடனேயே கையோடு பிறந்த கமண்டலத்துடன் தன் வழியைத் தேடிக்கொண்டு புறப்பட்டுவிட்ட சுகப்ரம்மம் ஆகிவிட்டேன் என்று சொல்ல வரவில்லை. சொல்லக் கேட்டதைச் சொல்லுகிறேன்.

எனக்கு இரண்டு வருடங்கள் கழித்துச் சிவப்பிரகாசம் பிறந்தான். ஆனால் அவன் என் பருமன் இல்லை.

இப்போது காலம், விளம்பரத்துக்கு, அப்போது இப்போது போலிருந்தால் Mothers Food Baby. Glaxo Baby, Farex Baby என்று பத்திரிகைகளிலும், சினிமாவில் விளம்பரத் துண்டுகளிலும் பார்க்கிறோம். அதுபோல, Mother's Milk Baby என்று விளம்பரத்துக்கு இணங்கியிருந்தால், என் பெற்றோர்கள் உருப்படியாகக் கொஞ்சமேனும் சம்பாதித்திருக்கலாம். அவர்களுக்குத் தோன்றவும் இல்லை, (பிழைக்கத் தெரியாதவர்கள்!) அவர்கள் இணங்கினாலும் பெரியவர்கள் சம்மதித்திருக்கமாட்டார்கள். தவிர, இப்போது போல், விளம்பரம் ஒரு சாஸ்திரமாக அந்நாளில் முன்னேறவில்லை. எப்படியேனும் இருந்துவிட்டுப் போகிறது.

கொழ கொழ கன்னே –

குழந்தை பிறந்த பத்தாம்நாள் தொட்டிலிலிட்டு ஆட்டி நாமம் சூட்டிப் பெண்டிர் பாடுகிறார்கள். அப்போதே அந்தப் பிறவிக்கு, இந்த ஜன்மா பூரா சேர வேண்டிய ஆசீர்வாதங்களையும், பாதுகாப்பு வரங்களையும் ஜாதகப் படி கிரஹ தேவதைகளும் வேளையின், குடும்பத்தின் நற்தேவதைகளும், ராசி தேவதைகளும் வழங்கிவிடுகின்றன. இது என் நினைப்பு. பிதுர்க்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ததாஸ்து, Life's fairy-taie.

கூடவே துர்த்தேவதைகளும் தங்கள் சாபங்களை.

ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து சுப்ரமணியன் ஜுரமென்று படுத்தவன் ஒரு வாரத்தில் செத்துப் போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-12&oldid=1532734" இலிருந்து மீள்விக்கப்பட்டது