பொருநராற்றுப்படை

விக்கிமூலம் இலிருந்து

பொருநராற்றுப்படை[தொகு]

(மூலம்)

பிழையில்லா மெய்ப்பதிப்பு[தொகு]

திணை: பாடாண்திணை

துறை: ஆற்றுப்படை

வரிகள் 01 முதல் 10 வரை[தொகு]

இச்சங்கப்பாடல் இங்கு முதலில், பாட்டிலக்கணமுறைப்படி ஓசையொழுங்குடன், இதனைப் பாடிய புலவர் பாடிய அதேவடிவில், சொற்களைப் பிரிக்காது சேர்த்துப் பாட்டிலக்கணமுறைப்படி தரப்பட்டுள்ளது; அதையடுத்துச் சிறிதளவு தமிழறிந்தோரும் படித்து அறியும் வண்ணம், அந்தப் பாடல்வரியின் பொருள் எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவியாக, அவ்வரியைப் பிரித்தும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச் //01// அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது //02// சாறு கழி வழிநாள் சோறு நசை உறாது
வேறுபுல முன்னிய விரகறி பொருந //03// வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந
குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல் //04// குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை //05//விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை
யெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற் //06// எய்யா இளம் சூல் செய்யோள் அவ் வயிற்று
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப் //07// ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை //08// பொல்லம் பொத்திய பொதி உறு போர்வை
யளைவா ழலவன் கண்கண் டன்ன //09// அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி (10) //:துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி

வரிகள் 11 முதல் 30 வரை[தொகு]

யெண்ணாட் டிங்கள் வடிவி்ற் றாகி //11// எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
யண்ணா வில்லா வமைவரு வறுவாய்ப் //12// அண்ணா இல்லா அமைவு அரு வறு வாய்
பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின் //13// பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
மாயோள் முன்கை யாய்தொடி கடுக்குங் //14// மாயோள் முன் கை ஆய் தொடி கடுக்கும்
கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவி //15// கண்கூடு இருக்கை திண் பிணி திவவின்
னாய்தினை யரிசி யவைய லன்ன //16// ஆய் தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பிற் // 17 // வேய்வை போகிய விரல் உளர் நரம்பில்
கேள்வி போகிய நீள்விசைத் தொடையன் // 18 // கேள்வி போகிய நீள் விசை தொடையல்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன // 19 // மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன
வணங்குமெய்ந் நின்ற வமைவரு காட்சி (20) // அணங்கு மெய் நின்ற அமைவு அரு காட்சி
யாறலை கள்வர் படைவிட வருளின் // 21 // ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை // 22 // மாறு தலை பெயர்க்கும் மருவில் பாலை
வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்துஞ் // 23 // வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
சீருடை நன்மொழி நீரொடு சிதறி // 24 // சீர்உடை நல் மொழி நீரொடு சிதறி
யறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற் // 25 // அறல் போல் கூந்தல் பிறை போல் திருநுதல்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்க // 26 // கொலை வில் புருவத்து கொழும் கடை மழைக்கண்
ணிலவிதழ் புரையு மின்மொழித் துவர்வாய் // 27 // இலவு இதழ் புரையும் இன்மொழி துவர் வாய்
பலவுறு முத்திற் பழிதீர் வெண்பல் // 28 // பல உறு முத்தில் பழிதீர் வெண் பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன // 29 // மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
பூங்குழை யூசற் பொறைசால் காதி (30) // 30 // பூங்குழை ஊசல் பொறை சால் காதின்

வரிகள் 32 முதல் 50 வரை[தொகு]

நாணடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தி // 31 // நாண்அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின்
னாடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை // 32 // ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன் கை
நெடுவரை மிசைய காந்தண் மெல்விரற் // 33 // நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகி // 34 // கிளி வாய் ஒப்பின் ஒளிவிடு வள் உகிர்
ரணங்கென வுருத்த சுணங்கணி யாகத் // 35 // அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து
தீர்க்கிடை போகா வேரிள வனமுலை // 36 // ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூ // 37 // நீர் பெயல் சுழியின் நிறைந்த கொப்பூழ்
ழுண்டென வுணரா வுயவு நடுவின் // 38 // உண்டு என உணரா உயவு நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்கு // 39 // வண்டு இருப்பு அன்ன பல்காழ் அல்குல்
லிரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கிற் (40) // இரும் பிடி தடக்கையின் செறிந்து திரள் குறங்கின்
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப // 41 // பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி // 42 // வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி
யரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற் // 43 // அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலில்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி // 44 // பரல் பகை உழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்கு // 45 // மரல் பழுத்து அன்ன மறுகுநீர் மொக்குள்
ணன்பக லந்தி நடையிடை விலங்கலிற் // 46 // நன் பகல் அந்தி நடை இடை விலங்கலில்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி // 47 // பெடை மயில் உருவில் பெரும் தகு பாடினி
பாடின பாணிக் கேற்ப நாடொறுங் // 48 // பாடின பாணிக்கு ஏற்ப நாள்தொறும்
களிறு வழங்கதர்க் கானத் தல்கி //49 // களிறு வழங்கு அதர் கானத்து அல்கி
யிலையின் மராத்த வெவ்வந் தாங்கி (50) // இலை இல் மராத்த எவ்வம் தாங்கி

வரிகள் 51 முதல் 70 வரை[தொகு]

வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற் //51 // வலை வலந்து அன்ன மென் நிழல் மருங்கில்
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப் // 52 // காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை
பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாள் // 53 // பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்
முரசுமுழங்கு தானை மூவருங் கூடி // 54 // முரசு முழங்கு தானை மூவரும் கூடி
யரசவை யிருந்த தோற்றம் போலப் // 55 // அரசு அவை தன்னில் இருந்த தோற்றம் போல
பாடல் பற்றிய பயனுடை யெழாஅற் // 56 // பாடல் பற்றிய பயன் உடை எழாஅல்
கோடியர் தலைவ கொண்ட தறிந // 57 // கோடியர் தலைவ கொண்டது அறிந
வறியா மையி னெறிதிரிந் தொராஅ // 58 // அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது
தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே // 59 //ஆற்று எதிர் படுதலும் நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந (60) // போற்றி கேள் மதி புகழ் மேம்படுந
வாடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு // 61 // ஆடு பசி உழந்த நின் இரும்பேர் ஒக்கலொடு
நீடுபசி யொராஅல் வேண்டி னீடின் //62 // நீடு பசி ஒராஅல் வேண்டி நீடு இன்று
றெழுமதி வாழி யேழின் கிழவ // 63 // எழுமதி வாழி ஏழின் கிழவ
பழுமர முள்ளிய பறவையின் யானுமவ // 64 // பழு மரம் உள்ளி பறவையின் யானும் அவன்
னிழுமென் சும்மை யிடனுடை வரைப்பி // 65 // இழும் என் சும்மை இடன் உடை வரைப்பின்
னசையுநர்த் தடையா நன்பெரு வாயி //66 // நசையுநர் தடையா நன் பெரு வாயில்
லிசையேன் புக்கெ னிடும்பை தீர //67 // இசையேன் புக்கு என் இடும்பை தீர
வெய்த்த மெய்யே னெய்யே னாகிப் // 68 // எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி
பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்பக் // 69 // பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி (70) // கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி

வரிகள் 71 முதல் 90 வரை[தொகு]

யிருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர் // 71 // இரு சீர் பாணிக்கு ஏற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய // 72 // வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
லொன்றியான் பெட்டா வளவையி னொன்றிய // 73 // ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய
கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி // 74 // கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக் // 75 // வேளாண் வாயில் வேட்ப கூறி
கண்ணிற் காண நண்ணுவழி யிரீஇப் // 76 // கண்ணில் காண நண்ணு வழி இரீஇ
பருகு வன்ன வருகா நோக்கமோ // 77 / / பருகுவு அன்ன அருகா நோக்கமோடு
டுருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ // 78 // உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ
யீரும் பேனு மிருந்திறை கூடி // 79 // ஈரும் பேனும் இருந்து இறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த (80) // வேரோடு நனைந்து வேறு இழை நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர நீக்கி //81 // துன்னல் சிதாஅர் துவர நீக்கி
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந் // 82 // நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து
தரவுரி யன்ன வறுவை நல்கி // 83 // அரவு உரி அன்ன அறுவை நல்கி
மழையென மருளு மகிழ்செய் மாடத் // 84 // மழை என மருளும் மகிழ் செய் மாடத்து
திழையணி வனப்பி னின்னகை மகளிர் // 85 // இழை அணி வனப்பின் இன்நகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்// 86 // போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட // 87 // ஆக்குபு தர தர வருத்தம் வீட
வார வுண்டு பேரஞர் போக்கிச் // 88 // ஆர உண்டு பேர் அஞர் போக்கி
செருக்கொடு நின்ற காலை மற்றவன் // 89 // செருக்கொடு நின்ற காலை மற்று அவன்
றிருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித் (90) // திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி

வரிகள் 91 முதல் 102 வரை[தொகு]

தவஞ்செய் மாக்க டம்முடம் பிடாஅ // 91 // தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாது
ததன்பய மெய்திய வளவை மான // 92 // அதன் பயம் எய்திய அளவை மான
வாறுசெல் வருத்த மகல நீக்கி // 93 // ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
யனந்தர் நடுக்க மல்ல தியாவது // 94 // அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து // 95 // மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து
மாலை யன்னதோர் புன்மையுங் காலைக் // 96 // மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையுங் // 97 // கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப // 98 // கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப
வல்லஞர் பொத்திய மனமகிழ் சிறப்பக் // 99 // வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப
கல்லா விளைஞர் சொல்லிக் காட்டக் (100) // கல்லா இளைஞர் சொல்லி காட்ட
கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉ // 101 // கதும் என கரைந்து வம் என கூஉய்
யதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து // 102 // அதன் முழை கழிப்பிய பின்றை பதன் அறிந்து

வரிகள் 103 முதல் 120 வரை[தொகு]

துராஅய் துற்றிய துருவையும் புழுக்கின் // 103 // துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக் // 104 // பரு அரை வேவை பருகு என தண்டி
காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை // 105 // காழில் சுட்ட கோழ் ஊன் கொழும் குறை
யூழி னூழின் வாய்வெய் தொற்றி // 106 // ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி
யவையவை முனிகுவ மெனினே சுவைய // 107 // அவை அவை முனிகுவம் எனினே சுவைய
வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ // 108 // வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ
மண்ணமை முழவின் பண்ணமை சீறியா // 109 // மண் அமை முழவின் பண்ணமை சீறி யாழ்
ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க : (110) // ஒள் நுதல் விறலியர் பாணி தூங்க
மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநா // 111 // :மகிழ் பதம் பல்நாள் கழிப்பி ஒருநாள்
ளவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை // 112 // :அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி // 113 // :முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் // 114 // :விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப // 115 // :பரல் வறை கருனை காடியின் மிதப்ப
வயின்ற காலைப் பயின்றினி திருந்து // 116 // :அயின்ற காலை பயின்று இனிது இருந்து
கொல்லை யுழுகொழு வேய்ப்பப் பல்லே // 117 // :கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே
யெல்லையு மிரவு மூன்றின்று மழுங்கி // 118 // :எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி
யுயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட் // 119 // உயிர்ப்பு இடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள்
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய (120) // செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய

வரிகள் 121 முதல் 140 வரை[தொகு]

செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென // 121 // :செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லெனக் கிளந்தன மாக வல்லே // 122 // :மெல் என கிளந்தனம் ஆக வல்லே
யகறி ரோவெம் மாயம் விட்டெனச் // 123 // :அகல்திரோ எம் ஆயம் விட்டு என
சிரறியவன் போற் செயிர்த்த நோக்கமொடு // 124 // :சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு
துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு // 125 // :துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத் // 126 // :பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என
தன்னறி யளவையிற் றரத்தர யானு // 127 // :தன் அறி அளவையில் தர தர யானும்
மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண் // 128 // :என்அறிஅளவையில்வேண்டுவமுகந்துகொண்டு
டின்மை தீர வந்தனென் வென்வே // 129 // :இன்மை தீர வந்தனென் வெல் வேல்
லுருவப் பஃறே ரிளையோன் சிறுவன் (130) // :உருவ பல் தேர் இளையோன் சிறுவன்
முருகற் சீற்றத் துருகெழு குருசி // 131 // :முருகன் சீற்றத்து உரு கெழு குருசில்
றாய்வயிற் றிருந்து தாய மெய்தி // 132 // :தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி
யெய்யாத் தெவ்வ ரேவல் கேட்பச் // 133 // :எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப
செய்யார் தேஎந் தெருமரல் கலிப்பப் // 134 // :செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி // 135 // :பவ்வம் மீமிசை பகல் கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப் // 136 // :வெவ் வெம் செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன் // 137 // :பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல்
னாடுசெகிற் கொண்டு நாடொறுஞ் வளர்ப்ப // 138 // :நாடு செகில் கொண்டு நாள் தொறும் வளர்ப்ப
வாளி நன்மா னணங்குடைக் குருளை // 139 // :ஆளி நல் மான் அணங்கு உடை குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி // 140 // :மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி

வரிகள் 141 முதல் 160 வரை[தொகு]

முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத் // 141 // முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேர் என
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங் // 142 // தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு
கிரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை // 143 // இரும்பனம் போந்தை தோடும் கரும் சினை
யரவாய் வேம்பி னங்குழைத் தெரியலு // 144 // அரவாய் வேம்பின் அம் குழை தெரியலும்
மோங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த // 145 // ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த
விருபெரு வேந்தரு மொருகளத் தவிய // 146 // இரு பெரும் வேந்தரும் ஒரு களத்து அவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட் // 147 // வெண்ணித் தாங்கிய வெருவரு நோன் தாள்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன் // 148 // கண் ஆர் கண்ணி கரி கால் வளவன்
றாணிழன் மருங்கி லணுகுபு குறுகித் // 149 // தாள் நிழல் மருங்கில் அணுகுபு குறுகி
தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின் (150) // தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுதின்று
றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநுங் // 151 // ஈற்று ஆ விருப்பில் போற்றுபு நோக்கி நும்
கையது கேளா வளவை யொய்யெனப் // 152 // கையது கேளா அளவை ஒய் என
பாசி வேரின் மாசொடு குறைந்த // 153 // பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய // 154 // துன்னல் சிதாஅர் நீக்கி தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் // 155 // கொட்டை கரைய பட்டு உடை நல்கி
பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப் // 156 //பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்கு என
பூக்கமழ் தேற லாக்குபு தரத்தர // 157 // பூ கமழ் தேறல் ஆக்குபு தர தர
வைகல் வைகல் கைகவி பருகி // 158 // வைகல் வைகல் கை கவி பருகி
யெரியகைந் தன்ன வேடி றாமரை // 159 // எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி (160) // சுரி இரும் பித்தை பொலிய சூட்டி

வரிகள் 161 முதல் 180 வரை[தொகு]

நூலின் வலவா நுணங்கரின் மாலை // 161 // நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக் // 162 // வால் ஒளி முத்தமொடு பாடின் அணிய
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தே // 163 // கோட்டில் செய்த கொடுஞ்சி நெடும் தேர்
ரூட்டுளை துயல்வர வோரி நுடங்கப் // 164 // ஊட்டுளை துயல்வர ஒரி நுடங்க
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் // 165 // பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி
காலி னேழடிப் பின்சென்று கோலின் // 166 / காலின் ஏழ்அடி பின் சென்று கோலின்
றாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு // 167 // தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த் // 168 // பேரியாழ் முறையுளி கழிப்பி நீர் வாய்
தண்பணை தழீஇய தளரா விருக்கை // 169 // தண் பணை தழீஇய தளரா இருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல் (170) // நன்பல் ஊர நாட்டொடு நன் பல்
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை // 171 // வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழந் // 172 // வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப் // 173 // தரவு இடை தங்கல் ஓவிலனே வரவு இடை.\
பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச் //174 // பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தி தெற்றென
செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து // 175 // செலவு கடைகூட்டுதிர் ஆயின் பல புலந்து
நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்// 176 // நில்லா உலகத்து நிலைமை தூக்கி
செல்கென விடுக்குவ னல்ல னொல்லெனத் // 177 // செல்கென விடுக்கவன் அல்லன் ஒல் என
திரைபிறழிய விரும்பௌவத்துக் // 178 // திரை பிறழிய இரும் பௌவத்து
கரைசூழ்ந்த வகன்கிடக்கை // 179 // கரை சூழ்ந்த அகன் கிடக்கை
மாமாவின் வயின்வயினெற் (180) // 180 // மா மாவின் வயின் வயின்

வரிகள் 181 முதல் 200 வரை[தொகு]

றாழ்தாழைத் தண்டண்டலைக் // 181 // தாழ் தாழை தண் தண்டலை
கூடுகெழீஇய குடிவயினாற் // 182 // கூடு கெழீஇய குட வயினான்
செஞ்சோற்ற பலிமாந்திய // 183 // செஞ் சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை கவவுமுனையின் //184 // கரும் காக்கை கவவு முனையின்
மனைநொச்சி நிழலாங்க // 185 // மனை நொச்சி நிழல் ஆங்கண்
ணீற்றியாமைதன் பார்ப்போம்பவு // 186 // ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்
மிளையோர் வண்ட லயரவு முதியோ // 187 // இளையோர் வண்டல் அயரவும் முதியோர்
ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவு // 188 // அவை புகு பொழுதின் தன் பகைமுரண் செலவும்
முடக்காஞ்சிச் செம்மருதின் // 189 / முடக்காஞ்சி செம் மருதின்
மடக்கண்ண மயிலாலப் (190) // மடக் கண்ண மயில் ஆல
பைம்பாகற் பழந்துணரிய // 191 // பைம் பாகல் பழம் துணரிய
செஞ்சுளைய கனிமாந்தி // 192 // செஞ் சுளைய கனி மாந்தி
யறைக்கரும்பி னரிநெல்லி // 193 // அறை கரும்பின் அரி நெல்லின்
னினக்களம ரிசைபெருக // 194 // இனக் களமர் இசை பெருக
வறளடும்பி னிவர்பகன்றைத் // 195 // வறள் அடும்பின் இவர் பகன்றை
தளிர்ப்புன்கின் றாழ்காவி // 196 // தளிர் புன்கின் தாழ் காவின்
னனைஞாழலொடு மரங்குழீஇய // 197 // நனை ஞாழலொடு மரம் குழீஇய
வவண்முனையி னகன்றுமாறி // 198 // அவண் முனையின் அகன்று மாறி
யவிழதளவி னகன்றோன்றி // 199 // அவிழ் தளவின் அகன் தோன்றி
னகுமுல்லை யுகுதேறுவீப் (200) // நகு முல்லை உகு தேறு வீ

வரிகள் 201 முதல் 220 வரை[தொகு]

பொற்கொன்றை மணிக்காயா// 201 // பொன் கொன்றை மணி காயா
நற்புறவி னடைமுனையிற் // 202 // நற் புறவின் நடை முனையின்
சுறவழங்கு மிரும்பௌவத் // 203 // சுற வழங்கும் இரும் பௌவத்து
திறவருந்திய வினநாரை // 204 // இறவு அருந்திய இன நாரை
பூம்புன்னைச் சினைச்சேப்பி // 205 // பூம் புன்னை சினை சேப்பின்
னோங்குதிரை யொலிவெரீஇத் // 206 // ஓங்கு திரை ஒலி வெரீஇ
தீம்பெண்ணை மடற்சேப்பவுங் // 207 // தீம் பெண்ணை மடல் சேப்பவும்
கோட்டெங்கின் குலைவாழைக் // 208 // கோள் தெங்கின் குலை வாழை
கொழுங்காந்தண் மலர்நாகத்துத் // 209 // கொழும் காந்தள் மலர் நாகத்து
துடிக்குடிஞைக் குடிப்பாக்கத் (210) // துடி குடிஞை குடி பாக்கத்து
தியாழ்வண்டின் கொளைக்கேற்பக் // 211 // யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப
கலவம்விரித்த மடமஞ்ஞை // 212 // கலவம் விரித்த மட மஞ்ஞை
நிலவெக்கர்ப் பலபெயரத் // 213 // நிலவு எக்கர் பல பெயர
தேனெய்யொடு கிழங்குமாறியோர் // 214 // தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீனெய்யொடு நறவுமறுகவுந் // 215 // மீன் நெய்யொடு நறவு மறுகவும்
தீங்கரும்போ டவல்வகுத்தோர் // 216 // தீம் கரும்போடு அவல் வகுத்தோர்
மான்குறையொடு மதுமறுகவுந் // 217 // மான் குறையொடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்த // 218 // குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
னறும்பூங் கண்ணி குறவர் சூடக் // 219 // நறும் பூம் கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட வகவர் (220) // கானவர் மருதம் பாட அகவர்

வரிகள் 221 முதல் 248 வரை[தொகு]

நீனிற முல்லைப் பஃறினை நுவலக் // 221 // நீல் நிற முல்லை பல் தினை நுவல
கானக்கோழி கதிர்குத்த // 222 // கானம் கோழி கதிர் குத்த
மனைக்கோழி தினைக்கவர // 223 //மனை கோழி தினை கவர
வரைமந்தி கழிமூழ்க // 224 // வரை மந்தி கழி மூழ்க
கழிநாரை வரையிறுப்பத் // 225 // கழி நாரை வரை இறுப்ப
தண்வைப்பினா னாடுகுழீஇ // 226 // தண் வைப்பினான் நாடு குழீஇ
மண்மருங்கினான் மறுவின்றி // 227 // மண் மருங்கினான் மறு இன்றி
யொருகுடையா னொன்றுகூறப் //228 // ஒரு குடையான் ஒன்று கூற
பெரிதாண்ட பெருங்கேண்மை //229// பெரிது ஆண்ட பெரும் கேண்மை
யறனொடு புணர்ந்த திறனறி செங்கோ//230//அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்
லன்னோன் வாழி வென்வேற் குரிசில்//231//அன்னோன் வாழி வெல்வேல் குரிசில்
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மா// 232// மன்னர் நடுங்க தோன்றி பல் மாண்
ணெல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்//233//எல்லை தரு நல் பல்கதிர் பரப்பி
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவு//234/குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்
மருவி மாமலை நிழத்தவு மற்றக் //235 // அருவி மா மலை நிழத்தவும் மற்று அக்
கருவி வானங் கடற்கோண் மறப்பவும் //236 // கருவி வானம் கடல் கோள் மறப்பவும்
பெருவற னாகிய பண்பில் காலையு /237// பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்
நறையு நரந்தமு மகிலு மாரமுந் //238// நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி //239// துறை துறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி
நுரைத்தலைக் குறைப்புனல் வரைப்பகம் புகுதொறும் //240// நுரைதலைகுறைபுனல்வரைப்புஅகம்புகுதொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடையக் //241// புனல் ஆடு மகளிர் கதும்என குடைய
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து //242// கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறுங் //243// சூடு கோடு ஆக பிறக்கி நாள் தொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை //244// குன்று என குவைஇய குன்றா குப்பை
கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்குஞ் //245// கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும்
சாலி் நெல்லின் சிறைகொள் வேலி //246 // சாலி நெல்லின் சிறை கொள் வேலி
யாயிரம் விளையுட் டாகக் //247// ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கு நாடுகிழ வோனே.//248// காவிரி புரக்கும் நாடு கிழவோனே.

சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடிய 'பத்துப்பாட்டு'த் தொகையில், இரண்டாம் பாட்டான பொருநராற்றுப்படை முடிந்தது.,

இப்பாடலின் மொத்த அடிகள்: 248 (இருநூற்று நாற்பத்தெட்டு)

பாவகை: ஆசிரியப்பா, இது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.

வெண்பாக்கள்:

ஏரியு மேற்றத் தினானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லாந்- தேரின்
அரிகாலின் கீழுகூஉமந்நெல்லே சாலுங்
கரிகாலன் காவிரிசூழ் நாடு.(01)
அரிமா சுமந்த வமளிமே லானைத்
திருமா வளவனெனத் தேறேன்- திருமார்பின்
மானமா லென்றே தொழுதேன் றொழுதகைப்
போனவா பெய்த வளை. (02)
முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
இச்சக் கரமே யளந்ததாற்- செய்ச்செய்
அரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
கரிகாலன் கானெருப் புற்று. (03)

முக்கியக் குறிப்புக்கள்[தொகு]

வினைமுடிபு:

"பொருந (3), கோடியர் தலைவ, கொண்டதறிந (57) புகழ்மேம்படுந(60), ஏழின்கிழவ (63), காடுறை கடவுட்கடன் கழிப்பியபின்றை (52),நெடுதிரிந்தொராஅது (58) ஆற்றெதிர்ப்படுதலும் நோற்றதன்பயனே (59), போற்றிக்கேண்மதி (60); நின்னிரும்பேரொக்கலொடு (61) பசிஒராஅல்வேண்டின், நீடின்று (62) எழுமதி (63); யானும் (64) இன்மைதீர வந்தனென் (129); உருகெழு குருசிலாகிய (131) உருவப்பஃறேரிளையோன் சிறுவன் (130), கரிகால்வளவன் (148), நாடுகிழவோன் (248), குருசில், அன்னோன் (231) தாணிழன் மருங்கிற் குறுகி (149) மன்னர்நடுங்கத் தோன்றி (232), வாழியெனத் (231) தொழுது முன் னிற்குவிராயின் (150), நாட்டொடு (170) வேழம் (172) தரவிடைத் தங்கலோவிலன் (173) எனக்கூட்டி வினைமுடிவுசெய்க". - நச்சினார்க்கினியர் உரை

காவிரிபுரக்கும் நாடுகிழவோன்(248)
வறனாகிய காலையும் (237) புனல் (240) ஒழுகிப் (239) புகுதொறும் (240) மகளிர் குடைந்து விளையாடக் (241) கூனி அரிந்து (242) பிறக்கிக் (243) குவைஇய குப்பை (244) கிடத்தற்குக் காரணமான (245) விளையுட்டாகக் (247) காவிரி புரக்குநாடு (248) என வினைமுடிக்க. -நச்சினார்க்கினியர் உரை

"பத்துப்பாட்டு மூலமும் உரையும் 1889 ஆம்வருடத்தில் முதற்பதிப்பாக வெளியிடப்பெற்றன"- உ.வே.சாமிநாத ஐயர் (19-08-1931)மூன்றாம்பதிப்பின் முகவுரையிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பொருநராற்றுப்படை&oldid=1526496" இலிருந்து மீள்விக்கப்பட்டது