மணிமேகலை

Wikisource இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
  1. இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
    விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி
    பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி
    தென் திசைப் பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்
    சாகைச் சம்பு தன் கீழ் நின்று
    மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு
    வெந் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற
    சம்பு என்பாள் சம்பாபதியினள்
    செங்கதிர்ச் செல்வன் திருக் குலம் விளக்கும்
    கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட
    அமர முனிவன் அகத்தியன் தனாது
    கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
    செங் குணக்கு ஒழுகி அச் சம்பாபதி அயல்
    பொங்கு நீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
    ஆங்கு இனிது இருந்த அருந் தவ முதியோள்
    ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு ஆங்கு
    ஆணு விசும்பின் ஆகாயகங்கை
    வேணவாத் தீர்த்த விளக்கே வா என
    பின்னிலை முனியாப் பெருந் தவன் கேட்டு ஈங்கு
    'அன்னை கேள் இவ் அருந் தவ முதியோள்
    நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு' என
    பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
    கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி
    கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
    தான் நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை
    தொழுதனள் நிற்ப அத் தொல் மூதாட்டி
    கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து
    தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்
    செம்மலர் முதியோன் செய்த அந் நாள்
    என் பெயர்ப் படுத்த இவ் விரும் பெயர் மூதூர்
    நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழிய! என
    இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
    ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப்
    பெரு விழா அறைந்ததும் 'பெருகியது அலர்' என
    சிதைந்த நெஞ்சின் சித்திராபதி தான்
    வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும்
    மணிமேகலை தான் மா மலர் கொய்ய
    அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்
    ஆங்கு அப் பூம்பொழில் அரசு இளங் குமரனைப்
    பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும்
    பளிக்கறை புக்க பாவையைக் கண்டு அவன்
    துளக்குறு நெஞ்சில் துயரொடும் போய பின்
    மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்
    மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும்
    உவவன மருங்கின் அவ் உரைசால் தெய்வதம்
    சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம்
    ஆங்கு அத் தீவகத்து ஆய் இழை நல்லாள்
    தான் துயில் உணர்ந்து தனித் துயர் உழந்ததும்
    உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணிப் பீடிகைப்
    பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்
    உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
    'மனம் கவல் ஒழிக!' என மந்திரம் கொடுத்ததும்
    தீபதிலகை செவ்வனம் தோன்றி
    மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்
    பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
    யாப்புறு மா தவத்து அறவணர்த் தொழுததும்
    அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்
    நறு மலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
    அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால்
    சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்
    மற்று அப் பாத்திரம் மடக்கொடி ஏந்தி
    பிச்சைக்கு அவ் ஊர்ப் பெருந் தெரு அடைந்ததும்
    பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில்
    பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
    காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று
    ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும்
    அம்பலம் அடைந்தனள் ஆய் இழை என்றே
    கொங்கு அலர் நறுந் தார்க் கோமகன் சென்றதும்
    அம்பலம் அடைந்த அரசு இளங் குமரன்முன்
    வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி
    மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம்
    அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
    காயசண்டிகை என விஞ்சைக் காஞ்சனன்
    ஆய் இழை தன்னை அகலாது அணுகலும்
    வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
    மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும்
    ஐ அரி உண் கண் அவன் துயர் பொறாஅள்
    தெய்வக் கிளவியின் தெளிந்த வண்ணமும்
    அறை கழல் வேந்தன் 'ஆய் இழை தன்னைச்
    சிறை செய்க' என்றதும் சிறைவீடு செய்ததும்
    நறு மலர்க் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு
    ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்
    ஆங்கு அவன்தன்னோடு அணி இழை போகி
    ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்
    உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய்
    பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
    'நவை அறு நன்பொருள் உரைமினோ' என
    சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும்
    ஆங்கு அத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
    பூங்கொடி கச்சி மா நகர் புக்கதும்
    புக்கு அவள் கொண்ட பொய் உருக் களைந்து
    மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்
    தவத் திறம் பூண்டு தருமம் கேட்டு
    'பவத் திறம் அறுக' என பாவை நோற்றதும்
    இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
    வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
    மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
    ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்

பொருளடக்கம்

[தொகு] விழாவறை காதை

  1. உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
    பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
    ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
    தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
    விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
    'மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
    மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
    நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக' என
    அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
    கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்
    மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
    இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
    சமயக் கணக்கரும் தம் துறை போகிய
    அமயக் கணக்கரும் அகலார் ஆகி
    கரந்து உரு எய்திய கடவுளாளரும்
    பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
    ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
    வந்து ஒருங்கு குழீஇ 'வான்பதி தன்னுள்
    கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
    விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
    மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
    இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
    தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்
    புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
    மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
    ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க' என
    வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
    கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
    ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
    கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை
    முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
    'திரு விழை மூதூர் வாழ்க!' என்று ஏத்தி
    'வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
    கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
    தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
    ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
    நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
    பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து
    மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
    இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்
    பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
    தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
    தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
    பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
    பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
    காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
    பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
    பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து
    முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
    விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்
    பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்
    கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்
    மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
    நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
    பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
    வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
    ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
    தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
    புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்
    ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்
    பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
    பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
    செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
    வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
    தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
    தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
    நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
    ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
    களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
    'பசியும் பிணியும் பகையும் நீங்கி
    வசியும் வளனும் சுரக்க!' என வாழ்த்தி
    அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்

[தொகு] ஊரலர் உரைத்த காதை

  1. நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்
    காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
    தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
    மணிமேகலையொடு மாதவி வாராத்
    தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர
    சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி
    தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி
    வயந்தமாலையை 'வருக' எனக் கூஉய்
    'பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை' என
    வயந்த மாலையும் மாதவி துறவிக்கு
    அயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின்
    மணிமேகலையொடு மாதவி இருந்த
    அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ
    ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
    வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
    'பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்!
    உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்?
    "வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்
    கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
    பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும்
    தண்ணுமைக் கருவியும் தாழ் தீம் குழலும்
    கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்
    சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்
    பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
    காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
    கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
    வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
    கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
    காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
    நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
    ஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும்
    கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
    நல் தவம் புரிந்தது நாண் உடைத்து" என்றே
    அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
    பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி
    'நயம்பாடு இல்லை நாண் உடைத்து' என்ற
    வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
    'காதலன் உற்ற கடுந் துயர் கேட்டு
    போதல்செய்யா உயிரொடு நின்றே
    பொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து
    நல் தொடி நங்காய்! நாணுத் துறந்தேன்
    காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
    ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
    இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
    நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்
    நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
    உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
    பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
    அத் திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை
    கணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள்
    மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
    கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
    திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
    காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
    மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
    அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்
    திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்
    ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்
    ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
    மற வணம் நீத்த மாசு அறு கேள்வி
    அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து
    மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி
    காதலன் உற்ற கடுந் துயர் கூறப்
    "பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
    பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
    பற்றின் வருவது முன்னது பின்னது
    அற்றோர் உறுவது அறிக!" என்று அருளி
    ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
    "உய் வகை இவை கொள்" என்று உரவோன் அருளினன்
    மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த
    சித்திராபதிக்கும் செப்பு நீ என
    ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
    ஓங்கு திரைப் பெருங் கடல் வீழ்த்தோர் போன்று
    மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
    கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து என்

[தொகு] மலர்வனம் புக்க காதை

  1. வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
    உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
    மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
    ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
    தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
    வெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப
    காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
    மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து
    புலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர்
    இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட
    மாதவி மணிமேகலை முகம் நோக்கி
    தாமரை தண் மதி சேர்ந்தது போல
    காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி
    'தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
    நிகர் மலர் நீயே கொணர்வாய்' என்றலும்
    மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்
    சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
    'குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு
    தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
    மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்
    அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
    கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
    படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
    ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ ?
    பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?
    ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய்
    ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம்
    பாராவாரப் பல் வளம் பழுநிய
    காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
    இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்
    ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
    ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை
    மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
    திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
    பெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன்
    தாரன் மாலையன் தமனியப் பூணினன்
    பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
    எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்
    படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
    ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி
    நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
    மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்
    தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
    பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர்
    இலவந்திகையின் எயில் புறம் போகின்
    உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
    விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்
    மண்ணவர் விழையார் வானவர் அல்லது
    பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
    வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்
    "கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்" என்று
    உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
    வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
    சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
    தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை
    கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
    மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
    யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்
    அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
    ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
    பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
    உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
    விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
    பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
    தூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்த
    தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்
    அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா
    சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
    மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
    கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்
    ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்
    நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்
    "ஈங்கு இதன் காரணம் என்னை?" என்றியேல்
    "சிந்தை இன்றியும் செய் வினை உறும்" எனும்
    வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
    "செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும்
    எய்தாது" என்போர்க்கு ஏது ஆகவும்
    பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
    மயன் பண்டு இழைத்த மரபினது அது தான்
    அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள்
    செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்
    'மணிமேகலையொடு மா மலர் கொய்ய
    அணி இழை நல்லாய்! யானும் போவல்' என்று
    அணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடி
    மணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
    சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
    தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்
    நாணமும் உடையும் நன்கணம் நீத்து
    காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
    உண்ணா நோன்போடு உயவல் யானையின்
    மண்ணா மேனியன் வருவோன் தன்னை
    'வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன்
    எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ
    அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
    புழுக்கறைப் பட்டோ ர் போன்று உளம் வருந்தாது
    இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
    தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
    கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
    விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே!
    உண்டு தெளிந்து இவ் யோகத்து உறு பயன்
    கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என
    உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
    'உண்ம்' என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்
    கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
    குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
    சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
    ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
    வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்
    பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
    அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
    தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
    ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி
    நீடலும் நீடும் நிழலொடு மறலும்
    மையல் உற்ற மகன் பின் வருந்தி
    கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
    சுரியல் தாடி மருள் படு பூங் குழல்
    பவளச் செவ் வாய் தவள வாள் நகை
    ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு
    கருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
    காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை
    அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
    இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
    வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி
    நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
    பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்
    வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
    சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
    மை அறு படிவத்து வானவர் முதலா
    எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
    வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
    கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
    விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்
    பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை
    ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
    மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்
    பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழ
    செவ் வாய்க் குதலை மெய் பெறா மழலை
    சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
    அற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில்
    தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர
    தளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரை
    பொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்து
    இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
    'ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்
    காண்மினோ' என கண்டு நிற்குநரும்
    விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
    காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
    மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி
    'அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்திய
    தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்
    மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்
    நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
    வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
    மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
    சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
    பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
    எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல'
    என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
    செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்
    குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
    திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
    நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
    பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
    குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
    செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
    எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி
    வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
    சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
    ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
    தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
    மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என்

[தொகு] பளிக்கறை புக்ககாதை

  1. 'பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்கு
    இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில்
    குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
    மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய
    வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
    மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்!
    மாசு அறத் தெளிந்த மணி நீர் இலஞ்சி
    பாசடைப் பரப்பில் பல் மலர் இடை நின்று
    ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை
    அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப
    கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு
    கம்புள் சேவல் கனை குரல் முழவா
    கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்!
    இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
    வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல்
    விரை மலர்த் தாமரை கரை நின்று ஓங்கிய
    கோடு உடை தாழைக் கொழு மடல் அவிழ்ந்த
    வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்!
    மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து
    தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின்
    அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச்
    செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
    எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
    மறிந்து நீங்கும் மணிச் சிரல் காண்!' எனப்
    பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
    மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
    மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
    உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
    மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
    கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து
    கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
    இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர்
    இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
    மயங்கு கால் எடுத்த வங்கம் போல
    காழோர் கையற மேலோர் இன்றி
    பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து
    கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும்
    பீடிகைத் தெருவும் பெருங் கலக்குறுத்து ஆங்கு
    இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர்
    ஒரு பால் படாஅது ஒரு வழித் தங்காது
    பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
    ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
    நீல மால் வரை நிலனொடு படர்ந்தெனக்
    காலவேகம் களி மயக்குற்றென
    விடு பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி
    கடுங்கண் யானையின் கடாத் திறம் அடக்கி
    அணித் தேர்த் தானையொடு அரசு இளங் குமரன்
    மணித் தேர்க் கொடுஞ்சி கையான் பற்றி
    கார் அலர் கடம்பன் அல்லன் என்பது
    ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்
    நாடக மடந்தையர் நலம் கெழு வீதி
    ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
    சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
    வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி
    தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
    மகர யாழின் வான் கோடு தழீஇ
    வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
    எட்டிகுமரன் இருந்தோன் தன்னை
    'மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்!
    யாது நீ உற்ற இடுக்கண்!' என்றலும்
    ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு
    பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
    மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
    எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
    'வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல்
    தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
    மாதவி பயந்த மணிமேகலையொடு
    கோவலன் உற்ற கொடுந் துயர் தோன்ற
    நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி
    வெம் பகை நரம்பின் என் கைச் செலுத்தியது
    இது யான் உற்ற இடும்பை' என்றலும்
    மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு எய்தி
    'ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி
    ஈங்கு யான் வருவேன்' என்று அவற்கு உரைத்து ஆங்கு
    ஓடு மழை கிழியும் மதியம் போல
    மாட வீதியில் மணித் தேர் கடைஇ
    கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அத்
    தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
    "சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
    என்மேல் வைத்த உள்ளத்தான்" என
    வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
    கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
    ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை!
    ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு?' என
    அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்
    சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல்
    பளிக்கறை மண்டபம் பாவையைப் 'புகுக' என்று
    ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
    ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை
    நீங்காது நின்ற நேர் இழை தன்னை
    கல்லென் தானையொடு கடுந் தேர் நிறுத்தி
    பல் மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்
    பூ மரச் சோலையும் புடையும் பொங்கரும்
    தாமரைச் செங் கண் பரப்பினன் வரூஉம்
    அரசு இளங் குமரன் 'ஆரும் இல் ஒரு சிறை
    ஒரு தனி நின்றாய்! உன் திறம் அறிந்தேன்
    வளர் இள வன முலை' மடந்தை மெல் இயல்
    தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ?
    விளையா மழலை விளைந்து மெல் இயல்
    முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்?
    செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி
    வெங் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்கொல்?
    மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
    தானே தமியள் இங்கு எய்தியது உரை? எனப்
    பொதி அறைப் பட்டோ ர் போன்று உளம் வருந்தி
    மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்
    'இளமை நாணி முதுமை எய்தி
    உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
    அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
    செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ ?
    அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
    வினை விளங்கு தடக் கை விறலோய்! கேட்டி
    வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
    புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
    மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை
    பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
    புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை
    அவலம் கவலை கையாறு அழுங்கல்
    தவலா உள்ளம் தன்பால் உடையது
    மக்கள் யாக்கை இது என உணர்ந்து
    மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்'
    என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
    சென்று அவன் உள்ளம் சேராமுன்னர்
    பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவையின்
    இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என்
"http://ta.wikisource.org/w/index.php?title=மணிமேகலை&oldid=14621" இருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி