மூதுரை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

[நுடங்கு = வளை, துவள், தளர்; நுடங்காது = தளராது]

2. நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

[ஒருவற்கு = ஒருவனுக்கு; கால் = காலம், பொழுது; செய்தக்கால் = செய்தபொழுது; தருங்கொல் = தருமோ, தருவானோ?; தளரா = தளராமே; தெங்கு = தென்னை; தாள் = அடி, வேர்]

3. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்

[உபகாரம் = உதவி, வேளாண்மை, ஒப்புரவு; அல்லாத = நல்லவர் அல்லாத; ஈரம் = இரக்கம், அன்பு; ஈந்த = கொடுத்த; நேர் = ஒப்பு, இணை]

4. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு
[இன்னா = துன்பம்; எய்தியக்கால் - எய்திய காலத்தில், அடைந்தபொழுது; இன்னா அளவில் = துன்பமான மூப்புக்காலத்தில்; இளமையில் வறுமை துன்பமானது; மூப்பில் இனியவையும் துன்பமாகிவிடும்; ஆள் = கணவன்; மங்கை = பெண்]

5. அட்டாலும் பால்சுவையில் குன்றா தளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளே;சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்
[அடு = சுடு, சமை, வேகவை; அட்டாலும் = சுட்டாலும்; குன்றாது = குறைபடாது; அளவு = கலத்தல், பழக்கம், நெருக்கம்; அளவளவாய் = நெருக்கநெருக்கமாய், மிக நெருங்கிய பழக்கமாகி; நள் = நட்புக்கொள்; நட்டல் (*நள்த்தல்) = நட்புக்கொள்ளுதல்; நட்டால் = நட்புக்கொண்டாலும்; நண்பு = உண்மையான நட்பு]

6. அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா
[தொடுத்தல் = நெருங்கியிருத்தல், நெருக்கமாகக் கிளைத்து வளர்தல்; பழா = பழுக்கமாட்டா;]

7. உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்
[உறு = நேர், நிகழ், இடையூறு நேர்; உற்ற இடத்தில் = தம் மானத்திற்கு இடைஞ்சல் நேரும் இடத்தில்; உயிர்வழங்கு = உயிரைவிடு; பற்றலர் = பற்றில்லாதவர், மதியாதார்; கற்றூண் = கல்லுத்தூண்; பெரும்பாரம் = தாங்கமுடியாத சுமை; இறு = உடை, நொறுங்கு; இறுவதல்லால் = நொறுங்குவதல்லாமல்;

மானக்கேடு நேர்ந்தால் உயிர்விடும் குணமுடையவர் தம்மை மதியாதவரைக் கண்டாற் பணியமாட்டார்; எப்படியென்றால் கல்லுத்தூண் தாங்கமுடியாத சுமையைத் தாங்கநேர்ந்தால் அப்படியே பிளந்து நொறுங்குவதே அல்லாமல், துவண்டு வளையுமோ? வளையாது; அதுபோலவேதான் மானமுடையாரும்.]

8. நீர்அளவே ஆகுமாம் நீர்ஆம்பல் தான்கற்ற
நூல்அளவே ஆகுமாம் நுண்அறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுங் குணம்

9. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று
[நன்றேஎ = நன்றே என்பதன் அளபெடை, பாட்டுக்காக நீட்டிப் பாடுதல்]

10. தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதேஎ - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் தீது.
[திரு = நன்மை, பயன்;தீதேஎ = தீதே என்பதன் அளபெடை, பாட்டுக்காக நீட்டிப் பாடுதல்]

11. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
[இறை = கொட்டு; ஆங்கே = அங்கே; உளரேல் = உண்டானால்; பொருட்டு = காரணமாக; பொசி = ஊறு, கசி]

12. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகா(து) அளவின்றி
ஏற்ற கருமம் செயல்.
[பண்டு = முன்பு; பண்டு முளைப்பது அரிசியே = உமி நீங்குதற்குமுன்பே முளைப்பது அரிசிதான்; விள்= பிள, உடை; அளவு = துணை, உதவி (வேங்கடசாமி நாட்டார் உரைப்படி); எப்படி முக்கியமான அரிசிக்குங்கூட அது முளைக்க எந்த மதிப்புமற்ற உமி தேவையோ அதுபோலப் பெரிய ஆற்றல் உடையவர்க்குங்கூடச் சிறிய வலிமையுள்ள மனிதர்களின் துணை என்னும் வலிமை தேவை]

13. மடல்பெரிது தாழை; மகிழ்இனிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்
[தாழை = தென்னை அல்லது தாழம்பூ; மகிழ் = மகிழம்பூ; கந்தம் = மணம், வாசம்; மண்ணுதல் = கழுவுதல்; மண்ணீர் = மண்ணும் நீர், கழுவும்நீர்;]
தாழம்பூ மடலாலே பெரிது; ஆனால் அதனைவிடச் சிறிய மடலுள்ள மகிழம்பூ மணத்தாலே அதனைவிட் இனிது' அப்படியேதான், ஒருவரை உடலால் சிறியவர், தோற்றத்தாலே குறைந்தவர் என்று அலட்சியமாக இருக்கவேண்டா. (ஏனென்றால்) கடல்கூடத்தான் பெரிது; அது அழுக்குக் கழுவும் நீர்கூட ஆகாது; ஆனால் அதனண்டையிலே உள்ள சிறிய நீரூற்றோ குடிக்கும் நீராகவே ஆகிவிடும்!

14. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்
[கவை = மரம் கிளையாகப் பிரியும் இடம்; கொம்பு = கிளை]

15. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
[கானம் = காடு; பாவி = நினை; பொல்லா = கீழான]

16. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்
[வேங்கை = புலிவகை; விடகாரி = மருத்துவன்; ஆங்கதனுக்கு = ஆங்கு அதனுக்கு; ஆங்கதனுக்கு ஆகாரம் ஆனாற்போல் = அதன் நோயைத் தீர்த்த அங்கேயே அதற்கு உணவானாற்போல்;
பாங்கு = தகுதி, ஒழுக்கம்; புல்லறிவாளர் = அறிவிலிகள்; உபகாரம் = உதவி, வேளாண்மை; கலம் = பானை, கப்பல்]

17. அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
[கடக்க = வெல்ல; மடை = அணையிலிருந்து நீர் வெளியே பாயும் தொளை; தலை - இடம்;
மடைத்தலை = அணையிலிருந்து நீர் வெளியே பாயும் இடம்; உறு = பெரிய, கொழுத்த]
18. அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு
[அற்ற = நீரற்ற, நீர்வற்றின; உற்றுழி = துன்பமுற்ற நிலைமை; தீர்வார் = நீங்குவார்]

19. சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால்அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்

20. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.
[முக = மொள்; முகக்கினும் = மொண்டாலும்; நாழி = குழாயிற் செய்த முகத்தல் அளவுக் கருவி]

21. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு

22. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்

23. எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

24. கற்பிளவோ ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்

25. நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்
[கயம் = குளம்; காம் = விருப்பம்; காமுறு = விரும்பு; கற்பு = கல்வி, பயிற்சி, நன்னடத்தைப் பயிற்சி; முக, உக = விரும்பு]

26. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
[கரந்து - மறைந்து, ஒளிந்து; அஞ்சா = அஞ்சாமல்; கரவு = மறைவு, வஞ்சம்]

27. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு

28. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்தொழுகாப் பெண்.
[கூற்றம் = எமன்; மாந்தர் = மனிதர்; இல் = வீடு, குடும்பவாழ்க்கை; இசைந்து = ஒத்து; ஒழுகா = நடக்காத]

29. சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா(து;) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.
[குறடு = கட்டை; கந்தம் = மணம்; தம் = செல்வம்; தார் = மாலை;

30. மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு போம்
[மருவு = பழக்கம், உறவு; வான் = உயர்ந்த; உரு = அழகு; மடந்தை = பெண், திருமகள்;

31. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
[தனை = அளவு, வரை; சாந்தனை = சாகும் வரை; ஆந்தனை= ஆகுந் தனை; ஆகும்வரை; குறை = வெட்டு]

"https://ta.wikisource.org/w/index.php?title=மூதுரை&oldid=1411994" இலிருந்து மீள்விக்கப்பட்டது