பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி



இங்கிலாந்து நாடு, இந்தக் கோடைக் காலத்தின் காரணமாய், இறகுகள் உதிர்ந்துபோன இந்தியக் கிளியைப் பார்த்து கிண்டல் செய்தது.

காராக்கிரகம் என்ற காராமான மிளகாயை, இங்கிலாந்து அதற்குக் கொடுக்க ஆரம்பித்தது.

அது அக்கக்கா என்று பேசுகிறதா? அல்லது, வெள்ளையனை அக்கக்காய் பிய்க்கிறதா என்று அவனுக்கே புரியவில்லை !

'சுக்கா, மிளகா சுதந்திரம்? சுதந்திரம் என்பது எனது பிறப்புரிமை - இது எனது தாய் நாடு என்றது, விடுதலையின் புரட்சிக் குரல் அதே குரலோடு கிளியும் பேச ஆரம்பித்தது.

காந்தியடிகள், தென் ஆப்பிரிக்காவில் முதலில் செய்த பூகம்ப பிரச்சாரங்கள்-கருப்பனை இந்தியனாக்கியது. பிறகு-அவனை மனிதனாக்கியது.

வெள்ளையனை எதிர்த்தபோது - இந்தியன், இந்தியனாக எதிர்த்தான். போராட்டத்தில், மென்மையை - அகிம்சையைக் கட்டுப்பாட்டைக் கண்ணியத்தைக் - கடமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று காந்தியடிகள் கூறியபோது இந்தியன் மனிதனான்.

இவ்வாறு, கறுப்பனை இந்தியனாக்கி, இந்தியனை மனிதனாக்கியப் பெருமை அந்த பல்லில்லாத கிழவனையே சாரும்.

காந்தியடிகள்-தியாக வயலின் முதல் விதை, மக்கள் நெஞ்சத்தில், அன்பை-அகிம்சையை நளினத்தோடு கொளுத்திய முதல் தீ என்றும் கூறலாம்!

எளிமை பிறந்த இடம் எங்கோ - நமக்குத் தெரியாது, காந்தியடிகளைப் பார்த்தப் பிறகு அது இங்குதான் பிறந்தது என்பதை நாம் உறுதி செய்து கொண்டோம்.

உலகம் உலகம் என்று கூறுகின்றோமே, இது அழியாமல் இருப்பதற்குரிய காரணமே, தொடர் கதையாகச் சில தலைவர்கள் தோன்றுவதால்தான் என்ற அய்யன் திருவள்ளுவன் கருத்தை நாம் சிந்தித்துப் பார்க்கின்றோம். அந்தப் புனிதத் தலைவர்கள் வேளை வரும் போது மண்ணில் கால் எடுத்து வைக்கிறார்கள்.

57