பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56



"ஏன் அப்படிச் செய்தாய்?" என்று சினக் குறிப்புடன் கேட்டார் நவாபு.

"நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்க வேண்டும். இரண்டு காரணங்கள் உண்டு. சொல்லட்டுமா? -

"சொல்."

"முதல் காரணம்: நவாபு அவர்களைக் காண வேண்டும் என்று நான் இங்கே வந்து பல நாட்களாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். பேட்டி கிடைக்கவில்லை. எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. நவாபு சிறந்த வீரர்களைப் பாராட்டும் பெரு வீரர் என்று கேள்வியுற்றிருக்கிறேன். கோழைகளைப் போல் அஞ்சாமல் வீரச் செயல் செய்கிறவர்களிடம் நவாபு வமிசத்தாருக்கு அன்பு அதிகம் உண்டென்பதை எல்லாரும் சொன்னார்கள். அதனால் சமூகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பொங்கி எழுத்தது. அதனால் இப்படிச் செய்தேன்."

"இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?”

“சமூகத்தின் கவனம் இந்த ஏழையின்மேல் பட வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. நான் எந்தப் பாளையத்துக்கும் சொந்தக்காரன் அல்ல. அரசாங்க அதிகாரியும் அல்ல."

"ஏன் என்னைப் பார்க்க வேண்டும்?"

"நல்ல அரசரென்றும் வீரத்தைப் பாராட்டுகிறவரென்றும் சொன்னார்கள். அதனால் பார்க்க எண்ணினேன். வீரம் ஒன்றுதான் நான் பெற்றிருப்பது. அதைச் சமூகத்துக்குப் பயன்படும்படி செய்யவேண்டும் என்பது என் ஆசை. இதைத் தெரிவிக்க வேறு வழி. இல்லை. அதனால்தான் இந்தக் காரியத்தைச் செய்தேன். சமூகத்தின் முன்னே வலிய இழுத்துச் சென்று நிறுத்தி வைப்பார்கள் என்று தெரிந்தே இதைச் செய்தேன்.