பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அன்னக்கிளி


நான் வந்து நேரமாயிற்று. அம்மா மறுமொழிக்காகக் காத்திருப்பார்கள். உங்கள் கடிதம் ஏதாவது இருந்தால்...'என்று முணமுணத்தாள் அன்னம்.

'உன் குரல் இனிமையாக இருக்கிறது. தெளிவாகப் பேசினால் என்ன குறைந்து விடுமாம்? உன் பேர் என்னவோ?’ என்றார் அவர்.

பேரைச் சொல்வதா, கூடாதா என்று தயங்கினாள் அவள். உரிய பதிலைக் கூறாதிருந்தால் அது மரியாதைக் குறைவாகத் தோன்றலாம் எனக் கருதித் தன் பெயரைச் சொன்னாள்.

'இதைச் சொல்ல நீ ஏன் பயப்பட வேண்டும்?’ என்று கேட்டபடி திருமாறன் அவள் நீட்டிய கையையே பற்றி அவளை அருகாமையில் இழுத்தார்.

அவள் திடுக்கிட்டுப் பதறி 'ஐயோ! ஐயோ!' என்று கூவி விட்டாள்.

கடிதத்தைப் பிடித்துக்கொண்டு, அழகான கையை விட்டுவிட்ட பெரிய மனிதர் சிரிப்பெனும் பெயரில் கனைப்பொலி எழுப்பினார். 'நீ என்ன இவ்வளவு பயந்தாங்கொள்ளியாக இருக்கிறாய்? சிறுபிள்ளை மாதிரி அஞ்சி நடுங்குகிறாயே!' என்றார்.

அன்னக்கிளி, காற்றில் அலைபட்ட சிறு தளிர்போல் நடுங்கிக் கொண்டிருந்தாள்.'நான் போகவேண்டும்...நான் போகிறேன்...' என்று முனகினாள்.

'போகாமல் என்னோடு இருந்துவிடு கண்ணே என்றா நான் சொல்கிறேன்? சிறிது நேரம் பேசி விட்டுத்தான்