பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106



அவர் சும்மா இருப்பதைக் கண்ட அரசர் அதனை அவர் சம்மதமாகவே எண்ணிச் சிவிகையோடு அரண்மனையைச் சேர்ந்த ஒருவரையும் அந்தக் குழந்தையை அழைத்து வரச் சொல்லி அனுப்பினார்.

"கடவுளே! நீதான் அந்தக் குழந்தைக்குக் கண்ணேறு வராமல் காப்பாற்ற வேண்டும்” என்று மனத்துக்குள் வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்தார் சர்க்கரைப் புலவர்.

சர்க்கரைப் புலவர் சிறுகம்பையூர் என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தார். கலிய நகருக்கும் அதற்கும் ஐந்தாறு கல் இருக்கும். இவ்வளவு அண்மையில் வந்திருக்கிறாரே, பார்க்கலாமே என்ற எண்ணத்தால் தான் மருத பாண்டியரைப் பார்க்கப் புலவர் வந்தார். அவரை அறியாமல் குட்டிபோட்ட நாகபந்தம் அவருக்கு அச்சம் உண்டாகக் காரணமாயிற்று.

சிறிது நேரத்தில் பாண்டியர் அனுப்பியிருந்த பல்லக்கில் குழந்தை வந்து சேர்ந்தான். மன்னரிடமிருந்து பல்லக்கு வந்திருப்பதை அறிந்த அந்த இளங் கவிஞனுடைய தாய் அவன் தலையை வாரி நல்ல ஆடையணி அணிந்து வரவிடுத்தாள்.

குழந்தை பல்லக்கிலிருந்து இறங்கினான். மருத பாண்டியர் அவனைப் பார்த்தார். உண்மையில் அவுன் குழந்தைப் பருவம் தாண்டாதவனாகவே இருப்பதை உணர்ந்து அவர் வியப்பே வடிவமானார். ஒடிச் சென்று அவனைக் கட்டி அணைத்தார்.

"இந்த ஏட்டில் குட்டி நாகபந்தத்தை வரைந்தவர் யார்?" என்று மருத பூபதி கேட்டார்.

குழந்தை சற்றும் தயங்கவில்லை. "நான்தான்!” என்று மிடுக்குடன் சொல்லி அருகில் நின்ற தன் தந்தையைப் பார்த்தான். அவருக்கு முன்பு இருந்த-