பக்கம்:கண்ணகி தேவி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கண்ணகி தேவி

சொல்லப்படும் அறக்கற்புடைய மாது. கூடலம்பதி எனக் கூறப்படும் அந்நகரின் நடுவில், சிவபெருமான் கோயிலும் அதனைச் சூழத்திருமால்கோயில், துர்க்கை கோயில், முருகவேள் கோயில் முதலிய தேவர்கோட்டங்களும், அரசன் மாளிகையும், அறவோர் பள்ளிகளும் பொலிவுற்று விளங்கும்; பல்வேறு வருணத்தார் வாழும் வீதிகளும், இரதவீதி, விழாவீதி முதலியனவும் ஒன்றன் பின் ஒன்றாகச் சூழ்ந்து விளங்கி அழகு செய்யும். முச்சந்தியும் நாற்சந்தியும், பலிபெறு மன்றுகளும் அங்கங்கே காணப்படும். நாளங்காடி, (பகற்காலத்துக் கடைவீதி) அல்லங்காடி (அந்திக் கடை) எனப்படும் கடைவீதிகளில், பல்வகை இரத்தினக்கடை பொன்கடைகளின் செல்வத்தாலும் புடைவைக் கடைகளின் அடைவாலும் கூலக் கடைகளின் கோலத்தாலும் இந்திரனுடைய அருங்கலச்செப்பைத் திறந்து வைத்தது போல விளங்கும்.

காலை முரசமும் மாலை முரசமும் வீரமுரசமும் கொடை முரசமும் ஒலிக்கும் ஓசையும், அந்தணர் வேதமோதும் ஓசையும், கூட்டில் அடைபட்ட புலி, கரடி, சிங்கம் முதலியவற்றின் முழக்கமும், மக்களின் பேச்சின் ஒலியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாய்க் கேட்கும்.

வான் அளாவ நகரின் நாற்புறத்தும் விளங்கும் மதிலும் கோபுரமும் மலையும் சிகரமும்போலத் தோன்றும். இதனைச் சூழ்ந்த அகழி, கடல் போல ஆழ்ந்து அகன்றிருக்கும். இம்மதிலுக்கு ஒருபுறத்து அகழாய் விளங்குவது வையைமாநதி. அந்நதியின் வளத்தால் அதன் கரையின் புறமெல்லாம் குரவமும், மகிழும், கோங்கும், கடம்பும் பூத்துப் பூந்துகில் போர்த்தது போலக் காணப்படும். மதிற்புறத்துள்ள புறஞ்சேரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/34&oldid=1411052" இலிருந்து மீள்விக்கப்பட்டது