பக்கம்:கண்ணகி தேவி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

கண்ணகி தேவி

பாடல்களை ஆசிரியரிடத்துப் பயிலத்தொடங்கி, ஏழாண்டுவரை பயின்று, அவற்றில் மிக்க தேர்ச்சி பெற்று, அழகுடன் விளங்கிப் பன்னிரு பிராயம் அடைந்தாள். அவளது தேர்ச்சியைச் சோழன் கரிகாற்பெருவளத்தான் சபையில் ஆடலாசிரியனும் பாடலாசிரியனும் கூடி அரங்கேற்றுவித்தனர். அரங்கேற்றத்தைக் காணுமாறு அரசன் முதல் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ற இருக்கைகளில் வந்து அமர்ந்தனர். மாதவி நாடகமேடையை அடைந்து, முதிய கணிகையர் தெய்வப்பாடல்கள் பாட, யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக்கருவிகள் அதனதன் வழி நின்று இன்னிசை எழுப்ப, பல வகைக் கூத்துக்களை உட்கருத்து வெளியிற் புலப்படும்படி அபிநயித்து நடித்துக் காட்டினாள். அரசன் கண்டு மகிழ்ந்து, மாதவியின் தகுதிக்கு ஏற்பத் தலைக்கோல் பட்டம் அளித்து, ஒரு பச்சை மாலையுடன் ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னும் பரிசமாகக் கொடுத்தான்.

இவற்றைப்பெற்ற மாதவி,தன்னுடைய வீடு சென்று, ஒரு கூனியை அழைத்து, “இப்பச்சை மாலை ஆயிரத்தெண்கழஞ்சு பொன் பெறுவதாகும்: இவ்விலையைக் கொடுத்து இம்மாலையை வாங்கி அணிகின்றவர் எவரோ, அவரே மாதவிக்குக் கணவராதற்குத் தக்கோராவர்,” என்று கூறும்படி சொல்லி, அவள் கையில் அம்மாலையைக் கொடுத்து, விலைக்கு விற்பார் தன்மையில் அவளை நகரின் பெருந்தெருவில் நிறுத்தினாள். மாதவியின் அரங்கேற்றத்தைக் கண்டு மகிழ்ந்து அவளை விரும்பியிருந்த கோவலன், ஆயிரத்தெண்கழஞ்சு பொன்னையும் கொடுத்து அம்மாலையை வாங்கி அணிந்துகொண்டு, கூனியுடன் மாதவியின் மனை புகுந்து, தன் மனையையும் மனைவியையும் மறந்து, அவளுடன் அளவளாவியிருந்து, அவளுக்குத் தன் செல்வமெல்லாவற்றையும் நாடோறும் கொடுத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/14&oldid=1411084" இலிருந்து மீள்விக்கப்பட்டது