பக்கம்:ஆண்டாள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ஆண்டாள்


பெருமானார் இத்திருப்பாவையிலேயே மிகவும் ஊறியிருந்து "திருப்பாவை ஜீயர்' என்றே பிறரால் அழைக்கப் பெற்றார் என்றால் திருப்பாவையின் பெருமைதான் என்னே! மேலும் திருப்பாவைக்கு மார்கழி மாதத்தில் மட்டுமன்று ஏற்றம்! திருக்கோயில்களிலும் திருமாளிகைகளிலும் நாடோறும் நடைபெறும் திருவாராதனம் திருப்பாவை சேவையும் திருப்பாவை சாத்து முறையையுமே தலையாகக் கொண்டு எங்கும் சிறப்பாக விளங்குகின்றது. ஆழ்வார் ஆசாரியர் களின் திருநட்சத்திரக் கொண்டாட்டங்களிலும் திருப்பாவை சாத்துமுறையே முதன்மை பெற்றுத் திகழ்கின்றது. மேலும் திருப்பாவைக்கு ஆயிரப்படி, ஈராயிரப்படி, மூவாயிரப்படி, நாலாயிரப்படி, ஐயாயிரப்படி என்றிவ்வாறாகப் பல வியாக்கி யானங்கள் விளங்கக் காண்கிறோம்.

திருப்பாவைக்கு எளிதாக விளங்கும் பொருள் ஒன்றுண்டு: சற்று ஆழ்ந்து நோக்கிக் காணும் உள்ளுறைப் பொருளும் உண்டு. மார்கழி நீராட்டத்தைச் சொல்கிறது; மழை மண்ணுலகிற்கு வேண்டும் எனச் சொல்லுகிறது. மனத்திற் கியைந்த மணாளனை அடைய வேண்டிப் பாடிச் சிறக்கிறது என்று மேற்போக்காகப் பாவையின் பாடுபொருளைப் பகர்ந்து விடலாம். ஆயினும் ஒர் ஆழ்ந்த உட்பொருள் ஒன்று திருப்பாவைப் பாசுரங்களில் திகழ்வதாகக் கூறிப் பின்வருமாறு எழுதுகிறார் காஞ்சிபுரம் மகாவித்துவான் ஜகதாசார்ய சிம்மாசனாதிபதி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச் சாரியர் அவர்கள்.

"சிலர், ஸ்வாபதேசார்த்தமென்று ஒன்று சொல்வது ஆண்டாள் திருவுள்ளத்திற்கு இணங்காததென்றும், பாசுரங்களில் ஸ்பஷ்டமாகக் கிடைக்கிற பொருளுக்கு மேலே வேறு சில பொருள்கனை வயங்க்யார்த்தமென்று உரைப்பது தவறென்றும், அது வீண்பணியென்றும் சொல்லுகிறார்கள். ஆண்டாள் மேலெழுந்த பொருளில் முழு நோக்கின்றிக்கே உள்ளுறை பொருளிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/64&oldid=959387" இலிருந்து மீள்விக்கப்பட்டது