பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 ☐ ஆரணிய காண்ட ஆய்வு


பொருள் கொள்ளின், ‘இன்’ எல்லைப் பொருளில் உள்ள தாகும். எம்மவருள் யார் செய்த தவமோ என்றும் பொருள் கொள்ளலாம்.

அரிய பெரிய மேலோர் வரின், யார் செய்த தவத்தாலோ அவர் வந்ததாகக் கூறும் மரபு உண்டு. தயரதன் அவைக்கு விசுவாமித்திரர் வந்தபோது அவரை வரவேற்றுத் தயரதன் கூறினான்:

ஐய, நீ இங்கே எழுந்தருளியது இந்த நாடு செய்த தவமும் அன்று - யான் செய்த தவமும் அன்று - தொன்று தொட்டு வரும் என் குலம் செய்த தவமாகும்.

“நிலம்செய் தவம் என்றுணரின் அன்று, நெடியோய் என்
நலம்செய் வினை உண்டெனினும் அன்று நகர்நீ யான் வலம்செய்து வணங்க எளிவந்த இது முந்து என் குலம்செய் தவம் என்று இனிது கூற முனிகூறும்”

என்பது பாடல். இராமன் மேலும் காட்டிற்குள் சென்ற போது வழியில் சுதீக்கணன் என்னும் முனிவன் கண்டு போற்றி, ஐய! நீ இவண் வந்தருள யான் என்ன தவம் செய்தேனோ - என்று கூறி வியக்குகிறான்.

“. . . . . . இவண் செல்வ நீ
எய்த யான் செய்தது எத்தவம் என்றனன்”

என்பது அகத்தியப் படலப் பாடல் (29) பகுதியாகும்.

அத்திரி முனிவரும் அவர் மனைவி அனசூயையும் மூவரையும் வரவேற்றுப் போற்றி விருந்தோம்பினர். பின் அனசூயையின் அறிவிப்பின்படித் தண்டக வனத்தில் தங்கினர். பத்து ஆண்டுகள் தங்கியிருந்த இடம் இந்தத் தண்டக வனந்தான்.