பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சபரி பிறப்பு நீங்கு படலம்

சபரி என்னும் பெண்ணின் பிறப்பு நீங்கியதைப்பற்றி - அதாவது அவள் வீடுபேறு அடைந்ததைப் பற்றியது இப்படலம். இதற்கு, சில ஒலைச் சுவடிகளில் சவுரி பிறப்பு நீங்கு படலம், சவரிப்படலம், சவரி மோட்சப் படலம் என்றெல்லாம் பெயர்கள் காணப்படுகின்றன.

இவள் சபரர் என்னும் ஒரு வகை வேட்டுவ இனத்தாரைச் சேர்ந்த பெண். மதங்க முனிவரின் தவக் குடியில் பணிபுரிந்து கொண்டிருந்தவள். -

இராம இலக்குவர் வருதற்கு முன்பே, அவர்கள் வருவார்கள் என்பதை முன் கூட்டியறிந்து; உணவுப் பொருள்கள் திரட்டிவைத்து எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவர்கள் வந்தபின் விருந்து படைத்தாள். சுக்கிரீவன் இருந்த உருசிய மலைக்குச் செல்லும் வழியை நன்கு அறிந்தவளாதலின், இராமனுக்கு அதைத் தெளிவாகத் தெரிவித்தாள். பின், அறவினையினால், உடலாகிய வீட்டைத் துறந்து பேரின்ப வீட்டை எய்தினாள். இது இப்படலத்தின் சுருக்கமாகும்.

துறக்கம் போன்றது

இராம இலக்குவர் வந்து தங்கிய சோலை, எண்ணிய வற்றை யெல்லாம் ஈயும் கற்பகக்கா போல் உண்ணுதற்கு உரிய பொருள்களை யெல்லாம் அளிக்கத் தக்கதாம்; அறம் புரிந்தோர் அடையக் கூடியதும் இன்பமே தவிரத் துன்பம் என்பதே இல்லாததுமான சுவர்க்கம் போன்று இருந்ததாம் அச்சோலை: -