சுந்தர சண்முகனார் 285
“வீட்டினுக்கு அமைவ தான
மெய்ந்நெறி வெளியிற்று ஆகக்
காட்டுறும் அறிஞர் என்ன,
அன்னவள் கழறிற் றெல்லாம்
கேட்டனன் என்ப மன்னோ
கேள்வியால் செவிகள் முற்றும்
தோட்டவர் உணர்வின் உண்ணும்
அமுதத்தின் சுவையாய் கின்றான்” (7)
வீடு = மோட்ச வீடு. கழறுதல் = சொல்லுதல்.
செவிகள் தோட்டவர் = காதுகள் துளைக்கப்பட்டவர்கள்.
இப்போது காதுகட்கு இருக்கும் துளைகள் உண்மையான துளைகள் ஆகாவாம். பல உயர்ந்த அறநெறிக் கருத்துகளால் துளைக்கப்பட்ட துளைகளே காதுகட்கு உண்மையான துளைகளாம். அதாவது, உயர்ந்த கருத்துகளை நிரம்பக் கேட்க வேண்டும். உயர்ந்த கருத்துகளால் துளைக்கப் படாத செவிகள், வேறு எளிய செய்திகளைக் கேட்பினும் அவை கேளாத செவிட்டுச் செவிகளாகவே கருதப்படும் என்கிறார் வள்ளுவர்:
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி (418) என்பது குறட்பா. இவ்வாறு கேட்ட அறிஞரே தம் மெய்யுணர்வால் கடவுள் சுவையை நுகர முடியுமாம்.
அத்தகைய சுவையாய் உள்ளவனாம் இராமன். வீடு பேற்றிற்கு வழிகாட்டும் மெய்யறிஞர் போல், சபரி சுக்கிரீவன் மலைக்கு வழி காட்டினாளாம்.
மெய்ந்நெறி வெளியிற்றாகக் காட்டுறும் அறிஞர் என்னும் தொடரில் உள்ள வெளியிற்றாக என்னும் சொல் ஆய்வுக்கு உரியது.