பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 ) சுந்தர சண்முகனார்

காமரம்

பெண்டிரின் மொழியைப் பற்றிக் கூறவந்த கம்பர்,

காமரம் கனிந்தெனக் கனிந்த மென் மொழி (197)

என்று குறிப்பிட்டுள்ளார். கா = சோலை. காமரம் சோலையில் உள்ள மரங்கள். சோலை மரங்களின் கனிந்த பழம் போலும் இனிய மெல்லிய மொழி என்பது பொருள்.

இதற்கு மற்றும் ஒரு பொருள் கூறலாம். காமரம் என்பதற்கு ஆலமரம் என்னும் பொருளும் உண்டு. 'தனி (ஒரு) மரம் தோப்பாகாது' என்பது பழமொழி. ஆனால் தனி மரம் தோப்பாவதும் உண்டு. அந்தத் தனிமரம் ஆலமரமே. நால்வகைப் படையுடன் மன்னர்க்கிருக்க நிழல்தரும் தனியொரு ஆலமரம் என்பதை வெற்றிவேற்கை என்னும் நூலில் அதிவீர ராமபாண்டியன் கூறியுள்ளார். பாடல்:

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆள்பெரும் படையுடன் மன்னர்க்கு இருக்க நிழலா கும்மே

(17–21)


என்பது பாடல் பகுதி. ஒரு தோப்புபோல்- சோலை போல் உள்ள மரம் 'காமரம்' என்று பொருள் கொள்ளல் வேண்டும். அந்த அளவுக்குப் பரந்து விரிந்து அகன்று உயர்ந்தது ஆல மரம். இதற்குச் சான்றாக, சில ஆல மரங்களின் தோப்புத் தோற்றத்தின் விளக்கம் தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் உள்ளவாறு வருமாறு:

'கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள ஆலமரம், 1782- இல் ஓர் ஈச்சமரத்தின் முடியில் விழுந்த வித்திலிருந்து முளைத்தது. அதன் மிக நீண்ட விட்டம், கிழக்கு மேற்கில் 300 அடி, தெற்கு வடக்கில் 288 அடி, அடி மரத்தின் சுற்றளவு 57 அடி, முடியின் சுற்றளவு 93.8 அடி,