பக்கம்:ஆண்டாள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பா.

தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1935). இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண்டாச்சிபுரமும் திருவண்ணாமலையும் இந்த இலக்கியப் பொழில் கற்ற இடங்கள். பைந்தமிழ் வளர்க்கும் பச்சையப்பன் கல்லூரிப்பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் தமிழில் பி. ஏ.ஆனர்சு. அங்கு! முதல் வகுப்பில் தேறிய முதல்வர், 'குறுந்தொகை’ பற்றிய ஆய்வுரைக்கு 1963ல் எம்.லிட். , பட்டமும், 'சேரநாட்டு செந்தமிழ் இலக்கியங்கள்' பற்றிய ஆய்வுரைக்கு 1970-ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள், நல்ல நடை கொண்ட இந்த நாகரீகர் பேர்சொல்ல நாளும் மாணவர் படை உண்டு நாட்டில்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாள ராகச் சேர்ந்தவர், பேராசிரியராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிறார். முன்னால் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர். இந்த முற்றிய புலமையாளர், தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமாவார்.

முப்பது நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருத் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், 'தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றே சான்று! அண்மையில் வந்துள்ள அணிகலன், சங்க இலக்கியம் சில பார்வைகள் ஆங்கிலத்தில் ஒரு நூல், 'சங்ககால மகளிர் நிலை' பற்றிய ஆராய்ச்சி. 'இலக்கிய அணிகள்' என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உரூபா முதல் பரிசை பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்க்ள்: புலவரேறு (குன்றக்குடி ஆதினம்) செஞ்சொற்புலவர் (தமிழ்நாட்டு நல்வழி நிலையம்) சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல் ஆதீனம்).

பெருந்தகை மு.வ. வின் செல்லப்பிள்ளை சி.பா. அவர் புகழ்பாடும் அருந்தமிழ்த்தும்பி; அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி! எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி!

சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடுபடு! -மா.செ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/195&oldid=1462190" இலிருந்து மீள்விக்கப்பட்டது