பக்கம்:ஆண்டாள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

ஆண்டாள்


சிறுமியர் இரக்கக் குறிப்புடன் வேண்ட வேண்ட வேணு கோபாலனாம் கண்ணனுக்கும் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கும் போலும்! ஏனெனில் அவன் 'வேண்டத்தக்கது அறிவோனும் வேண்ட முழுதும் தருவோனும்' அல்லனோ! எனவே "கோழியழைப்பதன்" என்று தொடங்கும் மூன்றாம் பத்து. கன்னியரோடு கண்ணன் விளையாடிய செயலை விளக்கி நிற்கிறது. அருளுக்கு ஆட்பட்டு எளிவந்து நிற்கும் செளலப்பியம்-எளிமை-இறைவன் பாலன்றோ குறைவற நிரம்பி நிற்கிறது. "கும்பிடுவார் யாரென்று தேடுகின்ற வனன்றோ கோவிந்தன்!". அவன் மக்களுக்கு "உண்ணு சோறும் பருகுநீரும் தின்னும் வெற்றிலையுமாய்த்" திகழ்கின்றான்.

கோழி வைகறைப்போதில் 'கொக்கரக்கோ' எனக் குரலெழுப்பி ஊர் மக்களை உறக்கத்திலிருந்து எழுப்பாத அவ்விடியற் காலைக்கும் முற்பட்ட இருள் பிரியாப் பொழுதி லேயே குளிர்ந்த குளத்தில் குதித்துக் குதித்து நீராடி. குடைந்து குடைந்து நீராடி, முகேர் முகேர் எனப் பாய்ந்து நீராடி வர வேண்டும் என்பதற்காக ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியா வந்தனர். ஆனால் வந்தவிடத்தில் அவர்கள் தங்கள் துகில் இழந்து பரிபக்குவப்பட்டு நின்றனர். இவையெல்லாம் சக்கரத்தைக் கையிலே தாங்கிய மாயன் செய்த மாயம்! பாம்பனை மேலே பள்ளிகொண்டு கண்வளரும் கண்ணன் செய்த கருமம். இனி யாங்கள் ஒருநாளும் பொய்கைக்குக் குளிக்கவென வாரோம். துகிலை இழந்து நிற்கும் தோழியும் நானும் உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகின்றோம். நீ எங்களுக்கிரங்கி எப்படியேனும் எங்கள் துகிலைத் திருப்பித் தந்து எங்கள் மானத்தைக் காக்கவேண்டும்.

இவ்வாறு வேண்டுகின்றனர் ஆயர் சிறுமியர்.

கோழி யழைப்பதன் முன்னம்
குடைந்துநீ ராடுவான் போந்தோம்,
ஆழியஞ் செல்வ னெழுந்தான்
அரவணை மேல்பள்ளி கொண்டாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/138&oldid=1462140" இலிருந்து மீள்விக்கப்பட்டது