பக்கம்:ஆண்டாள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

ஆண்டாள்


பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னைக் பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டுசித்தன் கோதைசொல்
மருந்தாமென்று தன்மனத்தே
வைத்துக்கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே16

இதுகாறும் தொடுத்து எடுத்துக்காட்டப் பெற்ற கோதையார் தம் கோதில் தமிழுரைகள் தமிழின் ஏற்றத்தையும், தெய்வத்தோடு அத்தமிழ் இரண்டறக் கலந்து நிற்றலை யும் எழிலுற எடுத்துரைக்கும்.

சைவர் கோயில் உற்சவங்களில் சிவபெருமான் முன்னே செல்லத் தேவார இசை பாடுவோர் பின்னே கைத்தாளமிட்டுப் பாட்டுப்பாடி வருவர். வைணவர் கோயில் உற்சவங்களில் வேத பாராயணக் குழுவினர் முன்னே செல்லப் பெருமாள் பின்னே உலா வருவர். தமிழறியும் பெருமாளாகத் - தமிழின் பின் விரும்பி நைந்து செல்லும் பச்சைப் பசுங்கொண்டலாகத்திருமால் கருதப்படுகின்றார். 'கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகரத்தில்' கணிகண்ணன் என்னும் வைணவ அடியார் ஒருவர் வாழ்ந்து வர, அவர் நாடோறும் காஞ்சிப்பதிவாழ் பெருமாளை வணங்கி நிற்க, அவர் மேல் ஏதோ ஒரு காரணம் பற்றி அழுக்காறு கொண்ட அவ்வூர் அரசன் அவரை அவமதிக்க, அது பொறுக்கலாற்றாத கணி கண்ணன் நேரே தான் வணங்கும் பெருமாளிடம் சென்று,

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப் புலவன் போகின்றேன் நீயுமுன்றன்
பைங் நாகப் பாய் சுருட்டிக் கொள்17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/130&oldid=1462132" இலிருந்து மீள்விக்கப்பட்டது