பக்கம்:ஆண்டாள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

93


என்பது பழமொழி. எனவே மாரி குன்றியது; பயிர்கள் பாழாயின; பசுக்கள் உணவின்றி நைந்தன; பால் வளம் அற்றது. பஞ்சம் பரவியது. மானிடர் மனங்குன்றினர். நாட்டின் வாட்டத்திற்குக் காரணம் கன்னியர் உகுத்த கண்ணீரே என்பதனை அனுபவத்தில் உணர்ந்த முதியவரும் மனம் திருந்தி மங்கையர் நோன்பு நோற்று மழை பொழிவிக்க வெளியே விடப்பட்டனர். அவர்களுக்கு வேண்டியவற்றை உதவக் கண்ணனையே ஏவல் கொண்டனர். 'பத்தி வலையிற் படுபவனல்லவா பரம்பொருள்' கண்ணன் தங்கள் கட்டிலிருந்து என்றென்றும் செல்லாமல் தடுக்க நோன்பு நோற்கத் தலைப்பட்டனர். மழை பொழிந்து ஆயர் பாடியும் வளம் பெற்றது; ஆய மகளிரும் வாழ்வு பெற்றனர். தம்மாட்டு அன்பு செலுத்துவாரைக் கண்டு, அவரோடு கலந்து கலந்து. அவர்கள் அன்பைப் பெருக்குவித்து அவர்கள் ஊனையும் உயிரையும் உருக்கித் தம் வயப்படுத்துவதன்றோ இறைவனது செயல்?

எனவே உடலாற் செயல்புரிந்து கண்ணனோடு கூடி மகிழ்ந்த ஆயகன்னியரைக்காட்டிலும் ஆண்டாள் பல படிகள் உயர்ந்து நிற்கிறார். காரணம் இவர் மனத்தாலன்றோ அம்மாயக் கண்ணனை வலிந்து இழுத்து வெற்றி காண்கிறார்.

ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், தம்மை இடைப்பெண்ணாகவும், தம் தோழியரை ஆயமகளிராகவும் வட பெருங்கோயிலுடையான் (வடபத்திரசாயி) சந்நிதானத்தை நந்தகோபன் இல்லமாகவும், அங்கு வாழும் பெருமானைக் கண்ணனாகவும் பாவனை செய்துகொண்டார் எனலாம். இடைக்குலத்து மங்கையர் நோன்பு தொடங்கிய "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளே" பாவை பாடிய பாவையார் பாவனையில் இயற்றும் நன்னாளாக அமைகின்றது. எம்பெருமான் தன் திருக்கலியாண குணங்களாகிற திருக்குளத்தில் மூழ்கிப் பேறு பெற்றுய்தற்குத் தவம், யோகம், யாகம் யாதும் இயற்றத் தேவையில்லை. நெஞ்சிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/95&oldid=1462091" இலிருந்து மீள்விக்கப்பட்டது