பக்கம்:அமுதும் தேனும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

36




அவரிருந்தார் அவர்மீட்டும் வீணை யானேன்.
அவர்மறைந்தார் அன்றுமுதல் விதவை யானேன்.
சுவரின்றிச் சித்திரமா எழுதக் கூடும்?
சொல்லுங்கள் நாடுவிட்டுக் காடு சென்று
தவஞ்செய்ய வேண்டுமெனில் ஒருவர் போதும்;
சயனசுகத் திற்கிருவர் வேண்டு மன்றோ?
கவியரசே! நானுங்கள் அடிமை இந்தக்
கட்டிலுக்கு வாருங்கள் எனைச்சே ருங்கள்.

ஈயாத மாந்தர்பொருள் தேய்தல் போன்ற
இடையுடையாள் எனைநீங்கள் வெறுக்க லாமா?
காயாநான்? பருகுதற்குப் பயன்ப டாத
கடலாநான்? கலிங்கத்துப் பரணி கூறும்
பேயாநான்? களிதெலுங்கு நாட்டில் வாழ்ந்த
பெருங்கவியாம் நன்னயரை வருத்தி வந்த
நோயாநான் சொல்லுங்கள்? வஞ்சி என்றன்
நோக்கத்தை இப்போதே நிறைவேற் றுங்கள்

மழைபொழியும் மேகங்கள் வந்து தங்கும்
மாடத்தின் உப்புறத்தில் ஒவ்வோர் நாளும்
இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம்? அந்தோ
இருட்டறைக்குள் ஒவியம்போல் இருக்கின்றேன்நான்,
விழுந்தபொருள் விதையென்றால் முளைத்தால் என்ன?
விளைந்தபொருள் கனியென்றால் தின்றால் என்ன?
எழுவாய்நீ பயனிலைநான் என்கின் றீர்கள்
என்றுசெயப் படுபொருள்நான் ஆவேன் சொல்வீர்?