பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

43

பெரிய மனுஷாளாத்துப் பையன் ஒருத்தன் வேறு ஜாதிப் பெண்ணோட சிநேகமாக இருக்கிற சமாச்சாரமாக இருக்கவே, குருக்கள் உம் போட்டு அக்கறையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நடு நடுவில் “நமக்கேன்யா வம்புன்னு” வேறே பேசிக் கொண்டிருந்தார்.

நர்மதா விளக்குச் சுடரில் அம்பாளைத் தீர்கமாகப்பார்த்தாள்.

“அடியே அம்மா! உன்னே எத்தனை தரம் சுத்திச் சுத்தி வந்திருக்கேன். எத்தனை பூ வாங்கிப் போட்டிருக்கேன். நல்ல ஆம்படையானா வருவான்னு இதோ உனக்குப் பூஜை பண்றாரே இந்த குருக்கள் மாமா எத்தனை தரம் சொல்லியிருக்கா? இவர் சொன்னதும் பொய், நீயும் பொய்”

யாரோ ஒரு பக்தர் பாடிக்கொண்டே வந்தார்.

வந்தெனது முன் நின்று-மந்தாரமுமாக வல்வினையை மாற்றுவாயே...
ஆரமணி வாளினுறை தாரைகள் போல நிறை
ஆதி கடவூரின் வாழ்வே... அமுதிசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வானி அபிராமியே...

பூர்விகல்யாணி குழைந்து குழைந்து தென்றலாக வீசியது. அம்பிகை மந்தகாச முகத்துடன் பக்தரைப் பார்த்தாள். நர்மதாவுக்கும் அவளுடைய சிரிப்பு புரிந்தது.

அவர் நகர்ந்தவுடன் மறுபடியும் இவள், “சிரிக்காதே! எதுக்கும் சிரிப்புதான். துன்பம், இன்பம், வாழ்வு, தாழ்வு எதுக்கும் சிரிப்புதான். இப்ப உன்னால நான் பாவம் பண்ணிடுவேனோன்னு பயந்து செத்துண்டிருக்கேன் . ஒவ்வொரு நாளும் வெந்து தனியறேன். ஆம்பளைன்ன தேவடியா வீட்டைத்தேடிண்டு போயிடுவான். அதுக்கொரு நியாயம் சொல்லுவான். அவன் மேலே ஒண்னும் ஒட்டறதில்லையாமே சாஸ்திரம் சொல்றதாம், பொம்மனாட்டி நெருப்பு மாதிரி இருக்கணும்னு. நெருப்பா இருந்தாத்தானே சட்டுன்னு எரிஞ்சும் போயிடலாம்.”

நெஞ்சுக்குழி விம்ம விம்ம மனசுக்குள் அறற்றியவள் விம்மி அழுதாள்.

“அழறயா என்ன?”