பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோன்றாத் துணை வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, தலைமைக் குமாஸ்தா சொன்ன விவரங்கள் புரியாமல், இன்னொரு பெண் குமாஸ்தாவிடம், சில ஃபைல்களை எடுத்துக் கொண்டுபோய் நின்ற போது, ஏதோ பெயருக்கு அந்தப் பெண் குமாஸ்தா விளக்கினாளே தவிர, அவள் பேசிய தோரணை, இனிமேல் என்னை நச்சரிக்காதே' என்பது போலிருந்தது. இயல்பிலேயே பயந்த சுபாவத்துடன், தாழ்வு மனப்பான்மை கொண்ட வசந்தி, பயத்தினால் திக்கித் திக்கிப் பேசுவதைப் பார்த்து, அலுவலகத்தில் பலர், அவள் வேலை ஏதாவது கேட்டால் கோட்டா செய்தார்களே ஒழிய, சொல்லித் தரவில்லை. எஸ்.எஸ்.எல்.ஸி.யில் படித்த ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு அவளால் ஃபைல்களில் குறிப்புக்கள் எழுத முடியவில்லை. ஒருநாள் தலைமைக் குமாஸ் தாவே, "ஆமாம்மா. நீ எப்படி எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணினே?" என்று குத்தலாகக் கேட்டார். அந்தச் சமயத்தில் இன்னொரு பெண் - வயது நாற்பது இருக்கும் - மிஸஸ் பரிமளம் ராமச்சந்திரன், "இந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.ஸி. அந்த காலத்து இ.எஸ்.எல்.எபி. கிட்டகூட (எட்டாம் வகுப்பு) நிற்க முடியாது" என்றாள்.